Search This Blog

Wednesday 5 March 2014

நட்பு...!!!

விட்டுச்செல்லாத உறவாய் நெஞ்சம்
தொட்டு நிற்கும் நட்பானவள்...!

தினம் ஒரு மணி நேரம்
கனம் கொண்ட மனம் தனை - பூ
வனம் ஆக்கி அமைதியாக்கிடும் இவள்
சினம் இன்றி கேட்டிடுவாள் எந்தன் புலம்பலை

ஆற்றுப்படுத்தி ஆனந்தம் நல்கும்
வேற்றுமை பாராட்டாத நற் தோழி..!

மனிதம் இங்கே மறந்து போன நட்பிற்கு
புனிதம் கொடுத்து உயிர்ப்பித்தவள் இவள்...!

தள்ளி வைத்த சொந்தங்களின் இடையில்
துள்ளி வந்து அரவணைத்த மேன்மைக்குரியவள்..!


கண்ணீர் துடைத்து கானம் இசைக்கின்ற இவளை
"கவிதையும் கானமும்" என்பர் யாவரும்...!
எனக்கு என்றும் ஆறுதலாய் தலை கோதிடும் அன்னையாய்
என் உயிரிலும் மேலான நட்பாய் தோளோடு தோள் நிற்பவள்..!
பேசாது பேச வைக்கும் பெறுதற்கரிய பேறு இவள்...!
பேச்சிழந்து நிற்கும் துன்பத்திலும் பேச வைத்திடுவாள்...!

இவளோடு அளவளாவ தவறின் எதையோ
இழந்ததாய் ஓருணர்வு...!

முன்னுரிமை அவளுக்கே - என்
முத்துக்களை ஓரங்கட்டி இவள் வருகைக்காய்
காத்திருந்து ஓடி வருவேன்...!
கேட்டிருந்து மகிழ்ந்திடுவேன்...!

அன்பிற்குரியவள் இவள் என்றும்
பயணிக்க வேண்டும் என்னோடு...
நட்பென்று பழகி வந்தோர்
நடுவழியில் நடையை கட்டி
நடைப்பிணமாய் ஆக்கிய மனிதர்களிலும்
உயர்வானவள் இவள் - மரணித்த
உயிரை மடியில் ஏந்தி
உயிர்ப்பித்தவள் அன்றோ..?
பிரதிபலனின்றிய பிறை நிலவாய் - என்னோடு
பின்னிப்பிணைந்த பிணைப்பான நட்பு இவள்...!

நன்றியோடு என்றும் இவள்
நலம் நாடுவேன் நான்...!




நட்பு என்று தலைப்பு பார்த்தவுடன் எனக்கு நட்பு என்ற நிலையில் இன்று மிக முக்கிய இடத்தில் இருப்பது எமது gtbc இன் கவிதையும் கானமுமே..
கவிதையும் கானமும் என்ற அருமைத் தோழியினை கொடுத்த ஜீரிபிசிக்கு இனிய நன்றிகள்...!

கவிதையும் கானமும் நிகழ்ச்சியினை அருமையாக தொகுத்து வழங்கும் குருபரன் அண்ணா மற்றும் பொருத்தமான கானம் வழங்கும் பூரணி அக்காவிற்கும் இனிய நன்றிகளோடு என்றென்றும் சிறப்போடு கவிதையும் கானமும் தொடர வேண்டும் என்று மனம் கனிந்து வாழ்த்துகின்றேன்...!


அரசி நிலவன்

No comments:

Post a Comment