Search This Blog

Monday 28 October 2013

தந்திரம்...!!!


எந்திரமாய்  சுழலும் அகிலத்தில்
தந்திரமாய்  சுழற்றும் மனிதர்கள்
மந்திரமாய் தப்பித்தாலே உண்டு..!!!

சகுனியின் தந்திரம் மகாபாரதம்..!
கூனியின் தந்திரம் இராமாயணம்,,!

வரலாறும் இல்லை தந்திரமின்றி..
வாழ்க்கையும் இல்லை தந்திரமின்றி..

தந்திரங்கள் பல வெற்றி வாகை சூடி
அந்தரமாய் போன வாழ்க்கையில்
எந்திரமாய் எலும்புள்ள மனிதர்கள்..!


போரில் தந்திரமானவர்கள் மூச்சிழந்து
போனார்கள் பேச்சுத்தந்திரத்தால்...!!!

நாடுகளின் கூட்டுத்தந்திரம்..
முடிந்தது முள்ளிவாய்க்காலில்....!!

அரசியலில் தந்திரம்..
பிரிந்தது வட கிழக்கு..!!

அதற்குள்ளும் தந்திரம்..
முட்டித்தள்ளும் முரண்பாடு..!!

ஆட்சியில் தந்திரம்..
அடங்காத குடும்பம்...!!


வல்லரசின் தந்திரம்..
வலிந்து திணிக்கப்படும் யுத்தம்...!!

தொட்டில்கள் ஆட்டப்படுவதற்காகவே கிள்ளப்படும் குழந்தைகள்...!
தொன்று தொட்டு தொடரப்படும் தொன்மையான தந்திரம்...!  

வருங்காலமதை வல்லமையாய் கணித்து
நிகழ்காலத்தில் தந்திரமாய் பயணிக்கும் தந்திரம்
ஒரு காலத்தில் தகர்த்து எறியப்படும் அச்சம் இல்லாமல்
மந்திரப்புன்னகையுடன் எந்திரமாய் சுழலத்தான் செய்கின்றது...!!!


அரசி நிலவன்


லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "தந்திரம்" என்ற தலைப்பில் இன்று வழங்கிய கவிதை இது.


கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 (இலங்கை இந்திய நேரம் பிற்பகல் 7.30 மணிக்கு )மணிக்கும் மறு ஒலிபரப்பு பிற்பகல் 9.30 மணிக்கும்...... http://gtbc.fm/

Thursday 24 October 2013

இலுப்பையடிச்சந்தி "மடம்"


மறந்தும் எட்டிப்பார்த்திடார்...!
மந்தைகளும் காக்காய்களும்
மகிழ்வோடு இளைப்பாறி இரை மீட்டி
மலம் கழித்துப்போகும் கூடம் - துர்
மணம் வீசும் என்னருகே
மறந்தும் மனிதர்கள் எட்டிப்பார்த்திடார்...!

மதிப்பற்று மண்ணாய் போய்
மனம் புண்ணாய் நொந்திருந்தேன்...!!!

மதுரமாய் இனித்தது வாழ்க்கை..!
மங்களகரம் எட்டிப்பார்த்தது வாசலில்...!

மகன்களின் கரிசனை விளங்கி
மதிகொண்ட பெற்றோரின் தெரிவாகி
மதிற்பிற்குரிய இருப்பிடமாகிப்போனேன்..!

அநாதரவற்று போன நானும்
அடைக்கலமற்ற அவர்களுமாய்
ஆனந்தமாய் கழிகின்றது பொழுது...!!!
ஆடுகளும் தங்கித்தான் போகின்றன..!!

தள்ளாடித் தள்ளாடி
தன்னந்தனிமையில்
தவித்து வாழ்வினை வெறுத்து வரும்
தனித்தவர்கள்  தயங்காமல்
தங்கி உயிர்  நீங்கியும் போவதுண்டு...!!

இல்லங்களை வரிசையாய் கட்டி
இருப்பதற்கு ஒன்று கூட
இல்லாமல் போனதற்கு
இயன்றவரை இதைப்போன்று
இன்னும் பல கட்டியிருந்தால்
இல்லாதோர் இன்பமாய்
இருந்திருப்பார்களே...
இங்கிருந்து முணு முணுக்கின்றனர்
இப்போதைக்கு ஒன்றும் இல்லாதோர்...!

இரத்தத்தால் ஒன்று பட்டு
இரு மனங்களால் வேறுபட்டு
இரண்டகம் புரிந்திடும்
இன்றைய மகன்களும் - அச்சம் மடம் எனும்
இலக்கிய நாற்குணங்களும்
இல்லாமல் போன நவீன மருமக்களும்
இதே வழியில் நாளை என்னை நாடி வரலாம்...!
இன்முகத்துடன் வரவேற்கின்றேன் நான்..
இப்படிக்கு மகிழ்வோடு
இலுப்பையடிச்சந்தி "மடம்"



அரசி நிலவன்




லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "மடம்" என்ற தலைப்பில் இன்று வழங்கிய கவிதை இது.


கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 (இலங்கை இந்திய நேரம் பிற்பகல் 7.30 மணிக்கு )மணிக்கும் மறு ஒலிபரப்பு பிற்பகல் 9.30 மணிக்கும்...... http://gtbc.fm/

  

Wednesday 23 October 2013

இனவாத இரைச்சல்..!!!

வானமே நடு நடுங்கி போகும்....
வானத்தை கிழித்து வரும் பேரிரைச்சல்...!!
வான் நிலவும் மேகத்திரைக்குள் அஞ்சியவாறு மறையும்..!


வானேறி விரைந்து வரும் வல்லூறுகளின் எச்சம்
வாயைப்பிளந்து கொண்டு மண்ணை நோக்கி விரையும்...!
வானம் நோக்கும் கண்கள் இரைச்சல் கேட்டு....
வாசலில் காலாறும் கால்நடையும் எஞ்சியதில்லை...
வாரி இறைக்கும் குருதி
வான் வரைக்கும் தெளிக்கப்படும்...!!!


வாலை ஆட்டியபடி செல்லமாய் வளர்த்த
வாயில்லாச்சீவன் உதிரந்தோய்ந்து
வாஞ்சையுடன் கதறும் காட்சி...!!!
வானத்தில் மறுபடியும் இரைந்திடும் இரைச்சல் கேட்டு
வானத்தை நோக்கி அழுதழுது குலைத்து ஓடித்திரிந்து...
வாசலில் சிதறிப்போன எசமான் காலடியில் கிடக்கும்...!


வாரிச்சுருட்டிக்கொண்டும் உடலங்கள் சிதறிப்போயும்
வாழையடி வாழையாக வாழ்ந்து வந்தோம் இவ்வாறே..
வானவில் ஒன்று மாற்றமாய் எம் வானத்திலும்
வானிலையும் மாறியது போன்ற ஒரு பிரமை...!
வானம் அமைதியாகி செவிகளும் நிம்மதியாய் -ஆனாலும்
வாழ்கின்றோம் வாள் முனையில் ஒரு வாழ்வு - வீடு
வாசல் யாவும் ஒரு கட்டுப்பாட்டுப்பிடியில்...

வானத்து இரைச்சல் வாசலில் நாய் குரைச்சலாய்
வாடிக்கையாகிப்போனது - உயிரை
வாட்டும் நிலையிலும் ஒரு வாழ்வினை
வாழ்ந்தபடியே தான் நாம் - மண்ணின்
வாசத்தில் புத்துயிர் பெற்றாலும்
வாரத்திற்கொரு விசாரணையை
வாசல் வரை உரைக்கும் பச்சை
வாகனத்தின் இரைச்சல்
வாழ்வினை வேரறுக்கும் இரைச்சல்....!!!

இரைச்சல்கள் இடம் மாறினாலும்
இசையால் அவை வேறுபட்டாலும்
இவை யாவும் இயமனாய்
இடர் கொடுக்கும் இரைச்சல்களே..!
இருள் தன்னும் அஞ்சிடும்
இரைச்சல்கள் எம் மண்ணில்...
இன்றியமையாதனவாகி விட்டன..!

இசைவாக்கம் அடைந்திட்ட
இரைச்சல்கள் இவையெனினும்
இதயம் வேகமாய் துடித்து ஓய்கின்றது...!!!

இரைச்சல்களின் பின்னே
இடர் ஒன்றின் வருகையினை உரைக்கும்
இனவாத யானைகளின் மணியோசை - என
இளம் பிஞ்சும் அறியும் இரைச்சல்கள் இவை..!!!

இடியோசைக்கு அஞ்சாத குழந்தை வாழும்
இடர் மிகு ஈழத்தில் இளைஞனும்
இதயம் நொறுங்கி இடிந்து போவான்
இனவாதம் எழுப்பும் - இந்த
இயம  இரைச்சல்களால்....!!



 அரசி நிலவன்




லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "இரைச்சல்" என்ற தலைப்பில் இன்று வழங்கிய கவிதை இது.


கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 (இலங்கை இந்திய நேரம் பிற்பகல் 7.30 மணிக்கு )மணிக்கும் மறு ஒலிபரப்பு பிற்பகல் 9.30 மணிக்கும்...... http://gtbc.fm/



Tuesday 22 October 2013

உயர்வும் தாழ்வும்.....!!!


உயர்வுகள் யாவும் இடப்
பெயர்வுகள் ஆகின...
தாழ்வுகளே எனக்கு 
வாழ்வுகள் ஆகியதால்
பாழாகி போகும் காலம்...!!!


கள்ளியின் உலர் வாழ்வினை 
அள்ளி  வழங்கிய தாழ்வினை 
எள்ளி நகையாடியவர்களை  எண்ணி  
பள்ளி கொள்ள முயன்றும்
தள்ளி போகும் தூக்கம் -  விடி 
வெள்ளி நம் வானத்தில் தோன்றாதா ?
முள்ளி செடியில் சிக்கிய சேலையாய் - மனம் 
கிள்ளிப்போகும் வேதனைகள் 
உணர்த்திடும் போது தான் தாழ்வு என்பதும்  
உணரப்படுகின்றது....!!!


கல்வியின் உயர்வும் 
கடமையில் உயர்வும்
உணர்த்திடவில்லையே..!   
உயர்வின் உயர்வினை.....

உயரத்தில் சஞ்சரித்த போது 
உலகமும் என்னோடு தான்....!!!
உணர்வுகள் என்றும் தாழவில்லை...!
உண்மையின் நிழல்களும் கூட 
உருமாறித்தாழ்ந்திடவில்லையே...!  
உருவங்களும் தாழவில்லை..
உயிர்கள் மட்டும் ஏன்
உடனுக்குடன் தாழ்வாகின்றதோ?
உருமாறிப்போகும் உறவுகள் 
உணர்வுகளை களைந்து - என் 
உயிரை எட்டி உதைப்பதேனோ??


உண்டி சுருங்கினாலும் இன்னும் 
உயிர் வாழ்கின்றேன்...!!
உறவுகளின் ஏற்றத்தாழ்வினால்
உருக்குலைந்து போகின்றேன்...
உயிருடன் தினம் மரணித்துப்போகின்றேன்...!

உயர்வின்றி தாழ்ந்து போனால்
உண்மையும் தூரமாய் பயணித்து  
உறவாட மறுக்கின்றதும்  
உண்மையே...!

உயர்ந்த போது சமனாய் தெரிந்த 
உலகம் - உணர்வாலே 
உணர்த்துகின்றது தன்னையும்  தாழ்வாய்...


உயர்திரு உலகமே..! 
உள்ளபடிதான் இருக்கின்றேன் யான்...
உரு மாறி இடம் மாறுவது நீ தான்....!
உடமை தான் இழந்து விட்டேன் 
உறைவிடமும் தொலைத்து விட்டேன்...
உயிர் தன்னும் நீங்கிடுவேன் ஆனால் 
உன்னைப்போல் 
உருமாறி போகமாட்டேன் - மனிதாபிமான 
உணர்வுடன் நிலையாக 
உயர்ந்து நிலைத்து  நிற்கின்றேன்...
உலகமே உன்னைப்போல் தாழ்ந்தல்ல..
உலகமே உன்னைப்போல உயிரற்றல்ல..
உலகமே உன்னைப்போல் உணர்வற்றல்ல 
உண்மையுடன் யான் என்றென்றும்
உயர்வுடன் தான்...!!!



 அரசி நிலவன்



லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "உயர்வும் தாழ்வும்" என்ற தலைப்பில் இன்று வழங்கிய கவிதை இது.




கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 மணிக்கும் மறு ஒலிபரப்பு பிற்பகல் 9.30 மணிக்கும்...... http://gtbc.fm/

Monday 21 October 2013

தங்க முகம்...!!!


அலைகடலிலே துரும்பாய்
அலைக்கழிக்கப்பட்டாலும்
அசராத அழகு முகத்தில்
அன்பு ஊற்றெடுத்துச்சொரியும்...!
அழகு புன்னகை அசைந்தாடும்..!

துரோகத்தனங்களை
துச்சமாய் கடந்து
துன்பங்களை துரத்தியடித்து
துயர்களைத்துடைத்து
துவண்டு போகாத அகத்தை
துடிப்பாய் காட்டும்
துடுக்குத்தனம் மிக்க உந்தன்
துணிச்சல் முகம்...!

சின்ன அங்கம் மெலிந்தாலும்
என்ன  பங்கம் நேர்ந்தாலும்
மின்னும் தங்கமாய் முகம்
இன்னும் பள பளக்கின்றதே..!!!

பொங்கம் மிகு உந்தன்
சங்கத்தமிழ் பேசும் முகத்தினால்
துங்கம் அடைகின்றாய்..- எனை
புங்கம் கொண்ட
தங்க முகத்தோனே...!

கள்ளமில்லா குழந்தை
உள்ளங்கொண்ட உந்தன்
வசீகரிக்கும் கண்களின்
வருடும் அன்பொளியும்..,
வஞ்சமில்லா சிரிப்பும்..,
வதனமதில் ஒருங்கு சேரும்..!
மகிழ்வின் உறைவிடம்..!

கருணையின் பிறப்பிடம்..!
உண்மையின் தரிசனம்..!
உந்தன் வண்ண வதனத்தின்
உயர்நிலைக்கு தங்க முகம்
உவமானம் தன்னும் சற்று
ஒரு படி தாழ்வில் தான்...



அரசி நிலவன்


அரும்பதங்கள்
****************

பொங்கம் : பொலிவு
துங்கம்     : உயர்ச்சி
புங்கம்      : வெற்றி


லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "தங்க முகம்" என்ற தலைப்பில் இன்று வழங்கிய கவிதை இது.


கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 மணிக்கும் மறு ஒலிபரப்பு பிற்பகல் 9.30 மணிக்கும்...... http://gtbc.fm/







Thursday 17 October 2013

அடையாளமின்றி தொலைந்து போகும் உரிமை..! (உரிமை)


காலங்காலமாய் குடியிருந்த மண்ணில்
காணாமல் போனது வாழ்ந்த எச்சங்கள்..!
முடிந்து போன கொடூர யுத்தம் கொடுத்த வடுக்களை
முழுதாய் புதைத்து மீண்ட மண்ணில்
மீண்டும் குடியிருக்க அடுத்தவர்களிடம்
அனுமதி வேண்டி தவமாய் தவமிருப்பு...!
அறிந்து கொள்ளுங்கள் எமக்கான உரிமைதனை ...!!

மிரட்டல்கள் உருட்டல்கள் விரட்டல்கள்
மீறினால் கடத்தல்கள் என்றாகிப்போன
தேசத்தில் எமக்கான உரிமைகள் யாவும்
தேடுவாரற்று எங்கோ ஓர் மூலையில்...

தீயோடு சங்கமமாகி சரித்திரமானவர்களுக்கு
தீபம் ஏற்றிடவும் உரிமை அற்றுப்போன இனம்..!!


புதைக்கப்பட்டவர்கள் தோண்டி எடுக்கப்பட்டு
விதைக்கப்பட்டார்கள் மண்ணின் மேலே......

ஆறடி நிலத்திற்கும் அருகதை இல்லாத
ஆட்சியில் உரிமை காலாவதியான ஒரு பண்டம்..!!!


சாட்சிகள் இருந்தும் தண்டனை வழங்கிட முடியாது..!
குற்றம் இழைக்காமல் வழக்கின்றி ஆயுள் தண்டனை..!
உள்ளதை உள்ளபடி எழுதிட்டால் ஊடகம் நொறுக்கப்படும்...!
உயர்த்து குரல் எழுப்பினால் குரல்வளை நசிக்கப்படும்..!
உரிமைகள் புதைக்கப்பட்டு புற்களும் முளைத்து நசுக்கப்பட்டாயிற்று


ஊடகவியலாளர் ஊமையாய் தான் இருக்க வேண்டுமாம்...!
ஊடகக்கற்கைக்கு  நாளை தடை விதித்தாலும் வியப்பில்லை..!
ஊரின் உரிமைகளின் பெருமைகள் பற்றி அளந்திட முடியாது..!!!

அடையாள அட்டை இல்லாது போனால்
அடையாளமின்றி தொலைந்து போகும் உரிமை..!

புனர்வாழ்வும் புலனாய்வும்
புதியதல்ல நமக்கு - இன்று
புது வாழ்வு என்னும் பெயரில்
புண் பட்டு போகின்றது உள்ளம்..!

உரிமைகளை கேட்டு அன்று தொடங்கப்பட்டது..!
உரிமைகளோடு சேர்த்து பின் தொலைக்கப்பட்டது..!
உண்ணும் ஒரு பிடி சோறும் கலக்கத்துடன் தான்
உள்ளே இறங்கி செல்கின்றது.....!!
உணர்ந்து கொள்ளுங்கள் எமக்கான உரிமை எதுவென்று..

உல்லாசித்து உறங்கும் புள்ளிகள்
உண்மை அறிந்திருந்தும்
உணர்வற்று இருப்பதும் ஒருவித
உரிமைதானோ ???
 


அரசி நிலவன்






Wednesday 16 October 2013

தகராறு....!!!


நித்தம் ஒரு போராட்டத்தால்
சத்தம் இன்றி அடங்கி மெளன
யுத்தம் புரியும் எண்ணங்கள்
சித்தம்  கலங்கி தகராறு புரிகின்றது
தத்தம் மனச்சாட்சிகளுடன்.....!!!

மஞ்சத்தில் சாய்ந்த மெய்யின்
நெஞ்சத்தில் கனமான
எண்ணக்குழப்பங்கள்
அமிழ முடியாது தத்தளிக்கின்றன....

தொண்டைக்குழிக்குள் வருவதும்
நெஞ்சுக்குழிக்குள் அமிழ்வதுமாய் - பின்
விஞ்சி மேல் எழுவதுமாய்
பாடாய் படுத்தும் உயிர்த் துடிப்பில்
கலவரம் அடையும் மனம்
கண்டபடி திட்டித்தீர்க்கின்றது..!


கலைந்திட்ட கனவுகளால்
எட்டி உதைத்து தகராறு புரிகின்றது
எடை போட்டு தடுத்திட்ட மனச்சாட்சியினை...



அரசி நிலவன்




Tuesday 15 October 2013

அடிமைகள் என்பதை அறியாமலேயே...

ஆடம்பர வாழ்க்கைக்கு
ஆங்காங்கே உலகம் எங்கும்
கை ஏந்தி கடன் சுமைகளை
குடி மக்களின் தலைகளில்
பொறித்து வைக்கும் அரசு....!!!

தான் பெற்ற இன்பம் வையகமும் பெற
தாரை வார்த்து கொடுக்கின்றது அடிமைகளாக
மத்திய கிழக்கின் பண முதலைகளுக்கு....
தரகோடு அந்நிய செலாவணியும்
தங்கு தடையின்றி அள்ளப்படுகின்றது...!

உழைப்புக்கள் கொட்டப்படுகின்றனஅங்கே..!
உதிரங்கள் சிந்தப்படுகின்றன அங்கே..!
உறவுகள் நாதியற்று இங்கே
உலை வைக்கவும் சக்தியற்று
உயிரை வெறுத்து காத்திருப்பு...!

ஊதியம் மருந்திற்கும் இல்லை...
ஊமையாய் போன பெண்மைகள்
ஊர் திரும்புகின்றன வெற்று உடலங்களாக
ஊர் திரும்பாமலே போன றிஷானா நபீக்குகளும் பல
ஊனமாய் போன புத்தியுடன் தம் நிலை மறந்தோரும் என
ஊர் சொல்லும் பலரின் கண்ணீர் கதைகள்...!

இராணுவத்திற்கு சலித்து விட்டதென்று
இங்கிருந்து நாடு கடத்தி சித்திரவதை....!!!
அடிமைகளை விற்று பெற்றோல் கொள்வனவு
"அறியாமை" அரசிற்கு மூலதனமாகின்றது
அருமந்த உயிர்கள் நட்டமடைகின்றன.....

அடிமை வாழ்வு நிரந்தரமாகி அங்கே
அல்லாடும் அபலைகள் சிதைக்கப்படும் கொடுமையா?
அடிமை என்ற மூன்று எழுத்தில் - அவை
அடங்கி போவது கொடுமையா?

அதிகாரம் அகத்தே இருந்தும்
அசமந்த போக்கு அரசின்
அறியாத சங்கதிகள் அதிகம்..!

அடிமைச்சாசனம் எழுதி கைச்சாத்திட்டு
அரங்கேற்றும் நாடகம் புரியாது -இன்றும்
அங்கே ஏற்றுமதி ஆகின்றன
அறியாமைப்பெண்மைகள் - தாம்
அடிமைகள் என்பதை அறியாமலேயே...

அறிவுறுத்த யார் வருவார்??
அறியாத அரசியலை மேடை போட்டு
அளக்கும் அய்யா மாரே....
அறியாமல் அடிமையாகும் கொடுமையினை
அநியாயமாகிப்போகும் வாழ்வினை விழிப்புணர்த்த
அய்யாமாரே மாதம் ஒரு மேடை ஏற மாட்டிரோ?? - ஒ
அயர்த்து போய் விட்டேன் நீவிரும்
அரசிற்கு அடிமை என்பதனை....


அரசி நிலவன்




லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "அடிமை " என்ற தலைப்பில் 15.10.2013 வழங்கிய கவிதை இது.

அடிமை...!!!


அடுப்பின் புகை முகர்ந்து பழகியவர்கள்
துப்பாக்கியின் புகை நெடியினை சுவாசித்து
இனத்தின் அடிமை விலங்கொடிக்க
இடி என முழங்கி அணி திரண்டனர் - தமிழ்
இனத்தின் அடிமை விலங்கோடு - பெண்
இனத்தின் அடிமை விலங்கும் தகர்த்திட்ட
இமயத்தின் பின்னால்....

மூன்று தசாப்த யுத்தமும்
மூச்சின்றி அடங்கியதால்
அடிமையாகிப்போனது
அடங்கா மண்ணின் மூச்சு...!!!

ஆயுதங்கள் தரித்திரிந்தோர்
ஆருமின்ரி அந்தரித்தனர்....
ஆரம்பித்தது அடிமை வாழ்வு
ஆதியிலிருந்து...

பெண்மைகள் வதைக்கப்பட்டன...
ஆண்மைகள் சிதைக்கப்பட்டன...
உயிர் மீண்டவர்கள் இன்றும்
உடைத்திட முடியா அடிமைவிலங்கில்
அகப்பட்டு அல்லாடியபடி...

தலை நிமிர்ந்து  திமிருடன் 
தலை வணங்காது  நடந்த 
தரை எங்கும்  இன்று நாணி
தலை குனிந்து செல்லும் நிலையும் 

சொல்லாட 
சொந்தங்களே  பின்நிற்கின்ற
சோகமும்,,,  

இரண்டடி தூரத்தில் பேசிடும் வசைமொழிகளும்,, 
இரவுக்கு மட்டும் தெரிந்திடும் கண்ணீரும்,,
எந்த நொடியும் வாசலுக்கு வரலாம் என 
எதிர்பார்த்து கலங்கிடும் விசாரணை அழைப்பும்,,

அடிமை வாழ்வு அள்ளிக்கொடுத்த 
அதிகப்படியான சலுகைகள் 

சிறுமையாகிப்போன வாழ்வில்
வறுமைக்கும் அடிமையாகி வாழும் 
வெறுமை யாகிப்போன தேசத்தில் 
மறுமையிலும் பிறக்க வேண்டாம்...!!

Monday 14 October 2013

வலிகளை விலை கொடுக்கின்றேன்..!!! வண்ண நிலவன் உன் வரவிற்காக..


தூரமாகிய உந்தன் வரவால்
பாரமாகிய எந்தன்  உள்ளம்...!

வரவுகள் அதிகமான விழிநீரின்
பரவலால் தொலைவில் உறக்கம்..!

இருள் நீங்கினும் துன்பத்தின்
மருள் நீங்கிடாது அதன் பிடியில்...

தொடர்கின்ற முடிவில்லா பிரிவு
படர்கின்ற வலிமை வலிகள்...!

உடைத்தெறிய சத்தியுண்டு- துன்பமதை
துடைத்தெறியும் புத்தியுமுண்டு..!

விடை தெரியா வினாக்கள்
தடை இன்றி நித்தம் வரவாகி
விடை பெற்று செல்கின்றன...
மடை திறந்த வெள்ளமாய்
கண்ணீரை வரவழைத்து..


சஞ்சலங்களை  சகித்து - நெஞ்சம்
சருகாய் போனவள்
சலனமற்ற சரீரம் தனை நீங்கி
சஞ்சரிக்கின்றாள் உன் நினைவுகளோடு
சலிப்பற்று  உன் வரவிற்காய்

வலிகளை விலை கொடுக்கின்றேன்
வண்ண நிலவன் உன் வரவிற்காக..

இதயவனின் இன்ப வரவை வேண்டி
இன்பங்களை காணிக்கை ஆக்குகின்றேன்
இந்த வாழ்வெனும் யாகத்தீயில்....

வலிகளும் வளம்பெறும் ஒருநாள்
வல்லவன் நின் வரவால்....
வலியோடு சிரிக்கின்றேன் - உன்
வரவின் நம்பிக்கையால்....



அரசி நிலவன்




லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "வரவு " என்ற தலைப்பில் இன்று வழங்கிய கவிதை இது.


கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 மணிக்கும் மறு ஒலிபரப்பு பிற்பகல் 9.30 மணிக்கும்...... http://gtbc.fm/





Thursday 10 October 2013

புத்தர் தோற்றுத்தான் போய்விட்டார்..!!!


போதி மரத்தில் கீழ் பெற்ற ஞானத்தை
போதித்து திரிந்த புத்தரின் இலட்சியம்
புதைக்கப்பட்டு புற்களும் முளைத்தாயிற்று...!!
புத்தர் தோற்றுத்தான் போய்விட்டார்..!
புத்த வாரிசுகளுக்கே புரியாமல் போன
புத்த ஞானம் புரிந்திடுமா பாகிஸ்தானியருக்கும்..
புதிய உயிர்ப்பலிக்களம்  சிரிய தேசத்திற்கும்....


ஒளியிழந்த ஈழத்தின் மர நிழல்களில்
ஒய்யாரமாய்  சயனத்திலும்
புத்த பகவான் தியானத்தில்....!!
புரிகின்றதா புத்தா....??
புது வரலாறு படைக்கின்றார்கள் - உன்
புதல்வர்கள் உன்னை சான்றாக வைத்து..

ஒருவேளை மாண்டு போன உறவுகளின்
ஒருமித்த சாபக்கேட்டினை உன்னை கொண்டு
ஒழித்து கட்டுகின்றார்களோ???

போகும் வழியில் தடக்கி விழும் இடமெல்லாம்
போதி மரத்தைப்போன்று எம் தேசத்தின்
போர்க்குற்றமும் தினம் அதிகரித்தவாறே...

போயா தினத்தில் வெண் கமலம் காவி வரும் உயர்திரு
போர்க்குற்றவாளி வாரிசிடம் மனு ஒன்று கொடுத்திட
போதிமரத்து பேரொளிக்கு தைரியம் உண்டோ??


கண்ணை மூடி தியானிக்கும் புத்தரே...!!
கண் திறந்து வாய் பேசினால் உனக்கும்
அந்தோ தமிழர்களின் நிலை தான்...!!!
அரச மரத்தின் அடியில் புதையுண்டு
காணாமல் போனோர் பட்டியலில்
இணைந்திட்டாலும் உன்னை தேடி வர
மனித உரிமை ஆணையத்திற்கும்
உரிமை இல்லாதொழிக்கப்படும்...!!!

ஆக....
கெளதம புத்தர் அவர்களே....!
உங்கள் ஞானம் தோற்று..,
எங்கள்  மானம் பங்கப்பட்டு...,
உயிர்கள் தானம் ஆக்கப்பட்ட
மனிதாபிமானம்  அற்றுப்போன
கொலைக்கள தேசத்தில்
கெளரவ புத்தருக்கென்ன வேலை..??


ஞானம் "மானம்" இழந்து
நடு வீதியில் நிர்வாணமாய்
நெடு நாளாய் கிடக்கின்றது...!
மானம் காக்க துணிவில்லை..!
நாணம் கொண்டு உறக்கத்தில்
வானம் நோக்கியபடி புத்தன்...,
நாதி அற்ற இனத்தின் மண்ணின்
போதி மர நிழல்களில் ஒளிந்தபடி....


அரசி நிலவன்



லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "ஞானம் " என்ற தலைப்பில் இன்று வழங்கிய கவிதை இது.


கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 மணிக்கும் மறு ஒலிபரப்பு பிற்பகல் 9.30 மணிக்கும்...... http://gtbc.fm/

Wednesday 9 October 2013

அடையாளச்சின்னங்களாய் சரித்திரத்தில் அறியப்படட்டும் எதிர்காலத்தில்...!!!



அடையலர் அரங்கேற்றிய அடாவடித்தனத்தால்
அகம் அடையாதார் அதீதமாய்  ஈழத்தில்...!!
அடைக்கலம் அடைந்தோரும்
அனாதரவானோரும் எண்ணிக்கையில் சாதனை..!
அந்நிய தேசமெங்கும் தமிழரின் பரம்பல்
அடையாளமிட்டு அழகாக உணர்த்துகின்றது....
அரிவாள் ஏந்திய அரிமாக்களின் அட்டகாசத்தினை..!

இனம் ஒன்று வாழ்ந்து முடித்த வரலாறே
தகர்ப்புக்கள் கொண்டு தரை மட்டங்களால்
வழிச்சு துடைத்து எறியப்படுகின்றது...!
பெயர்கள் அழித்து எழுதப்படுகின்றது..!
கல்லறையில்  விதைக்கப்பட்டவர்களும்
கல்லால் அடித்து துரத்தப்படுகின்றனர்....!

மெல்ல மெல்ல மரணித்து போகின்ற தேசம்
மயானமாய் தான் காட்சி கொடுக்கின்றது...!
காணாமல் போனவனும் இலகுவாக
மரண சான்றிதழ் பெறுகின்றான்
மீள்குடியேற்ற சிரமதானத்தினால்...!

அழகாய் ஓங்கி வளர்ந்த கட்டிடங்களில்
அந்தரத்தில் தலை கீழாய் தொங்கியபடி
சுந்தரத்தமிழ் அலறித்துடிக்கின்றது....!
அல்லாடும் அப்பாவித்தமிழ் நாளை
அகால மரணமானாலும் ஆச்சரியமில்லை...!


அழுகுரலும் கூக்குரலும்  கலந்து ஒலித்த
அந்த இறுதிப்பயணத்தரிப்பு முல்லை தேசத்தின்
காற்றில் கலந்து வருகின்றது சரணம் கச்சாமி...!
இவை யாவும் எம் தேசத்தின்
இன்றைய நாகரீக அடையாளங்களாய்....!

இருக்கும்  இடமும் பறி போகலாம்...!
இலக்கியங்களும் திருத்தி எழுதப்படலாம்..!
இடர் தாண்டி வந்தோரும் மரித்துப்போகலாம்...!


இருக்கின்ற அடையாளங்களை அழித்து
இல்லாத வரலாறு எழுதத்துடிக்கும் கனவான்களே...!
அமைதியாக துயில் கொண்ட இல்லங்களை
அரக்கத்தனமாய் பிராண்டிப்போட்ட
அப்புகாமிகளே...!
அங்குமிங்கும் அவ்வப்போது நீவிர்
அடித்து உதைத்துப்பின் புதைத்துப்போன
அருமந்த உறவுகளின் என்புகளை
அகழ்ந்து எடுத்து அழிக்க குறிப்பாய்
அடையாளம் தெரியவில்லையோ...??
நன்று....!


எஞ்சிய எச்சங்களாய் மண்ணுக்குள் உயிரோடு
தோண்டிப்புதைக்கப்பட்ட உறவுகளின் கபாலங்களும் என்புகளும்
தொன்மை இனத்தின் தொலைந்திடா தொல்பொருட்களே...!!!
அடையாளப்பொக்கிசமாக உண்மையினை உணர்த்தட்டும்...!!!
அழிக்கப்பட்ட வரலாற்றினை திருத்தி எழுதிடட்டும்..!!
அவை எம்மினத்தின் வலிமை மிகு
அடையாளச்சின்னங்களாய் சரித்திரத்தில்
அறியப்படட்டும் எதிர்காலத்தில்...!!!



அரசி நிலவன்


அரும்பதங்கள்
=============

அடையலர் - பகைவர்
அடையாதார் - இருப்பிடம் திரும்பாதவர்கள்


லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "அடையாளம்" என்ற தலைப்பில் இன்று வழங்கிய கவிதை இது.


கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 மணிக்கும் மறு ஒலிபரப்பு பிற்பகல் 9.30 மணிக்கும்...... http://gtbc.fm/

Tuesday 8 October 2013

தகுதி...!!!

தகுதி என்ற கவிதைத்
தலைப்பை உள்வாங்கி
தமிழ் தேடலில் தவழ விட்டேன்...!
தட்டுத்தடுமாறி தடக்கி
"தகுதி" விழுந்து எழுந்தது...!

தகுதி பெற்று எவரும் பிறப்பதில்லை...!
பகுதி பகுதியாக வாழ்வில் சேர்த்து
மிகுதி பெற்று தினம் திமிர் கொண்டு
தொகுதியாக சொத்துக்கள் பணம் என
தகுதியாகி உயர்ந்து நிற்கின்ற உலகமிது...!!!


அழகும் அறிவும் பேச்சும் தகுதியாகி
பழகிப்போன பாழாய்ப்போன உலகமிது...!

கற்றவையும் கற்பவையும் கூட
பணத்திற்கு பலியாகிடும் உலகமிது...!


பணம் விரும்பிடா குணம் கொண்டு..
கள்ளம் இல்லா உள்ளம் நிறைந்து...
நெகிழ்ந்திடும் பண்பான கனிவுப்பேச்சோடு..,
மகிழ்ந்திடும் தென்பான புன்முறுவல் பூத்து
திகழ்ந்திடும் மனித வைரத்தினைப்
புகழ்ந்திடும் தகுதி  செந்தமிழிற்கு உண்டோ??
அகழ்ந்திடும் வைரம் தன்னும் ஈடாகிடுமா?
உயர்ந்து நிற்கும் உள்ளத்தின் விலையேது?


உன்னத உள்ளத்தின் தொட்டிட முடியா
உயரத்தை நெருங்கிடத்தான்  முடியுமா??
உருளும் உலகத்தின் அயராத
உழைப்புக்களைக்கொண்டு...??

அளக்க முடியுமா கல்விப்படிகளால்...?
எட்ட முடியுமா அழகின் வசீகரத்தால்...?
விலை பேசிட இயலுமா பணப்படிகளால்...?

விலை மதிப்பற்ற உன்னத உயிரும் நெருங்கிட சக்தியற்று
மலைத்து நின்று அண்ணாந்து நோக்கும்
தொலை உயரத்தில் என்றுமே உயர்ந்த உள்ளம்...!!!
நிலைத்து நின்று அரசாளும்....!!






அரசி நிலவன்





லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "தகுதி" என்ற தலைப்பில் இன்று வழங்கிய கவிதை இது.


கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 மணிக்கும் மறு ஒலிபரப்பு பிற்பகல் 9.30 மணிக்கும்...... http://gtbc.fm/





Monday 7 October 2013

அந்தரத்தில் நீண்டதொரு பயணம் அந்தமின்றி தொடர்கின்றது....!!!

அந்தரத்தை அகிலத்திலிருந்து நோக்கினால்
அந்தரத்தில் தொங்குவதாய் ஒரு காட்சி...!!!
அந்தரத்தில் தொங்கி சுற்றுவது அசையும்
அகிலமே...!!!

அந்தரம் பரந்து விசாலமாய் விரிந்திருக்க - ஆங்காங்கே
அந்தரத்தில் கோள்களும் தாரகைகளும் தொங்கிகொண்டே
ஆதவனை சுற்றி சுற்றிக் காதல் புரிகின்றனவாம்
ஆதியும் அந்தமும் இன்றி...!

அந்தரத்தில் நீண்டதொரு பயணம்
அந்தமின்றி தொடர்கின்றது.....!
ஈர்ப்பு விசையின் நம்பிக்கையில்...

அந்தரத்தில் சுழலும் அகிலத்திலும்
அந்தரத்தில் தொங்கிய படி அநேகர்...!

அந்தரிக்கும் பயணமல்ல இது....!
அந்தமுள்ள பயணத்தை
அழியாப்பயணம் என்றெண்ணி
அவலப்படும்  உயிர்களை
அந்தரப்படுத்தி அழகு பார்க்கும்
அடங்கா கயவர்கள் தாமும்
அகில ஈர்ப்பு விசையினை
அகத்தே கொண்டதாய்
அர்த்தமற்ற இறுமாப்போடு
தொங்கிக்கொண்டிருக்கின்றார்கள்
அந்தரத்தில் காலங்காலமாய்....!!!

அகிலம் ஒருமுறை ஆடினால்
அந்தர தொங்கல்கள் யாவும்
அல்லாடி அறுபட்டு விடும் என்பதை
அறியாமல்...!

தொங்கிக்கொண்டு ஆட்டம்...!
தொலைக்கப்படுகின்றன அதிகம்..!
தொங்கவா இடமில்லை...?

வல்லரசின் அதிகாரத்திலும்
வலிமையான ஒரு தொங்கல்..!

இனவாத நாக்குகளில் தொங்கி
இடையிடை வழுக்கி விழுந்து
இறுக்கிப்பிடித்து மீண்டும் ஒரு தொங்கல்..!

இடர் பட்டு அந்தரத்தில் தொங்கும்
இயலாமை உள்ளங்களின் தொங்கல்...!

இறுதியில் தொங்கல் அறுபட்டு
இடுகாட்டில் ஆறடி நிலத்திலோ அன்றி
சுடுகாட்டில்  கட்டையோடு அந்தரமாய்
சுடு பட்டு போகும் போதும் அந்தரப்பட்டு
அல்லாடிப்போகும் அந்தரித்த மனித இனமே..
அடிபட்டும் அனுபவித்தும் அடங்க மறுக்கும்
அற்ப மானிடனே..!
அந்த ஆறடி நிலமும் நாளை
அடுத்தவனுக்காக அந்தரப்படுவதை - இடையில்
அந்தரத்திற்கு(ஆகாயத்திற்கு) விரைந்து செல்லும்- நீ
அறிவாயோ???




 அரசி நிலவன்





லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "அந்தரம்" என்ற தலைப்பில் இன்று வழங்கிய கவிதை இது.


கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 மணிக்கும் மறு ஒலிபரப்பு பிற்பகல் 9.30 மணிக்கும்...... http://gtbc.fm/


Thursday 3 October 2013

இல்லாத மின்சாரம் பாய்ந்தது.. இவன் மூலம் எனக்குள்....!!!


தொட்டும் பார்த்ததில்லை...!
தொண்ணுறுக்கு பின் பிறந்த வீட்டுக்கு
தொலைந்து போனவளை...!

சொல்லக்கேள்வி....
இப்பிடித்தான் இருக்குமோ...?
இல்லாத கற்பனைகள் பண்ணி...
இயன்றளவு முயன்றும்
இம்மியளவும் உணர முடியவில்லை....!
இளமைக்காலத்திலும் அறிவியல் உணர்த்தியது...
இயக்கசக்தி மின்சக்தி ஒளிச்சக்தி என்றெல்லாம்....!
ஒருவித புரியாமையுடன் பல புரிதல்களோடு
கடந்து வந்த கல்வி கற்றுக்கொடுக்க முடியாத
கடத்தல் சக்தி எனக்குள்ளும் ஊடுருவி இயக்கியது...!

பொறி தட்டும் பார்வை..!
பொடிப்பொடியாக்கிடும்
பொல்லாத வலுசக்தி...!

இப்பிடித்தான் இருக்குமோ....??
இல்லாத மின்சாரம் பாய்ந்தது..
இவன் மூலம் எனக்குள்....!!!

கண்கள் சந்தித்தால்
கண்கள் நிலம் நோக்கும்....
இத்தனை வலுவோ
இந்த மின்சாரக்கண்ணில்.....?

மூச்சுக்காற்றின் தொடுகையால்
வெந்து போகின்றேன் நான்...
இவ்வளவு வெப்பமா???
இந்த மின்சார மூச்சில்...

உரசிப்போகும் உள்ளக்கள்வனின்
உதடுகளினால்....
உயிரற்று போகின்றேன்....
இந்தளவு வலுவோ???
இந்த மின்சாரக்கண்ணனில்....!

தொட்டால் அதிர்ச்சி..!
விட்டால் முதிர்ச்சி..!
கண்டேன் நான் மின்சாரமதை
கண்களால்....!
உணர்ந்து கொண்டேன் மின்சாரமதை
உணர்வுகளால்....
உயிர் துறக்காமல்....

கற்றுக்கொண்ட மின்சாரமது
கேள்விப்பட்ட மின்சாரமது
தொட்டுப்பார்க்க துடித்த மின்சாரமது
தாய் வீடு திரும்பியவள் மீண்டு விட்டாள்
எண்ண முடியா உயர் வலுவோடு - இருந்தாலும்
என் மின்சாரக்கண்ணனின் வலு...
மிதமான  மிடுக்கோடு மிதமான வலுவோடு தான்
எனக்கு மட்டும்...!!!

அரசி நிலவன் - தாய்லாந்து




லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "மின்சாரம்" என்ற தலைப்பில் இன்று வழங்கிய கவிதை இது.


கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 மணிக்கும் மறு ஒலிபரப்பு பிற்பகல் 9.30 மணிக்கும்...... http://gtbc.fm/



Wednesday 2 October 2013

"நம்பிக்கை" நலம் வாழவென்றே... நடிப்போடு துடிக்கின்றேன்...!!



துடிக்கின்றது இதயம் உனக்காக...!
துடிக்காமல் போகாதோ எனக்காக...!
மரணித்து தினம் துடிக்கும்
மரண தண்டனை கைதியாய்,,,,
மறக்க முடியா நினைவுகளோடு
மனிதக் காட்சி சாலையில்......
வரையறை இல்லாமல் நான்...!!


வெடித்து விம்மும் நெஞ்சம்
துடித்து மரணிக்கின்றது தினம்...!
என்னுடல் கூண்டில் வீணாய்..!
கணமும் தூண்டில் மீனாய்....
துடித்து மாண்டு துடிக்கின்றது
நெஞ்சக் கூண்டில் என்னிதயம்... !!!

நடித்து சிரிக்கின்றேன் நாளும்....
நம்பிக்கையின் மேல் உயிர் கொண்ட
நங்கை  என் இதயவளின்
நலன் விரும்பி.....


"நம்பிக்கை" உயிர் வாழ்கின்றது
நல்லிதயத்தின் வேகத்துடிப்பால்..!
"நம்பிக்கை" நலம் வாழவென்றே...
நடிப்போடு துடிக்கின்றேன்...!!



இணைப்பான  இதயங்களின் துடிப்பு நிலைத்திட
பிணைப்போடு  துடிக்கும்....


அரசி நிலவன்


லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "துடிப்பு" என்ற தலைப்பில் இன்று வழங்கிய கவிதை இது.


கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 மணிக்கும் மறு ஒலிபரப்பு பிற்பகல் 9.30 மணிக்கும்...... http://gtbc.fm/


Tuesday 1 October 2013

இந்திய சினிமாவின் திறந்தவெளிப் பல்கலைக்கழகம்...!



சிவாஜி கணேசன்...!
******************
என் விருப்பத்திற்குரிய மாபெரும் நடிகர் என்பதை  விட ஒரு தலை சிறந்த  மனிதர் ஐயா சிவாஜி கணேசன் ஆவார். இலக்கியங்களிலும் வரலாறுகளிலும் வாழ்ந்து கொண்டிருந்த பல கதா பாத்திரங்களுக்கு உயிர் கொடுத்து எம் மனங்களில் உருவமாய் தக்க வைத்த பெருமை நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன் ஐயாவையே சாரும். அப்பர் சுவாமிகள் , கர்ணன் , வீர பாண்டிய கட்டப்பொம்மன் , அம்பிகாபதி போன்ற வராலாற்று நாயகர்களின் உருவம் என்றும் சிவாஜியின் வடிவில் தான் மனதில் நிழலாடும். தத்ருபமான அசர வைக்கும் நடிப்பால் இல்லை கதாபாத்திரமாகவே வாழ்ந்து   காட்டிய பெருந்தகைக்கு இன்று பிறந்தநாள்.

அவரைப்பற்றிய பல தகவல்களை எல்லோரும் அறிந்திருந்தாலும் அறிந்திராத சில விடயங்கள் விகடன் சினிமா இணையத்திலிருந்து.....


 எல்லா நடிகர்களுக்கும் ரசிகர்கள் இருப்பார்கள். ஆனால், அனைத்து நடிகர்களும் இவருக்கு ரசிகர்கள். அந்தக் கலைச் சமுத்திரத்திலிருந்து சில துளிகள்...

*சத்ரபதி சிவாஜி வேடத்தில் நடித்த வி.சி.கணேசனை மேடைக்குக் கீழ் இருந்து பார்த்த தந்தை பெரியார், 'இனி இவர்தான் சிவாஜி' என்று சொன்னார். அதுவே காலம் சொல்லும் பெயரானது!

* நடிகர் திலகம் முதன்முதலில் அரிதாரம் பூசியது பெண் வேடம் தான். உப்பரிகையில் நின்றுகொண்டு ராமனைப் பார்க்கும் சீதை வேடம்தான் சிவாஜி ஏற்ற முதல் பாத்திரம்.

* 1952-ல் நேஷனல் பிக்சர்ஸ் தயாரித்த 'பராசக்தி'யில், 'குணசேகரன்' பாத்திரத்தில் சிவாஜியைக் கதாநாயகனாக்க படத் தயாரிப்பாளர் பி.ஏ.பெருமாள் முடிவு செய்தபோது, பலரும் எதிர்ப்புத் தெரிவித்தனர். எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் சிவாஜியை ஹீரோவாக்கிய பெருமை பெருமாளுக்கே உண்டு.......

*சின்சியாரிட்டி, ஒழுங்கு, நேரந் தவறாமைக்கு சிவாஜி ஓர் உதாரணம். ஏழரை மணிக்கு ஷூட்டிங் என்றால், ஆறே முக்கால் மணிக்கே செட்டில் ஆஜராகிவிடுவார். தனது வாழ்நாளில் ஒரு நாள்கூடத் தாமதமாக ஷூட்டிங்குக்குச் சென்றது இல்லை.

*கலைஞரை 'மூனா கானா', எம்.ஜி.ஆரை 'அண்ணன்', ஜெயலலிதாவை 'அம்மு' என்றுதான் அழைப்பார்.


*வீரபாண்டிய கட்டபொம்மன், பாரதியார், வ.உ.சி., பகத்சிங், திருப்பூர் குமரன் போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்களின் பாத்திரங்கள் அனைத்தையும் ஏற்று நடித்தவர் சிவாஜி ஒருவரே.

* தன்னை 'பராசக்தி' படத்தில் அறிமுகம் செய்த தயாரிப்பாளர் பி.ஏ.பெருமாள் வீட்டுக்கு ஒவ்வொரு பொங்கல் அன்றும் சென்று, அவரிடம் ஆசி பெறுவதை வழக்கமாகவே வைத்திருந்தார் சிவாஜி.

* திருப்பதி, திருவானைக்கா, தஞ்சை மாரியம்மன் கோயில்களுக்கு யானைகளைப் பரிசளித்துள்ளார்.

*தமிழ் சினிமா உலகில் முதன்முதலாக மிகப்பெரிய கட்-அவுட் வைக்கப்பட்டது சிவாஜிக்குத்தான். 1957-ல் வெளிவந்த அந்தப் படம் 'வணங்காமுடி!'

*சிவாஜி தனது நடிப்புக்காக வாங்கிய முதல் பரிசு ஒரு வெள்ளித்தட்டு. 'மனோகரா' நாடகத்தைப் பார்த்த கேரளா - கொல்லங்காடு மகாராஜா கொடுத்த பரிசு அது.

*தனது அண்ணன் தங்கவேலு, தம்பி சண்முகம் போன்றவர்களுடன் ஒரே கூட்டுக் குடும்பமாக இறுதிவரை வாழ்ந்தார். சிவாஜியின் கால்ஷீட், நிர்வாகம் அனைத்தையும் கவனித்துக் கொண்டவர் அவரது தம்பி சண்முகம்தான்.

*சிவாஜி நடித்த மொத்தப் படங்கள் 301. இதில் தமிழ்ப் படங்கள் 270. தெலுங்கில் 9, ஹிந்தி 2, மலையாளம் 1, கௌரவத் தோற்றம் 19 படங்கள்.

* ஒவ்வொரு வருடமும் குடும்பத்துடன் தனது சொந்த ஊரான சூரக்கோட்டையில் பொங்கல் விழா கொண்டாடுவதை வழக்கமாகவே வைத்திருந்தார். அன்றைக்குப் பல சினிமா பிரபலங்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்வார்கள்.

*விநாயகர் மீது மிகுந்த பக்திகொண்டவர் சிவாஜி. வெள்ளியிலான சிறிய பிள்ளையார் விக்கிரகத்தை எப்போதும் கூடவே வைத்திருப்பார்.

* சிவாஜிக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம் இருந்தது. 'பராசக்தி' படத்தின் இயக்குநர்கள் கிருஷ்ணன் - பஞ்சு முன்னிலையில் மட்டும் சிகரெட் பிடிக்க மாட்டார்.

*'ரத்தத் திலகம்' படத்தில் இவரது நடிப்பைப் பாராட்டி  சென்னை சினிமா ரசிகர் சங்கம் கொடுத்த பரிசு - ஒரு துப்பாக்கி!

*படப்பிடிப்பின்போது அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுக்காத நேரங்களில் மற்றவர்கள் நடிப்பதை உற்றுக் கவனிப்பார். ஆர்வமாகக் கேட்டால் மற்றவர்களுக்கு டிப்ஸ் கொடுப்பார்.

* சிவாஜியும், எம்.ஜி.ஆரும் இணைந்து நடித்த ஒரே படம் 'கூண்டுக்கிளி'

* விதவிதமான கடிகாரங்களை அணிவதில் இவருக்கு அலாதி பிரியம். ஒமேகா, ரோலக்ஸ் போன்ற வாட்ச்களை ஏராளமாக வாங்கிவைத்திருந்தார்.

*தன் தாய் ராஜாமணி அம்மையாருக்கு சிவாஜி கார்டனில் சிலை ஒன்றை அமைத்தார் சிவாஜி. அந்தச் சிலையைத் திறந்துவைத்தவர் எம்.ஜி.ஆர்.

*'ஸ்டேனிஸ் லா வோஸ்கி தியரி' என்கிற நடிப்புக் கல்லூரி மாணவர்களுக்கான பாடப் புத்தகத்தில், 64 வகையான முகபாவங்களைப் பிரதிபலிக்கும் திறமை பெற்றவர் என்று குறிப்பிட்டு, சிவாஜியின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.


*அவரது தீவிரமான ஆசைகளில் ஒன்று தந்தை பெரியார் வேடத்தில் நடிப்பது. கடைசிவரை அது நிறைவேறவே இல்லை.

*பிரபல தவில் கலைஞர் வலையப்பட்டி, 'தமிழ் சினிமாவில் நீங்கள்தான் எல்லோருக்கும் ரோல் மாடல்' என்று சிவாஜியிடம் சொன்னபோது, 'டி.எஸ்.பாலையா, எம்.ஆர்.ராதா வரிசையில் மூன்றாவதாகத்தான் நான்' என்றாராம் தன்னடக்கமாக!

*பெருந்தலைவர் காமராஜரின் மீது அளவிட முடியாத அன்புகொண்டவர் இவர். 'அந்த சிவகாமியின் செல்வனின் அன்புத் தொண்டன் இந்த ராஜாமணியின் மகன்' - என்பதுதான் தன்னைப்பற்றி சிவாஜி செய்துகொள்ளும் அடக்கமான அறிமுகம்.

*கிரிக்கெட், கேரம்போர்டு இரண்டும் இவருக்குப் பிடித்தமான விளையாட்டுகள்.



நன்றி - விகடன் சினிமா இணையம்