Search This Blog

Showing posts with label கார்த்திகை. Show all posts
Showing posts with label கார்த்திகை. Show all posts

Wednesday 20 November 2013

நிலை பெற்று சென்ற மாணிக்கங்கள்..!!!


நினைவு கூறும் நிலையற்ற மனிதர்களாய்
நினைவாலயங்கள் தேடி அலைகின்றோம்...!!!
நிர்க்கதியாய் போனது நீங்கள் அல்ல....
நிலை பெற்று சென்ற மாணிக்கங்கள் - உங்கள்
நினைவில் மட்டும் தான் நாம்.....!!!

நீவிர் விட்டுச்சென்ற சுவடுகள்
நிலை தடுமாறும் நிலையில்.....
நின்று வேடிக்கை பார்த்து கார்த்திகையில்
நினைவு கூறுகின்றோம்.....!!!
நிலையற்ற மனிதர்களாய்....
நிலமற்று நிர்க்கதியாகி நின்று....


நிலம் கொடுத்தீர் உயிர் தந்து..
நிலமிழந்தோம் உம்
நினைவாலயங்களையும் தொலைத்தோம்..!!
நிற்கின்றோம் ஆரம்ப அத்தியாயங்களில்....!!!
நினைவு கூறுகின்றோம்....!!!
நிலையில்லா தேசத்திலிருந்து....
நிலம் நீங்கி உங்கள்
நினைவுகளை சுமந்து....

நிலம் மீட்க
நிலை பெற்று சென்ற சிகரங்களே.....!!!
நிம்மதியற்று நீங்கள்
நின்று உறங்கும் காட்சி
நிழலாடுகின்றது....!!!
நினைவு கூறுகின்றோம்....!!!
நிலை கெட்ட எம்
நிலை எண்ணித் தலை குனிந்து
நினைவு கூறுகின்றோம்...!!


அரசி நிலவன்

Friday 8 November 2013

கார்த்திகையின் கண்ணீர்...!!!


கார்காலத்தில் கல்லறை தேடி வரும்
கண்மணிகளே உங்களை காணாது....

காத்திருந்து மலர் சொரிகின்ற
கார்திகைப்பூக்கள் உதிர்கின்றன....
பறிக்கப்படாமலேயே...


கானக்குயில்கள் திசையற்று
கானம் இசைத்து தேடுகின்றன....!

கார்காலத்து கார்மேகமும் - உங்களை
காணாது பதறுகின்றன விண்ணில்...!

கார்த்திகை மாதமும் கலங்கி
கண்ணீர் வடிக்கின்றது....!


உறைவிடங்கள் உலுப்பப்பட்டு
உடைக்கப்பட்ட தங்க விக்கிரகங்களை
மென்று தின்று ஏப்பம் விட்டவர்களின்
மத்தியில் நின்று...
உங்கள் உதிரங்கள் தோய்ந்த
மண்ணின் வாசம் நுகர்கின்றோம்....!!!

ஆண்டவனின் ஆலயமணியும்
ஆராயப்படுகின்றது கார்த்திகையில்....!!!

சுடர்தீபங்களுக்கும்  விளக்க மறியல் கார்த்திகையில்...!!
சுற்று வட்டாரம் எங்கும் சீருடைகளின் ஆதிக்கம்..!!
சுடர் ஒளிகள் உங்களை காண அந்தரமாய்
சுற்றி சுற்றி ஏங்கித்தவித்து
சுழலும் எங்களை காண வாரிரோ..??



அரசி நிலவன்