Search This Blog

Monday 11 November 2013

விடியட்டும்....!!!


அகலவனின் ஓயாத உலவலினால்
அகிலத்தின் இருள் விலகி மறையும்..!
அரை நூற்றாண்டாய் எங்கள் தேசம்
அகலவனின் பார்வை பட்டும் பகலிலும்
இருள் நிறைந்து இரத்தம் தோய்ந்து...
இன்று வரைக்கும்....

உதிரம் தோய்ந்து
உலர்ந்து போய் விட்ட மண்....!
பெருக்கெடுக்கும் விழிநீர்களினால்
சேறாகிப்போகின்றது...!
கோலமிழந்த கோரிக்கைகள்...!
வலுவிழந்து போன பேச்சுக்கள்...!
மூச்சிழந்த ஆயுதங்கள்...!
மூர்ச்சையாகி போன உணர்வுகள்...!

தட்டி எழுப்புகின்றாள் இறுதிக்குரலாலே...!!
தரணி எங்கும் கொந்தளித்து எழட்டும்....!
சேறு பூசி உடல் மறைத்து மாண்டவளின் கோலங்கண்டு
வீறு கொண்டெழுந்து எங்கள் தேசம் விடியட்டும்...!!
மாறு வேஷம் பூண்டு வந்தழித்து போன வல்லரசுகளால்
தாறு மாறாய் கிழிந்து போன எங்கள் தேசம் விடியட்டும்..!


ஒடுக்கப்பட்டு நெரிக்கப்பட்டு வெட்டப்பட்டு எரிக்கப்பட்டு
கற்பழிக்கப்பட்டு புதைக்கப்பட்டு சாகடிக்கப்பட்ட உண்மைகள்
தோண்டி எடுக்கப்பட்டு இனியாவது விடியட்டும்..!!
இரத்த வெறி பிடித்த இனவாதிகள் மடியட்டும்...!!
உரத்து நெறி உரைப்போம் உலகின் செவிகளுக்கு..!!
மரத்து மறந்து விடாதீர்கள் தோழமைகளே....!!
உயிர் கறந்து உதிரம் குடித்த வெறி மிருகங்களை
வேட்டையாடி தொங்க விடுவோம் வெறும் தோலாக - சட்டத்தின்
சாட்டை கொண்டு....

இனியாவது விடியட்டும் - இசையவளின்
இறுதிக்குரல் எம்மினத்தின்
இறுதிக்குரலாகட்டும்...!!
இல்லாமல் போன தமிழ்
இன உணர்வுகள் பொங்கட்டும்..!!
இனம் ஒன்றுபட்டு தெளியட்டும் - தமிழ்
இனத்தில் ஒற்றுமை ஓங்கட்டும்...!!
இனவாதிகள் மடியட்டும் - எங்கள் தேசம்
இனியாவது விடியட்டும்.....!!!


அரசி நிலவன்





லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "விடியட்டும்" என்ற தலைப்பில் இன்று வழங்கிய கவிதை இது.




கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 (இலங்கை இந்திய நேரம் பிற்பகல் 7.30 மணிக்கு )மணிக்கும் மறு ஒலிபரப்பு பிற்பகல் 9.30 மணிக்கும்...... http://gtbc.fm/




No comments:

Post a Comment