Search This Blog

Thursday 29 May 2014

அகம்...!!!


அகம் வாழும் நினைவுகளை  
அசை மீட்டி அசை மீட்டியே 
அலுத்து போகின்றது...!

வெறும் நினைவுகளாய் 
சோபையிழந்து போனவைகள்..! 

உயிரற்று நாற்றம் வீசுபவைகள் 
தோண்டி துருவியெடுத்து 
ஆராய்ச்சி பண்ணும் புதைகுழியின்  
மனித எச்சங்களாய் இவை  பலனற்றவை..! 

இருந்தும் அசை மீட்டி பார்த்து 
இதயம் கனத்து போவதே மிச்சம் 

அகத்தை அழித்து போட 
அறிவியல் இன்னும் வளரவில்லை...!

ஆழிப்பேரலை அடித்து செல்ல முடியாமல் 
அகம் எனக்குள்ளே ஒளிந்து கிடக்கின்றது...!

அடி மனதில் ஓர் எண்ணம்  
அடிக்கடி அங்கலாய்ப்பில்....

நாறிய அகம் உயிர் பெற்றிடும் 
நாளை நற்செய்தி ஒன்று செவியில் விழுந்திடும் என 

அந்தோ 
நாட்கள் மின்னல் வேகத்தில் கடக்கின்றது 
அகம் இங்கே தவித்துக் கிடக்கின்றது - அட 
அலைகள் கூட  தொட மறுக்கின்றது
அமிழ்த்தும் அகத்தின் கனம் தாங்காமல் அவை
அகன்று போகின்றனவோ  கடல் தாண்டி - அன்றி  
அகத்தை தொட்டால் பிரளயம் ஒன்று உருவாகிடும் என்று 
அறிந்து போகின்றனவோ...?


Sunday 18 May 2014

சிந்துகின்ற கண்ணீரும் செந்நீரும் நாம் அரவணைக்கும் கரங்களால் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்...!!!


உதிரமும் கண்ணீரும் கலந்து சகதியான மண்ணில் சரித்திரம் படைத்துச்சென்ற பேரழிவுகளின் ஐந்து வருடங்கள் விரைவாக உருண்டோடி விட்டது. செந்நீரும் கண்ணீருமாய் நிரம்பி வழிந்த தாயக தேசம் இன்று  உயர் ரக நெடுஞ்சாலைகளும்  புகையிரத கடவைகளுமாய் உருமாறிப் போய் விட்டது. மக்கி மண்ணோடு மண்ணாகிப் போன உறவுகள் மற்றும் ஆங்காங்கோ காணாமல் போனவர்கள் என குறைந்து போன இனத்தின் நினைவினை வாரி வழங்கும் சான்றுகளாக  இன்னும் அங்கே கண்ணீர் வடிக்கும் உறவுகள் இருக்கத்தான் செய்கின்றார்கள்.

ஒவ்வொரு வருடமும் கோலாகலமாய் மண்டபம் ஒழுங்கமைத்து, விளக்கேற்றி, மாலையிட்டுக் கண்ணீர் சிந்தி இலட்சக்கணக்கில் பணத்தினை வாரி இறைத்து உலகம் பூராவும் அஞ்சலி செலுத்துகின்றோம். இதனை உயிர் துறந்தவர்கள் அறிந்திடப்போவதில்லை. உயிரற்றுப் போனவர்களால் தினம் தினம் வாழ்வினை நகர்த்த முடியாமல் போரின் எச்சங்களாக எஞ்சி அந்த இறுதி நாட்களை கண் முன்னே கொண்டு வரும் உறவுகள் இன்னமும் அங்கு இருக்கத்தான் செய்கின்றார்கள்.

ஆம்...!
இறுதி யுத்தமதில் கண்முன்னே கணவனை இழந்த கைம்பெண்கள், மகனை இழந்த தாய் தந்தையர்கள், தாய் தந்தையினை இழந்த குழந்தைகள், அண்ணாவை அக்காவை என்று குடும்பத்தின் மூலாதார உறுப்பினர்களை இழந்து இன்று தமது அன்றாட சீவனத்திற்கு கூலி வேலை செய்தும், கல்வி கற்க வேண்டிய குழந்தைகளை வேலைகளுக்கு அனுப்பியும் கரடு முரடான முட்கள் நிறைந்த வாழ்க்கைப்பாதையில் பயணிக்கும் எத்தனையோ எத்தனையோ உறவுகள் போரினால் தமது வாழ்வாதரத்தை மட்டுமல்ல தமது அங்கங்களையும் இழந்து தவிப்பது கொடுமையிலும் வேதனை.

அன்றாடத்தேவைகளை நிவர்த்தி செய்திடப் பெரும் பாடுபடும் அவர்களுக்கு செயலிழந்த அங்கங்கள், எறிகணையின் சிதறல்கள் மற்றும் துப்பாக்கி ரவைகள் துளைத்த உடற்பாகங்கள் கொடுக்கும் அளவில்லாத வேதனைகளும் வலிகளும் அனுபவித்து உணர்ந்தாலன்றி எழுத்தினில் விளக்கிட முடியாது. 
இலட்சம் இலட்சமாக பணத்தைக் கொட்டி மண்டபம் ஒழுங்கமைத்து, உணர்வான பேச்சுக்கள், கவிதைகள் மற்றும் நாடகங்கள் என்று நாம் நிகழ்வுகளை அரங்கேற்றி, விளக்கேற்றி அணைப்பதால் இந்த உறவுகளின் வேதனை ஒருபோதும் துடைக்கப்படுவதில்லை.


ஒட்டுமொத்த உலகமே கண் மூடி இருந்த அந்த நாட்களில்  மொத்தமாய் படுகொலையான எங்கள் உதிரத்து உறவுகள் இனி உயிருடன் எழுந்து வந்திடப்போவதில்லை. ஒரே  நாளில் ஆயிரக்கணக்கில் மக்கள் படுகொலையானதற்கான  காரண கர்த்தாக்களை தேடி, கொடி  பிடித்து, கோசம் போட்டே நாம் காலத்தைக் கடத்தி வந்த இந்த ஐந்தாண்டு காலப்பகுதியில் மெல்ல மெல்ல மரணித்துக்கொண்டிருக்கும் எத்தனையோ உறவுகளின் சமாதிகளை நாம் அறிந்திட வாய்ப்பில்லை. 

அங்கே ஒரு பிடி சோற்றுக்கு மடிப்பிச்சை ஏந்தும் எங்கள் உறவுகள் கவனிப்பாரற்று மடிந்து போவது ஏன் இன்னும் எங்கள் அறிவிற்கு புலப்படவில்லை. உலகம் கண் மூடி மெளனம் காத்த கொடும் செயலை நாமும் இப்போது அரங்கேற்றிக்கொண்டிருக்கின்றோம்  அல்லவா?  

எப்போதாவது சிந்தித்துப் பார்த்ததுண்டா...? என்ன செய்து இருக்கின்றோம்? ஒன்று பட்டு நாம் எழுந்து அவர்களுக்கு வாழ்வாதாரங்களைப் பெற்றுக்கொடுத்தோமா? கண்ணீரை துடைத்து விட கரங்களை கொடுத்தோமா? மடிந்தவர்களை கேட்டு காணாமல் போனவர்களை கேட்டு தமக்குத்தாமே போராடிப் போராடி சலித்து விழுந்து கிடக்கும் அவர்களுக்கு நாம் இங்கே எழுப்பிடும் கோசங்களும் அஞ்சலிகளும் கறிக்குதவாத ஏட்டுச்சுரைக்காய்களே..! 

ஒவ்வொரு வருடமும் மிக்க வலியோடு கடந்து செல்லும் இந்நாட்கள் மிகவும் ஏமாற்றமாகவும் நீங்கிச்செல்வதுண்டு. அந்த 2009  இற்கு பின்னர் தன்னலமற்று யாராவது எம் உறவுகளை கை தூக்கி விட முன் வர மாட்டார்களா? எம் உறவுகளின் கண்ணீர் துடைக்க யாராவது முன் வர மாட்டார்களா? கடந்து போன நான்காண்டுகளும் பதிலற்றுப் பறந்து சென்றிட 
இந்த ஆண்டு தக்க பதிலோடு மெல்லக் காலடி எடுத்து வைக்கின்றது.

வினாக்களுக்கு பதிலளித்து, உறவுகளின் கண்ணீரையும் துயரங்களையும் துடைத்து எறிந்திட முளைத்து வேர் விட்டு கிளை பரப்பி வானளவாய் உயர்ந்து நிற்கின்றது ஒரு ஆல விருட்சம்.

ஆம்...!
இறுதிப்போரில் பாதிக்கப்பட்டு  அலைந்து திரிந்து, கடல் தாண்டி தடுத்து வைக்கப்பட்டிருக்கும் உள்ளம் ஒன்று உதவும் உள்ளங்களை முகநூலில் இணைத்து உருவான "உலகத்தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள் ஆணையம்" ஒரு மாத கால இடைவெளியில் இறுதிப்போரில் அவயங்களை இழந்த இரு உறவுகளுக்கு உடனடி மருத்துவ சிகிச்சை மற்றும் வாழ்வாதரமான தொழில் வாய்ப்பினை உருவாக்கி கொடுத்ததுடன் இறுதி யுத்தத்தில் தந்தையினை இழந்து, தமிழகத்தில் தவித்த சிறுவனுக்கு சிகிச்சை வழங்கி, இந்தோனேசிய தமிழக துபாய் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஈழத்து உறவுகளுக்கு அடிப்படை உதவிகளையும் வழங்கியுள்ளது என்றால் நம்ப முடிகின்றதா?


அது மட்டுமன்றி வெளிப்படைத்தன்மையான உதவும் குறிக்கோள் கொண்டமையினால் அதாவது உதவுபவரது மற்றும் உதவி பெறுபவரது விபரங்கள் எல்லோருக்கும் வெளியிடப்படுகின்ற அதாவது மோசடித்தன்மை அற்ற தூய்மை நிறைந்ததனால் அசுர வேகத்தில் உறவுகளின் ஆதரவினைப் பெற்று வளர்ந்து நிற்கின்ற   இந்த ஆணையம் இன்னும் ஓரிரு நாட்களில் தமிழ் நாட்டில் "உலகத்தரச்சான்றிதழுடன் (ISO)" தமிழக அரசின் முழு ஆதரவுடன் சட்டரீதியாகவும், அதிகார பூர்வமாகவும் பதியப்பட்டு பெளதீக ரீதியில் தனது சேவையினை வெற்றிகரமாக ஆரம்பிக்க இருக்கின்றது. 

முற்று முழுதாக எங்கள் தமிழ் உறவுகளின் கண்ணீரைத்துடைத்து, அவர்களுக்கு மறுவாழ்வளித்து, அவர்களுக்கு புதிய வாழ்வாதாரத்தை உருவாக்கிக்கொடுத்து தமிழ் உறவுகள் மேல் உண்மையான அக்கறையோடும் பரிவோடும் அவர்களை " அன்பினால் அரவணைக்கும்" உலகத்தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள் ஆணையம் இந்த ஆண்டின் வைகாசியின் உதிரக்கறை படிந்த இந்த நாட்களை முதன் முதலாய் கடக்கும் இத்தருணம் இறுதிக்களத்தில் குருதி தோய்ந்து, எழுந்து வந்த அதரவற்ற  உறவுகளின் கரங்களை ஆதரவோடு பற்றி, அவர்களின் கரடு முரடான பாதையினை செவ்வனே செப்பனிட்டு அவர்களைப் பயணிக்க வைக்க முயற்சி செய்த ஆத்ம திருப்தியுடன் ஐந்தாண்டுகளுக்கு முன்பு அந்தோ அநியாயமாகப் படுகொலை யானவர்களை நினைவு கூர்ந்து கண்ணீரோடு அவர்களுக்கு ஆத்மார்த்தமாக அஞ்சலி செலுத்துகின்றது.

இன்றைய இந்த கறுப்பும் சிவப்புமான நாளில், எமது மக்களின் உதிரம் சிந்தப்பட்டது மட்டுமன்றி தாயகத்தில் இன்று வரை பாதிக்கப்பட்ட உறவுகளின் இதயத்திலிருந்து சிந்தப்படும் குருதி என்றும் எமக்கு நினைவில் நிற்க வேண்டியதொன்று. சிந்துகின்ற கண்ணீரும் செந்நீரும் நாம் அரவணைக்கும் கரங்களால் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். வைகாசி பதினெட்டில் மட்டும் நினைவில் கொள்ளாமல் எப்பொழுதும் எங்கள் உள்ளங்களில், இன்னல் அனுபவிக்கும் இவர்களை நினைவில் நிறுத்தி உதவிடுவோம். கருத்து வேற்றுமை இன்றி இந்த துக்க நாளில் உறுதி பூண்டிடுவோம். ஆதரவுக்கரங்களை ஆணையத்திற்கு கொடுப்போம். ஆதரவற்ற எங்கள் உறவுகளை அன்பினால் அரவணைப்போம்.



மரணித்து மண்ணுக்குள்
 மக்கிப்போன  எம் உறவுகளுக்கும் 

மண்ணுக்காய் மரணித்த  
மாண்பு மிகு எம் தெய்வங்களுக்கும்   

கண்ணீர்  அஞ்சலிகள்....!!!
  

" அன்பினால் அனைவரையும் அரவணைப்போம் "

உலகத் தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள் ஆணையம் 




Thursday 8 May 2014

வேதனை....!!!



தோணியினை நம்பி ஆழியில் பயணம்..!
தோற்றுப்போன பயணம் நடுக்கடலில் தத்தளிக்க 
நா வறண்டு கத்தி விக்கி கடலில் சிக்கி 
நாதியற்று நின்ற உயிர்களில் இவளும் ஒன்றானாள்...!

என்ன நடக்கின்றது என்பதை அறியாத பிஞ்சு மகள்...!
கடலுக்குள் ஆழம் அதிகம் என்றறிந்த இவள் - எம்மின 
கண்ணீர் அதை விட ஆழம் என்று அறியாதவள்...!

உடன் பிறந்தவளை கதற கதற பிரிந்து வந்தவள்...!
உண்மை பொய்யால் சிறை பிடிக்கப்பட்டதும் 
உலகம் எங்கும் அகதியாகி தமிழினம் அலைவதும் 
உயிர் பிழைப்பு தேடி கடல் கடப்பதும் விளக்கினாலும் 
உணர்ந்திட தெரியாத பச்சை மண் இவள்...!


ஆனாலும் இவள் 
ஆங்கோர் சிறையில் அடைபட்டு வதைபடுகின்றாள்...!
ஆண்டுகள் இரண்டு கடக்க அவசரப்படுகின்றது...!
ஆயிரம் மைல்கள் தாண்டி தவித்திருக்கும் அன்பு மகள்..!

அடிக்கடி நோய்த்தொற்றும் 
அளவு சாப்பாடும் கொண்டு 
அடைத்து வைக்கப்பட்ட இவள் 
அடைந்து வரும் வேதனை எழுத்தில் 
அடக்கிட முடியுமோ??

கல கல மழலை மொழி பேசி 
கவலைகள் மறக்க பண்ணும் தேவதையின் 
துயரங்களை யார் களைவார்கள்..???
அனல் அடிக்கும்  தேசமதில் 
அலுமினிய துகள் பறக்கும் துறைமுக வளாகத்தில்  
அந்த அசுத்த காற்றினை சுவாசிக்கின்றாள் 
ஆண்டுகள் இரண்டாக....

அகதி என்ற காரணம் கொண்டு 
அடைக்கப்பட்ட சின்னஞ்சிறு பாலகியின் 
அளவில்லா வேதனையே உலகில் 
அதிகமான வலி மிகுந்தது...!

எதையும் அறிந்து கொள்ள முடியாத 
அகவை மூன்றை கடந்தவளுக்கு
வேதனை என்பதை மட்டும் உணர 
முடிகிறதென்றால் அது எத்தனை 
கொடுமையான வேதனையோ???

கொடிது கொடிது இளமையில் வறுமை என்றஅவ்வை 
கொடுமையிலும் வேதனை மழலையில் சிறை என்ற 
இவளின் வேதனை கண்டு கவி எழுதுவதை கைவிட்டிருப்பார் 
இதயம் கனத்தால் அழுத்துகின்றது அகம் சிரித்து முகம் மலரும் 
இவள் அல்லல்படும் வேதனை அறிந்து....

மருந்தும் இல்லை உனக்கு விருந்தும் இல்லை
மரத்துப்போன ரொட்டியை அசைக்க பற்களும் 
வலிமை பெறவில்லை 
வழியற்று தவிக்கும் தந்தை முகம் தடவி 
ஆறுதல் உரைக்கும் அன்புக்கடவுள் இவளின்  
ஆற்ற முடியா வலிகளை யார் துடைப்பார் 
ஆறாய் பெருகும் கண்ணீரை தவிர வேறென்ன 
கொடுக்க முடியும் எம்மால்...??

என்ன குற்றம் இழைத்தாள்...?
எதற்காக சிறை வாசம்...?
எத்தனை முறை சிந்தித்தாலும் 
எதுவும் புலப்படவில்லை....!

தமிழ் தாயின் வயிற்றில் கருவானது குற்றமோ??
தமிழ் தேசம் தன்னில் பிறந்தது குற்றமோ..?
தரணி என்னும் நாமம் கொண்டவளுக்கு இந்த
தரணியில் ஒரு இடம் இல்லை உறங்கிட....
தங்கமே தரணி உந்தன் புன்னகை வதனம் கண்டாலும் 
தவிக்கின்றது உள்ளமம்மா...



தரணி எங்கும் உறவுகள் இருந்தும் 
தண்ணீர் அள்ளிட வாளி இல்லை 
தலை துவட்டிட துணி இல்லை...
செல்வந்த நாடு ஒன்றில் 
செல்லரித்து வாழும் இவள் வேதனை 
சென்றிடுமா விரைவில் இவளை நீங்கி...



லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "வேதனை" என்ற தலைப்பில் இன்று (08.05.2014 )வழங்கிய கவிதை இது.

கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 (இலங்கை இந்திய நேரம் பிற்பகல் 7.30 மணிக்கு )மணிக்கு... http://gtbc.fm/

  


Tuesday 6 May 2014

கவி....!!!

கவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன்,
வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி
      - பாரதி.




கவிக்கு இலக்கணம் நீயே கவியே...!
கவியே வாழ்க்கையாக கொண்டோனே 
கவிக்கடவுள் மகாகவியே...!

தேசிய கவி , மகாகவி , சீர்திருத்த கவி என்றெல்லாம் 
தேசம் எங்கும் புகழ் பரப்பி சாகா வரம் பெற்ற பாரதியே...!

பெண்ணுக்கு இலக்கணம் வகுத்தாய் - தமிழ் 
மண்ணுக்கு பெருமை சேர்த்தாய் மகா கவியே...!

தமிழுக்கு சுவாசம் கொடுத்த பிராண கவியே...!
தரணி எங்கும் தமிழ் தழைக்க எழுத்தாணியாய் 
எழுந்த அக்கினிக்குஞ்சே ....!

தமிழ்மொழியில் அளவற்ற காதல் கொண்டு 
தமிழே மூச்சாய் பேச்சாய் வீச்சாய் கொண்ட  
தமிழின் தன்னிகரற்ற கவியேறு எங்கள் பாரதி 

"யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் 
இனிதாவ தெங்கும் காணோம்" உயரத்தில் வைத்தான் 
உண்மையினை உரைத்தான் களங்கமில்லா கவிஞாயிறு பாரதி 

பாஞ்சாலி சபதத்தில் அக்கினியாய் எரிந்த கவி...!
பாவங்களை சுட்டிக்காட்டிய சுட்டுக்கவி...!

தீமைகளை தீயாய் சுட்டெரித்தாய்...!
தீண்டத் தகாத சாதிகள் இல்லை என்றாய்...!

வடிக்காத வரிகள் இல்லை...
வஞ்சனைகள் செய்யாத கவி நீ பாரதி...!

உன் புகழ் பாட அருகதை உண்டோ - தமிழின் 
உரிமை யால் கால் அடி எடுத்து வைத்தேன்..

கவி உன்னை புகழ தத்தி நடை பயில்கின்றேன்
கவி உந்தன் எல்லை இல்லா கவிப்புலமை 
கண்டு நான் தடக்கி விழுந்து எழுகின்றேன்...!

கவியே மகாகவியே தமிழின் உயிரே நீயே...!
கவிக்கு இன்று ஒருவர் உண்டோ....
கவிக்கு நிகராய் இனி யாரும் பிறந்திடுவாரோ..? 
கவிச்சிற்பி உனக்கு யாரும் நிகர் உண்டோ?


"தேடிச் சோறு நிதந்தின்று 
பல சின்னஞ் சிறுகதைகள் பேசி
மனம் வாடித் துன்பமிக உழன்று
பிறர் வாடப் பல செயல்கள் செய்து
நரை கூடிப் கிழப்பருவம் எய்தி
கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வே னென்று நினைத்தாயோ?"


Monday 5 May 2014

முல்லை...!!!


பிடிக்குதோ இல்லையோ - எனக்கு
பிடித்த உனக்கு பிடித்ததால்  
முல்லை எனக்கும் பிடிக்கும்..!

இன்று எனக்கு உயிராகி போனது 
இரத்த உறவாகி போனது
இதயத்து துடிப்பாகி போனது  
இந்த வாசம் கொண்ட பாச முல்லை...!!

தொல்லை என்றாலும் துன்பம் என்றாலும்
முல்லை வாசம் நுகர்ந்தால் உள்ளம் துள்ளி 
எல்லை இல்லா களிப்படையும் என்பாய்...!

நீ வளர்த்த முல்லைச்செடியினை 
நீங்காமல் காவிச்செல்லுகின்றேன் 
நான் செல்லும் இடமெல்லாம்...

கண்ணை இமை காப்பது போல 
கண்ணும் கருத்துமாய் காக்கின்றேன்...!
கமழும் வாசனை உள்ளத்தை மட்டுமல்ல 
கலங்கி போன உந்தன் பிரிவையும் நிரப்புகின்றது...!

உன்னை பார்க்க வேண்டும் என்ற 
உணர்வு எழுந்தால் முல்லையின் 
அருகே செல்வேன் பரிவோடு
அதன் வாசம் நுகர்வேன்...!

ஒரு மலரினை கூட 
ஒருக்காலும் உதிர்க்க மாட்டேன்...!
உதிர்ந்து விழும் மலர்களை பொறுக்கி 
உன் பெயர் சொல்லி சேகரித்து புத்தகத்தில்  

பக்கம் பக்கமாய் பாசத்தோடு 
பக்குவப்படுத்துகின்றேன்..!
பைத்தியக்காரத்தனம் என்றால் 
பரவாயில்லை இருந்து விட்டுப்போகட்டுமே...!

உந்தன் துயரம் நீக்கும் முல்லை 
எந்தன் துயரங்களையும் இல்லை 
என்றாக்கி ஆற்றுப்படுத்துகின்றது...!

பரவும் வாசனையில் 
பயணிக்கின்றேன் அதன் அருகே ...!
பம்பரமாய் முல்லை என்னை சுழலப் 
பண்ணியே பரந்து  செல்கின்றது காற்றிலே...!

எட்டிப்பிடிக்கின்றேன் காற்றினை 
எந்தன் முல்லையின் வாசம் காவி 
எங்கோ திருடிச்செல்லும் காற்றை 
எட்டி எட்டிப்பிடிக்கின்றேன்...
கட்டியணைத்து பறிக்க பார்க்கின்றேன் 
கெட்டியாக முல்லையின் வாசம் பற்றிய 
கள்ள காற்று காணாமல் போயிற்று...!

காற்று திருடியும் முல்லை தன் வாசத்தை 
அள்ளித்தான் வீசுகின்றது...!
துள்ளிக்குதிக்கும் உள்ளம் மயங்கி போகின்றது 
தள்ளி வைக்கின்றது முல்லை
தூரமாய் என் வலிகளை....


லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "முல்லை" என்ற தலைப்பில் இன்று (05.05.2014 )வழங்கிய கவிதை இது.

கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 (இலங்கை இந்திய நேரம் பிற்பகல் 7.30 மணிக்கு )மணிக்கு... http://gtbc.fm/

  








Thursday 1 May 2014

உழைப்பு..!!!


எட்டுமணி நேர உழைப்பு அல்ல
என்றுமே உழைக்கின்ற களைப்பிற்கு
ஆசுவாசமாய் உட்காரவும் முடியாது...!

ஓட்டம் என்றுமே  போராட்டமே..!
வாட்டம் கொண்டாலும் - வாழ்க்கை
ஆட்டம் கண்டாலும்  போராட்டமே...!

திண்டாட்டம் தினம் தினம் - இறை
மன்றாட்டம் கொண்டு போராட்டம்...!

துன்பங்களுக்கு எதிராய் உழைப்பு
துயில் கொள்ள முடியாத உழைப்பு...!

உயிர் பிழைப்பு வேண்டி எதிர்த்து உழைப்பு...!
அதிகார வர்க்கம் திணிக்கும் அநீதிக்கு எதிராய் உழைப்பு...!
ஆங்காங்கே முளைக்கும் துரோகங்களை முறியடிக்க உழைப்பு..!

அந்தி சாய்ந்தாலும் ஓய்வில்லை...!
அகால வேளையில் இளைப்பாற
துயரங்கள் விடுவதில்லை....!
துள்ளி வந்து உள்ளமதில் இடம் பிடித்து
ஊஞ்சல் ஆடி மகிழும் அவை
ஊமையாய் நித்தம் அழ வைக்கும்...!


சேற்றில் கால் வைத்து உலகிற்கு  உணவு
சேமித்து உலை வைக்க திண்டாடும் உழவர் பெருமக்களின்
வலிகள் என்றும் வற்றிப்போவதில்லை....
வறண்ட நிலத்தில் உறிஞ்சப்படும் நீரைப்போன்று
வயல்வெளிகள் உறிஞ்சிக்கொள்கின்றன உழைப்பினை...!

விதம் விதமாய் காய்கறிகள்
முத்து முத்தாய் நெல்மணிகள்
வித்து வீடு வந்தாலும்
பத்து காசு மிச்சமில்லை...!

உடலை உருக்கி வேலை வாங்கி
உயிர் போகும் வரை தொழிலாளியாக்கி..
உலகில் வாழும் முதலாளிகள் வீசி எறியும் பணம்
உன்னத தொழிலாளிகளின் உழைப்பில் உருவானது -இந்த
உண்மையினை ஏற்க மறுக்கும் ஒவ்வொருவரும்
உழைப்பாளியின் உதிரம் உறிஞ்சுபவர்களே..!

உதிரம் குடிக்கும் பூச்சிகள் அதிகமாகி
உழைப்பாளிகள் உயிரற்று போகும் நிலையும்
தொழிலாளர் தினத்தில் மட்டுமே
தொழிலாளர் துன்பங்களை நினைப்பவர்களாய்
தொலைத்து நிற்கின்றோம் மனிதாபிமானத்தை...

தொழிலாளர் இன்றிய உலகம்
தொலைந்து தான் போய் விடும்...!
தொழிலாளரை மதிப்போம்...!
தொழிலாளரை காப்போம்..!
தொழிலாளர் தினத்தில் மட்டுமல்ல
தொன்மை காப்போம் என்றும்...!


லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "உழைப்பு" என்ற தலைப்பில் இன்று (01.05.2014 )வழங்கிய கவிதை இது.

கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 (இலங்கை இந்திய நேரம் பிற்பகல் 7.30 மணிக்கு )மணிக்கு... http://gtbc.fm/