Search This Blog

Wednesday 25 December 2013

பார்வை..!!!

பச்சைப் பசேல் என்கின்றார்கள்..!
பளிங்கு போல என்கின்றார்கள்..!
பள பளப்பு என்கின்றார்கள்..!

பஞ்ச வர்ணக்கிளி,  பொன் மயில்
பஞ்சு முயல் , பறக்கும் பட்டாம் பூச்சி
துள்ளும் மான்கள் , துரத்தும் சிங்கம்
வண்ண வானவில், பால் நிலா
கண் சிமிட்டும் விண் மீன்கள்
சுள்ளென சுடும் சூரியன் , மஞ்சள் வெயில்
தங்க கடற்கரை ,மலை அருவி....
இன்னும் இன்னும் எண்ணிலடங்கா
அகிலத்தாயவளின் அழகுக்காட்சிகளை
செவியுணர்ந்து கவி கேட்கின்றேன்..!
விழியுணர்ந்து ரசிக்க விடாது இறைவன்
தவிக்க விட்டு ரசிக்கின்றானே....!

விம்மி அழுத தருணங்கள் பல....
இளமைக்காலத்தில் இழந்து விட்டு
இருட்டில் வசந்தம் தேடிய நினைவுகள்...!

காலம் உருட்டிய வேகத்தில்
கோலம் கொண்ட வாழ்வில்
ஞாலம் தன்னில் அரங்கேறும்
அவலங்களை, அநியாயங்களை
அழிவுகளை ,யுத்தங்களை
கண்ணுற்று கண்ணீர் வடிப்பதிலும்,,

பாதகர்களையும் பாவிகளையும்
பாசமற்ற உறவுகளையும் ஆவி
உருக்குலைக்கும் நயவஞ்சகர்களையும்
உடன் இருந்தும் முகம் நோக்காது
செல்லும் வாய்ப்பாய் கருவில்
செதுக்கி வைத்தான் என்னை இறைவன்..!
அழுது வடிந்த பொழுதுகள் ஏளனமாய்
அராஜகம் நிறைந்து விட்ட
அகிலத்தினை பார்த்து அழுவதை காட்டிலும்
அகம் திறந்து கண் பார்வை அற்று வாழலாம்..!
 
பார்வை இருந்தும் குருடர்களாய் வாழும்
பாவியர்களை விடவும் பார்வை அற்று
பாரில் இருளில் வாழலாம்...!!!
பார்த்து சிரித்தால் தான் சிரிப்பா??
பாசத்துடன் சிரித்தால் அதல்லவோ அழகு...!!

பார்வை எடுத்து என்னை உயர வைத்தவனை
காலம் கடந்து புரிந்து கொண்டேன்....!
கோலம் கொண்ட வாழ்வின் புரிதல்களால்...

இறைவனே நன்றி உன் கருணைக்கு...
இருள் கொடுத்து ஒளி தந்தவனுக்கு நன்றிகள்...!


அரசி நிலவன்

No comments:

Post a Comment