Search This Blog

Showing posts with label வதனம். Show all posts
Showing posts with label வதனம். Show all posts

Monday 21 October 2013

தங்க முகம்...!!!


அலைகடலிலே துரும்பாய்
அலைக்கழிக்கப்பட்டாலும்
அசராத அழகு முகத்தில்
அன்பு ஊற்றெடுத்துச்சொரியும்...!
அழகு புன்னகை அசைந்தாடும்..!

துரோகத்தனங்களை
துச்சமாய் கடந்து
துன்பங்களை துரத்தியடித்து
துயர்களைத்துடைத்து
துவண்டு போகாத அகத்தை
துடிப்பாய் காட்டும்
துடுக்குத்தனம் மிக்க உந்தன்
துணிச்சல் முகம்...!

சின்ன அங்கம் மெலிந்தாலும்
என்ன  பங்கம் நேர்ந்தாலும்
மின்னும் தங்கமாய் முகம்
இன்னும் பள பளக்கின்றதே..!!!

பொங்கம் மிகு உந்தன்
சங்கத்தமிழ் பேசும் முகத்தினால்
துங்கம் அடைகின்றாய்..- எனை
புங்கம் கொண்ட
தங்க முகத்தோனே...!

கள்ளமில்லா குழந்தை
உள்ளங்கொண்ட உந்தன்
வசீகரிக்கும் கண்களின்
வருடும் அன்பொளியும்..,
வஞ்சமில்லா சிரிப்பும்..,
வதனமதில் ஒருங்கு சேரும்..!
மகிழ்வின் உறைவிடம்..!

கருணையின் பிறப்பிடம்..!
உண்மையின் தரிசனம்..!
உந்தன் வண்ண வதனத்தின்
உயர்நிலைக்கு தங்க முகம்
உவமானம் தன்னும் சற்று
ஒரு படி தாழ்வில் தான்...



அரசி நிலவன்


அரும்பதங்கள்
****************

பொங்கம் : பொலிவு
துங்கம்     : உயர்ச்சி
புங்கம்      : வெற்றி


லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "தங்க முகம்" என்ற தலைப்பில் இன்று வழங்கிய கவிதை இது.


கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 மணிக்கும் மறு ஒலிபரப்பு பிற்பகல் 9.30 மணிக்கும்...... http://gtbc.fm/