Search This Blog

Showing posts with label காதல். Show all posts
Showing posts with label காதல். Show all posts

Tuesday 5 November 2013

இனிய பொழுதுகள்...!!!

விழிகள் நோக்கிய அந்த
விசித்திரமான பொழுது
விட்டு நீங்கிடாது நெஞ்சமதை....

ஒரே நேர்கோட்டில்
ஒற்றுமையாய் ஒன்றோடொன்று
ஒருமித்து பயணித்த பார்வைகள்...!!!
ஒலியற்று ஒளி வீசிய பொழுதுகள்...!!!
ஒன்றாகிப்போன இதயம் இருவருக்காய்
ஒரே தடவையில் துடித்த கணங்கள்

ஒளிந்து ஒளிந்து ஓரக்கண்ணால்
ஒற்றப்பார்வையில்
கடத்தி வந்த பொழுதுகள்....
கண்ணில் வைத்துக்கொள்ள - தினம்
கதி கலங்கி துடித்த பொழுதுகளும்
கரும்பாய் தித்திக்குதே இன்றும்....


கரம் பிடித்து கதை பேசித்திரிந்த
கட்டைப்பிராய் வயல்வெளியின்
கண்ணை மயக்கும் மாலைப்பொழுது
கவர்ந்து கொள்கின்றது இன்றும் இதயத்தினை...

அள்ளிப்போன மனதை
கிள்ளிப்போவான் தன்
கண் மூடிச்சிரிக்கும் தருணங்களில்....
விண் நோக்கி துள்ளி
பண் பாடும் இதயம்......!
மண் நீங்கிப்போனாலும்....
புதைந்து போய்ந்திடா
இனிமையான பொழுதுகள் இவை...
 

மனதை வருடிச்செல்லும்
இதமான அவன் நினைவுகளை
மென்று மீட்டினால்
துயரம் மிகுந்த பொழுதுகளும்
கழிகின்றன இனிமையாக...


அரசி நிலவன்



லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "இனிமைப்பொழுதுகள் " என்ற தலைப்பில் இன்று வழங்கிய கவிதை இது.


கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 (இலங்கை இந்திய நேரம் பிற்பகல் 7.30 மணிக்கு )மணிக்கும் மறு ஒலிபரப்பு பிற்பகல் 9.30 மணிக்கும்...... http://gtbc.fm/

Thursday 3 October 2013

இல்லாத மின்சாரம் பாய்ந்தது.. இவன் மூலம் எனக்குள்....!!!


தொட்டும் பார்த்ததில்லை...!
தொண்ணுறுக்கு பின் பிறந்த வீட்டுக்கு
தொலைந்து போனவளை...!

சொல்லக்கேள்வி....
இப்பிடித்தான் இருக்குமோ...?
இல்லாத கற்பனைகள் பண்ணி...
இயன்றளவு முயன்றும்
இம்மியளவும் உணர முடியவில்லை....!
இளமைக்காலத்திலும் அறிவியல் உணர்த்தியது...
இயக்கசக்தி மின்சக்தி ஒளிச்சக்தி என்றெல்லாம்....!
ஒருவித புரியாமையுடன் பல புரிதல்களோடு
கடந்து வந்த கல்வி கற்றுக்கொடுக்க முடியாத
கடத்தல் சக்தி எனக்குள்ளும் ஊடுருவி இயக்கியது...!

பொறி தட்டும் பார்வை..!
பொடிப்பொடியாக்கிடும்
பொல்லாத வலுசக்தி...!

இப்பிடித்தான் இருக்குமோ....??
இல்லாத மின்சாரம் பாய்ந்தது..
இவன் மூலம் எனக்குள்....!!!

கண்கள் சந்தித்தால்
கண்கள் நிலம் நோக்கும்....
இத்தனை வலுவோ
இந்த மின்சாரக்கண்ணில்.....?

மூச்சுக்காற்றின் தொடுகையால்
வெந்து போகின்றேன் நான்...
இவ்வளவு வெப்பமா???
இந்த மின்சார மூச்சில்...

உரசிப்போகும் உள்ளக்கள்வனின்
உதடுகளினால்....
உயிரற்று போகின்றேன்....
இந்தளவு வலுவோ???
இந்த மின்சாரக்கண்ணனில்....!

தொட்டால் அதிர்ச்சி..!
விட்டால் முதிர்ச்சி..!
கண்டேன் நான் மின்சாரமதை
கண்களால்....!
உணர்ந்து கொண்டேன் மின்சாரமதை
உணர்வுகளால்....
உயிர் துறக்காமல்....

கற்றுக்கொண்ட மின்சாரமது
கேள்விப்பட்ட மின்சாரமது
தொட்டுப்பார்க்க துடித்த மின்சாரமது
தாய் வீடு திரும்பியவள் மீண்டு விட்டாள்
எண்ண முடியா உயர் வலுவோடு - இருந்தாலும்
என் மின்சாரக்கண்ணனின் வலு...
மிதமான  மிடுக்கோடு மிதமான வலுவோடு தான்
எனக்கு மட்டும்...!!!

அரசி நிலவன் - தாய்லாந்து




லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "மின்சாரம்" என்ற தலைப்பில் இன்று வழங்கிய கவிதை இது.


கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 மணிக்கும் மறு ஒலிபரப்பு பிற்பகல் 9.30 மணிக்கும்...... http://gtbc.fm/