Search This Blog

Friday 27 December 2013

மன்னிப்பு...!!!

இரவுகளின் மடியில்
இறுதி ஊர்வலம்...!!

கண்ணீரில் முகம் கழுவிப்போகும்
கடைசி அத்தியாயம்...!!!

கால்கள் பின்னி
முடங்கியது நடையோடு
வாழ்வுமே...!!!

வலிகள் வலிக்கவில்லை...
வலித்து வடுவாகிப்போகின்றன
வசை மொழிகள்...!!!

சோற்றிற்கு கை ஏந்தி
சோரம் போய் விட
சொம்பேறியல்ல...

பிசைகின்ற வயிறு
பிடித்துப்போகின்றது...
பிணியாகிப்போகும் உள்ளம்
பிய்ந்து போய் கிடக்கின்றது...!

மரத்துப் போன பாதங்கள்
முள்ளும் கல்லும் கொண்டு
உரமாய் கிடக்கின்றன - இறுதிப்
பயணத்தினை எதிர் பார்த்து

அந்த நாலு பேரை கை ஏந்தாது
அந்தம் வரை பயணிக்க முடியாதோ??
அந்தோ தெரிகின்றது மயானம்...!

நான் என்ன விதி விலக்கா??
பிணம் எழுந்து நடக்குமோ??
நடந்து சென்று படுத்து கொள்ளி
நட்டு வைக்குமோ தனக்கே....?
என்ன பைத்தியக்காரத்தனம்...?

எழும்பும் தோலுமாய் உடல்
எறும்பு மொய்த்திடாமல்
எழுந்து உட்காருகின்றது...!

அசைந்து போகும் நிலை
அடுத்த நிமிடங்களில்
நிறுத்தப்படலாம்....!!

காலில் விழுந்து மண்டியிட்டு
காத்திருந்து யாசித்து உயிர் நீடித்து
ஊசல் ஆடுவதிலும் பசித்திருந்து
வெறுத்திருந்து நீங்கிடலாம்....!!!

எனக்கு நானே ஒப்பாரி வைக்கின்றேன்...!
எந்த நேரத்திலும் விடைபெறுவேன் அல்லவோ?

ஒரே ஒரு வருத்தம் மட்டுமே...
பாவம்...!
என்னை கல்லிலும் முள்ளிலும் மழையிலும்
வெயிலும் பார்த்து பார்த்து தாங்கிய உடல்....!

தீயில் துயில் கொள்ள போகின்றது - எதையும்
தீண்டாமல் எனைக்காத்த உடலை - தீ
தீண்டி தன் பசிக்கு இரையாக்குவதை
தடுக்க முடியாத கையாலாகதவனாய் நான்...!
தரணி நீங்கிப்போகின்றேன்....!!!

மன்னித்து விடு உடலே என் பொருளே..!


அரசி நிலவன்


No comments:

Post a Comment