Search This Blog

Showing posts with label நினைவுகள். Show all posts
Showing posts with label நினைவுகள். Show all posts

Tuesday 5 November 2013

இனிய பொழுதுகள்...!!!

விழிகள் நோக்கிய அந்த
விசித்திரமான பொழுது
விட்டு நீங்கிடாது நெஞ்சமதை....

ஒரே நேர்கோட்டில்
ஒற்றுமையாய் ஒன்றோடொன்று
ஒருமித்து பயணித்த பார்வைகள்...!!!
ஒலியற்று ஒளி வீசிய பொழுதுகள்...!!!
ஒன்றாகிப்போன இதயம் இருவருக்காய்
ஒரே தடவையில் துடித்த கணங்கள்

ஒளிந்து ஒளிந்து ஓரக்கண்ணால்
ஒற்றப்பார்வையில்
கடத்தி வந்த பொழுதுகள்....
கண்ணில் வைத்துக்கொள்ள - தினம்
கதி கலங்கி துடித்த பொழுதுகளும்
கரும்பாய் தித்திக்குதே இன்றும்....


கரம் பிடித்து கதை பேசித்திரிந்த
கட்டைப்பிராய் வயல்வெளியின்
கண்ணை மயக்கும் மாலைப்பொழுது
கவர்ந்து கொள்கின்றது இன்றும் இதயத்தினை...

அள்ளிப்போன மனதை
கிள்ளிப்போவான் தன்
கண் மூடிச்சிரிக்கும் தருணங்களில்....
விண் நோக்கி துள்ளி
பண் பாடும் இதயம்......!
மண் நீங்கிப்போனாலும்....
புதைந்து போய்ந்திடா
இனிமையான பொழுதுகள் இவை...
 

மனதை வருடிச்செல்லும்
இதமான அவன் நினைவுகளை
மென்று மீட்டினால்
துயரம் மிகுந்த பொழுதுகளும்
கழிகின்றன இனிமையாக...


அரசி நிலவன்



லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "இனிமைப்பொழுதுகள் " என்ற தலைப்பில் இன்று வழங்கிய கவிதை இது.


கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 (இலங்கை இந்திய நேரம் பிற்பகல் 7.30 மணிக்கு )மணிக்கும் மறு ஒலிபரப்பு பிற்பகல் 9.30 மணிக்கும்...... http://gtbc.fm/