Search This Blog

Friday 7 March 2014

கலக்கம்...!!!


அடித்து ஓய்ந்து நின்ற மழையின் பின்
சிணுங்கும் தூறலாய்
துடித்துக் கொள்ளும் இதயத்தின் மேல்
விட்டுச்சென்ற எச்சங்களாய் உன் நினைவுகள்...!

தொட்டுச்சென்ற தொடுகைகளும்
பட்டுச்சென்ற முத்தங்களும்
எட்டிச்சென்ற உன் தடம் தேடிய படி
முட்டி வழியும் விழி நீராய்
கொட்டிக்கிடக்கும் ரணங்கள்....!

தொண்டைக்குழிக்குள்
துளைத்து வதைக்கும்
ஏதோ ஒன்று
உயிர் எல்லை வரை
உருக்குலைத்து
துரத்தியடிக்கின்றது....!

நடை பயிலும் கால்கள்
விடை பெறும் நினைவுகளால்
நடு வழியில் மறந்து நிற்கின்றன...

மறை கழன்றவளாக - உன்
உறை விடம் நாடி அலையும்
கறை இல்லா காதலை சுமந்தவள்
சிறை வாழும் உந்தன் முகம் காண

கலக்கம் நிறைந்த மனம் கொண்டு
துலக்கம் இன்றிய இருளில் தவித்த படியே
வழக்கமான கண்ணீரின் துணையுடன்
வடிந்த வெள்ளத்தின் ரேகை கொண்ட மணலைப்
போன்று சலனமின்றிக்கிடக்கின்றேன்....!

கலங்கும் உந்தன் விழிகளை துடைக்க
கனவில் ஓடி வருகின்றேன்...!
கருணை இல்லா காவலர் அங்கும்
விரட்டியடிக்க கலங்குகின்றேன் கனவில் கூட....




அரசி நிலவன்





No comments:

Post a Comment