Search This Blog

Wednesday 5 March 2014

நல்வாழ்த்து...!!!

உந்தன் இசை வெள்ளம் இன்று
உலகத் திசை எங்கும் பரவுகின்றது
உன்னை வசை பாடி தூற்றினோரும் -நாவினால்
உனக்கு கசையடி கொடுத்தோரும் வாய் பிளந்து நிற்க....
உந்தன் பாடல் காற்றிலே கனிந்துருகி
தவழ்கின்றது....!


காற்றும் மயங்கி அசையாது போனதோ...!
செவிகளில் விழுந்து செல்கள் சிலையாகியதோ..!

உயிர்ப்பான உந்தன் இசை கேட்டு
கல்லான கடவுளும் உயிர்த்திடுவான்...!
கருமேகம் களிப்புற்று கண்ணீர் சிந்திடுமே...!

ஒன்றல்ல இரண்டல்ல ஏழாண்டு தவம் அன்றோ?
ஒடிந்து விழுந்த சருகாய் உக்கிடாமல் காற்றில்
எழுந்து பறந்து எதிர்நீச்சல் இட்டு  காலம் கடந்து - நீ
சுமந்த கனவுக்கருக்கள் வளமாய் பிரசவமாகினவோ..?

உந்தன் பாதை நற் செதுக்கலோடு வளமாகட்டும்...!
உன் வரலாறு பேசிட உந்தன் இசை என்றும் பயணிக்கட்டும்...!

கனவுகள் நனவான இந்நாளில்
வினவிய  வினாக்கள் காணாமல் போகின்றன...!
அட உந்தன் முகம் மறந்தோர்
அசடு வழிந்து அணைக்க கரம் நீட்டுகின்றனரே..!

நாளும் பொழுதும் கலங்கிய உள்ளத்திற்கு - இசையை
ஆளும் பொழுது விரைவில் சூழ வேண்டும்...!


உரையிசையும் மெட்டமைப்பும் தாளமும்
கரை இல்லாமல் உன்னகத்தே குடி கொண்டவையன்றோ...!
காந்தக்குரலும் கனிவு மொழியும் எங்கும் பரவட்டும்..!
விசைப்பார்வையும் அசராத நடிப்பும் உலகை ஆளட்டும்..!
திசையெங்கும் உன் புகழ் பரவி
இசையால் இசைவாக்கம் பெற்ற நீ இசையோடு புகழோடு
இறுதிவரை வாழ்க...!
இனிய  நல்வாழ்த்துக்கள்...!!



அரசி நிலவன்



No comments:

Post a Comment