Search This Blog

Friday 27 June 2014

விதைத்து விட்டவள் வினையறுக்கட்டும்...!!


அகவைகள் ஐந்தில்
அடி எடுத்து வைத்த
அழகிய தேவதை இவள்..!!!

வடிவுகள் வழித்தெடுக்கப்பட்டு
வனத்திலே கசக்கி எறியப்பட்டு
உருமாறிக்கிடக்கின்றாள்..!!

குழந்தை என அறிந்திடாமல்
குதறிக்கிழித்த வெறி நாயின்
பற்களின் தடமங்கே - இளம் பிஞ்சின்
பட்டு வண்ணக்கன்னங்களில்
தொட்டு ருசி பார்த்த வடுக்களாய்
புதைந்து கிடக்கின்றது...!!

பெண்மை உணர்வே அறியாத பிஞ்சானது
பெண்மை குறி  கொண்டதால் பஞ்சாகப்
பிய்த்தெறியப்பட்டதோ...?

துளை ஒன்று வேண்டும் என்றால்
மண்ணுக்குள் துளையிடுங்கள்
மரத்தினில் துளையிடுங்கள்
மரணிக்கும் வரை உங்களைச்
சொருகிக்கொள்ளுங்கள்...!!

உணர்ச்சிகள் பிறக்காத சிசுவில்
உணர முடிகின்ற காமத்தினைச்
சடப்பொருளிலும் உணரமுடியும்..!!

ஆண்மைத்தன்மையினை அற்பமாக
பெண்மை யில் வக்கிரம் பாய்ச்சி
மென்மை யினை வன்மை கொண்டு
நோக்கி மலர எத்தனிக்கும் மொட்டைத்
தாக்கி அழித்து கசக்கி போடும் கோழைகளே..!

உக்கிப்போன உங்கள் வீரம் இது தானோ??
மக்கிப்போகும் மண்ணில் உங்கள் குறிகள்
தொக்கி நின்று அரசாளுமோ??
சிக்கித்தவிக்கும் பெண்மையினை ரசித்தவனே..!
விக்கி நிற்கும் பாலகியைச்சிதைப்பதிலும்
நக்கிப்பிழைக்கும் பிழைப்பு மேல்..!

தொட்டு தடவிப்பார்க்க பெண்மை வேண்டின் - உனை
நட்டு வைத்த தாய்மையிடம் தடவிக்கொள்
விஷச்செடி ஒன்றின் வித்தினை மண்ணில்
விதைத்து விட்டவள் வினையறுக்கட்டும்...!!


அரசி நிலவன்


நண்பர்கள் இணையத்தளத்தில் சித்திரை மாத பதிவில் அதிக புள்ளி(576) பெற்று முதலிடத்தில் இருந்திருந்தாலும் ஏற்கனவே முக நூலில் பதிவிடப்பட்ட காரணத்தால் அந்தப்பரிசை இழந்து சிறப்புப்பதிவாக தரமுயர்த்தப்பட்ட கவிதை இது என்பது குறிப்பிடத்தக்கது.