Search This Blog

Wednesday 31 July 2013

இணையத்தில் வந்து எந்தன் இதயத்தில் பதிவான என் உயிர்த் தங்கையே..!

  • என் அன்பு அண்ணாவின் இதயம் பேசுகின்றது.....
    இணையத்தில் வந்து எந்தன் இதயத்தில் பதிவான என் உயிர்த் தங்கையே..! உந்தன் உதயத்தில் உருவான கவிவரிகளைக் கண்டு எந்தன் இதயம் அழுகின்றதம்மா... சோகத்தாலான அழுகையில்லையம்மா..! பேரானந்தத்தால் வந்த அழுகையம்மா!

    தங்கை இல்லை என்ற தவிப்பை என் இதயத்தில் இருந்து அழித்து புதுப் பதிப்பை உருவாக்கி என் இதயத்தை உயிர்ப்பாக்கிய என் அன்புத் தங்கையே..!

    எல்லோரையும் "தங்கை" என்றழைக்கின்ற போது என் மனதாலே மகிழ்கின்றேன். உன்னை மட்டும் என் தங்கை என்றழைக்கின்ற போதுதானே ... என் உயிராலே உருகுகின்றேன்.

    "என்னோடு ஒப்பிடும் போது எழுத்தில் நீ பூஜ்ஜியம் என்றாய்..!" - தவறம்மா... உன்னோடு ஒப்பிடும் போது என் எழுத்துக்கு நீதான் ராஜ்ஜியம் அம்மா! நீ ஒரு இலக்கியப் பிறப்பு..! அதனால்தான் உன்னிடம் என்னை இணைய வைத்தது உன் கவி வரிகளின் தனிச் சிறப்பு!

    உன்னை நான் அதிகமாக நேசிக்கின்றேன். என் நேசம் என்பது... காதலை விடப் புனிதமானது! கடலை விட ஆழமானது! புயலை விட வேகமானது! பூக்களை விட மென்மையானது! இது காதலும் அல்ல.. . இது காமமும் அல்ல... அதையும் தாண்டி புனிதமானது! எப்படி சொல்வதென்று எனக்குத் தெரியவும் இல்லை!

    உன்னில் நான் கொண்ட பாசத்தைச் சொல்ல எந்தக் கருவிகளும் இல்லை..! எந்த அளவீடுகளும் இல்லை..! நீயே கண்டு பிடித்துச் சொல்லம்மா...??? உன்னால் மட்டுமே முடியும்... என்னை அளப்பதற்கும் ... என்னை அழிப்பதற்கும்!

    உன் கவி வரிகளைப் படித்து தொலைத்து விட்டேன் என் எண்ணங்களை..! அதனால்,- உன்னை வாழ்த்த வார்த்தைகளே இல்லையென்று தவிக்கின்றேன். கோடி வார்த்தைகள் இருந்தாலும்... உன்னை வாழ்த்த... எந்த வார்த்தைகளுக்கும் தகுதியில்லை.! இருந்தும் என் அன்புத் தங்கையை வெறுமென அனுப்ப என் மனதிற்கு சம்மதமும் இல்லை..! உன்னை வாழ்த்த தேடித் தேடித் பார்க்கின்றேன்... இந்தத் தமிழ் மொழிகளில் அப்படியொரு புனிதமான.... அப்படியொரு பசுமையான.... வார்த்தைகளே இல்லை..! உன்னை வாழ்த்தாமல் இருந்தால் என் இதயம்.... இதயமே இல்லை..!

    அதனால் என் நெஞ்சைக் கிழித்து என் இதயத்தை அறுத்து உனக்கு அனுப்பி வைக்கின்றேன்... உன் அண்ணனின் அன்புப் பரிசாக ஏற்றுக்கொள்! என் இதயம் உனக்குள் இருந்து எப்போதும் உன் ஆயுள் வரையும்... உன்னை வளர்த்துக்கொண்டிருக்கும்! உன்னை வாழ்த்திக்கொண்டிருக்கும்!

    உன் உயிரான அண்ணா.
    (வல்வை அகலினியன்)

Friday 26 July 2013

செயற்கைக்கிரகம்...!!! (நரகசாலை)



மின்விளக்கு சூரியன்...! 
சுற்றிலும் அழுக்கு நிற வானங்கள்..! 



வியர்வை மழைத்துளிகள்...!
சாக்கடையில் நிர்வாண குளியல்..!


ஆறு இஞ்சிக்கு ஒரு குவளைக்கஞ்சி..!
பனங்கிழங்கு உறக்கம்....!!!







விலங்குகளின் ஆதிக்கம்..! 

விஞ்ஞான வளர்ச்சியில் 
குடிநீரின் நிறமும் மாறிவிட்டது... 



இங்கும் வானவில் உண்டு...! 
ஏழு நிறங்களில் அல்ல 
ஏழு கம்பிகளாய்...


பூலோகத்தில் உள்ள அனைத்துவகை 
புழுக்களும் இங்கு உண்டு...! 



என்ன ஆச்சரியம் .......!!!!!
இது என்ன கிரகமா.....???



ஆமாம் கிரகம்..!!
மிருகங்களின் செயற்கைக்கிரகம்..!! 








ஏழறிவின் ஆட்சியில்,,,
ஆறறிவு புழுக்கள் வாழும் நரகம்...!!!
நரகத்திலிருந்து ஒரு படி மேல் இருக்கும் கிரகம்...!!






நன்றி....!!!
சகோதரன் தீசன் வேலாவின் உள்ளப்பகிர்வு..... 

Tuesday 23 July 2013

சிவப்பு ஆறு ஓடிய "கறுப்பு ஆடி" யின் 30ம் ஆண்டு நினைவில்.....


     

சிங்கள பேரினவாதிகளின் வெறித்தனத்தால்  தமிழ் உறவுகளுக்கு இழைக்கப்பட்ட  கொடூரங்கள், கொடுமைகள் நடந்தேறியது வெளி உலகம் அறிந்திட முடியாத கால கட்டமான எண்பதுகளில் தான். அதாவது 1983 இல் உதிரமே  உறைந்து விடும் அளவுக்கு ஒட்டுமொத்த தமிழினமும் கதி கலங்கி போயிருந்த நாட்கள் உண்மையில் தமிழர்களின் வாழ்வில் கறுப்பு வடுக்களை உண்டாக்கிய மறக்க முடியாத காலப்பகுதியாகும் . கறுப்பு யூலை எனப்படுகின்ற சிவப்பு இரத்த ஆறு ஓடிய ஆடிக்கலவரம் முடிந்து முப்பதாண்டு காலம் முழுமையடைந்து விட்டது. 
இந்த 30 வருட இடைவெளியில் என்ன வேறுபாடு??
திருநெல்வேலியில் வெடித்த தாக்குதலின் எதிரொலி இந்த ஆடிக்கலவரம் என்பது உலகமே அறிந்த உண்மை. அதற்கு பின்னான காலகட்டத்தில் எத்தனையோ தாக்குதல்கள் சிங்கள இனத்திற்கு எதிராக நடாத்தப்பட்டு அன்று திருநெல்வேலியில்  கொல்லப்பட்ட பதின் மூவரை விட நூற்றுக்கணக்கில், ஆயிரக்கணக்கில் சிங்கள இராணுவமோ அல்லது  காவல் துறையோ கொல்லப்பட்ட போது மீண்டும் ஒரு கலவரம் தமிழருக்கு எதிராக அதாவது 1983 ஐ போன்று இடம்பெறாமல் இருந்தமைக்கு தமிழர்களுக்கு கவசமாய் இருந்த தமிழீழ விடுதலைப்புலிகள் தான் காரணம் என்பது சொல்லித்தெரிய வேண்டியதில்லை. தமிழர்களை தொட்டு பார்க்கவே சிங்களவன் அஞ்சி நடுங்கும் அளவிற்கு தங்கத்தலைவன் வழிவகுத்து வைத்திருந்த காலமும் இருந்தது என்பதை தலை நிமிர்ந்து  சொல்லிக்கொள்ளும் நேரத்தில் இன்றைய நிலையில் மக்களை விட அதிகமாய் ஊசலாடும் இராணுவ மயமான தமிழர் தாயகத்தில் குறைந்த பட்சம் 5 இராணுவத்தினர் தாக்கப்பட்டால் அதன் எதிரொலி 1983 அதாவது கறுப்பு யூலையினை விட மிகக்கொடுரமாகவே இருக்கும். இல்லை என்று எதிர்வு கூறுவதற்கும் சிங்களவன் பயந்து நடுங்கிடக் கூடும்  என்று எண்ணிக்கொள்ளும் அளவிற்கும் தைரியம் நிச்சயமாக யாருக்கும் இருக்க போவதில்லை.
புத்த விகாரைகள்  தான்  தோன்றித்தனமாய் தமிழர் தாயகம் எங்கும் முளைப்பதையும்  சிங்களக்குடியேற்றங்கள் அதிகாரமாக வந்தேறுவதையும் தடுக்க முடியாத உள்நாட்டு அரசியல் பேர்வழிகள் அல்லது மாயை வலையாகிப்போன சர்வதேசம் என்பனவற்றால்  தமிழர்களுக்கு பாதுகாப்பு வழங்கிட முடியுமா??
ஆம் என்றால் அது வெறும் முட்டாள்தனமே....
உண்மை...
1983 ஆடிக்கவரம் என்பது உலகத்திற்கு ஒரு சிறு புள்ளியாக அதாவது உலகம் புரிந்திராத காலத்தில் சிங்கள பேரினவாதத்தால் , காடையர்களால் தமிழினத்தை சுத்திகரிக்க ஆடப்பட்ட கோரத்தாண்டவம்.,! அன்று தமிழனுக்கு குரல் கொடுக்க எந்தவொரு அமைப்போ உலக ஆதரவோ இருந்திருக்கவில்லை. இருந்திருந்தாலும் ஒன்றும் மாற்றம் நிகழ்ந்திருக்காது... 
ஏறக்குறைய 25 வருட  ஆடிக்கலவர நினைவுகள் தழுவிச்சென்ற கால கட்டங்களில் உலக அரங்கில் பெரிதும் வெளிக்கொண்டு வரப்பட்ட ஈழப்போராட்டம் முக்கிய கட்டம் பெற்றிருந்த உச்ச காலத்திலேயே...அதாவது 2009 இல் ஒட்டுமொத்த தமிழினமும் கண்ணீர் சிந்த காட்சிகளாக, ஒளிப்படங்களாக சர்வதேசமும் உலக வல்லரசுகளும் பார்க்க பார்க்க சிங்களக் காடையர் படையால் தமிழினம் நவீன முறையில்  கொன்று குவிக்கப்பட்டது. இல்லை உலக நாட்டின் ஆதரவுடன் தமிழனின் இரத்தம்  ஆறாக  ஓடியது முள்ளி வாய்க்காலில்...
 என்ன வேறுபாடு??? அது இனக்கலவரம்...! இது இன  யுத்தம்...! 
பெயர் ஒன்றுதான் வேற்றுமை...
                                         

கொல்லப்பட்டதும் கொள்ளையிடப்பட்டதும் தமிழர்களின் உயிரும் உடமைகளும் தான்....! 
தமிழன் உதிரத்தில் உறைந்து போனது தமிழர் தாயகமே...! 
மண்ணோடு மண்ணாகி உரமாகிப்போனது எம்முறவுகளே...!
குருதியில் தோய்ந்த முகங்களையும் உடலங்களையும் கண்ணுற்று மரத்து போயிருப்பது எம் உள்ளங்களே..! 
அச்சம் நீக்கி தமிழர்களை தலை நிமிர வைத்து பாதுகாப்பு   கொடுத்த புலிகளை முடக்கி மெளனிக்க வைத்த சர்வதேசம் ,  இனப்படுகொலையை திட்டமிட்டு அரங்கேற்றிய சிங்கள அரசை குற்றவாளிக் கூண்டில் நிறுத்த அருகதை அற்ற ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் , இன்றுவரை இனப்பிரச்சினைக்கு தீர்வு எட்ட சிங்கள அரசை அழுத்தம் கொடுக்க தவறி வரும் அயல் நாடு இந்தியா  என்று பட்டியலிடும் நாடுகளும் அமைப்புக்களும் தமிழனுக்கு இலங்கையில் அரங்கேறும் ஏதேனும் ஒரு கொடூரத்தை தட்டி கேட்க முன்வருவார்களா?? வெறும் கண்துடைப்புக்களும் , பத்திரிகைச்செய்திகளும் , கோஷங்களும் , விளம்பரங்களும் தமிழனை காப்பாற்ற முன் வரப்போவதில்லை. வீறு கொண்டெழுந்த வீர மறவர்களை தவிர வேறெவரும் தட்டிக்கேட்க முன்வரப்போவதுமில்லை...!      

அன்று சிங்கள பேரினவாதம் அரங்கேற்றிய காட்டேறித் தனத்தை 25 வருடங்களாக தட்டிக்கேட்காத அதாவது 2009 வரை ஏன் என்று வினவாத சர்வதேச சமூகத்தின் பொறுப்பற்ற அசமந்த போக்கு 2009 இனப்படுகொலையை முள்ளிவாய்க்காலில் சர்வதேசத்தின் கண் முன்னால்  சிங்களம் ஆற்ற வித்திட்டது.
                                   

அன்றைய ஆடிக்கலவரத்தை தட்டி கேட்டு தமிழர்களுக்கு ஒரு தீர்வினை  சர்வதேசம் வழங்கியிருக்குமானால் ஈழப்போராட்டத்திற்கும் அவசியம் இருந்திருக்காது. இன்று முள்ளிவாய்க்கால் வரை தமிழன் விரட்டி விரட்டி கொல்லப்பட்டு இருக்க மாட்டான். அத்துடன் மட்டும் நின்று விடாமல்  இன்னும் இன்னும் அடக்கி ஒடுக்கப்படும் தமிழன் என்றோ ஒருநாள் ஒட்டுமொத்தமாக காணாமல் போக போகின்றான். அதுவரைக்கும் பாழாய்ப்போன சர்வதேசம் பார்த்துக்கொண்டே தான் இருக்கும். தமிழனுக்கு எதிரான கொடுமைகளை தட்டி கேட்க தயங்கும் சர்வதேச சமூகமானது  தன்  இனத்துக்கு எதிரான கொடுமைகளை தமிழன் நிமிர்ந்து தட்டி கேட்டால் "பயங்கரவாதம்" என்று முத்திரை குத்தி தடை செய்ய மட்டும் தயங்குவதில்லை,
ஆக... சிங்கள அரசின் நலன் விரும்பியாக சர்வதேசம் இருந்து வருவதை யாராலும் தடுக்க முடியாது. தமிழனுக்கு எதிரான ஒடுக்குமுறைகளையும் யாராலும்  தடுத்து நிறுத்த முடியாது. எம்மினத்துக்கான நினைவு  கூரல்கள் மட்டும் நீண்டு செல்கின்றன. அதையும் தடுக்க முடியாது. ஆதங்கங்களையும் வீர வணக்கங்களையும் தெரிவித்து விட்டு அமைதியாக இருக்கும் நாம் "தமிழன்" என்று எம் மனதளவில் மட்டும் பெருமைப்பட்டு கொண்டிருக்க வேண்டியது தானா???
என்றும் தொடரலாம் எமக்கெதிரான வேட்டை.  தற்சமயம் விடுப்பு பெற்று இருக்கின்றது தமிழினப்படுகொலை. சிங்களம் நாளுக்கு  நாள் விதைக்கும் சிங்கள விதை தமிழர் தாயகத்தில் பெரு  விருட்சங்களாக வளர்ந்தோங்கும் போதோ அல்லது விருட்சங்கள் வேரறுக்கப்படும் போதோ தமிழன் உதிரம் மீண்டும் சிந்த தொடங்கும்....!

Friday 31 May 2013

பொங்கி எழுந்த போராட்டம் பொருளற்று போன போதே....


பொத்தி பொத்தி 
பொக்கிசமாய் பேணி
பொறுமை காத்த காதல்.. 
பொருள் அற்று போனது...!!!


நிலை குலைந்த உள்ளம் 
நின்று தள்ளாடியது, 
நிர்க்கதியான காதலை 
நிலை நிறுத்திட 



உணர்வற்ற மெய்யிற்கு 
நேசமாகிய பசி..!!


கால நேரம் பார்த்திடா
ஆலய பிரவேசம்...!! 

கடவுளோடு மனம் 
பேசிடும் பிரார்த்தனை..!!


நிழலாய்  பின்தொடர்ந்த  
குளமான  கண்ணீர்..!! 

வெட்கமறியா புலம்பல்..!
விரும்பிடும் தனிமை...!


கைபேசியை இமைக்காமல் 
கண்காணிக்கும் கண்கள்...!!



சத்தமின்றி ஓலமிட 
எதிர்பார்த்திடும் இரவு...!!

காதல் கை சேர்ந்திடும்  என்ற 
அசையாத நம்பிக்கை....!


இன்றும் நினைத்தால் 
சின்னதாய் சிரிப்பு,,,

புத்தி பேதலித்து இருந்ததாய் 
நெஞ்சத்தில் ஒரு நினைவு 
தெளிந்தது எப்போது??  


முப்பதாண்டு காலமாய்  
பொங்கி எழுந்த போராட்டம் 
பொருளற்று போன போதே....!!!!





அரசி நிலவன் 

Saturday 18 May 2013

இறுதி வரை,,,,,,,நடைப்பிணங்களாய்......!!!


முல்லைத்தீவில் இன்பத்துடன் 
முழுச்சமர்களிலும் உயிர் தப்பி 
வாழ்ந்து வந்த அழகிய  குடும்பம்....!!!

வானத்து அரக்கர்களின் குண்டு வீச்சிலும் 
வாழ்வினை தொலைக்காது உயிர் மீண்டவர்கள் 
அன்பான கணவன் ஆசைக்கு ஒரு செல்ல மகள் 
அடி தடிக்கு ஒரு ஆண் மகன் என 
அஞ்சு வருடத்துக்கு முந்தி 
அரவணைப்போடு வாழ்ந்தவள்....!!!
 
ஓடி ஓடி பதுங்கு குழி வெட்டி 
ஒளிந்து ஒளிந்து மண்ணினை நுகர்ந்து
அண்ணாந்து அண்ணாந்து - கல் தடக்கி 
அடி பட்டு விழுந்து  உயிரை 
கையில் பிடித்து ஓடித்திரிந்தது 
கைகளில் என் உயிர்களின் சதைகளை 
அள்ளி எடுத்திடவா...???
கருவினில் நான் சுமந்தவள் 
கருவினை சுமக்க தயாராகி நின்றதை  
கண்ணுற்று பூரித்து நின்ற தருணம்,, 
காதைப்பிழந்த ஒலியோடு புகை மூட்டம் 
கண்களை மறைத்து செல்ல ஈரம் தோய்ந்து 
மெய் சிலிர்த்து நின்ற எனை புகை விட்டு விலகியது 
கைகளில் ஏதோ  நிறைந்த உணர்வை 
கண்கொண்டு பார்த்திட எத்தனித்திட ....
ஐயகோ......
செந்நிற மேனியாய்..,, 
சதையும் தோலுமாய்..,, 
நிற்கின்றேன்.....!
வலிக்கவில்லை உடலம் 
வந்து வெடித்து சிதறியது எறிகணையா???
சதைப்பிண்டமா???
குழம்பி  நின்ற எனக்கு 
கொடூரமான பதில் கிடைத்தது....
சிரித்த முகத்தோடு கொஞ்சம் தள்ளி 
சின்னவன் கடைக்குட்டி நிரந்தரமாய் படுத்தபடி.... 
செல்ல மகளை காணவில்லை....
போன மாத பிறந்த நாளுக்கு ஆசையாய் 
போட்டு விட்ட காப்புடன் கை மட்டும் என் காலடியில்.....
2009 வைகாசி 17

2013 வைகாசி 17
அப்போ நீ மட்டும் ஏன்  இன்னும் உயிருடன்....???
கேள்விகள் பல எழுகின்றன......
இரத்தமும் சதையும் என்னை நனைத்து 
இருள் சூழ திக்கற்று நின்ற என்னை நோக்கி 
கைகளால் தவழ்ந்து வந்த கணவனுக்காக நானும்
எனக்கா கணவனும் 
இறுதி வரை,,,,,,,நடைப்பிணங்களாய்......
அரசி 

Tuesday 9 April 2013

அப்பனை அறிந்திட நச்சரிப்பேன் என்ற உள்நோக்கமா??


கை கால் உதைத்து மகிழ்ந்தேன் - அன்னை 
கை தொடுகைக்காக காத்திருந்தேன்..! 
கை தொட்டாள்  என் கழுத்தை நெரிக்க
கை  கழுவி  என்னை  ஒற்றையில்  
கை விட்டு போனாள்  வாய்க்காலில்...! 
கை நழுவியது கனவான என் நனவு,,,,!!!
  
அன்னையின் உடற்சூட்டின் கத கதப்பில் 
அரவணைப்போடு அயர  வேண்டிய நான்
அகால வேளையில் விறைக்க விறைக்க  
அனாதையாய் உணர்வற்று கிடக்கின்றேன்...!!!



முலைப்பாலை உறிஞ்ச வேண்டிய நான்
முக்குளித்து மூச்சை உறிஞ்சுகின்றேன் 
முன் பின்  அறியா  சாக்கடையில்...!!!
முந்நூறு நாட்கள் சுமந்தவள்  என்னை 
முதல் நாளே நசுக்கி எறிய தெரியாதவளா - இல்லை 
முழுதாய் வடிவம் கொடுத்து கொல்ல
முடிவு செய்து காத்திருந்தாளா?? 

கால நேரத்துக்கு  ஊன் கொடுத்தும்
காலால் உனை  உதைத்த எனை வையாதும்
காண்பித்தாய் உன் அன்பினை என் முகம் காணாது...
காட்டி விட்டாய் முகம் கண்டு உன் கோர முகத்தினை..

அன்னையே....!
அருமந்த பிஞ்சு என் மேல் என்ன வன்மம் உனக்கு???
அடைக்கலம் கொடுத்து உயிர்ப்பித்தாய் நீயே...!!!
அடித்து நெரித்து கொன்றும்  போட்டாய் நீயே....!!!
அவ்வப்போது எட்டி உதைத்ததிற்கான பழிவாங்கலாஅல்லது 
அப்பனை அறிந்திட நச்சரிப்பேன் என்ற உள்நோக்கமா??

அம்மா என்பதற்கு மறுபக்கமா நீ..??
அன்னையர்களுக்கு ஒரு அசிங்கமா நீ..??
அடிக்கடி உயிர்ப்பையினை நிரப்பி 
அருமை உயிர்களை துடி துடிக்க 
அநியாயமாய் கொன்றிடாதே...!!!
அகற்றிவிடு உன் கர்ப்பப்பையினை 
அது உனக்கு வேண்டாத ஒன்று...!!! 

உன்னைப்போல் உள்ளம் கொண்டோர் உள்ள 
உலகில் என்னை  உயிரோடு விட்டாலும்
உயிரற்று போவேன் உள்ளத்தால் ஒரு நாள் 
உனக்கு நன்றிகள் கோடி இந்த கொடிய 
உலகத்திடம் இருந்து எனை காப்பாற்றியதற்கு....


அன்புடன் 
அம்மா என்று  அழைக்க வேண்டியவளின் கையால் 
அடிபட்டு மரணம் வாங்கி செல்லும் சின்னஞ்சிறு சிசு ஒன்று