Search This Blog

Sunday 22 December 2013

யான் எங்கிருக்கின்றேன்...??


உறைவிடமாகிப்போன சிறையிடத்தில்
உற்றவள் உயிரை சுமந்து நற்றவம் புரிகின்றேன்...!
ஆலம் விழுதுகள் போன்று கடக்கின்ற
நொடிப்பொழுதுகள் நீண்டு கொண்டேயிருக்கின்றன....!

வதனங்கள் வடிவிழந்ததாய் காட்சி- நீர்
வற்றிப்போன தொண்டைக்குழிக்குள் சிக்கி
வார்த்தைகள் தடுத்து வைக்கப்படுகின்றன - நா
வறண்டு போய் கூச்சல் போடுகின்றேன்...
வந்து வந்து போகின்றது காற்று மட்டுமே...

கனவுகளில் கூட
கண்மணிகளை கண்பார்த்திடலாம்
கரம் தொட்டு அணைக்கலாம் என்றால்
கண்ணயர முடியவில்லை...!!
கனவாகி போகின்றன நினைப்புக்களும்...!

மனம் இங்கு தினம் தினம்
மடிந்து கொண்டிருப்பதனை விட
மரணத்தை தொட்டு விளையாடிடலாம்...!
மரணம் தன்னும் என்னை அணைக்க
மறுக்கின்றதே....!!!

மண்ணுலகம் நீங்கி அந்தரிக்கின்றேன்
மரணிக்காமலேயே...
மடி சாய்ந்து உறங்க தேடும் என்னவளின் முகம்
மறந்து போகின்றது  அடிக்கடி...
யார் யாரோ வருகின்றார்கள்...
யான் எங்கிருக்கின்றேன்...?
நிலை தெரிகின்றது ஆனாலும்
நிலை மாறிக்கொண்டே இருக்கின்றது..
நினைத்து பார்க்க நினைவுகள்
நினைவின்றி போகின்றதே...!

தாகம் எடுக்கவில்லை
பசி வாட்டவில்லை
பட்டினியாய் கிடக்கின்றேனா?
பல காலம் ஆயிற்றோ...?
நினைவுகள் இருக்கின்றன...ஆனால்
நினைத்து பார்க்க நினைவுகள்
நினைவின்றி போகின்றதே...?
யார் யாரோ வருகின்றார்கள்...
யான் எங்கிருக்கின்றேன்...??

அரசி நிலவன் 

1 comment: