Search This Blog

Tuesday 23 March 2010

யார் எக்கேடு கெட்டால் என்ன..???


முந்தி நாம் குடியிருந்த நிலத்தில்
முள் வேலி ஆக்கிரமித்தால் எமெக்கென்ன..?

உயர் பாதுகாப்பு வலயம் இருந்தால் என்ன..?
உயர் விலை ஏற்றம் ஏறிக்கொண்டே தான் போனால் நமக்கென்ன..?? 

அரசடி பிள்ளையார் இடம்பெயர்ந்து
அதில் புத்த பிரான் குந்தி தியானித்தால் நமக்கென்ன..??

விருட்சங்கள் எல்லாம் வேரோடு சாய்ந்தால் என்ன...?
வீர பூமி தலை கவிழ்ந்து கண்ணீர் விட்டால் எமெக்கென்ன..??

இடைத்தங்கலில்  இடிபடும் உறவுகள் மீளக்குடியமர்ந்தால் என்ன..?
இதுவரை குடியமர்ந்தவர்கள் எக்கேடு  கெட்டால்  தான் நமக்கென்ன..??

கல்வி.. இறக்கம்  கண்டால் தான் என்ன..?
கலாச்சாரம் தலை  விரித்து ஆடி  சீரழிந்தால் நமக்கென்ன..??

ஊழல் உல்லாசமாய் உலவினால் என்ன..?
ஊருக்குள்ளே  வேற்று மக்களின் வியாபாரத்தலையீடு
ஊஞ்சல் ஆடினால் தான் எமெக்கென்ன..??
ஊளையிடும் நரிக்கூட்டம் எம்மினத்தை முழுங்கித்தின்றால் தான் என்ன..??

நாளொரு சுவரொட்டி கொண்டு நகரை
நாறடிக்கும் அரசியல் வாதிகள  எமக்கு...
யார் எக்கேடு  கெட்டால் என்ன..??
யாழ்ப்பாணத்தில் இப்போது  நாம்  தான்   ராஜா..
யார் எம்மை கேட்க முடியும்.....???..??
யாரால் எம்மை அடக்க முடியும் ....???..??


அரசி

Saturday 13 March 2010

அதிகமாய் அடங்கி போக... அடிமைகள் இல்லை நாம்..!!!



   நாலாம் மாடியில்
   நான்கு திங்களாய்
   நா வறண்டு கிடக்கின்றோம்..!!
   நாயினை ஒத்து.... இல்லை
   நாய் கூட சுதந்திரமாய்..!


   நாதியற்று(சொந்தங்களின்றி)
   நாமில்லை..!
   நாதியற்ற(கேட்பாரற்ற) இனமென்பதாலோ..??
   நான்கு சுவருக்குள் நாம்..!!
   நாட்டினை ஆளும் இனம்
   நாலா புறமும் சேவையில்..!
   நாளை விடியுமா - நீண்ட
   நாளாக இதே ஏக்கம்..??


   அடைத்து வைத்து
   அழகு பார்க்கின்றார்கள்..!!
   மோத விட்டு எம் வீரத்தை பார்க்க..
   மோதி வெற்றி வாகை சூட..
   வீறு இல்லை இந்த
   வீணர்களுக்கு...!
   நிர்வாணத்தை எத்தனை நாட்களுக்கு
   நின்று நின்று ரசிப்பாய்..??


   பொங்கி வரும் உதிரம்...
   பொத்தி இறுக்கும் எம் கரங்களால்,,
   பொறுமையாய் அடங்கி போகின்றது..!!
   கொப்பளிக்கும் கோபம்... 
   அதரங்களை(உதடுகளை) துண்டிக்கும் - எம்
   கொலை வெறிப்பற்களின் நற நறப்பால்
   கொஞ்சம் தூரமாய் பயணிக்கின்றது..!!


   அரக்கர்களே..!!
   அதிகமாய் 
   அடங்கி போக...
   அடிமைகள் இல்லை நாம்..!
   அடங்க மாட்டோம்... 
   அதிக தினங்களுக்கு..!
   அதனால்..
   அப்புறமாகி போய் விடுவீர்..!
   அரவமின்றி(நிசப்தமாய்)...நீவிர்..!!!


   - அரசி -

Thursday 11 March 2010

யார் குற்றவாளி..???

ஒரு வாரமாக இணையம் அல்லோல கல்லோலப்படுகின்றது. சாமியாரை குறி வைத்து முகப்புத்தகம்(Face Book) கிழிந்து தொங்குகின்றது.வலைப்பூக்களில் அகப்பட்ட இந்த விடயங்கள் மென்று விழுங்கப்படுகின்றன.பார்த்தும் பார்க்காத மாதிரியும் கேட்டும் கேட்காத மாதிரியும் அமைதியாக இருந்து பார்த்தேன் முடியவில்லை. அந்த காணொளி பதிவை விட முகநூலிலும் வலைபூக்களிலும் பதியப்படும்,பகிரப்படும் பதிவுகளும் பின்னூட்டங்களுமேஎன்னை பெரிதும் பாதித்தன. இணையங்களில் பரவியுள்ள பலதரப்பட்ட பதிவுகளிற்கும்,கருத்துக்களுக்கும் இந்த பதிவு சமர்ப்பணம்..!!!


சுவாமி என்று வந்தவர் இன்பத்தில் ஈடுபட வேண்டாம் என்று மக்களை போதிக்கவில்லையே...அவர் எப்படி இருந்தாலும் என்ன செய்தாலும்..இவ்வளவு காலமும் அவரின் பிரசங்கங்களை கேட்டு கை தட்டிய , அவருக்கு பின்னால் அணி திரண்ட கூட்டம் இன்று ஊடகங்களின் வியாபாரப்புத்தி விளங்காது உடனடியாக வன்முறையில் ஈடுபடுவதும்...அறிக்கை விடுவதும் என்று ஏன் மீண்டும் மீண்டும் புத்தி பேதலித்து போகின்றார்கள் என்று விளங்கவில்லை....!

அது சரி பல காலமாக நல்ல விடயங்கள் என்று இதே சாமியார் கூறிய விடயங்களை கேட்டு ஒழுகினார்களா?? அப்படி ஒழுகிய உத்தமர்களா இந்த வன்முறையாளர்கள்??? புரியவில்லை இந்த மக்களின் மனப்போக்கு?? சாமியார் செய்த லீலை என்கின்றார்கள் அதனால் உங்களுக்கு என்ன தீங்கு ஆயிற்று...??? அதற்காக நான் சாமியாருக்கு வக்காலத்து வாங்கவில்லை.நான் சாமியாரின் சீடரோ அல்லது அபிமானியோ அல்ல. இத்தனைக்கும் இந்த சாமியார் பற்றி எனக்கு எதுவும் தெரியாது...எதோ ஒரு சஞ்சிகையில் இவர் எழுதும் தொடரில் இவரின் படத்தை பார்த்த ஞாபகம்...! அந்த தொடரைக்கூட வாசித்து பார்த்ததில்லை.இதை ஏன் கூறுகின்றேன் என்பதை புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகின்றேன்.


என்னை பொறுத்த வரை சாமியாரோ அந்த நடிகையோ செய்ததாக சித்தரிக்கப்படும் இந்த காணொளியை பார்க்கும் போது...குற்றவாளியாக முதலில் தெரிவது படம் பிடித்த ஆசாமி தான்..அடுத்து அதை அம்பலமாக்கி ஒளிபரப்பிய ஊடகம்.செய்தி வெளியிடும் சஞ்சிகைகள். தம் வியாபார போட்டிக்கு அவலாக கிடைத்த இந்த விடயத்தை நன்றாகவே மென்று விழுங்கி ஏப்பம் விடுகின்றன தமிழ் நாட்டு ஊடகங்கள்..!
தமிழ் நாட்டில் எத்தனை எத்தனை ஊழல்களும் குற்றங்களும் தினம் தினம் அரங்கேறித் தொலைகின்றன.. அவற்றை தேடித் தேடி படம் பிடித்து அம்பல மாக்க யாருக்கும் துணிச்சல் இல்லை.. இதெல்லாம் ஒரு பெரிய விடயம் என்று திட்டமிட்டு காட்சிகளை பதிவாக்கி யாரோ அனுப்ப அதை ஒரு ஊடக நிறுவனம் உலகம் பூராவும் ஒளி பரப்புகின்றது. இதை நம்பி மக்களும் வன்முறையில்... முட்டாள் தனமாக உள்ளது. ஒரு வேளை இந்த காணொளி பொய்யானது என்று நாளை இன்னுமொரு ஊடகம் செய்தி வெளியிடும் பட்சத்தில் என்ன நடக்கும்?? இதே போல சன் தொலைக்காட்சிக்கும் கல்லெறி விழும். இதே மக்கள் அந்த நிறுவனத்தை தீயிட்டும் கொளுத்துவார்கள்..சே என்ன மடத்தனம் ஆ..ஊ என்றால் கல்லெறியும் தீயிடலும் தான் தெரியுமா?? நிதானமாக யோசித்து முடிவெடுக்க தெரியாதா??

ஒரு வேளை இந்த செயலில் தொடர்புடையாதாக குறிப்பிடப்படும் குறிப்பிட்ட நடிகை சாமியாருக்கு எதிராக புகார் கொடுத்து அதாவது பாலியல் பலாத்காரம் என்ற புகாராக இருந்தாலும் பரவாயில்லை. பார்த்தாலே தெரிகின்றதே... பலாத்காரம் இல்லை என்று...

ஏன் மக்கள் கொதிப்படைய வேண்டும்?? முற்றும் துறந்த முனிவராக தன்னை சாமியார் அடையாளப்படுத்தி விட்டு இப்படி நடந்து கொண்டார் என்றா?? பலவிதமான நிலைகளைத்தாண்டியே முற்றும் துறக்க முடியும்...! அதில் காமமும் ஒன்றாக இருக்கலாம்.. சரி அவர் முற்றும் துறந்தாரா இல்லையா என்பது இல்லை இப்போதுள்ள பிரச்சினை.  இது அவரின் சொந்த பிரச்சினை.. மற்றவனை துன்புறுத்தாமல் ஒருவர் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். அவர் பரப்பும் பரப்புரைகளை கேட்டவர்கள் தானே இதே மக்கள்..! உங்கள் சொந்த புத்தியால் நடந்து கொள்கின்றவர்களாயின் சாமியாரையும் ஆச்சிரமங்களையும் நாடிச்சென்றிருக்க கூடாது. ஒருவன் நல்லவன் என்றால் தூக்கி தலை மேல் வைத்து கொண்டாடுவதும், அதே சிறு பிரச்சினை என்றால் காலுக்கு கீழே போட்டு மிதித்து துவம்சம் செய்வதும் தமிழ் நாட்டு மக்களின் பழக்க தோஷம்...!

இதில் பெரிய கொடுமை என்ன என்றால் ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பது போல் கடவுள் இல்லை சாமியார் பொய் என்னும் கட்சியினர் இதை ஒரு சாக்காக வைத்து ஏதோ சொல்ல விழைகின்றார்களே தவிர இதில் உள்ள உண்மைத்தனத்தை யாரும் கண்டு கொள்வதாயில்லை. மனிதனுக்கு உணர்வுகள் இருப்பது இயற்கை..அதை யாரும் மறைக்க முடியாது.

மனிதர்களை வழிப்படுத்தி அதாவது கெட்டு போகாமல் வாழ்க்கையினை வாழ்வாங்கு வாழ வழி காட்டும் அசாதரண மனிதர் தான் இந்த சாமியார் என்பது எனது ஊகம். அதற்காக அவர் இன்பமாக இருக்க கூடாது என்று கொதித்தெழுவது அநாகரிகம். அவர் ஒன்றும் கடவுள் அல்லரே. மனிதனை படைத்ததாக நம்பப்படும் கடவுளிற்கே மனித உணர்வுகள் இருப்பதாக நம்பப்பட்டது. பல ஆண்டுகளிற்கு முன்னர் இதை ஏற்றுக்கொண்ட மனித சமூகம் இன்று ஏன் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றது.

உதாரணத்திற்கு கூறின்,முற்றும் துறந்த முனிவர் எனப்பட்ட நாரதருக்கே இச்சங்கடமான நிலை ஒரு முறை தோன்றியது. அதாவது அமிர்தம் எடுத்து வா என விஷ்ணுவால் பூலோகத்திற்கு அனுப்பப்பட்ட நாரதர் பூலோகத்தில் ஒரு பெண்ணின் அழகில் மயங்கி 12 ஆண்டுகாலமாய் பூலோகத்திலேயே தங்கி விட்டார். பின் விஷ்ணுவிடம் சென்று மன்னிப்பு கேட்ட நாரதரிடம் விஷ்ணு உரைத்ததாவது... ” உணர்வுகள் உள்ள மனிதனை படைத்த கடவுளர்களுக்கே இந்த உணர்வுகள் இருக்கும் போது முனிவர்களுக்கு இருப்பது ஆச்சரியமன்று. இனி எதிர்காலத்தில் வரப்போகும் முனிவர்களுக்கு முன்னுதாரணமாய் நீ இருப்பாய்”
அதாவது உணர்வுகளைத்துறந்து வாழ முடியாது. எப்படித்தான் கட்டுப்பட்டு வாழ்ந்தாலும் ஒரு தருணத்தில் எங்கோ ஓரிடத்தில் சிக்க வைக்கும் இந்த உணர்வு எல்லோருக்கும் பொதுவானதே. இதற்கு யாரும் விதி விலக்கல்ல. முக்காலமும் அறிந்த நாரதனே உணர்வுகளுக்கு அடிமையாகும் போது மனிதனாக பிறந்த நித்தியானந்தா உணர்வுகளை துறந்து வாழ முடியாதே.. இது தப்பானதல்லவே.. அப்படியாயின் இந்த உலகத்தில் யாரையும் திருமணம் முடிக்காதே என்று கூறி அவர் பரப்புரை செய்திருப்பின் தப்பாகலாம். அந்த காலத்தில் நாரதரையே ஏற்றுக்கொண்ட கடவுளும் உண்டு ஏன் இந்த காலத்திலும் கூட நாரதரை யாரும் வெறுக்கவில்லையே...ஒருவர் கூறும் கருத்து நல்லதாக இருந்தால் மட்டும் போதும். அவர் யார் எப்படிப்பட்டவர் என்பதும், அவரின் சொந்த வாழ்க்கை பற்றியும் எமக்கு தேவை இல்லை. அதில் தலையிடுவது சுத்த அநாகரிகம். காட்டு மிராண்டித்தனம்.. சாமியாரினதும் நடிகையினதும் இந்த உறவு சட்ட விரோதமானதா இல்லையா என்பது வேறு பிரச்சினை.அதை சட்டம் தீர்மானிக்கட்டும். 

அதை விடுத்து முற்று முழுதாக வியாபார நோக்குடன் ஊடகங்கள் பரப்புரை செய்து வருகின்றமை வேதனைக்குரிய விடயமாகும்.நீலப்படத்துக்கு கூட இப்படி விளம்பரம் செய்ய மாட்டார்கள். அந்தளவு இழி நிலையில் புகைப்படங்களை வெளியிட்டு குமுதம் என்கின்ற இதழ் இலவச ஊடக விபச்சாரத்தினை நடாத்த, நக்கீரன் என்ற ஊடகம் சந்தா முறையில் நீலத்திரைப்படத்தை தன் வாசகர்களுக்கு வெளியிட்டு காட்டுகின்றது.இதனால் பாதிக்கப்படுவது யார்? சாமியாரோ நடிகையோ அல்ல...இளம் சமுதாயமே அத்துடன் தமிழனின் மானம்..!! உலகம் பூராவும் இன்று கப்பலேறி விட்டது தமிழனின் மானம்..!! இதற்கு துணை போன , துணை போகின்ற ஊடகங்களின் செயற்பாட்டை என்னவென்று சொல்வது..?? சமூகத்தில் பொறுப்பான நிலையில் இருந்து செயற்பட வேண்டிய ஊடகங்களே இப்படி வியாபாரத்தை மட்டும் நோக்காக கொண்டு தம் நிலை தவறி நடந்தால் யாரை யார் குற்றம் சொல்வது? பேனாவே இங்கு தவறான வழியில் பயணிக்கின்றது.

பிறருக்கு தீங்கு விளைவிக்காமல் உணர்வுகளை அனுபவித்து மனிதனாக வாழ்ந்து பின் ஆன்மிக வழியில் செல்வதை பற்றி யோசிப்போம் அல்லது செல்வோம். காமத்தை ஒதுக்கி வாழச்சொல்லி யாரும் இங்கே பிரச்சாரம் செய்யவில்லை. அப்படி செய்ய யாராலும் முடியாது. உணர்வுகளை கட்டுப்படுத்தி யாரும் வாழ முடியாது. உணர்வுகளுக்கு அடிமையாகி இன்புற்றிருப்பதை குற்றம் என்று கூறுபவனும் அதை வெளிச்சம் போட்டு பிறருக்கு காட்டுபவனுமே முழுக்குற்றவாளி ஆகின்றான்.



குற்றவாளி தானாக பார்த்து திருந்துவானா??????

என்றும் தோழமையுடன்
அரசி

Tuesday 9 March 2010

காதலனுக்கு கல்யாணமாம்...!!!


வருகின்ற பங்குனி(தமிழுக்கு)...
வரப்போகின்றானாம் வெளிநாட்டிலிருந்து....
அஞ்ஞான வாசம் முடித்து வரும்
அணங்கு அவனுக்கு...
அம்மா அப்பா விரும்பிய பெண்ணோடு..
திருமணமாம்...!!!

தேடிப்போய் 
தொந்தரவு இளைத்து,,
விரும்புகின்றேன் என்று
விரும்ப வைத்து,,
காதல் மொழி பேசி,,
காலங்கள் மூண்றாண்டுகள்
கரைந்த போது,,
காதலி கண்ணுக்கு எட்டியவளாய்
காட்சி கொடுக்க.....,
பொய்யுரைத்து சென்றான்...
விரும்பவில்லை என்று.....!!

காத்திருந்த பெண்மை.........
காரிருளில் தவித்தாள்...
காலங்கள் விரைவாகியும்..
காதல் அழியவில்லை...!!!

காதலனுக்கு கல்யாணமாம்...!!
காற்றில் மிதந்து வந்த செய்தி
காதிலே மோதியும்.....
சலனமற்றவளாய் ஒரு
புன்னகையை உதிர்த்தாள்...!!!


- அரசி -

Monday 8 March 2010

மகளிர் தினமும்...!! பெருகி வரும் பெண் சிசுக்கொலையும்...!!!








நூறாவது சர்வதேச பெண்கள் தினம் மார்ச் மாதம் 8ம் திகதி உலகம் பூராகவும் கொண்டாடப்படுகின்றது. மகளிரை போற்றி மகளிர் உரிமையை வலியுறுத்த வருடா வருடம் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. ஆனால் ஆயிரக்கணக்கான பெண் குழந்தைகள் இந்த உலகத்தில் பிறப்பதற்கே கருவில்போராடிக்கொண்டிருக்கின்றன.



2008 இல் கணக்கெடுப்பின் படி, இந்தியாவில் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் பெண் சிசுக்கள் கருவிலேயே அழிக்கப்படுகின்றன. அதாவது தினமும் 2,500 பெண் குழந்தைகள் சாகடிக்கப்படுகின்றன. இன்றைய கால கட்டத்தில் வெளிச்சத்தை பார்ப்பதற்கு முன்பே கருகிப்போகும் பெண் சிசுக்களின் கொலை மலிந்து விட்டது.

மகளிர் தினத்திற்காக வாழ்த்து தெரிவித்து ஒன்று கூடல்கள் நடாத்தினால் மட்டும் போதுமா? உலகத்தை பார்க்காமலேயே எத்தனை பெண் சிசுக்கள் கருவில் கொல்லப்படுவதையும், அதனால் ஏற்படும் பாரதூரமான விளைவுகளை தடுத்து நிறுத்த வேண்டாமோ??...


பெண் சிசுக்கொலை




இந்தியாவின் நாமக்கல்லில் பரவலாக இந்த பெண் சிசுக்கொலை இருக்கிறது. பொதுவாகவே தமிழ் நாட்டில் ஆண்வழி சமூகம்தான் பண்பாட்டளவில் ஆட்சியில் உள்ளது. இந்த வகை சமூகங்களில் சொத்து ஆண்கள் வழியே கை மாறுகிறது - சட்டம் என்ன சொன்னால் என்ன ? கட்டைப் பஞ்சாயத்துதானே கிராமங்களில் கூடுதலான வலு உள்ளதாக இருக்கிறது. ஆண்வழி சமூகங்களில் பெண்ணுக்குத் திருமணச் செலவு அதிகம் என்பதோடு பெண் திருமணத்துக்குப் பிறகு தனது கணவனின் வீட்டுக்குப் போகக் கடமைப்பட்டவள் என்ற கருத்தும் வலுப்பெற்றுக் காணப்படுகின்றது.

இதனால் பெண் குழந்தை என்று சொன்னாலே அது எதிர்காலக் கடனுக்குக் காரணம், ஒரு சுமை என்று இயல்பாகவே கருதும் மனப்போக்கு நிலவுகின்றது. இது தவறு என்று தெரிந்த படித்த நடுவயதுக்காரர்கள் இப்போது அங்கும் இங்கும் உள்ளார்கள். இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில், நடுவில், இறுதியில் என்று மூன்று கட்டமாகப் பார்த்தால், முதல் இரு கட்டங்களில் பெண்ணைச் சுமை என்று கருதிய போக்கு அதிகமாக இருந்திருக்கும். இறுதியில், அதாவது 1980களுக்குப் பிறகு இப்போக்கு குறைந்திருக்கும்தான். ஆனாலும் சமீபத்திய ஆய்வுகள் கூடப் பெண் ஒரு சுமை என்று கருதும் மனப் போக்கு இன்னமும் பெருவாரி நபர்களிடம், அதுவும் பெண் சிசுக் கொலை செய்யும் சாதிகள்/சமூகங்களில் நிலவுகிறது என்று தெரிவிக்கின்றன..

எனவே, பெண்ணே ஒரு கடன் என்ற பார்வையும், ஆண் வரவு என்ற பார்வையும் இச் சமூகங்களில் பரவலாக, குடும்பம் குடும்பமாகப் பின்பற்றப் படுகிறது. இப் பிரச்சினையைத் தீர்க்க அச் சமூகங்கள் கண்டு பிடிக்கும் ஓர் அவசர வழி, பெண் குழந்தையைக் கொல்வது. பிறந்த பின் ஒரு குழந்தையைக் கொல்வது ஒரு முறை என்றாலும் இது இன்னமும் கிராமங்களில்தான் அதிகம் உண்டு. நகர மக்கள், குறிப்பாகப் படித்தவர் இதையே சற்று நாசுக்காகச் செய்கிறார்கள். கடந்த இரு பத்து ஆண்டுகளில் கர்ப்பத்தில் சிசு இருக்கும் போதே அது ஆணா, பெண்ணா என்பதைக் கண்டறிய நவீன மருத்துவத்தில் வழி இருப்பதால் அதைப் பயன்படுத்திப் பெண் சிசுவைக் கண்டறிந்து அது கர்ப்பத்தில் இருக்கும் போதே கலைத்து விடுகிறார்கள். மூன்றாவது வழியும் உண்டு. இது மற்ற இரு வழிகளையும் விட சற்று மேலானது போலத் தெரியும், ஆனால் மற்ற இரண்டையும் விடக் குரூரமானது இது - பிறந்த பெண் குழந்தையைப் பராமரிப்பதில் மெத்தனமும், பாராமுகமும், அலட்சியமும் காட்டுவது இவ்வழி. அன்றாட உணவு, உடல் உபாதைகளுக்கு மருத்துவம் செய்தல், சரியான போஷாக்கு அளித்தல், அன்பும் அரவணைப்பும், காலத்துக்குத் தக்கபடி அறிவு வளர்ச்சிக்கு வகை செய்தல் என்ற கடமைகளைச் செய்யாததோடு அக் குழந்தையை எந் நேரமும் கரித்துக் கொட்டுதல், அதன் மீது வன்முறை செலுத்துதல், மேலும் அதன் சுய நம்பிக்கையைத் தொடர்ந்து குறைத்தல் என்று பலவழிகளில் பலவீனமாக்குவது இவ்வழி. இதனால் இக் குழந்தைகள் முதல் ஐந்தாண்டுகளுக்குள் நோய்வயப்பட்டு இறந்து போகின்றன. ஆக, பலவழிகளில் பெண் சிசுக்கள் ஆண் சிசுக்களை விட அதிகம் இறந்து போகின்றன.

இதன் விளைவு பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையை விட இந்தப் பகுதிகளில் மிகவும் குறைந்து காணப்படுகிறது.


பெண்களின் பற்றாக்குறையும் அதனால் ஏற்படும் விளைவுகளும்

பெண்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதால் ஏராளமான இளைஞர்கள் பெண் துணை இல்லாமலேயே வாழ வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். ஒரு கணக்கெடுப்பின்படி 100 பெண்களும் 120 ஆண்களும் இந்தப் பகுதியில் இருக்கிறார்கள். இந்த 120 பேரில் 20 ஆண்களுக்குப் பெண்துணை கிடைக்கும் வாய்ப்பே இல்லை. அப்படியே திருமணமாகும் காலம் வரும்போது பலருக்கும் 30க்கும் மேல் வயதாகி விடுகிறது.

இதனால் இங்கு ஏராளமான நபர்கள் தொடர்ந்து உடல் பசி தீர்த்துக் கொள்ள அலைவதால், விபச்சாரத் தொழில் பெருகி, தமிழ் நாடு மேலும் தென்னிந்தியாவில் பல பகுதிகளில் இருந்து பெண்கள் இங்கு கொணரப் படுகிறார்கள். அவர்களின் எண்ணிக்கையும், பயன்படுத்தலும் அதிகரிக்கையில் பாலுறவு நோய்களும் இப் பகுதியில் அதிகரிக்கிறது. சமீபத்து ஆண்டுகளில் உலகை ஆட்டிப் படைக்கும் எய்ட்ஸ் நோய் வியாபாரப் பாலுறவு வழியே எளிதாகவே பரவுகிறது. இதுவரை கட்டுப்பாடான வாழ்வு வாழ்ந்த சமூகங்களில், குடும்பங்களில் அதிகம் பரவ வாய்ப்பில்லாத பாலுறவு நோய்களும், எய்ட்ஸ் போன்ற கொலைகார நோய்களும் இப்போது விரைவாகவே இந்தப் பகுதியில் பரவி விட்டன.

தொலை தூரங்களிலிருந்து இங்கு வந்துள்ள எய்ட்ஸ் நோய் விபச்சாரிகளின் வழியே திருமணமாகாத ஆண்களுக்கு மட்டுமன்றி மற்ற உள்ளூரைச் சேர்ந்த இளைஞர்களுக்கும் பரவுகிறது. அண்டைக் கிராமங்களில் மண வாழ்வுக்கு வாய்ப்பு இல்லாத நிலையில் உள்ள இளைஞர்கள் நகரத்தில் விலைக்குக் கிட்டும் பாலுறவுக்காக நகரம் வந்து நோயைச் சம்பாதித்துக் கொண்டு, மருத்துவ வசதியோ, மருத்துவ அறிவோ அதிகம் இல்லாத கிராமங்களுக்கு அந் நோய்களை எடுத்துச் செல்கிறார்கள். பாலுறவு நோய்களில் பல நோய்கள் மருத்துவம் பார்க்காமல் இருந்தால் உடலுக்குள் தற்காலிகமாக மறைந்து கொண்டு பரவிக் கொண்டு இருக்கும். பின்னர் திடாரென்று கட்டுப்படுத்தவோ அல்லது சிகிச்சையால் தீர்க்கவோ முடியாத வகையில் குபீரெனப் பற்றி எரியும். உயிருக்கே ஆபத்தாக மாறும். ஆக நகரம் கிராமத்தைச் சீரழிப்பது என்ற வழக்கமான பதறலுக்கு இன்னொரு பரிமாணம் இப்போது கிட்டுகிறது. ஆனால் மூல காரணம் இந்த தடவை நகரம் அல்ல. சொத்து ஆசைக்கும், ஆணாதிக்கத்துக்கும் இடம் கொடுத்துப் பெண்களை மதிக்காத ஒரு பண்பாடு, தன் அழிவுக்குத் தானே வித்திடுகிறது.

பெண்கள் மிகவும் குறைவாக இருப்பதால், பெண்களைப் பெற்றவர்களுக்கு ஓரளவு முன்னை விட திருமணச் சந்தையில் கவுரவம் கூடுகிறது. வந்து பெண் கேட்பவர் பலர் இருப்பதால் பெண்ணைப் பெற்றவர்கள் மிகவும் தகுதி வாய்ந்த ஆட்களுக்கே திருமணம் செய்து கொடுக்கின்றனர் அல்லது தமக்கு விருப்பமான தகுதி உள்ள ஆண்கள் கிட்டும் வரை காத்திருக்கவும் அவர்களால் முடிகிறது. பெண்களுக்குக் கிராக்கி கூடுகிறது. விளைவு, ஓரளவு வசதி உள்ள இளைஞர் கூடக் காலம் தாழ்த்தித்தான் மணம் செய்ய முடிகிறது. ஏராளமான இளைஞர்கள் திருமணம் செய்யாமலேயே நடு வயதைத் தாண்டி விடுகிறார்கள். ஏழை இளைஞருக்கு மணமுடிக்கும் வாய்ப்பே இல்லாமலும் போகிறது.




ஆக... பெண் சிசுக்கொலை என்ற கொடுமை ஒன்றை நிகழ்த்துவதன் மூலம் பாரதூரமான பெரிய விளைவுகளை எதிர்நோக்குவதை கண் கூடாக பார்க்க முடிகின்றது அல்லவா?? விளைவுகளின் மூல காரணத்தை பலர் அறிந்து கொள்ளாமலேயே பாதிக்கப்படுகின்றார்கள். விபரீதத்தை அரங்கேற்றுபவர்கள் அறிந்தால் என்ன அறியாமல் விட்டால் என்ன தம் சுய இலாபத்திற்காக சிசுக்கொலை புரியும் கொலைஞர்களாகவே இருக்கின்றனர்.

எப்போது தீர்வு கிடைக்கும்...கொலையாகும் பெண் சிசுக்களுக்கு???


-அரசி-

தரவு மூலம் : http://www.thinnai.com






Friday 5 March 2010

அன்றும் இன்றும் ...!!!


அழகிய குருவிகளின் கீச் கீச் ஒலியுடன்,,
அசைந்தாடி வரும் ஆதவனின் வரவுக்காய்...
காத்திருக்கும் சேவல் கூட்டத்தின் கொக்கரக்கோ...வும்
இதமான இசையாய் மெல்ல
இதயத்தை வருட...


கலப்பையுடன் கிளம்பும் கார்த்திகேசனோடு...
கரும்புழுதி கிளப்பிடும் பசுக்களின் அணிவகுப்பும் 
இணைந்திட - கார்
இருளும் மெல்ல காணாமல் போகும்
பூமித்தாயவளை விட்டு...!

மணம் வீசும் விளாட்டு மாமரத்தின்
இளம்பூக்கள் சொரியும்...
இளவேனிற்காலமதில்....
பூக்களின் வாசனையின் மயக்கத்தில்,
புரண்டு படுக்கும் என்னை
பலாத்காரமாய் பள்ளி எழுப்பும்.. 
பிள்ளையார் கோயில் மணியோசை..!!

சோம்பல் முறித்து துயில் எழும் போது..
சோலைக்கதிரவனின் சின்னக்கதிர்
பட்டுத்தெறிக்கும் என் வதனத்தில்...!!

தென்னங்கீற்றில் தவழ்ந்து வந்த..
தென்றல் காவி வரும் நறுங் கடியால்..
விழி மூடி பயணிக்கும் என் கால்கள்
முல்லைப்பந்தலை நோக்கி...!!!
வெள்ளை வேளேரென்ற மணலில்...
சொரிந்த மலர்களின் அழகை....
சொல்ல வார்த்தை இல்லை...
இலைகளை மூடி மறைத்து மலர்ந்த முல்லைகள்...
இதழ் பிரித்து புன்னகைத்து கண் சிமிட்டும்..!!

ஈரத்துணி போர்த்த இள மங்கை போல
பனித்துளியில் நனைந்த பூஞ்செடிகள்..
என்னைக்கண்டு நாணித்தலை குனியும்...
எழிலில் அசந்து நிற்க...
சின்ன சின்ன அணில் குஞ்சுகளின்
சிறு குரல்கள் சுய நினைவிற்குள்
மெல்லத்திருப்பும் என்னை..

நடை பயிலும் அணில்களின் கதைக்கு
எதிர்க்கதை பேசும் புலுனிகளின் காலடிகள்
என் வீட்டு முற்றத்தை கோலமாய் அலங்கரிக்கும்...!!!


இன்று...
காஞ்சாங்கோரையும் காவிளாயுமாய்...
காடாகிப்போன என் வீட்டு முற்றம்...
கண்ணீர் வடிக்கின்றது – என்னை நோக்கி

முல்லையின் வாசனை காணாமல் போய்
முற்றத்தில் ஓடி விளையாடிய அணில்களும்
கண்ணுக்கெட்டாத தூரத்தில்....

தலைகளைத்தொலைத்து விட்டு நின்ற
தென்னைகளும் ஒப்பாரி வைக்கின்றன...
தம் நிலை எண்ணி....!!
தள்ளாடி நடந்த என் கால்களில்
தட்டுப்பட்டது கல் ஒன்று...
குனிந்து நோக்கினேன்..!!
குதூகலமாய் நாம் வாழ்ந்த இல்லத்தின்
அத்திவாரத்தின் ஒரு பகுதி....!!

கண்ணீர் பெருக்கெடுக்கவில்லை...!!
கவலை தொண்டையை அடைக்கவில்லை...!!
கல்லும் மண்ணும் கொண்ட கட்டிடத்தை எண்ணி..
கவலை கொள்வானேன்...???
மண்ணோடு மண்ணாகி விட்ட
எத்தனை எத்தனை எம்மின...
உறவுகள் கல்லிற்கு இணையாவாரோ...???


 ”அரசி நிலவன் ”





Wednesday 3 March 2010

அண்ணா... அகிலமெங்கும் தேடுகின்றேன் காணவில்லை...உன்னை..



தனித்து நான் சென்றதில்லை
தனி வழியே...
கரிசனையோடும்,,
கவனத்தோடும்,,
கை பிடித்து ஒன்றாய்...
வலம் வரும்...
பாசப் பறவைகள் எம்மை
பார்த்து மகிழாதோர் யாருமில்லை..!!

துவிச்சக்கர வண்டி தனில்
தெத்தி தெத்தி பயிற்சி பெற்று,,
வீராப்பாய் தங்கை என்னை உட்கார வைத்து
வீதி வழியே சவாரி செய்யும்
வீரச்சகோதரனே....!!!

வீரச்சகோதரன் என்றதாலோ
வீர சொர்க்கம் ஏகினானோ..??

எதிர்த்து பேசி,,
எதிரியை காறி உமிழ்ந்து - ஊர்
எல்லையிலே காவியமான
என்னுயிர் சோதரனே..!!

உன் தீரப்பேச்சாற்றல் கவர்ந்து
உன் சிரசினை கவர்ந்தானோ..?
இரக்கமற்ற கயவன்...!
இல்லாத ஆயுதத்தை திணித்து
கபடமாய் கொன்றொழித்தானோ..??

தனி வழியே நானின்றி..
தனிமையில் நீ ஏகியதாலோ...
பாசப்பிணைப்பை உடைத்து,,
பாவிகள் உன்னை அழித்தனரோ...??



அண்ணா...!!!
அகிலமெங்கும் தேடுகின்றேன்..!!
காணவில்லை...உன்னை...
காற்றோடு கரைந்து சென்றிட்ட..
உன் மூச்சுக்காற்றினை.. சுவாசத்திலும்
நுகர்ந்து கொள்ள முயற்சித்து
தோற்றுப்போகின்றேன்...!

நிழற்படங்கள் நினைவிலும் 
காணொளிகள் கண்ணீரிலும் கரைந்து 
காணாமல் போகின்ற காலம் அல்லவோ??
காணும் போது ஒரு துடிப்பு 
காட்சியில் ஒரு பதறல் வேதனை கருத்துக்களுடன்
காலாவதியாகி போகும் காலச்சக்கரம்...!!!

பரிதாபங்கள் சிந்தப்பட்டு 
வசைமாரிகள் தெளிக்கப்பட்டு
வரலாறு மாற்றப்பட்டு 
வம்சங்களின் மரபணுக்களும் 
வகையில்லாமல் ஒன்றாகிப்போன காலம்....!!!

கல்லறைகளும் விறாண்டப்பட்டு 
விசிறப்பட்டு வீதிகளில்...கார்த்திகையில் 
தீபங்களுக்கும் விளக்கமறியல்...!
கண்ணீரை பூஸா தடுத்து வைக்குமா??
  
கலைந்த உண்மைகளை 
கற்பனையில் தேடி  
கனவில் கண்டு பிடித்து 
கனன்ற இதயங்களை ஆற்றுப்படுத்தும் 
கலி காலமதில்....

கண் பார்க்கும் இடமெங்கும் - நான்
காணும் உன் அகவையுடையோர்
அண்ணன்களாய் காட்சி தர...
அழைக்கின்றேன் உரிமையோடு...
அண்ணா...அண்ணா...என
நெஞ்சமதில் உன் நினைவுகளைச்சுமந்து....

-அரசி-