Search This Blog

Thursday 29 August 2013

எமக்கு எதற்கு "அகதி" என்ற அங்கீகாரம்....???




அவலங்கள் நடந்தேறுவதை கண்டும் 
அவலம் ஒன்று இடம்பெறபோவதை 
அறிந்தும் அங்கிருந்து தலைதெறிக்க 
அவசர அவசரமாய் தப்பி ஓடுவதும் - பின் 
"விசாரணை" "போர்க்குற்றம்" 
"மனித உரிமை மீறல் " என்று
உலக நாடுகள் முன் நற்பெயருக்கு முனைவதும்
உண்மை நிலைகளை கண்டறியும்
"உத்தியோக பூர்வ விஜயம்" என்று
கொலைக்களம் ஏகி இரண்டும் கெட்டான்
அறிக்கைகளை கடமைக்கு சமர்ப்பித்து
அல்லல் படும் உறவுகளின் நம்பிக்கையில்
ஊஞ்சல் ஆடிக்கொண்டிருக்கும் ஐ. நாவே...!!!

இலங்கையின் இனவாத வெறிக்கு
இரையாக போகின்றவர்கள் என்றும்
இவர்கள் நாளை அங்கு காணாமல் போக
இருப்பவர்கள் என்றும் கத்தி கத்தி
உன் செவிகளுக்குள் விழுந்து விழுந்து
உரத்து சொல்லியாயிற்று....

ஈழத்தமிழர்கள் என்று தானே
ஈற்றில் அகதி என்றாய்....!!!
ஈரைந்து திங்கள் எம் கண்ணீர்
ஈன வாழ்வினை கண்டிருந்தும்
ஈழத்தமிழர் என்று காரணங்காட்டி
ஈவிரக்கமின்றி துரத்துகின்றாயே...!



இன்று நீ எம்மை துரத்தி விட்டு
நாளை அங்கு நல்லபிள்ளைக்கு வருவாய்
எம் பிள்ளைகள் கையில் எம் படங்களுடன்
காணாமல் போனோர் உறவுகளாய் உன் முன்னால்
காரணமே நீ என்று அறியாமல் பத்திரிகைகளும்
கலர் கலராய் படம் பிடிக்கும்...!!!
வரலாறுகள் சொல்லி வரும் கதை இது....
வந்தார்கள் சென்றார்கள் என்று நீங்களும்
உயிரோடு சாகடிக்கப்பட்டும்
உலகத்துக்கு தெரியாமல்
உறவுகளுக்கும் தெரியாமல்
காணாமல் போனவர்களாய் நாமும்....
தொடர்கின்ற கதை இது.....






எம்மை காப்பாற்ற தயக்கம் காட்டும் உன் சபையில்
எமக்கு எதற்கு "அகதி" என்ற அங்கீகாரம்....?
அகதி என்ற பதத்திற்கு உன் அகராதியில் - நீ
அளித்த வரைவிலக்கணம் தான் என்ன ??

எங்களுக்காக என்ன குரல் கொடுத்தீர்கள்??
எங்களுக்காக என்ன தட்டி கேட்டீர்கள்??
உங்கள் சாசனத்தை மாற்றி எழுதுங்கள்...
ஈழத்தமிழனுக்கு ஐ.நா வில் அகதியாக கூட
உரிமை இல்லாதொழிக்கப்படுகின்றது என்று..







நிலவரசி நிலவன் 



துபாயில் இறுதிக்கணங்களில் உயிர் ஊசலாட எந்த நேரமும் இலங்கைக்கு நாடு கடத்தப்படலாம் என்ற அச்சத்தில் கண்ணீரோடு தவிக்கும் பன்னிரு ஈழத்தமிழ் உறவுகளுக்காக அவர் தம் எண்ணங்களை பிரதிபலிப்பாக.....எழுதியது.... 

Saturday 3 August 2013

அடங்கா மண் கற்றுத்தந்த வீரம் அடக்கமான உதிரத்தில்.... அமைதியாய் உறங்குகின்றது....!!!


வெடியின் நெடிகள் நிறைந்த
வெஞ்சமர்களை நெஞ்சு நிமிர்த்தி 
களமாடி சிங்களத்தின் பிடரி   
கதிகலங்க வைத்து....


நெஞ்சிலே நஞ்சு மாலையினை  ஏந்தி 
நெருப்பாய் எரிந்து கொண்டிருக்கும் 
தமிழீழ  வேட்கையின் சுவடுகளை...
தலைவன் பின்னால் தடம் பதித்து.....,,
தலை நிமிர்ந்து  திமிருடன் 
தலை வணங்காது  நாம் நடந்த 
தரை எங்கும்  இன்று நாணி
தலை குனிந்து செல்லுகின்றேன்...!!!



அடங்கா மண் கற்றுத்தந்த வீரம்  
அடக்கமான உதிரத்தில்....
அமைதியாய்  உறங்குகின்றது....!!!

யாசிக்கும் யாசகனுக்கு புன்னகை சிந்தும்  
யாரும் எம்மை நோக்குவது அரிதே...!
புறம் பேசிடும் உள்ளங்களும்  
புது உறவுகள் அல்ல - ஈழ
அன்னையை  நேசித்து, 
அண்ணனை துதித்து, 
புனிதமாய் எம்மை நினைத்த 
எம்மினமே....!!!
எள்ளி நகையாடுவதும்  
எம்மினமே...!!!

சொல்லாட 
சொந்தங்களே  பின்நிற்கின்ற
சோகமும்,,,  

எல்லையிலே - அன்று 
எட்டி உதை பட்ட  காடையர்  
எட்டப்பர் கூட்டத்தின் முன்னால் 
முதுகெலும்பு அற்ற வாழ்வும்,,

புனர்வாழ்வு என்ற பெயரில் எம் உள்ளத்தை 
புண்ணாக்கி எம்மை நோக்கும் அசிங்க கண்களும்,, 

" முன்னாள் போராளிகள்" என்ற அடைமொழி கொண்டு 
முகத்திற்கு நேரே விழிக்கும் செய்தியாளர்களின் 
வில்லங்கமான வினாக்களும் விளக்கங்களும்,,  


இரண்டடி தூரத்தில் பேசிடும் வசைமொழிகளும்,, 
இரவுக்கு மட்டும் தெரிந்திடும் கண்ணீரும்,,
எந்த நொடியும் வாசலுக்கு வரலாம் என 
எதிர்பார்த்து கலங்கிடும் விசாரணை அழைப்பும்,,
எம் இதயத்தில் எரியும் தீயினை அணைத்திடுமா???
எம் நெஞ்சில் நீறு பூத்த நெருப்பாய் தகிக்கும் நினைவுகளை அழித்திடுமா???


முடிந்து விட்டது என்று முட்டாள்தனமாய் எண்ணுகின்ற 
முடிவில்லா போராட்டம் முடிந்து தான் போய்  விடுமா?? 
முடங்கி தான் உள்ளதேயன்றி முகவரி அற்றுப் போய் விடவில்லை ...!!!


வரியணிந்த வேங்கைகள்...
கொடூர சிங்க கோரப்பற்களால் கிழிக்கப்படுவதும், 
நரிகள் கூட்டத்தால் எள்ளி நகையாடப்படுவதும்,
வீழ்ந்த விழுப்புண் ஆறும் வரையே...............................