இடிந்து போன எந்தன் இதயத்தை
இசையொன்று தட்டிச்சென்றது..!
இமயம் தாண்டிய இடர்களை வென்றது..!
இதமாய் இன்பம் அள்ளித்தந்தது..!
இந்தியம் அடக்கிய ஞானம் தந்தது..!
இரட்டிக்கும் உணர்வுகளை அள்ளிக்கொடுத்தது..!
இடலை கடந்து என்னை இயக்கும்
இசையாய் உள்ளத்தை வென்றது...!
வசை மொழிகள் யாவும்
இசை மொழிகள் ஆகியது - மழலைகள்
அசை போடும் சின்ன மொழியால்
திசை தெரியா வனத்தில் தவித்தவள்
பசை போல ஒட்டிக்கொண்டேன் வாழ்வோடு...
மொழிகள் பேதங்கள் கடந்து
ஆழிகள் தாண்டிய தேசம் யாவும்
விழிகள் மலைக்க வைக்கும் மழலை மொழி...!
கட்டிப்போட்ட இசையாய்
சுட்டிகள் பேசும் மொழியிது..!
வெட்டிய இதயம் ஒன்று சேரும்
தட்டிப்பெசும் மழலை மொழியில்
பட்டி தொட்டி எங்கும் இலவசமாய்
முட்டி மோதாமல் கிடைத்திடும் மொழி
வட்டி இன்றி குட்டிகள் தரும் சொத்து இது
எட்டி நின்று வேடிக்கை பார்க்க வைக்கும் -கோடி
கொட்டிகொடுத்தாலும் ஈடாகாது....!