Search This Blog

Wednesday 25 December 2013

சத்தியம்...!!!

சத்தியம் சவப்பெட்டியில்
சலனமின்றி உறங்குகின்றது...!!

சர்வமும் அடங்கி அடிமையாய் போனது..!
சடுதியாய் உதை பட்டு வதை பட்டு
சத்தியம் பொய் என்னும் மணலால்
அள்ளித் தூவப்பட்டு, மூடிப்  புதைக்கப்பட்டு
உயிருடன் மறைக்கப்பட்டு காலம் கடந்தாயிற்று...!

பேழை உடைத்து மணல் விலக்கி,
கழை போல் உயர்ந்து செந்தணலாய்
பொய்யினை சுட்டு எரித்திடாதோ...?
வாழையடி வாழையாய் வந்த நம்பிக்கை
விட்டு விட்டுப் போகின்றது - செவி
தொட்டுச்செல்லும் நாளொரு அநீதிகளால்...
நட்டு வைத்திருக்கும் நம்பிக்கைத்தருவும்
பட்டுப்போகுமோ அன்றி சத்தியத்தோடு
கை கோர்த்து உறங்கிடுமோ உரமாய்...!

கட்டுப்பட்டு வாழும் மனிதர்களைக்காணோம்..!
தட்டுத்தடுமாறி சத்தியம் வாழ்ந்தாலும்
வெட்டுப்பட்டு குழிக்குள் வலுக்கட்டாயமாய்
தள்ளி விழுத்தி அடக்கம் செய்யப்படும் கொடுமை..
துள்ளி எழுந்து முடக்கிட வலுவற்று விட்டதோ?
கொள்ளி வைக்கும் கூட்டம் அதிகமாய் போனால்
சத்தியத்தின் வலு வெறும் கொலு மட்டுமே...!

மனிதம் என்னடா பெரிய மனிதம்
அரை நூறில் அவசரமாய் விரையும்
நரை விழும் வரை யறை  கொண்டோர்
கரை இல்லா சத்தியத்திற்கு புரை யாவரோ??
தரையில் நிரை நிரை யாய் அதர்மம் வளர்த்து
திரை இட்டு வாழும் துரைமாரால் சத்தியத்தினை
நிரந்தரமாய் புதைக்க முடியுமோ??

சயனிக்கும் சத்தியம் ஒரு நாள் விழிக்கும்...!
சரணாகதி அடையும் அநீதிகளால்
சர்வமும் மீட்சி அடையும்...!
சந்து பொந்துகள் எங்கும் சத்தியம்
சரளமாய் அரசாளும்...!!!

சவப்பெட்டியில் உறங்கும் சத்தியமே....!
சத்தியமாய் நீ சாகவில்லை...
சனனிப்பாய் மெருகோடு...!!!


அரசி நிலவன்





No comments:

Post a Comment