Search This Blog

Monday 13 October 2014

கொள்கை....!!!

முற்றாகவே உயிர் ஊசலாடிய காலணிக்கு
முரண்பட்டு உயிரூட்டிக் கொண்டு இருந்தான்

முழங்கையுடன் விடுகை பெற்ற இடது கை
முழு வீச்சோடு செயற்படும் வலது கை
முண்டு கொடுத்த இடது கையின் துணையில்
முழு உயிர் பெற்றது குற்றுயிரான காலணி

சன்னம் பட்ட உடலை போல இவன்
காலடியில் நாலைந்து காலணிகள்
அநாதரவாய் கிடந்தன....!

காலடி என்று என்னத்தை சொல்ல
கால்கள் விடைபெற்று சென்று விட்டன
இடுப்பிற்கு கீழே உருவமற்ற கால்கள்
இழந்தவன் சுறு சுறுப்பாய் இழப்பை
ஈடு செய்தபடி இயங்கி கொண்டே இருந்தான்...

வீதியின் மருங்கில் ஒரு ஓரமாய்
வீற்றிருந்தவனுக்கு எதிரே அம்மா தாயே
இருவர் கைகளில் பேணிகள் சில்லறைகளில்
நிரம்பி வழிந்தது....

நன்கு கைகள் நான்கு கால்கள்
நலமோடு தான் இயங்கி கொண்டிருந்தன.

இல்லாத கால்களை காட்சிப்பொருளாக்கி
இரந்து வாங்கிட முடியும் சில்லறைகளை
இயங்க முடியாதவன் உழைப்பில் வீச்சாக
இயங்கி கொண்டு இருக்கின்றான்....!
         
உழைத்து வாழ வேண்டும் என்ற
உயர்ந்த கொள்கை கொண்டவன்
உயர்  கொள்கை ஒன்றிற்காக அதன்
இறுதி அத்தியாயத்தில் அங்கங்களை
இழந்து போன தியாக வீரன்...!

இறுதி வரை களமாடி இரத்தம் சிந்தி
இன்னல்களை வாங்கி நின்றவனுக்கு
இழந்த அங்கங்கள் விடுதலை பெற்று கொடுத்தது
ஒளி இழந்த வாழ்வின் விடியலுக்காக
ஒற்றை கரம் தாங்கி உழைக்கின்றான்

வீரப்பயணத்தில் கரம் பற்றிய கருவிகள்
வீழ்ந்து போன துக்கம் நெஞ்சின் ஓரமாய் உறங்க
செருப்பாணியும் நூலும் தொட்டு சலனமற்று
செதுக்குகின்றான் வாழ்க்கை என்னும் பயணத்தை
செம்மையான உழைப்பு என்னும் கொள்கை கொண்டு .

கொள்கைகள் பேசி தேசியம் பேசி பிதற்றி
கொள்ளையடிக்கும் கூட்டத்தினரை வென்று
கொள்கை கொண்டு வாழ்ந்து காட்டும்
கொடையாளர்கள் இன்னும் எம்மில் உண்டு





Wednesday 1 October 2014

இரவு.....!

நினைவுகள் உலாப்போகும்
நிலாவின் ஒளிர்வில் இன்னும்
நிலைத்து நிற்கும் இரவுகள்....!

கடந்தவை நடந்தவை
நின்றவை நிற்பவை
சுழன்றடித்து சூறாவளியாய்
சுமையாகும் இரவுகள்....!

கனவும் இரவும் பிரிக்க முடியாதவை
கண்டவர்கள் உரைக்க கேட்டேன்...!
கனவோ நனவோ பொக்கிசமாய்
கண்ணுக்கு தெரியாத நட்பு இவள்...!

கண்ணுறக்கம் இல்லாத இரவுகளில்
கனவுகள் வருகை தருவதில்லை...!
கண்ணீரோடு கனத்த இதயம்
கரைகின்றது.....!

உடைந்த நெஞ்சத்தை தாலாட்டி
உறவான உன்னத நட்பு இவள்...!

இவளோடு  தினம் நான்  பேசி ஆறுதலடைவேன்
இதயத்தை மெல்ல அரவணைக்கின்ற
இனியவள் இவள்..!

இந்த உலகமே அயர்ந்தாலும்
இணைப்பாய் நாம் இருவரும்
இனிப்பாய் பேசிக்கொண்டே இருப்போம்....!
இந்த உலகம் விழிக்கும் போது
இதயம் கனக்க கண்ணீரோடு பிரிந்து செல்வாள்..!
இனிமையான எந்தன் தோழி....!

இரவுக்கு நான் தோழி  எனக்கு
இரவு தோழி...!