Search This Blog

Wednesday 20 November 2013

சிகரம்...!!!


அனல் பொறிகளால் செய்த தேகம் கொண்டு
கனல் பறக்கும் விழிகள் தாங்கி, செந்தணலாய்
சமர் புரிந்து சிந்திய ஒவ்வொரு துளி குருதியும்
பல்லாயிரம் சுதந்திர தாக வேட்கையுடன் மண்ணோடு
திரண்டு தாயக உறுதி பூண்டு இன்னும் காத்திருக்கின்றது....!!!

சிலிர்த்து பூத்துக்குலுங்கும் செங்காந்தள்
சிணுங்கலுடன் உங்கள் வழி நோக்கி
காத்திருக்கின்றது கண்ணீருடன்...
காவிய நாயகர்களின் மூச்சு காற்றைச்சுவாசித்து
காலத்தின் வரலாற்றில் தாமும் இடம் பிடிப்பதற்காய்.....


கண் திறந்து பாரீர்
கனன்று விம்மும் இதயங்கள்
அமைதியாய் உங்கள் நாமத்தினை உச்சரித்து
அழைக்கும் ஒலி கேட்கலையோ....??
ஆரவாரமின்றி நெஞ்சறையில் பூட்டி
ஆர்ப்பரிக்கும் துன்பலைகளை அடக்கி
இதயங்களில் உயர்ந்த  சிகரங்களாய் கட்டி வைத்து
இரத்த நாளங்கள் புடைக்க அர்ச்சிக்கும் மெளனத்தின்
ஒலி உணரலையோ....???

செங்குருதியால் சிவந்த மேனிகள் உங்களின்
செஞ்சோற்றுக்கடன் தீர்ப்போமா...???


தீயும் நெருங்கிட தயங்கும்
தீராத சுதந்திர தாகம் கொண்ட
தீரர்கள் உங்களின்
தீச்சுவாலை விழிகளை
காணத்தவமாய் தவம் புரிகின்றோம்...!!!
கார்த்திகையில் கோலம் இட்டு
காந்தளை கைகளில் ஏந்திக்
காத்திருக்கின்றோம்.....!!!


தமிழ் தேசமதின் சிகரங்களாக
தமிழ் நெஞ்சங்களில் வாழும்
தங்கப்பேழைகள் நீங்கள்
தரணியில் உயர்ந்து நின்ற
நினைவாலயங்கள் தகர்க்கப்பட்டாலும்
நிலைத்து நிற்பீர்கள் என்றென்றும்
சிகரங்களாக எம் இதயங்களில்....

சிலிர்த்து வரலாறு சொல்லுவோம்...
சிகரத்தின் உச்சியில் வைத்து பூசிப்போம்..!!



அரசி நிலவன்




லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "சிகரம் " என்ற தலைப்பில் இன்று வழங்கிய கவிதை இது.

கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 (இலங்கை இந்திய நேரம் பிற்பகல் 7.30 மணிக்கு )மணிக்கும் மறு ஒலிபரப்பு பிற்பகல் 9.30 மணிக்கும்...... http://gtbc.fm/

1 comment:

  1. நம்பிக்கை தரும் வீரமிகு வரிகள்...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete