Search This Blog

Thursday 26 December 2013

தர்மம்..!!!


தலை காக்கும் தர்மம் 
விலை போகும் காலமடா...!
நிலை கெட்டு வாழும் மனிதம் அதை 
உலை வைத்து சோறாக்கி தின்கின்றது..!!!

அலை அடிக்காமல் என்ன செய்யும் ?
அனல் காற்று வீசாமல் பேசாமல் போகுமோ?
எரிமலையும் குமுறுகின்றது..! 
கடல் மட்டம் உயர்கின்றது...!


நிலை குலைந்து இயற்கையும் சீறுமன்றோ??
ஆழியின் வயிற்றில் அணு ஆராய்ச்சி புரிகின்றாய்..! 
வயிற்றைக்குமட்டி பேரலையாய் வாந்தி எடுக்கும் 
அதனைத்திட்டிச்சாபமும் இடுகின்றாய்...? 
என்ன தர்மமோ??? என்ன நீதியோ??

வதைத்து உதைத்து எறிவாய்..! 
உயிரோடு தீயிட்டு எரிப்பாய்..!
கருவிலே கழுத்தை நெரித்து 
கருவறுப்பாய்..!
நெருப்பாய் வாழ்ந்த மங்கைகளின் 
கற்பினை அழிப்பாய்..!
உறுப்பை வெட்டி சிரிப்பாய் 
சிரிப்பாய்...!
புகைப்படம் எடுத்து ரசிப்பாய்..!
எழுந்து நிமிர்ந்து எதிர்த்து கேட்டால் பெயர்  
கொடுப்பாய் "பயங்கரவாதி " என..
என்ன தர்மமோ??

எறிந்து எரித்து கருவறுத்து அழித்து 
சிரித்து ரசித்து எக்காளமிட்ட போது 
எங்கிருந்தனவோ உலக நாடுகள்...?

வரிந்து கட்டிக்கொண்டு வந்து 
வரிசை வரிசையாய் நின்றன..!

தாக்குப்பிடிக்க முடியாமல் ஓடி ஒளிந்து 
விஷம் கக்கும் வாயுக்களை ஏவி விட்டு 
கொத்து கொத்தாய் கொன்று குவித்து 
கொடி நாட்டி கோஷமிட்ட நாடுகள்...!

இன்று...
ஆதாரம் , காணொளி எச்சரிக்கை 
காலக்கெடு பினாத்துகின்றன..!
என்ன தர்மமோ...?  என்ன நீதியோ ..? 
கண் கெட்ட பிறகு சூரிய வணக்கமா?

கூட்டுப் படுகொலையாளிகள்  
கூட்டம் போட்டு கூடிச்சதி புரிந்து 
ஆட்டம் போட்டு கொன்று குவித்த பின் 
வாட்டம் கொள்வதைப்போன்று 
பாசாங்கு புரிந்து கால அவகாசம் 
கொடுத்து நடித்து செல்வது என்ன 
தர்மமோ..??

வருகையும் அறிக்கையும் நடாத்தி 
என்ன கணக்கெடுப்பு...??

பகிர்ந்தளிக்கத்தான் போகின்றார்களா??
இனவாதம் அனுமதிக்குமா??
வாதங்களாய் மாறி மாறித்தொடரத்தான்
போகின்றது...!
சுழற்சி முறையாக தந்தை செல்வா காலம் 
மீண்டும் நிகழ் காலமாய் நிகழ்கின்றது...!

வாதங்களும் ஆணைகளும் பேரினவாதத்தினை 
அசைக்க முடியாமல் தோற்றுத்தான் போகும்...!!!
உணருங்கள் மறுபடியும் தொலைத்ததை எண்ணி..

தர்மம் ஒரு நாள் வெல்லும் என்பது வெறும் 
பேச்சோடு மட்டுமே உயிர் வாழ்கின்றது....
நம்பிக்கை தான் நித்தமும் மரணிக்கின்றது....!

எழுத்திலும் எழுத சுதந்திரம் இல்லை...
எழுது கோல்களும் சிறை பிடிக்கப்படுகின்றன..!
எழுத்தில் தன்னும் தட்டி கேட்க அனுமதியாதோர் 
எழுந்து நின்று எதிர்த்தால் எரித்தல்லோ போவர்?
என்ன தர்மமோ...?? என்ன நீதியோ..??

ஆடி அடங்கிய பின்னும் தர்மம் வாழுமா??
ஆடி அடங்க காலம் போதாதே..?
வம்சங்கள் தொடரும் அரச ஆட்சியை ஒத்து 
வரிசையாய் குடும்ப ஆட்சி என்று தான் முடியுமோ??
என்ன தர்மமோ என்ன நீதியோ..??
தட்டுப்பாடாய் போன தர்மம் உலகில் 
கொட்டுப்பட்டு கிடக்கின்றது அதர்மமாய்...!!

அரசி நிலவன்


1 comment:

  1. நன்றாக அமைத்துள்ளீர்கள்

    ReplyDelete