Search This Blog

Tuesday 20 April 2010

பிரிய மனமில்லை.... பிரியமான தாய் மண்ணை...!!!


வீழ்ந்து கிடக்கின்றேன்....
வீரம் விளைந்த மண்ணில் - யாரும்
வீழ்த்தி விடவில்லை என்னை..!!
விரும்பித்தான் கிடக்கின்றேன்....

உச்சியை பிளந்த சூரியனும்
ஊர் தாண்டி விட்டான்....!
ஊமல் வண்டியின் சமிக்ஞையும்
ஊர் எல்லையில்.....!

நுங்கிய நுங்குகள் அருகே பரந்திருக்க..
நுனி நாக்கினால் சுவை அறியும் ஆட்டுக்குட்டிகளும்,,
நுரைக்க நுரைக்க அசை போடும் பசுக்களும் துணையாக..
நுதல் மேல் அலையாய் முடி அசைந்தாட...
அரவமின்றி அசையாமல் நான்....!!!
அமைதியான மண்ணின் மூச்சுக்காற்றால்
அந்தோ எழுகின்றது..! வீழ்ந்து போன என் வீரமும்,,
அடங்கி போயிருந்த எம் தேசியமும்...!!

குற்றுயிராய் போயிருந்து,, அன்னை மண்ணை
குதூகலமாய் முத்தமிட்டு,, புத்துணர்வுடன்
உயிர்ப்பாகின்றேன்..!! - இழந்து விட்ட
உறவுகளின் அன்புத்தொடுகையை...
உணர்ந்து பெற்றுக்கொள்கின்றேன்...!!
உரமாகி போன மண்ணிலிருந்து...!!!



பிரிய மனமில்லை....
பிரியமான தாய் மண்ணை...!!
இறுக்கி அணைக்கின்றாள் - எனை
இதமான அரவணைப்போடு...!!
இளம் நிலவின் பால் ஒளியில்
இளமையாய் தெரிகின்றாள் என் அன்னை....!!
இந்த இன்பம் நின்று நிலைக்குமோ..??
இனிமையாய் ஒரு இரவைக்கூட..
இங்கே நான் குதூகலமாய் கழிக்க முடியுமோ?? – அந்தோ
இராணுவம் தொலைவில்.....!!!

அரசி

Thursday 15 April 2010

அரச மரம் யாருக்கு சொந்தம்...???


அரச மர பிள்ளையார் இடம்பெயர்ந்து, இப்போது புத்தர் மீள் குடியேற்றப்பட்டு விட்டார்.
எங்கெல்லாம் அரச மரம் கிளை பரப்புகின்றதோ,அங்கெல்லாம் சுற்று மதில் எழுப்பப்பட்டு ஒரு புத்தர் சிலை வைக்கப்பட்டு விடும்.
 அது பேரூந்து நிலையமாக இருந்தாலும் சரி, சன நெரிசல் மிகுந்த பகுதியாக இருந்தாலும் சரி, போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாகவும் இருந்தாலும் சரி அது புத்த பெருமானுக்கு எழுதி வைக்கப்பட்ட சொத்தாகும். இது உண்மையில் பக்தியுடன் மேற்கொள்ளப்படும் ஒரு செயலா?? அல்லது ஏட்டிக்கு போட்டியா?? என்று புத்தியுள்ளவர்கள் உணர்ந்து கொள்வார்கள்.சிங்கள தேசத்தில் மட்டுமன்றி, தமிழர் தாயகப்பகுதிகளிலும் இது பரவலாக மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், புராதன காலந்தொட்டு இருந்து வருகின்ற இந்துக்களின் ஆலயங்களும், கொஞ்சம் கொஞ்சமாக விகாரைகளாக மாற்றம் பெற்று வருவதும் மிக்க வேதனைக்குரிய விடயமாகும்.


ஈழத்தின் மேற்கிலுள்ள கதிர்காமம் இந்துக்களின் மிகத்தொன்மையான வரலாற்றைக்கொண்ட மிகப்பழமையான ஆலயமாகும். இங்கு ஆரம்பத்திலிருந்தே சிங்கள இனவாதத்தன்மை தலை தூக்கியிருந்தமை யாவரும் அறிந்ததே. கடந்த காலங்களில் அது அதிகரித்து, இன்று முக்கால்வாசிக்கு மேல் பெளத்த மத வழிபாட்டுத்தலமாக மாற்றம் பெற்று விட்டது. கதிர்காமக்கந்தனின் சந்நிதியில் அடர்ந்து வளர்ந்தோங்கியுள்ள அரச மரமும், பித்தளை பூணாலான மதில்களும், கதிர்காமத்தை அறிந்திராத பலருக்கு, வெட்ட வெளிச்சமாய் பறை சாற்றும் இது ஒரு பெளத்த வழிபாட்டு இடம் என்று. அது கூடப்பரவாயில்லை, முன்னுக்கு அமைந்துள்ள கந்தனின் வழிபாட்டு அறைக்குள் இந்துக்கள் நாம் செல்ல முடியாத நிலைமை.கையில் பூக்களோடும், அர்ச்சனைத்தட்டங்களோடும் பெளத்தர்களே வரிசையில் நின்று கொண்டிருப்பார்கள். அவர்களுக்கே அங்கு முன்னுரிமை. பக்கத்தில் அமைந்திருக்கும் பிள்ளையாரை மட்டும் தரிசித்து விட்டு, மடப்பக்கமாயுள்ள பழனியாண்டவரையும் தரிசித்து விட்டு, நாம் மூச்சுப்பேச்சின்றி வரவேண்டியது தான்.

அருணகிரிநாதரால் பாடல் பெற்ற தமிழ்க்கடவுள் முருகனுக்கு கூட நாளை இருக்க இடமில்லை.. கந்தனின் கதிர்காமம் காலப்போக்கில் புத்தனின் முழு வாசஷ்தலமாகிவிடும்.


மிகப்பெரிய கொடுமை என்னவெனில், முற்பக்கமாயுள்ள அலங்கார வளைவிலுள்ள ஓம் என்ற வடிவமும் அகற்றப்பட்டு விட்டமையாகும். இப்போது அதில் வேல் மட்டுமே உள்ளது. அதுவும் வெகு விரைவில் காணாமல் போகும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

 

அத்துடன், கதிர மலையில் உள்ள சிவன் ஆலயத்தினை மறைக்குமுகமாக பெரிய விகாரை ஒன்றும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்பாக ஏற்கனவே, இரு அரச மரங்கள் இருந்ததும், அவற்றை சுற்றி வளைவுகளும் சுற்று மதில்களும் கட்டப்பட்டு புத்தர் குடியமர்த்தப்பட்டது தெரிந்ததே. இன்னும் கிட்டத்தட்ட ஐந்தாண்டுகளில் கதிர்காமம் முற்று முழுதாக புத்தரின் வாசஸ்தலமாகி விடும் என்பதில் ஐயமில்லை.


செல்லக்கதிர்காமத்திலிருந்து, பின்புறமாய் அமைந்துள்ள வள்ளி மலைக்கு செல்லும் வழியில் கூட ஒரு விகாரை நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது.எங்கெல்லாம் அரச மரம் உள்ளதோ அங்கெல்லாம் புத்தர் என்றிருந்து, தற்போது இந்து கடவுளர் எங்கிருக்கின்றனரோ அங்கும் புத்தர் முளைத்து விடும் காலமாகி விட்டது. ஒருவேளை இந்து கடவுளர்களை கண்காணிக்க இலங்கை குற்றப்புலனாய்வு துறையினரின் ஏற்பாடு தான் இதுவோ, என்றும் எண்ணத்தோன்றுகின்றது.

தமிழர் தாயகத்தில் அரச மரங்களைக்கண்ணுற்றாலே ஒரு ஆத்திரம் இயல்பாகவே எழுகின்றது. வெட்டி சாய்க்கலாமா என்று கூட எண்ணத்தோன்றுகின்றது. கிளிநொச்சியில்  மிகப்பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள விகாரையும் சுற்று மதிலையும் விழிகள் நோக்கும் போது வெந்த புண்ணில் வேலைப்பாய்ச்சியதாய் ஒரு உணர்வு எழுகின்றது. ஆங்காங்கே சிறிய சிறியதும் பெரியதுமாய் புத்தர் சிலைகள் யாழ்ப்பாணம் வரை நீண்டு செல்கின்றன. சாவகச்சேரி நுணாவில் பகுதில் கூட பிள்ளையார் வீற்றிருக்கும் அரச மரத்தை புத்தர் ஆக்கிரமித்து அமர்ந்திருக்கும் கொடுமையை யாரிடம் கூற நாம்..??

இதே போன்று தான் தமிழ் தேசம் எங்கும் முதலில் புத்தர் சிலை முளைக்கும் பின் ஒரு அரச மரம் கிளை பரப்பும்,, பாஞ்சாலைகள் எழுப்பப்படும்... பின் அவை பகிரங்கமாக சிங்கள தேசம் என அறிவிக்கப்படும்... இதை தடுப்பதற்கு எம்மினத்திற்குள் ஒற்றுமை இல்லை..!
சிங்களவன் எங்கிருந்தோ வந்து குடியேறி,, தன் மதத்தை பரப்பி,, தன் இனத்தை வளம் படுத்திக்கொண்டிருக்க,,,,நாமிங்கே சொந்த இலாபத்திற்காக சொந்த மண்ணை அந்நியனுக்கு தாரை வார்த்து கொடுக்கின்றோம்...!!
அமைச்சர்கள் பதவிக்காக ஆதரவு கொடுப்பதும்,, அரசியல் வாதிகள் சுய இலாபத்திற்காய் தேர்தலில் குதிப்பதும், பெரிய மனிதர்கள் புகழுக்காக ஒத்துழைப்பு வழங்குவதும்,, என்று நீண்டு செல்கின்றது எமது இனத்திற்கெதிரான துரோகத்தனங்கள்...!!

இதை சிந்திப்பதற்கு எம் தமிழனுக்கு புத்தி இல்லையா...??
இல்லை இல்லை நிறையவே இருக்கின்றது...!
ஆனால் ஒற்றுமை இல்லை...!
எப்போது ஒன்று படுகின்றமோ...,,
அன்று தான் எமக்கு விடிவு...!!!

விதண்டாவாதம் பேசித்திரியும் தமிழ் அரசியல் வாதிகளுக்கோ அல்லது தமிழ் அமைச்சர்களுக்கோ இவை கண்ணுக்கு தெரிவதில்லையோ..??? எல்லாமே தெரியும். தெரிந்தும் சுய இலாபத்திற்காய் துண்டு விரிக்கின்ற அன்றில் கண்டும் காணததுமாய் இருந்து கொண்டு, தேவை இல்லாத விடயங்களுக்கு அறிக்கை விடுவது தான் வேலையோ...??? அன்றில் கட்சி தாவுவது அல்லது நாட்டை விட்டு ஓடுவது...??? அரசியல் வாதிகளை மட்டும் ஏன் குறை கூற வேண்டும்?? அது தான் எம்மக்களுக்கே அக்கறை இல்லையே...! யார் எக்கேடு கெட்டாலும் தாம் வாழ்ந்தால் போதும் என்ற பரந்த உள்ளம் கொண்டவர்கள் அல்லவோ எம்மக்கள்..!! புத்தன் அருள் பாலித்தார் என்று காலப்போக்கில் புத்தனுக்கும் தேர்த்திருவிழா செய்வார்கள்...!! ஏனென்றால் கண்டியை ஆண்ட சைவத்தமிழ் மன்னன் கீர்த்தி ஸ்ரீ இராஜசிங்கன் வழி வந்த சைவர்கள் அல்லவோ...??

தமிழா...!! உன் இனமே உனக்கு எதிரி...!!!
தட்டிக் கேட்க யார் வருவார்கள்....????


அரசி


  

Wednesday 14 April 2010

புது வருடத்தை மனதார வரவேற்கும் புதுப்பருவம்...!!!


புத்தாடை அணிய வேண்டி ஆசையுடன்
புது வருடத்தை எதிர்பார்த்த பள்ளிப்பருவம்...!!!

கைவிசேஷம் பெற்றுக்கொள்ள அங்கலாய்த்த
கல்லூரிப்பருவம்...!!!

பட்டாசுகளை கொளுத்தி, பழசுகளின் முணு முணுப்பால்
பரவசமாய் மகிழ்ந்திருந்த விடலைப்பருவம்..!!

வருடப்பிறப்பு சிறப்பு நிகழ்ச்சிகளை எதிர்பார்த்து
வருடப்பிறப்பை வரவேற்ற இருபதுகளின் தொடக்கம்..!!

யாழில் கைத்தொலைபெசிகள் அறிமுகமாகி...
யாவருக்கும் குறுஞ்செய்தி சேவை மூலம்
வாழ்த்து அனுப்பிட துடித்த கன்னிப்பருவம்...!!!

உலகத்தை மறந்து,,
உயிர் ஒன்றின் வாழ்த்துக்காக
துடித்த காதல் கொண்ட பருவம்..!!

வருடம் பிறப்பதும் முடிந்ததும் தெரியாமல்
சூனியமாய் கடந்து சென்ற வலி கொண்ட பருவம்..!!

என்ன நடக்குமோ?? ஏது நடக்குமோ...??
என்று இழந்து விட்ட பாதி உயிர்களின் சோகத்தால்
எதிர்பார்க்காமல் பிறந்த கடந்த விரோதி வருடத்தை
எதிரியாய் நோக்கிய அழுகைப்பருவம்..!!!

புத்தாடை, கைவிசேஷம்,பட்டாசு,சிறப்பு நிகழ்ச்சிகள்
குறுஞ்செய்தி செவைகள்,வாழ்த்துக்கள், வலிகள்,துன்பங்கள்,அழுகைகள்
கொண்ட வருடப்பிறப்பு பருவங்களை கடந்து...
புது மாற்றத்திற்காய்...
புது எதிர்பார்ப்போடு..
புது வருடத்திலாவது  நல்லது நடக்குமா??
புது எதிர்பார்ப்போடு...
புதுவருட பிறப்பின் கிரக மாற்றத்திற்காய்..
புது வருடத்தை மனதார வரவேற்கும் புதுப்பருவம்...!!!



என்னினிய உறவுகளுக்கு இனிய சித்திரைப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...!!!
அன்புடன்
அரசி

Tuesday 13 April 2010

தாயகத்தில் தமிழனின் மனநிலை.....!!!

தலைப்பை பார்த்து விட்டு தமிழ் பேசுபவர்கள் எல்லோரும் தமிழர்கள் என்று எண்ணி அவர்களை தமிழன்”  என்ற இனத்தில் உள்ளடக்காமல் இத்தொடரை தொடர அன்புடன் வேண்டுகின்றேன்.

தாயாய் இருந்த தந்தை என்றொருவன் காணாமல் போனாலோ அன்றி காற்றோடு கரைந்து அதாவது மரணித்து போய் விட்டாலோ,, அந்த பெரு வெற்றிடத்தை நிரப்ப யாராலும் இயலாது.. காலத்தின் கோலத்தால் மாற்றாந்தந்தை என்ற உறவின் மூலம் கூட இழந்த தந்தையின் பாசமோ பரிவோ கிடைப்பது என்பது அரிதே. அப்படி கிடைப்பினும் அது குறுகிய காலத்திற்கே. இன்று தமிழர்களும் அந்நிலையிலேயே. 

தமிழீழம் என்றொரு உயிர் இன்று மென்று விழுங்கப்பட்டு அந்தரத்தில் ஊசலாடியபடி கண்ணீர் சிந்துகின்றது. தாயகத்தில் அரசியலுக்காக ஒரு சாரால் முற்றாகவே மறுக்கப்பட்ட தமிழீழம். இனி மெல்ல மெல்ல மறக்கப்பட்டு போய் விடக்கூடும்.

தமிழீழம் என்ற தோலை போர்த்தி சிங்கத்தின் வாலை பிடித்த நரிக்கூட்டத்தார், அரசியல் சாணக்கியம் என்று தமிழீழக்கோரிக்கையை நிராகரித்து வெற்றி பெற்ற கூட்டமைப்பு , நாடு கடந்த தமிழீழ அரசு என்று புலத்தில் ஒரு சாரார் என்று பலவித பிரிவினைகளுக்கு மத்தியில் இன்று தமிழர்கள் ஒரு பெரும் இக்கட்டான சூழ்நிலையில் சிக்கித்தவித்து கொண்டிருக்கின்றார்கள். ஆனாலும் நடந்து முடிந்த தேர்தல் முடிவுகளின் படி தமிழ் மக்களின் மனநிலை என்ன நிலையில் உள்ளது என்பதனை சற்று அறிய முடிகின்றது. தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு வெற்றி பெற்றதை வைத்து தாயகத்தமிழ் மக்களும் தமிழீழ கோரிக்கையை மறந்து விட்டார்கள் என்று எண்ணிக்கொள்ள இயலாது. கூட்டமைப்பினரின் வெற்றிக்கு முதன்மை காரணம் தமிழீழ தேசியத்தலைவரால் தமிழ் தேசிய கூட்டமைப்பு என ஒன்றிணைக்கப்பட்ட ஒரு கட்சி என்பதும், அவரால் அங்கீகரிக்கப்பட்டு இறுதித்தேர்தலில் ஆதரவு கொடுக்கப்பட்டமையும் ஆகும். அத்துடன் ஒரு பழம் பெரும் தமிழ் கட்சி, அதாவது தந்தை செல்வாவினால் ஆரம்பிக்கபட்ட  தமிழரசு கட்சி என்ற பெயரையும் கொண்டமையும் ஆகும். அதை விட யாழ்ப்பாணத்தில் அவர்களின் வெற்றிக்கு “உதயன் ”  மற்றும் சுடர் ஒளிஊடகங்களினூடாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பிரச்சாரங்கள் மக்களை சென்றடைந்தமையும் ஒரு முக்கிய காரணமாகும். அதாவது பல கட்டுரைகள் ஊடாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் தமிழீழ கோரிக்கையை நிராகைத்தமை தொடர்பில் மக்களுக்கு கொடுக்கப்பட்ட விளக்கங்கள் மற்றும் தமிழீழக்கோரிக்கையை கைவிட்டாலும் விடுதலைப்போராட்டத்தை, புலிகளை சார்ந்து அக்கட்சி மேற்கொண்ட ஊடக பிரச்சாரங்கள் என்பனவாகும்.  

அத்துடன் தமிழீழ கோரிக்கையை முன்வைத்து போட்டியிட்ட மறு சாரார் மீது மக்கள் கொண்ட வெறுப்பும் அவர்களின் நடவடிக்கைகளும் முதன்மை காரணங்களன்றி தமிழீழக்கோரிக்கை அல்ல. கூட்டமைப்பில் இருந்து விலக்கப்பட்டமை, அத்துடன் அரசின் கைக்கூலிகளாக வாக்கை பிரிக்கும் எண்ணத்தில் அவர்கள் போட்டியிடுகின்றார்கள் என்ற ஒரு கருத்தும் மக்கள் மத்தியில் நிலவியமையும் ஆகும்.  

என்னை பொறுத்த வரையில் இந்த தேர்தல் முடிவுகளின் படி தமிழ் மக்களின் மனநிலை என்பது தற்போது அவர்கள் யாரையும் நம்பவில்லை என்பதே. 18 வீதமானவர்களே வாக்களித்துள்ளார்கள்.இதில் மிகுதி 82 வீதமானவர்களில் புலத்தில், வெளி மாவட்டங்களில் வதிவோரை தவிர்த்து ஏறத்தாழ 50 வீதமானவர்களுக்கு யாழில் போட்டியிட்ட எந்த கட்சி மீதும் நம்பிக்கை இல்லை என்பதை விட இவர்கள் பாராளுமன்றம் சென்று என்ன செய்ய போகின்றார்கள்? 

இலங்கை பாராளுமன்றம் தமிழ் உறுப்பினர்களின் பேச்சினை செவி மடுக்குமா? என்பவையே முதல் வினாக்களாக இருந்திருக்கும்? யாழில் வாக்களித்த 18% மானவர்களில் 43.85% மானவர்களே கூட்டமைப்பிற்கு வாக்களித்துள்ளனர். அரசிற்கு வாக்களித்துள்ள 32.07% மானவர்களை தமிழர்கள் என்று எப்படி அழைக்க முடியும்?? வேலை வாய்ப்பு, பண உதவி, நிவாரணம் என்ற சலுகைகளுக்காக தமிழின மானத்தை விற்று வெற்றிலைக்கு(ஈ.பி.டி.பி) வாக்களித்த இந்த மக்களுக்கு ஏது மானம் மரியாதை??

தமிழர்களின் சுயநிர்ணயம்,உரிமை என்பனவற்றை பெற்றுத்தர அரசியல் பேசுபவர்களாலோ அல்லது இலங்கையின் பாராளுமன்றம் செல்ல இருக்கும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினராலோ முடியும் என்பதை நம்பி இருக்க முடியாது. தமிழ்த்தெசியக்கூட்டமைப்பு உறுப்பினர்களால் மிஞ்சி மிஞ்சி போனால் தம் உயிரை மட்டுமே தமிழர்களுக்காக கொடுக்க முடியும். இனவாத அரசின் கோட்டையில் சென்று உரக்க குரல் கொடுக்க துணிபவன் தன்னுயிரை தான் இழக்க முடியும் என்பது கடந்த கால பாராளுமன்ற உறுப்பினர்களின் கொலைகள் மூலம் நாம் பெற்றுக்கொண்ட அனுபவ உண்மைகளாகும்.
  


எமது உரிமைகளை கேட்டு பெற்றுக்கொள்ள இயலாது என்பது வெட்ட வெளிச்சமான உண்மை. இதை அனைத்து தமிழர்களும் எப்போது உணர்ந்து கொள்கின்றார்களோ அப்போது தான் உறங்கிக்கொண்டிருக்கும் போராட்டம் கண் விழிக்கும்! அது வரை தமிழனை அவன் இனத்தவனே ஏமாற்றுவதையும், அந்நியன் ஏறி மிதிப்பதையும் யாரால் தடுக்க முடியும்?? 
எமது பிரச்சினைகளை தீர்த்து, எம் அபிலாசைகளை வென்றெடுக்க இந்த அரசியல் வாதிகளால் எதுவும் செய்ய முடியாது என்பதனையே யாழின் தேர்தல் வாக்களிப்பு வீதம் புலத்தி நிற்கின்றது. யாழ்ப்பாண மாவட்டத்தில் மக்களின் அசமந்த போக்கே இந்த பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது.

எது எப்படி இருப்பினும் அரசியல் மூலம் எமக்கான தீர்வு ஒன்று கிடைக்குமாயின் மகிழ்ச்சியே. ஆனால் அது கிடைக்கும் என்பதற்கு எவ்வித அறிகுறியோ சாத்தியமோ இல்லை என்பது தான் கண்கூடு. எனினும் பொறுத்திருந்து பார்ப்போம். தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் அரசியல் செயற்பாடுகளை... 

அரசி