Search This Blog

Wednesday 13 March 2013

காய்ந்து உயிருடன் கருவாடு ஆகுவது எம்மினத்தில் தான்...!!!



ஆனந்தமான அகிலத்தில் 
ஆவலாய் எதிர்பார்த்திடுவோம்..! 
ஆண்டிற்கொருமுறை மெல்ல 
ஆடி வரும்  கார்த்திகையில் 
ஆடைகளை களைந்து நீராட...

சோப்பு இல்லை சீப்பு இல்லை 
சோம்பல் முறித்து புதுப்பெண்ணை ஒத்து 
சோக்காய் காட்சி கொடுப்போம்...!!! 

வருடம் பூரா பிச்சை எடுத்தாலும் 
வன்னி மண்ணில் பட்டினி கிடந்தாலும் 
வவுனியாவில் கொஞ்சம் தண்ணி கிடைச்சாலும் 
வருடத்துக்கொருமுறை மலரும்  கார்த்திகையில் - எம் 
வம்சம் எல்லாம் ஒரு முறை  தலை நிமிர்ந்திடும்...!!!

உலகத்தின் வித விதமான வண்டிகளின் அழகும் 
உல்லாசமாய் ஒய்யாரமாய் ஏசியில் நெளியும் உயிரும் 
பனங்கிழங்கை போன்று அடுக்கிய நெரிசலிலும் நெளியும் உயிரும் 
பரிதாபமாய் சக்தி அற்று உழக்கி உழக்கி கடக்கும் உயிரும் 
பட்டினியால் நாவரள  காய்ந்து கிடக்கும் எம்மை உற்று நோக்குவதில்லை 

அவ்வப்போது சிதறும் வாகனங்களின் எச்சங்களும் 
அநாதை உடமைகளும் எம்மை பதம்பார்ப்பதுண்டு...!!! 
அநியாயமாய் பீறிடும் உதிரங்களும் எண்ணெய்களும் 
அடிக்கடி எம்மேல் தெளிக்கப்பட்டாலும் - எம் 
அகோரப்பசிக்கு உணவாகிட முடியாதே...!!! 

காலத்திற்கும் எம்மை நோக்கி 
கால்நடைகளும்  நாக்கினை எட்டியது இல்லை 
காய்ந்து உயிருடன் கருவாடு ஆகுவது எம்மினத்தில் தான்...!!!
 
யாருக்கேனும் எம்மால் பயனுமில்லை 
யாருக்கேனும் எம்மீது பரிதாபமும் இல்லை
யாசிக்கின்றோம்  மனிதர்களே உங்களில் 
யாராவது எம்மை கூண்டோடு அழித்து உதவ முடியுமா???
  
இப்படிக்கு 
 
வாகனங்களின் ஓயாத நடையால் 
வாரி இறைக்கப்பட்ட புழுதிகளுக்குள் 
ஒளிந்திருக்கும் (புழுதிகளை ஆடையாய் போர்த்தி மூடி இருக்கும் )
"ஓயாத வீதியின் இரு மருங்கு செடி கொடிகள்"