Search This Blog

Thursday 13 March 2014

அற்புதம்...!!!


தமிழ் உறவுகள் மேல்
தமிழ் மண் கொண்ட காதல்..!
தமிழ் உதிரத்தோடு கலந்து
தமிழ் இனத்தை தன்னோடு அணைத்த காதல்...!!

உயிர்களை அள்ளி எடுத்து
உதிரத்தில் நீராடி தன்
உள்ளே கட்டியணைத்து
உருவம் கொண்ட மண் அன்றோ?

எங்கள் வலிகளை சுமந்து சுமந்து
கண்ணீர் விட்டு கதறிய மண்...!
கனவுகளை காலடியில் புதைத்து
கல கலப்பாக நடித்து மினுங்குகின்றது...!

காதலும் சாதலும் யாவுமறிந்து
மாண்டு போன உறவுகளை எண்ணி  - அவள்
மாதக்கணக்காய் வடித்த கண்ணீரால்
நந்திக்கடலோரம் உயர்ந்தது அறிவீரோ?


கொஞ்சிப்பேசிய குழந்தைகளும்
பிஞ்சு காலால் முத்தமிட்ட ரோஜாக்களும்
நஞ்சுக்குண்டுகளால் பிய்த்தெறியப்பட்டு
பஞ்சுக்குவியலாய் தன் கரமேந்திய அதிர்ச்சியால் இன்றும்
சித்தம் கலங்கி கிடக்கின்றது தமிழ்த்தேசத்து மண்...!

வஞ்சகரைக்கண்டும் கொதித்து எழுந்திட முடியாமல்
வரலாறு சொல்லும் காலத்திற்காக காத்துக்கிடக்கின்றது...!
அவ்வப்போது அழுது இதயம் வெடித்திடும் போதெல்லாம் - தன்
அகத்தே உயிரோடு அணைத்துக்கொண்ட தன் இதயத்து உறவுகளின்
மண்டையோடுகளை மனிதம் செத்த உலகிற்கு
மனம் திறந்து காட்டி தன் பாரம் நீக்கிடும்
மகத்தான மண்ணின் காதல் ஒன்றே உலகில் அற்புதம்..!


மண்ணும் கண் திறந்து உலகை பார்த்து கண்ணீர் சிந்துகின்றது...
மரத்துப்போன அகில வாழ் மனிதர்களை விட உயர்வானது
எம் தேசத்து தாய்மண்..!

பெற்ற தாயினைப்போன்று புனிதமானவள் எங்கள் தாய்மண்..!
அற்புதங்களில் அற்புதம் எங்கள் தமிழ்த்தாய் மண்ணே..!

நீங்காத காதல் கொண்டு நீடித்த உறவோடு என்றும் பிணைப்பில்
நீ இருப்பாய் என் தாயவளே...!





லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "அற்புதம் " என்ற தலைப்பில் இன்று (13.03.2014 )வழங்கிய கவிதை இது.

கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 (இலங்கை இந்திய நேரம் பிற்பகல் 7.30 மணிக்கு )மணிக்கு... http://gtbc.fm/

1 comment: