Search This Blog

Thursday 28 November 2013

எழுதல்...!!!


எழுதல் தாமதமாகி போன

விழுதல் காரணமாய் விதைகள்
உழுதல் பெற்று தினம்
அழுதல் நிரந்தரமாகி
வாழுதல் வழக்கமாகிப்போனதன்றோ..?

சூழுதல் பெற்ற அதிகாரத்தால் - கை

நழுவுதல் ஆகிய தாய் மண்ணும்
பழுது பெற்ற போராட்டமுமாய்
புழுவாகிப்போன உயிர் மறவர்கள்..!!
பொழுது பிறக்கும் என்ற நம்பிக்கையிலேயே...
மழுப்பிப்போகும் பொழுதுகள்...!!

முழுதும் இருள் சூழ்ந்து - உதிரம் கொண்டு

மெழுகுதல் பெற்ற மண்ணில் வழுக்கி
வழுவுதல்ஆகிப்போன எம்மினத்து வாழ்வு..
எழுந்து கொள்ளட்டும்...!!!
தழுவிப்போன மறவர்களின் மூச்சுக்காற்றினை
நுகர்ந்து.....

கழுவிப்போன உதிரங்களை உரமாக்கி

உழுதிடுவோம் எதிரிகளின் நம்பிக்கையினை
எழுந்து விழுந்த நாம் பழுதாகிடாமல்
விழுந்து மீண்டு எழுந்திடுவோம்...!!!



அரசி நிலவன்





லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "எழுதல் " என்ற தலைப்பில் இன்று வழங்கிய கவிதை இது.

கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 (இலங்கை இந்திய நேரம் பிற்பகல் 7.30 மணிக்கு )மணிக்கும் மறு ஒலிபரப்பு பிற்பகல் 9.30 மணிக்கும்...... http://gtbc.fm/


Wednesday 27 November 2013

வீரத்தோடு நிமிர்ந்து நிற்கும் வீர மறவர்களே..!!! 






தமிழீழத்துக்காக,

தமிழினத்துக்காக,
துடித்து களம் மீதேறி
தியாக வேள்வியிலே
நீறான திரவியங்களே..!!

பஞ்சணையை தூக்கி எறிந்து

ஏவுகணையை தோள் மீதேற்றி
உயிரை விலை கொடுத்த
உத்தம புத்திரர்களே..!!!



படி தாண்டா கண்மணிகள்

வெடி தாங்கி போயினரோ ..!!


காசினியில் இறைகளாய் 
கார்த்திகையில் திருவிழா காணும் 
காஞ்சனத்து முத்துக்களே....!!!

காங்கையாகிப்போகும் உடல்
காவியத்து நாயகர்களை எண்ணி 
காந்தலித்து போகும் நெஞ்சம்...
காந்தளின் காத்திருப்பை கண்ணுற்று 

உதிரங்களால் காவியம் எழுதிப்போனவரே...!!
உயிரோவியமாய் உயர்ந்தவரே...!!
உயிர் கொடுத்து எங்கள் இனப்பயிருக்கு 
உரமாகி உதிரம் பாய்ச்சி நீராகி தியாகமானவரே...!!

கந்தக நெடி வாசனையோடு..

கல்லும் முள்ளும் கடந்து..
நீவிர் மீட்டெடுத்த - அங்குல
நிலம்  கூட இன்று எம்மிடமில்லை - எம்
நிம்மதிக்காக,,
நித்திரை தொலைத்து..,
நீங்கள் சிந்திய குருதி...,
உங்கள் வித்துடல்களை,,  தானும்
பொத்தி வைக்க முடியா பாவிகள் நாம்
பொல்லாத சிங்களத்தோடு போராடாது
கார்த்திகை மாதத்தில் மட்டும் குரல் கொடுக்கும்
கோழைகள் எம்மை பார்த்து  ஏளனமாய் சிரிக்காதீர்..!!!
வெட்கி தலை குனிந்து அஞ்சலிக்கின்றோம்....!!!



வீறு கொண்டெழுந்து,,

வீர மரணத்தில் வீழ்ந்து,,
வித்தாகி,,
விருட்சமாகி ,,
வீரத்தோடு நிமிர்ந்து நிற்கும்
வீர மறவர்களே..
வீர வணக்கங்கள் உங்களுக்கு...!!!


அரசி நிலவன்



அரும்பதங்கள்

++++++++++++

காசினி - அகிலம்

காஞ்சனம் - தங்கம்
காங்கை - வெம்மை
காந்தல் - எரிந்து
காந்தள் - கார்த்திகை மலர் 

மலரும் தமிழீழமதில்,, மலர்ந்திடுவீர் கார்த்திகை பூக்களாய்.....!!!




கருவறையில் - தமிழீழ
கனவோடு
கருத்தரித்து,,
களமாடி,,
கல்லறையில் துயில் கொள்ளும்
கண்மணிகளே....!!!



புயலாய் புறப்பட்ட - வெஞ்சின

புலி மறவர்களே...!!!

மன்னவன் "கரிகாலன்" பாதையில்,

மனவுறுதியுடன் ஏகி,,
மண்ணுக்காய் வித்தாகி
மண்ணோடு சங்கமமாகி,,
மனக்கனவோடு உறங்கும்..
மரகதங்களே...!!!

சிந்திய குருதி காய்ந்தாலும்,,

சீறிய சன்னங்களின் ஒலி மறைந்தாலும்,,
உம் கல்லறைகள் விறாண்டப்பட்டாலும்,,
கல்லான எம் கடவுள் உயிராவான் -எம்
கனவு நனவாகும்...!!!



கல்லறை பூக்களே - நீவிர்

துயில் நீங்கி எழும் காலம்
வெகு தூரமதில் இல்லை...!!
தங்கப்பதுமைகளே கண்திறந்து பாரீர்...!!
தமிழீழ வேட்கையோடு - உங்கள்
தமிழீழ மக்கள் நாம் என்றும் களத்தில்..
மலரும் தமிழீழமதில்
மலர்ந்திடுவீர் கார்த்திகை பூக்களாய்.....!!!

 - அரசி நிலவன் -


Tuesday 26 November 2013

கார்த்திகை தீபங்களே...!!!

தலைவன் சொல்லை செயலில் நிறுத்தி,
தரணி போற்ற, மாவீரரான கண்மணிகளே...!

சொப்பனத்திலும் தமிழீழம் காணும்,

சொல்லின் வேந்தர்களே...!

களமாடி கனிந்து சென்றிட்ட

கல்லறை தெய்வங்களே...!

சாவின் பின்னும் வாழ்வினை தொடருகின்ற 

சாகா வரம் பெற்ற சரித்திர நாயகர்களே...!



இருண்ட எம் தேசத்தின் மேல், 
விளக்கேற்றி சென்ற கார்த்திகை தீபங்களே - எங்கள்
இதயங்களில் கிளை பரப்பி நிற்கும் பெரு விருட்சங்களே..! 
மண்ணில் விழுந்த வித்துக்களே..!
வரலாறு செப்பிடும் இலட்சிய புருஷர்களே....!


கனவுகள் மெய்ப்பட..காற்றோடு கலந்து விட்ட 
காவிய நாயகர்களே...!
கார்த்திகை நாளில் ஒரு சத்தியம் பூணுகின்றோம்... 
உங்கள் சுவடுகளை தொடர்ந்தபடி,
உங்கள் இலட்சிய நெருப்பாய் நாமும் கொழுந்து விட்டு எரிவோம்....!!!

எழுந்து வருக வருகவே...!!!


புதைந்து போகும் நாட்டில் இருந்து
புதுப்பொலிவாய் எழுந்திட வைத்த
புன்னகை போர் வீரனே....!!!

புழுதி படர்ந்து கிடக்கும்
புதைந்து போன ஆயுதங்கள்...
புழுங்கி சாகின்றன....!!

புல்லரித்து போகும்
புயல் வேக வீரத்தினை
புதைத்து - தாமும்
புதைந்து கொண்டிருக்கும்
புலி வீரர்களின் கதை தெரியலையோ...??
புதிதாய் பிறந்திட காலம் - இன்னும்
புலரலையோ...??

புனித மேனியரின்
புகலிடங்கள்
புரட்டிய சேதியும் - இராணுவப்
புலனாய்வு சக்திகள்
புனித மண்ணில் எங்கள் வீரம்
புதைத்து போகும் கொடுமையும்
புரிந்திடவில்லையோ...??


புனிதமாய் வாழ்ந்திடும்
புயல் வீரனே....!!!

புயலாய் செயலாய் எழுந்திட
புது இலக்கணம் எழுதிட
புறப்பட்டு வருகவே....!!!


எனக்கென்ன என்று பாராமல்
எழுந்த வீரம் அல்லவோ...??
எழாமல் போயிருந்தால் - தமிழர்களின்
என்புக்கூடு நூதன சாலைகளில்
என்றோ வாழ்ந்த இனம் என்று
எடுத்துக்காட்டப்பட்டிருக்கும்...!
 
எவனுக்கும் இல்லாத துணிச்சல்
எங்கள் தலைவனுக்கு என்று
எழுதி வைக்கப்பட்டது....!!

எதிரியின் சுவடுகள் தொடர்ந்து
எழுந்து நிமிர்ந்து அவனை விழுத்திய
எம்மினத்தின் விடிவெள்ளி...!!!

எங்கே என்று தெரியாமல்
ஏங்கித்தவிக்கின்றோம்....!
எழுந்து நின்ற வீரம் தூரத்தில்
எழுச்சி பெறக்காத்திருக்கின்றது...!!


எய்யாமையால்
எகத்தாளம் புரியும்
எதிரி சூழ் துரோகிகளை
எற்றித்தள்ள
எழுநாவில் எரிந்து
எழத்துடிக்கும்
எம்மினத்து எமரங்கள்
எய்தல் அடைந்திட
எம்மினத்து எல்லி
எங்கள் கரிகாலன் - அகிலமதில்
எழுந்த நன்னாளில்
எவ்வம் நீங்கி வாழ்த்துகின்றோம்
எறுழ் கொண்ட சிகரமே..!
எழுந்து வருக வருகவே...!!!

என்றென்றும் வாழ்க வாழ்க
எட்டுத்திக்கும் பட்டுத்தெறித்து
எதிரொலிக்கும் நாமம் வளர்க வளர்க....



அரசி நிலவன்


அரும்பதங்கள்
***************
எய்யாமை - அறியாமை
எற்றி - உதைத்து
எழுநா - நெருப்பு
எமரங்கள் - எங்களைச்சேர்ந்தவர்கள்
எய்தல் - நெருங்குதல்
எல்லி - சூரியன்
எறுழ் - வலிமை  

Monday 25 November 2013

உணர்வு....!!!




உடைக்கப்பட்ட உறைவிடங்கள்,
உலுப்பப்பட்ட உறவுகள் தாண்டி 
உயிர் பெற்று விருட்சமாகிய விதைகளாய் 
உணர்வுகள் எங்கும் வானாளாவி பரந்தபடி... 

பலாத்காரத்தினால் யாரும் இங்கே 
படைக்கவில்லை உணர்வுகளை எழுத்துக்களாக....
மிரட்டி யாரும் அஞ்சலிக்கவில்லை...! 
மின்காந்த அலைகளாய் ஊடுருவிப்பாயும் 
உணர்வலைகளால் உதிரம் கொதித்து 
உடல் சிலிர்க்கும்.. கண்ணீர் பெருக்கெடுக்கும்..! 

பல்கலைக்கழகம் விடுதலையில் மூடினால்  
உணர்வுகளும் விடுதலை பெற்றிடுமா...?
சுவரொட்டிகள் ஓட்டினால் தான் 
சுடராகி போனவர்களை நினைக்க முடியுமா??

முகப்புத்தகம் எங்கும் மாவீரர்களின் 
முகங்கள் அலங்கரிக்கும்..!
மூலை முடுக்கெல்லாம் அவர்கள் நாமம் 
மூச்சு விட்டு உயிர் வாழ்கின்றது....!!! 


துயிலும் இல்லங்கள் ஆயிரக்கணக்கில்..... 
துளிர் விடுகின்றன ஒவ்வொரு உள்ளங்களிலும்..! 
புல்டோசர்கள் ஏறி வருபவர்கள் கல்லறைகளை 
புரட்டி போட முடியாமல் விழிக்கின்றார்கள்....!!!

இதயங்கள் மெளனித்து அஞ்சலிப்பதையும் 
இணையற்ற எம் தியாக செம்மல்களின் அசைவினை 
உள்ளத்தால் உணர்ந்து பெருகிடும் கண்ணீர் பொழிந்து 
உணர்வாலே உருகி உருகி செலுத்தும் அஞ்சலிகளை 
உழுது மண்ணோடு கலந்திடத்தான் முடியுமா...??

உழுது போய் எஞ்சியது கல் மட்டுமே....
உள்ளத்தில் நிலைத்து நிற்கும் உயிர்களை 
உழுது மண்ணோடு கலந்திடத்தான் முடியுமா...??


உணர்வுகளால் சிகரமாய்.. 
உருவங்களில் தெய்வங்களாய்... 
உயர்ந்து நிற்கும் உன்னத மனிதர்கள் 
உருக்குலைந்து போவதில்லை.....!
உணர்வாலே உதிரம் சிந்தி 
உயிர் ஈந்த  உத்தமர்களே.....!
உம்மை நெருங்கிட யாரால் முடியும்...???

உணர்வின் தீயில் எரிந்தபடி.....
உமது சுவடுகளின் திசை தேடி...
உழன்றபடி உணர்வுத்தமிழ் நெஞ்சங்கள்...!


அரசி நிலவன் 




லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "உணர்வு " என்ற தலைப்பில் இன்று வழங்கிய கவிதை இது.

கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 (இலங்கை இந்திய நேரம் பிற்பகல் 7.30 மணிக்கு )மணிக்கும் மறு ஒலிபரப்பு பிற்பகல் 9.30 மணிக்கும்...... http://gtbc.fm/

Thursday 21 November 2013

அக்கினி குஞ்சுகள்.!!!



புனலிலும் அனலாய் கனன்றிடும்

புனித மேனியர்...!!!
புயலாய் காற்றிலும் சுழன்றிடும்
புதுக்காவிய நாயகர்கள்...!!! 

தேகம் மீதிலே வெடிகளைச்சுமந்து - தமிழீழ

தேசத்திற்காய் வெடித்துப்போகின்ற தேசப்புயல்கள்....!!!



வெஞ்சின கரு வேங்கைகளே...!!!

வெற்றியோடு திரும்பும் உங்கள் நாமம் மட்டுமே...

வீழ்ச்சி கண்ட எம் தமிழின மானத்தை

எழுச்சி கொள்ள வைத்திட…
வீரத்தலைவனின் வழிகாட்டலில் - நெருப்பாய்
எழுந்திட்ட எம் உயிர் அம்புகள்...!!!



காலம் வைத்து விட்டு சென்ற பணியினைத்தொடர

காலனுக்கே சவால் விட்டு – தம் மரணத்திற்கு தாமே
கால நேர இடம் குறித்து,,,
காவியம் படைக்கும் சரித்திர நாயகர்கள்...!!!

அழுத்த மனதுடனும்,,

அமுக்க உடலோடும்,,
அன்பாய் கதை பேசி
அரவணைத்து - எம்மை
அழ வைத்து அலை அலையாய்
அணி திரண்டு செல்லும் கரு முத்துக்கள்...!!!


புன்னகைத்து கையசைத்து சாவினைத்தேடிப்போகும்
புதிய இலக்கண வீர மறவர்கள்…!!!

நெருப்பின் வயிற்றிலே கருத்தரித்து,,

நெருப்பாகி ,காற்றோடு கலந்திடும் அக்கினி குஞ்சுகள்..!!!

காவிய நாயகர்களே....!!!

காற்றிலே உயிராய் கலந்திருக்கும் உங்கள் மூச்சுக்கள் மீதும்
காலம் மீதும் சத்தியம் - நாம் ””வெற்றி ””
காண்போம் உறுதி....!!!

வீரவணக்கங்களுடன்

 “அரசி நிலவன்”





லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "அக்கினி " என்ற தலைப்பில் இன்று வழங்கிய கவிதை இது.

கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 (இலங்கை இந்திய நேரம் பிற்பகல் 7.30 மணிக்கு )மணிக்கும் மறு ஒலிபரப்பு பிற்பகல் 9.30 மணிக்கும்...... http://gtbc.fm/

Wednesday 20 November 2013

சிகரம்...!!!


அனல் பொறிகளால் செய்த தேகம் கொண்டு
கனல் பறக்கும் விழிகள் தாங்கி, செந்தணலாய்
சமர் புரிந்து சிந்திய ஒவ்வொரு துளி குருதியும்
பல்லாயிரம் சுதந்திர தாக வேட்கையுடன் மண்ணோடு
திரண்டு தாயக உறுதி பூண்டு இன்னும் காத்திருக்கின்றது....!!!

சிலிர்த்து பூத்துக்குலுங்கும் செங்காந்தள்
சிணுங்கலுடன் உங்கள் வழி நோக்கி
காத்திருக்கின்றது கண்ணீருடன்...
காவிய நாயகர்களின் மூச்சு காற்றைச்சுவாசித்து
காலத்தின் வரலாற்றில் தாமும் இடம் பிடிப்பதற்காய்.....


கண் திறந்து பாரீர்
கனன்று விம்மும் இதயங்கள்
அமைதியாய் உங்கள் நாமத்தினை உச்சரித்து
அழைக்கும் ஒலி கேட்கலையோ....??
ஆரவாரமின்றி நெஞ்சறையில் பூட்டி
ஆர்ப்பரிக்கும் துன்பலைகளை அடக்கி
இதயங்களில் உயர்ந்த  சிகரங்களாய் கட்டி வைத்து
இரத்த நாளங்கள் புடைக்க அர்ச்சிக்கும் மெளனத்தின்
ஒலி உணரலையோ....???

செங்குருதியால் சிவந்த மேனிகள் உங்களின்
செஞ்சோற்றுக்கடன் தீர்ப்போமா...???


தீயும் நெருங்கிட தயங்கும்
தீராத சுதந்திர தாகம் கொண்ட
தீரர்கள் உங்களின்
தீச்சுவாலை விழிகளை
காணத்தவமாய் தவம் புரிகின்றோம்...!!!
கார்த்திகையில் கோலம் இட்டு
காந்தளை கைகளில் ஏந்திக்
காத்திருக்கின்றோம்.....!!!


தமிழ் தேசமதின் சிகரங்களாக
தமிழ் நெஞ்சங்களில் வாழும்
தங்கப்பேழைகள் நீங்கள்
தரணியில் உயர்ந்து நின்ற
நினைவாலயங்கள் தகர்க்கப்பட்டாலும்
நிலைத்து நிற்பீர்கள் என்றென்றும்
சிகரங்களாக எம் இதயங்களில்....

சிலிர்த்து வரலாறு சொல்லுவோம்...
சிகரத்தின் உச்சியில் வைத்து பூசிப்போம்..!!



அரசி நிலவன்




லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "சிகரம் " என்ற தலைப்பில் இன்று வழங்கிய கவிதை இது.

கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 (இலங்கை இந்திய நேரம் பிற்பகல் 7.30 மணிக்கு )மணிக்கும் மறு ஒலிபரப்பு பிற்பகல் 9.30 மணிக்கும்...... http://gtbc.fm/

நிலை பெற்று சென்ற மாணிக்கங்கள்..!!!


நினைவு கூறும் நிலையற்ற மனிதர்களாய்
நினைவாலயங்கள் தேடி அலைகின்றோம்...!!!
நிர்க்கதியாய் போனது நீங்கள் அல்ல....
நிலை பெற்று சென்ற மாணிக்கங்கள் - உங்கள்
நினைவில் மட்டும் தான் நாம்.....!!!

நீவிர் விட்டுச்சென்ற சுவடுகள்
நிலை தடுமாறும் நிலையில்.....
நின்று வேடிக்கை பார்த்து கார்த்திகையில்
நினைவு கூறுகின்றோம்.....!!!
நிலையற்ற மனிதர்களாய்....
நிலமற்று நிர்க்கதியாகி நின்று....


நிலம் கொடுத்தீர் உயிர் தந்து..
நிலமிழந்தோம் உம்
நினைவாலயங்களையும் தொலைத்தோம்..!!
நிற்கின்றோம் ஆரம்ப அத்தியாயங்களில்....!!!
நினைவு கூறுகின்றோம்....!!!
நிலையில்லா தேசத்திலிருந்து....
நிலம் நீங்கி உங்கள்
நினைவுகளை சுமந்து....

நிலம் மீட்க
நிலை பெற்று சென்ற சிகரங்களே.....!!!
நிம்மதியற்று நீங்கள்
நின்று உறங்கும் காட்சி
நிழலாடுகின்றது....!!!
நினைவு கூறுகின்றோம்....!!!
நிலை கெட்ட எம்
நிலை எண்ணித் தலை குனிந்து
நினைவு கூறுகின்றோம்...!!


அரசி நிலவன்

Sunday 17 November 2013

தொலைந்த முகவரி தொடர்பில்.....



அன்றைய நட்பின் சுவடுகளை தேடி 
அறிந்த உள்ளம் வானமேறி வந்து 
கண்ணில் வைத்துப்போனது....!!!

நெதர்லாந்து தேசத்தில் இருந்து 
நெருங்கி வந்த நட்பால் 
நெகிழ்ந்து போன நெஞ்சம்...!!!

தொலைக்கப்பட்ட உயிரின் 
தொன்மையான நட்பாய்...
தொடர்கின்ற நிகழ்கால பந்தம்...!!!

நட்பில் பிறந்த பந்தமது 
நன் மதிப்பாலே சொந்தமாகி...
முக நூலினால் மீண்டும் 
முகவரி அறிந்து கொண்டதாம்...!

பண்டைய கதைகள் பேசி
பரிமாறப்பட்ட செய்திகளாய்
பழகிய நினைவுகள் 
உயிர் பெறுகின்றன...!!!

அன்பு வேண்டுகோளினை ஏற்று...
அவசரமான உலகில்
தட்டுப்பாடாய் போன காலத்தினை ஒதுக்கி
தனிவழியே காத்திருந்து சந்தித்து திரும்பிய 
உள்ளம் கொண்டோரினை 
காண்பது அரிதன்றோ...?

பிரியாவிடை பெற்றுச்சென்ற பெற்றவரின் 
பிரியமான நட்பாய்...
பிரிந்து போகாமல் இணைந்து கொண்ட 
தொலை தூரத்து சொந்தமே...!!!
தொலைந்து போகாமல் என்றும் 
தொடர வேண்டும்....!!!

அகிலம் நீங்கிப்போன 
அன்பு ஆத்மா நிம்மதியடையும்...!!!
அருகில்லாத நேரம் 
அரவணைப்பாய் , அன்பாய் ,
ஆலோசனையாய் , ஆதரவாய் 
அடைந்திட்ட சொந்தம் இறுதி வரை 
அன்போடு பயணிக்கட்டும்.....!!!


அரசி நிலவன்
   

Saturday 16 November 2013

அரவணைப்பு....!!!


என் சிரிப்பின் கன்னக்குழியாய்..
என் கண்ணீரின் விம்பமாய்...
என் வெற்றிகளின் படிகளாய்....
என் தோல்விகளின் எழுதலாய்....
எல்லாமாய் எந்தையாய் தாயாய்...

உனக்காய் நீ வாழ்ந்ததில்லை...
உயிர் கொடுத்து உதிரம் கொடுத்தவள் அன்னை என
உலகம் போற்றும் அன்னைகளிலிருந்து
உயர்ந்து நிற்கின்றாய் பல படிகளால்....!!!
உயிரான உறவொன்று நீங்கிப்போயினும்
உயிர் கொடுத்து உருக்குலைந்தாய் எமக்காக...


குறை ஒன்று உரைப்பேனா....?
குடிசையிலும் உன் அன்பால்
குன்றின் மேல் தீபமாய் காத்தவளே...!!

எண்ணி எண்ணி தினம் உவகை கொள்வேன்...!
என் தாயவளின் அன்பு கிடைக்க என்ன பேறு பெற்றேனோ??

கலங்கும் விழி கண்டு
கடுகதியில் விரைந்து
அரவணைக்கும் அன்னை உன்னை
அடுத்த பிறவியிலும் அன்னையாக
அடைய வேண்டும் நான்...!!!


அம்மா என்றழைத்து அரவணைக்கும் ஆறுதலில்
அண்டத்தின் அசைவுகள் அறியாமல் போய் விடுவேன்...
அம்மா நீ இல்லா காலமதை நினைத்தும் பார்க்க முடியவில்லை..
அதற்கு முன்னே நான் இல்லாமல் போக வேண்டும்...
அன்னையின் அரவணைப்பில் அமைதியாய்
அவள் மடி கொண்டு உயிர் நீங்கிப்போயிட வேண்டும்....!!!



அரசி நிலவன்




லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "அரவணைப்பு " என்ற தலைப்பில் இன்று வழங்கிய கவிதை இது.

கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 (இலங்கை இந்திய நேரம் பிற்பகல் 7.30 மணிக்கு )மணிக்கும் மறு ஒலிபரப்பு பிற்பகல் 9.30 மணிக்கும்...... http://gtbc.fm/


Wednesday 13 November 2013

பிரவேசம்...!!!


கல்லில் நார் உரிப்பாக
கழிகின்ற பொழுதுகள்...!!!
கடமைக்கு வாழ்க்கை 

ஆரம்பமே இல்லாத வாழ்வு 
அந்தமாகிட வேண்டும் என்ற துடிப்பு...!

வரவினங்கள் இல்லாத செலவினங்களாக 
அலைக்கழிப்புக்களும் அவமானங்களும்
ஏமாற்றங்களும் ஏய்ப்புக்களுமாக 
எஞ்சிப்போன...
வாழ்க்கைக் கணக்கில் 
மேலதிக பற்றுக்களான 
எதிர்பார்ப்புக்களுக்கு இடமேது...?
எந்த நிலையிலும் எதிர்பார்ப்புக்கள் 
பிரவேசம் செய்யாத நிலை...

விரயமாகிப்போன உழைப்புக்கள்..! 
மதிப்பிழந்து போன தியாகங்கள்...! 
பயனற்றுப்போன அர்ப்பணிப்புக்கள்...!
இழக்கப்பட்ட நன்மதிப்புக்கள்....! 

காலாவதியாகிப்போன கல்வி...!
கடந்து கொண்டிருக்கும் பிரிவுகள்..! 
கல்லாய்ப்போன இதயம்..! 

வலிகளும் ரணங்களுமாய் 
கழியும் நான்காண்டு வாழ்வில்... 

அகிலத்தின் துன்பங்கள் யாவற்றையும் ஒரு சேர 
அடைந்திட்ட ஒரு சாதனை...! 
அலைக்கழிக்கப்பட்ட வாழ்வில் - இனி 
அடி என்று விழுவதற்கு ஏதுமில்லை....!

வழங்கப்பட்ட துன்பங்களை கடந்து 
வலிமையாய் நிமிர்ந்து நிற்கும் 
இந்த நிலைக்கு பிரவேசித்தது 
இலவசமாய் தான்...!!!

துணிந்து நிமிர்ந்து நிலைத்து நிற்பதால் தானோ 
துன்ப நிலை நீளுகின்றதோ...!
விடியல் பிரவேசிக்கும் காலம் தொலைவில் போலும்...!
விடிந்திடும் என்று நம்பிக்கைகள் தான் தொடர்ச்சியாய் 
பிரவேசம் செய்கின்றன மனதில்...!! 

பிரவேசிக்கும் விடியலுக்காய்..
சலிக்காது வழி மேல் விழி வைத்து தினம் 
கோலமிட்டு காத்திருக்கும் வாசல் படியாய் மனம்...!!!

கோபங்கொண்டு ஒரு நாள் மனம் வனவாசம் பிரவேசிக்கலாம்...!!
நம்பிக்கைகளும் நட்டாற்றில் விட்டு நீங்கிப்போயிடலாம்...!!
எங்கெங்கோ கற்பனையில் பிரவேசிக்கின்றது இன்றைய மனம்...!!

எவை கைவிட்டாலும் இன்னொன்றின் பிரவேசம் ஒன்று 
என் வாசலை விட்டு நீங்கிப்போயிடாது  அல்லவா...?
எனை விட்டு செல்லும் உயிரை அழைத்து செல்ல 
மரணத்தின் பிரவேசம் ஒருநாள் என் வாசல் வருமன்றோ...?




அரசி நிலவன் 



லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "பிரவேசம் " என்ற தலைப்பில் இன்று வழங்கிய கவிதை இது.

கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 (இலங்கை இந்திய நேரம் பிற்பகல் 7.30 மணிக்கு )மணிக்கும் மறு ஒலிபரப்பு பிற்பகல் 9.30 மணிக்கும்...... http://gtbc.fm/



Tuesday 12 November 2013

நிலாச்சோறு...!!!


அரிக்கன் லாம்பின் மண்ணெய்
அரிதாகிய காலமதில் பிரகாச ஒளியாக
அம்புலியின் கொடையாக  மின்சார ஒளி..!

பால் நிலவின் களிப்பில் வெண் முற்றம் எங்கும்
பாடி ஆடி விளையாடி ஓய்ந்திருக்கும் வேளை....


அன்பெனும் தேன் கலந்து அமுது
அள்ளி வைப்பாள் அன்னையவள்....
அடிபட்டு ஓடித்திரிந்து உண்டெனத்தின்போம்

பலா இலையின் வாசம் உறிஞ்சி
நிலா அதன் பால் ஒளியில்
உலா வரும் நினைவுகள்
கோடி கொட்டிக்கொடுத்தாலும்
மீண்டிடாது....!!!


புல் பூண்டும்...
புழு பூச்சியும்...
புடையனும் - அம்
புலியின் ஒளியில் மறந்து போகும்...!
புளுகுடன் சிரித்து
புரையேறும் நிலாச்சோறு
அன்னையவளின் உச்சி தட்டலால்
உள்ளிறங்கிடும் ...!

எண்ணி எண்ணி சிரித்து கொள்ள - இன்று
எமக்கு உரித்தான நினைவுகள் இவை...


உற்று உற்றுப்பார்த்து
உள்ளங்கை மூடிப்பார்த்து
நிலாமகளின் அழகினையும்
நிலாச்சோற்றுடன் சேர்த்து உண்டு
களிப்புற்ற குழந்தைப்பருவங்கள்..!!

களிப்படையுமா இன்றைய குழந்தைகள்...??
நிலவே நீ தூரமாய்....
நிலாவின் ஒளியும் தொடுகையற்று
நில்லாமல் போன நிலாவே ஓடி வா...
இல்லாமல் போன முற்றமும் சோறும்
மனங்களில் இருந்தும்....
நிலா தூரமாய் தானே.....


அடுக்கு மாடிக்கட்டிடங்களில்
அம்புலி வருவானோ...??
அண்ணாந்து பார்த்து பூத்தது விழிகள்..!
அன்னையவளின் அமுது எண்ணி
அங்கலாய்க்குது மனம்....!

பால் ஒளியும் வெண் மணலும்
கண்ணுக்குள் முடங்கியபடி....
மண்ணை கண்ணால் பார்த்து
வருடங்கள் ஆகிவிட்டன....!
நிலவின் ஒளியில் உண்ட
நிலாச்சோறு தொண்டைக்குழிக்குள்...
நினைவாய்.....
நின்று விக்கி சிக்கித்தவிக்கின்றது....!!


அரசி நிலவன்





லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "நிலாச்சோறு" என்ற தலைப்பில் இன்று வழங்கிய கவிதை இது.

கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 (இலங்கை இந்திய நேரம் பிற்பகல் 7.30 மணிக்கு )மணிக்கும் மறு ஒலிபரப்பு பிற்பகல் 9.30 மணிக்கும்...... http://gtbc.fm/

பணத்தின் குணம்...!!!


பணமது கனமாக பைகளில்
பரவிக்கிடந்த காலங்களில்....
பணமதின் குணம் அறியவில்லை...

கடதாசியோடு ஒரு கடதாசியாக....
பண்டத்தொடு ஒரு பண்டமாக..
உணர்ந்து கொண்டேன்....

பலர் என் பின்னால்...
பக்குவமாய் பேசி காரியம் சாதித்தோர்..
பறந்து சுற்றி நின்ற சுற்றங்கள்...
கரிசனையும் அன்பும்
கணக்கில்லாமல் கொட்டிக்கிடந்தது....

பைகள் வெறுமையாகிப்போன
நிகழ் காலமதில்......
பணத்தின் குணம் அறியப்பட்டது..
பண்டமல்ல...
பரிணாம வளர்ச்சியில்
பணமும் ஒன்றாகிப்போனது...!
மனிதனையே மதிப்பிடும்
மகத்தான உயிர்ப்பொருளாய் ஆனது
மரத்துப்போன மூளைக்கு புலப்படுகின்றது
இப்போது....

வேண்டாத போது கொட்டிய கரிசனைகள்
வேண்டும் நிலையில் கொடுக்கப்படும்
நிலையில் இல்லாமல் போவதற்கு
நிலையற்ற பணம் சிபாரிசு செய்கின்றதா...??

பரிதாபப்படும் நிலையில்
உள்ளது பணமா...??
மனிதமா...??

மனிதர்கள் குணம் மாறிப்போனதற்கு...
                         பணம் காரணமா...??
                         பணம்
                         குணம்  பெற்று போனதற்கு
மனிதர்கள் காரணமா....??


குணங்கள் மரணித்துப்போன
கணங்களின் மத்தியில்....
பணமின்றி வாழ்வதை விட
பிணங்களோடு
மணத்தோடு  வாழ்வதே மேல்....!!!



அரசி நிலவன்


Monday 11 November 2013

விடியட்டும்....!!!


அகலவனின் ஓயாத உலவலினால்
அகிலத்தின் இருள் விலகி மறையும்..!
அரை நூற்றாண்டாய் எங்கள் தேசம்
அகலவனின் பார்வை பட்டும் பகலிலும்
இருள் நிறைந்து இரத்தம் தோய்ந்து...
இன்று வரைக்கும்....

உதிரம் தோய்ந்து
உலர்ந்து போய் விட்ட மண்....!
பெருக்கெடுக்கும் விழிநீர்களினால்
சேறாகிப்போகின்றது...!
கோலமிழந்த கோரிக்கைகள்...!
வலுவிழந்து போன பேச்சுக்கள்...!
மூச்சிழந்த ஆயுதங்கள்...!
மூர்ச்சையாகி போன உணர்வுகள்...!

தட்டி எழுப்புகின்றாள் இறுதிக்குரலாலே...!!
தரணி எங்கும் கொந்தளித்து எழட்டும்....!
சேறு பூசி உடல் மறைத்து மாண்டவளின் கோலங்கண்டு
வீறு கொண்டெழுந்து எங்கள் தேசம் விடியட்டும்...!!
மாறு வேஷம் பூண்டு வந்தழித்து போன வல்லரசுகளால்
தாறு மாறாய் கிழிந்து போன எங்கள் தேசம் விடியட்டும்..!


ஒடுக்கப்பட்டு நெரிக்கப்பட்டு வெட்டப்பட்டு எரிக்கப்பட்டு
கற்பழிக்கப்பட்டு புதைக்கப்பட்டு சாகடிக்கப்பட்ட உண்மைகள்
தோண்டி எடுக்கப்பட்டு இனியாவது விடியட்டும்..!!
இரத்த வெறி பிடித்த இனவாதிகள் மடியட்டும்...!!
உரத்து நெறி உரைப்போம் உலகின் செவிகளுக்கு..!!
மரத்து மறந்து விடாதீர்கள் தோழமைகளே....!!
உயிர் கறந்து உதிரம் குடித்த வெறி மிருகங்களை
வேட்டையாடி தொங்க விடுவோம் வெறும் தோலாக - சட்டத்தின்
சாட்டை கொண்டு....

இனியாவது விடியட்டும் - இசையவளின்
இறுதிக்குரல் எம்மினத்தின்
இறுதிக்குரலாகட்டும்...!!
இல்லாமல் போன தமிழ்
இன உணர்வுகள் பொங்கட்டும்..!!
இனம் ஒன்றுபட்டு தெளியட்டும் - தமிழ்
இனத்தில் ஒற்றுமை ஓங்கட்டும்...!!
இனவாதிகள் மடியட்டும் - எங்கள் தேசம்
இனியாவது விடியட்டும்.....!!!


அரசி நிலவன்





லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "விடியட்டும்" என்ற தலைப்பில் இன்று வழங்கிய கவிதை இது.




கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 (இலங்கை இந்திய நேரம் பிற்பகல் 7.30 மணிக்கு )மணிக்கும் மறு ஒலிபரப்பு பிற்பகல் 9.30 மணிக்கும்...... http://gtbc.fm/




Saturday 9 November 2013

நெருஞ்சி முள்ளாய் இறுதி வரை...


கல்லறை தோண்டி அங்கே
கபாலங்களை முத்தமிடத்துடிக்கும்
காம வெறியர்களின் கைகளில்
கன்னிகள் அகப்பட்டால்.....
கண்ணுறவும் வேண்டுமோ??
கன்னிப்புலிகள்
கடித்துக்குதறப்பட்ட கொடுரம்
தவணை முறையில் காட்சிகளாக....

சதிரம் ஆடி
உதிரம் உறையும்
திகிலாய்...
ஒவ்வொரு மனிதத்தினையும்
பதற வைக்கும்...
இனம் மத மொழி வேறுபாடின்றி...

சரித்திரம் படைத்துச்சென்ற
சமர்க்கள நாயகர்களின் வரலாறு
விளங்க மறுத்தவர்களுக்கு
சரண் அடைந்தவர்களின் வெற்றுடல்
சத்தமின்றி விளக்குகின்றது.....!!!

சயனைட்டுக்களின் தேவை
துலக்கப்படுகின்றது யாவருக்கும் இந்நாளில்....!!

அது நான் இல்லை
ஈனக்குரல் ஈரமாய் ஒலிக்கின்றது...!
ஈழத்தாயின் குலக்கொழுந்தின் குரல்வளையினை
கடித்துக்குதறிய பற்களில்  இரத்தம்...
ஈரமாய் தான் இன்னும்....
ஈரமற்று போன இதயம் கொண்ட
ஈனப்பிறவிகள் வாழும் தேசத்திலா
ஈழத்தமிழர் நாமும்....??


நிதர்சனத்திற்கு ஒலி கொடுத்தவள்
நிர்வாணத்தில் ஒளிப்படங்களாய்..
சிங்கள நிதர்சனம் தெரிந்தவள்..!
சரண் அடைவதை தவிர்த்தவள்..!
சயனைட்டையும் அங்கியினையும்
தொட்டுப்பார்க்கும் இடைவெளியில்
தட்டுப்பட்டு போனவள் குழிக்குள்...!

கட்டியணைத்து சாவினை தழுவ
கங்கணம் கொண்டவள்..!!
கபடமாய் கைதாகிப்போனாளோ....?
கற்பழிப்பின் கொடூரம் தெரிந்தவள்..!!
கயவர்களிடம் சிக்காது சாவினை
நெருங்கிப்போனவளின் விதி தடம் மாறியதோ...?
எங்கள் விதி சதி செய்ததோ???


நெருஞ்சி முள்ளாய் இறுதி வரை
நெஞ்சினை துளைத்தெடுக்கும்...!!!
நெகிழ வைத்த குரலாலும்
நெஞ்சம் தொட வைத்த நடிப்பாலும்
நெருங்கி இருந்தவள் தமிழ் உள்ளங்களோடு...!
ஒலியாகி ஒளியாகி வளியாகி
எங்கும் இசையாகி எங்கள்
மூச்சிலே கலந்தவள்  எப்போதும்
ஒளிவீச்சாய் எங்கள் மன வானில்
ஒளி வீசிக்கொண்டே இருப்பாள்...!


அரசி நிலவன்


நிர்வாணமாய் இணையம்...!


முகப்புத்தகம் முகம் மூடிக்கிடக்கின்றது..!!
நிலைச்செய்திகள் எங்கும் நிர்வாணமாய்
நிலைகுலைந்த நிலையில்....

நடு வீதியில் நிர்வாணமாய் இணையங்களும்....!!
வெள்ளைத்துணி போர்த்தி விடத்தான் யாருமில்லை...!
வெள்ளைத்துணி போர்த்தி வருபவளை உலகிற்கு
வெளிச்சம் போட்டு காட்டி
வெட்கமின்றி எழுதித்தள்ளும் இணைய ஊடகங்களே...!!
அவ்வப்போது புது வெளியீடாய்
அங்கங்கள் விளங்க வெளியிடும் காட்சிகள்...

படுகொலையாளிகளும் காரண கர்த்தாக்களும்
பார்த்து ரசிக்கவோ...???

யாருக்கு வெளிச்சம் போட்டு
யாசிக்கின்றீர்கள்...??
தமிழச்சியின் மானத்தை விற்று....

நான்காண்டாய் விதம் விதமாய் - சனல்
நான்கில் நாறிப்போகின்றது எங்கள்
உறவுகளின் மானம்....!!!

நாதியுண்டோ..??
ஐ. நாவும் சர்வதேசமும்
ஒப்புக்கும் தட்டி கேட்கவில்லை....!!
ஒலி வடிவத்தில் தொடங்கி
ஒளி வடிவமாய் காட்டி....இருக்கின்ற மானமும்
இல்லாமல் போவது தான் மிச்சமோ??

வல்லரசுகளும் சொல்லரசுகளும்
நாடுகள் கடந்து போன அரசுகளும்
அறிக்கைகள் தீர்மானங்கள் மாநாடுகள் என
அவ்வப்போது பொழுது போக்கி போகும் காலம் இது ...!!!
அரசியல் ஆளும் தேசத்தில் நீதிக்கு விலை ஏது..??
காணொளி என்ன..?
கற்பழிப்பு கொலைக்காட்சிகளை நேரலையாய்
ஒளிபரப்பினாலும் துடித்து சாகும் வரை நின்று
ரசித்துப்போகும் உலகின் கண்களுக்கு....
ரணத்தின் வலி தெரிந்திடாது...!
ரசிப்பதற்கு எங்கள் சகோதரி விலை மகளல்ல...!
எங்களுக்காய் உழைத்து மடிந்த உயிர் மகள்...!

உரிமை இழந்தோம் உடமை இழந்தோம்
உயிரும் இழந்தோம் மானத்தையும்  ஏன்
பறிக்கின்றீர்கள் ஊடகங்களே...!!

நந்திக்கடலில் நரிகளால்
வேட்டையாடப்பட்டவளை
நன்றாக முகப்பில் சித்தரிக்கின்றீர்கள்...!!!


உயிர் நீங்கி போனவளின் ஆத்மா
ஊடகங்களில் பிரதான காட்சிகளாய்
அசிங்கப்படுவதையும் - மீண்டும்
அவள் கற்பழிக்கப்படுவதையும்
கண்ணுற்றால் துடி துடித்து
மறுபடியும் மரணித்துப்போவாள்..!
நரக வேதனையாய் உணர்ந்திடுவாள்...!
நரிகளின் கையில் குதறப்பட்டதை விட
ஆயிரம் மடங்கு கதறிப்போவாள்...!

காட்சிகளை நோக்கவே மனம்
திடமாயில்லை....!!
தலைப்பினை நோக்கி
கண்ணீருடன் தலை குனியவே
தமிழன் எண்ணுவான்...!!
தலைப்புச்செய்தியாக்கி
தமிழர் மானத்தை விலை பேசவல்ல...!!



அரசி நிலவன்

Friday 8 November 2013

கார்த்திகையின் கண்ணீர்...!!!


கார்காலத்தில் கல்லறை தேடி வரும்
கண்மணிகளே உங்களை காணாது....

காத்திருந்து மலர் சொரிகின்ற
கார்திகைப்பூக்கள் உதிர்கின்றன....
பறிக்கப்படாமலேயே...


கானக்குயில்கள் திசையற்று
கானம் இசைத்து தேடுகின்றன....!

கார்காலத்து கார்மேகமும் - உங்களை
காணாது பதறுகின்றன விண்ணில்...!

கார்த்திகை மாதமும் கலங்கி
கண்ணீர் வடிக்கின்றது....!


உறைவிடங்கள் உலுப்பப்பட்டு
உடைக்கப்பட்ட தங்க விக்கிரகங்களை
மென்று தின்று ஏப்பம் விட்டவர்களின்
மத்தியில் நின்று...
உங்கள் உதிரங்கள் தோய்ந்த
மண்ணின் வாசம் நுகர்கின்றோம்....!!!

ஆண்டவனின் ஆலயமணியும்
ஆராயப்படுகின்றது கார்த்திகையில்....!!!

சுடர்தீபங்களுக்கும்  விளக்க மறியல் கார்த்திகையில்...!!
சுற்று வட்டாரம் எங்கும் சீருடைகளின் ஆதிக்கம்..!!
சுடர் ஒளிகள் உங்களை காண அந்தரமாய்
சுற்றி சுற்றி ஏங்கித்தவித்து
சுழலும் எங்களை காண வாரிரோ..??



அரசி நிலவன்



Thursday 7 November 2013

தேன்சுவை....!!!


தித்திக்கும் தேன் சுவையாய்
திகட்டாத தீந்தமிழ் - எட்டுத்
திக்கும் இசைபாடி இனிக்கும் இசைத்தமிழ்..!!

நாவிற்கும் செவிக்கும் சுவையள்ளி வழங்கி
நாற்திசையும் பரந்து நிற்கும் நற்றமிழ்...!!

அழகு தமிழ் , பைந்தமிழ் , பண்டைத்தமிழ் ,
தேன்தமிழ் , செந்தமிழ் , வண்ணத்தமிழ் ,
இளமைத்தமிழ் , இன்பத்தமிழ் , கொஞ்சுதமிழ்
உயிரிலும் மேலான உணர்வுத்தமிழ்...!!!

உயிராய்,, மூச்சாய்,, மெய்யாய்,, பேச்சாய்,,
வாழ்வாய்,,தேனாய்,, இனிப்பாய்
தமிழாய் என்றும் உணர்வாய் தமிழே நீயே...!!

உமிழ் நீரின் விழுங்கலிலும்
தமிழ் உச்சரித்துப்போகும் அதிசயம்..!!
குமிழ் நீரின் உடைதலிலும் ஒலிக்கும்
தமிழ் நாதம் அதிசயம்..!!


தமிழின் தேன் சுவை பருகி
தமிழால் தாகம் தணிந்து
தமிழனாய் வாழ்ந்து வீழ்வது அரிதல்லவோ..!!!

அகரம் கொண்டு "ன"கரம் முடியும்
சிகரம் கொண்ட செந்தமிழைப்பேச
என்ன புண்ணியம் செய்தேனோ...??




தங்கத்தமிழ் மேல் காதல் கொண்டு - கொஞ்சிப்பேசும்
கொஞ்சு தமிழில் மோகம் கொண்டு
திளைத்துக்கிடக்கின்றேன் நித்தமும்..

தமிழின் தேன் சுவையின் மயக்கத்தில்
அதன் அன்புத்தொடுகையில்
தடக்கி விழுந்து எழுந்து
உணர்ச்சி பெறுகின்றேன் கணமும்
உணர்வுத்தமிழின் மகிமையால்....


அழகிற்கு அழகு சேர்க்கும்
"ழ" கரம் செவிகளில் விழுந்து
நாவில் புரண்டு எழும்போதெல்லாம்
இன்பத்தமிழின் தேன் சுவை
ஊறிப்பரவும் உடல் எங்கும்...!!

தமிழின் சுவை பாட
தகுதி உண்டோ எனக்கு...
தமிழைப்பாடுவதால் யான்
தரம் உயர்த்தப்படுகின்றேன்...!!
தமிழே உன்னால் தான்
உயிர் ஊட்டப்படுகின்றேன்...!!


அஞ்சித்தினம் வாழ்ந்தாலும்
மிஞ்சிப்போகும் அச்சத்தினை
கொஞ்சு தமிழின் தேன் சுவை...!!!



அரசி நிலவன்






லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "தேன்சுவை" என்ற தலைப்பில் இன்று வழங்கிய கவிதை இது.


கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 (இலங்கை இந்திய நேரம் பிற்பகல் 7.30 மணிக்கு )மணிக்கும் மறு ஒலிபரப்பு பிற்பகல் 9.30 மணிக்கும்...... http://gtbc.fm/