Search This Blog

Showing posts with label உறைவிடம். Show all posts
Showing posts with label உறைவிடம். Show all posts

Monday 25 November 2013

உணர்வு....!!!




உடைக்கப்பட்ட உறைவிடங்கள்,
உலுப்பப்பட்ட உறவுகள் தாண்டி 
உயிர் பெற்று விருட்சமாகிய விதைகளாய் 
உணர்வுகள் எங்கும் வானாளாவி பரந்தபடி... 

பலாத்காரத்தினால் யாரும் இங்கே 
படைக்கவில்லை உணர்வுகளை எழுத்துக்களாக....
மிரட்டி யாரும் அஞ்சலிக்கவில்லை...! 
மின்காந்த அலைகளாய் ஊடுருவிப்பாயும் 
உணர்வலைகளால் உதிரம் கொதித்து 
உடல் சிலிர்க்கும்.. கண்ணீர் பெருக்கெடுக்கும்..! 

பல்கலைக்கழகம் விடுதலையில் மூடினால்  
உணர்வுகளும் விடுதலை பெற்றிடுமா...?
சுவரொட்டிகள் ஓட்டினால் தான் 
சுடராகி போனவர்களை நினைக்க முடியுமா??

முகப்புத்தகம் எங்கும் மாவீரர்களின் 
முகங்கள் அலங்கரிக்கும்..!
மூலை முடுக்கெல்லாம் அவர்கள் நாமம் 
மூச்சு விட்டு உயிர் வாழ்கின்றது....!!! 


துயிலும் இல்லங்கள் ஆயிரக்கணக்கில்..... 
துளிர் விடுகின்றன ஒவ்வொரு உள்ளங்களிலும்..! 
புல்டோசர்கள் ஏறி வருபவர்கள் கல்லறைகளை 
புரட்டி போட முடியாமல் விழிக்கின்றார்கள்....!!!

இதயங்கள் மெளனித்து அஞ்சலிப்பதையும் 
இணையற்ற எம் தியாக செம்மல்களின் அசைவினை 
உள்ளத்தால் உணர்ந்து பெருகிடும் கண்ணீர் பொழிந்து 
உணர்வாலே உருகி உருகி செலுத்தும் அஞ்சலிகளை 
உழுது மண்ணோடு கலந்திடத்தான் முடியுமா...??

உழுது போய் எஞ்சியது கல் மட்டுமே....
உள்ளத்தில் நிலைத்து நிற்கும் உயிர்களை 
உழுது மண்ணோடு கலந்திடத்தான் முடியுமா...??


உணர்வுகளால் சிகரமாய்.. 
உருவங்களில் தெய்வங்களாய்... 
உயர்ந்து நிற்கும் உன்னத மனிதர்கள் 
உருக்குலைந்து போவதில்லை.....!
உணர்வாலே உதிரம் சிந்தி 
உயிர் ஈந்த  உத்தமர்களே.....!
உம்மை நெருங்கிட யாரால் முடியும்...???

உணர்வின் தீயில் எரிந்தபடி.....
உமது சுவடுகளின் திசை தேடி...
உழன்றபடி உணர்வுத்தமிழ் நெஞ்சங்கள்...!


அரசி நிலவன் 




லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "உணர்வு " என்ற தலைப்பில் இன்று வழங்கிய கவிதை இது.

கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 (இலங்கை இந்திய நேரம் பிற்பகல் 7.30 மணிக்கு )மணிக்கும் மறு ஒலிபரப்பு பிற்பகல் 9.30 மணிக்கும்...... http://gtbc.fm/