Search This Blog

Friday 14 March 2014

யாருக்காக இந்த போராட்டம்..??


(இன்று நான் கண்ணுற்ற ஒரு காணொளி ஒன்று என்னை வற்புறுத்தி இதனை எழுத வைத்து விட்டது. இருந்தாலும் இதில் உள்ளவை யாவும் பல காலமாக என் மனதில் கிடந்தது உழன்று தொண்டைக்குள் சிக்கித்தவித்த வேதனை மிக்க விடயங்களே.)

ஈழப் போராட்டம் என்ற ஒரு சொற் பதத்தினை வைத்து இன்று உலகெங்கும் எத்தனையோ வியாபாரங்கள் நடைபெறுகின்றன. அது தமிழ்நாடாக இருந்தாலும் சரி புலம்பெயர் தேசமாக இருந்தாலும் சரி இன்று அந்த பதம் ஒரு வியாபாரப்பதமாக மாற்றம் பெற்றிருப்பது யாவரும் அறிந்த உண்மை. 

அரசியலுக்கு அது இன்று நன்றாகவே நல்ல ஒரு தரமான உரமாக பயன்படுத்தப்படுகின்றது. விளைகின்ற விளைச்சலை அறுவடை செய்கின்றவர்கள் வளமாக வாழும்போது அந்த ஈழப்போராட்டத்தோடு நேரடியாக சம்பந்தப்பட்ட உறவுகள் இன்று என்ன நிலையில் தவித்துக்கொண்டிருக்கின்றார்கள் என்பது எத்தனை பேருக்கு தெரிந்த உண்மை?

ஆம்..!
ஈழத்தில் 2009 இன் போரிற்கு பின்னான காலப்பகுதியில் நிர்க்கதியாக்கப்பட்ட எத்தனையோ போராளிப்பெருமக்கள், எங்கே என்று அறியாத போராளிகளின் உறவுகள் தற்போது விடுதலையாகி செய்வதறியாது தவிக்கும் பெண் போராளிகள்  மற்றும் ஆண் போராளிகள் என தமது வாழ்வாதாரங்களையும் பாதுகாப்பினையும் தொலைத்து ஒரு வித மன உளைச்சலில் தம்மை நகர்த்திச்செல்லும் இவர்களுக்கு ஏன் யாரால் இந்த அவல நிலை?

தலைவர் இருக்கின்றார் என்றும் போராட்டம் முன்னெடுக்கப்படும், தமிழீழம் மலரும் என்றும் கோசமிடும் அமைப்புக்களே..! முதலில் தமிழினத்திற்காக போராடி நடுத்தெருவில் நிற்கும் இந்த உறவுகளுக்கு வாழ்வதற்கு ஒரு வழிவகை செய்யுங்கள். புலம்பெயர் தேசத்தில் உள்ள பலர் அவர்களில் சிலருக்கு உதவுகின்றனர் தான் மறுப்பதற்கில்லை. ஆனால் தவிக்கின்ற யாவருக்கும் உதவி கிடைக்கவில்லையே. தெரிந்தவர்கள் மற்றும் உறவினர்கள் மூலமாக சிலருக்கு உதவிகள் கிடைத்தாலும் அவை நிரந்தரமானவை என்று கூறிவிட இயலாது.

தமிழீழ நாடு கடந்த அரசு என்கின்ற ஒரு அரசு புலம்பெயர் தேசத்தில் இருக்கின்றது என்பது ஈழத்தில் உள்ள எத்தனை உறவுகள் அறிவர்? அறிக்கைகள் விட்டு தமக்கு தாமே ஒன்று கூடல் நிகழ்த்தி விருந்துண்டால் அங்கிருக்கும் உறவுகளுக்கு தெரியுமா? உண்மையில் இந்த அரசு பொறுப்பேற்றவுடன் என்ன செய்திருக்க வேண்டும்?  ஈழத்தில் உள்ள அத்தனை போராளிகளையும் திரட்டி அவர்களுக்கு உரிய எதிர்கால நலத்திட்டத்தினை உருவாக்கியிருக்க வேண்டுமல்லவா? சும்மா உதவி என்று மாதம் பத்தாயிரம் இருபதாயிரம் என்று பிச்சை போடாமல் அவர்களுக்கு என்று ஒரு தொழிலினை அல்லது ஒரு நிரந்தர வேலையினை ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வழங்கியிருக்க வேண்டும். 

தேசியத்தலைவர் இருந்தால் அந்த உன்னதமான போராளிகளை இவ்வாறு நடு வழியில் தவிக்க விடுவாரா? அன்றி மற்றவர்களிடம் கையேந்தி நிற்க தன்னும் விடுவாரா? அன்றைய கடும் போர்ச்சூழலில் கூட வலுவிழந்தோருக்காக தேசியத்தலைவர் நிதியினை  ஒதுக்கி அவர்களை வாழ வைத்துக்கொண்டு இருந்தார் என்பது ஏன் உங்கள் அறிவிற்கு எட்டவில்லை? தலைவர் வருவார் , தமிழீழம் மலரும் என்று எதிர்பார்க்கின்ற உறவுகளே. உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும் நாளில் இந்தப் போராளிகளைப்பற்றி அவருக்கு என்ன பதில் சொல்வீர்கள்? அவர்களுக்காக என்ன செய்தீர்கள் ? 

உண்மையிலேயே நீங்கள் அவரின் வரவை எதிர்பார்த்திருந்தால் அல்லது அவர் இருப்பதை நம்புவதாக இருந்தால் முதலில் எங்கள் இனத்துக்காக போராடி, எச்சங்களாகி நிற்கும் உன்னதமான போராளிகளை வளப்படுத்தியிருப்பீர்கள். அவர்களை மதித்து அவர்களின் நலன் காத்திருப்பீர்கள். இவ்வாறு அவர்களைப்  புறந்தள்ளி ஏளனமாய் நோக்கி நீங்கள் உதாசீனப்படுத்துவதில்  இருந்து நன்கு  விளங்குகின்றது. அரசியலுக்காகவும்  சுய இலாபத்திற்காகவும்  தலைவர் இருக்கின்றார் என்றும் வருவார் என்றும் காலங்கடத்துகின்றீர்கள் என்பது.

நிகழ்காலத்தில் செய்ய முடிந்த செயல்களாக எவ்வளவோ இருக்கும் போது எதிர்கால நம்பிக்கை ஒன்றினை சொல்லிக்கொண்டே எதற்காக காலம் கடத்திக்கொண்டிருக்க வேண்டும். உண்மையில் ஈழ உணர்வு , இன உணர்வு இருந்தால் ஈழத்தில் அல்லலுறும் உறவுகளுக்கு வாழ வழி வகை செய்யுங்கள். 


இந்த காணொளியில் மூன்று உறவுகள் கண் கலங்கி அழுது கையேந்தும் காட்சியினை கண்ணுறும் போது இதயம் கனக்கின்றது. எதற்காக இவர்கள் இவ்வாறு கையேந்த வேண்டும். இருக்க வேண்டியவர் இருந்தால் இவ்வாறு இடம்பெற அனுமதிப்பாரா? இவர்கள் அநாதரவற்று போயிருப்பார்களா? கண்களில் இருந்து சிந்தும் கண்ணீரினை துடைத்து விட கரமின்றி தவிக்கும் இவர்கள் யாருக்காக அவற்றினை இழந்தார்கள்? பொழுது போக்கிற்காக வேலை வெட்டி இல்லாமல் போய் கரங்களை துண்டித்துக்  கொண்டார்களா? காட்டிக்கொடுப்புக்களில் வாழ்ந்து கொண்டிருக்கும், துரோகங்களில் ஒன்றிப்போன ,நன்றி கெட்ட இனமான தமிழினத்திற்காக தமது வாழ்வினை தொலைத்துப் போராடியது தான் அவர்கள் புரிந்த ஒரேயொரு குற்றம். 

ஒருவர் இருவர் என்றில்லாமல் அங்கிருக்கும் அத்தனை உறவுகளுக்கும் புனர்வாழ்வு அளிக்க புலம்பெயர் சமூகத்தால் முடியாதா என்ன? பாதுகாப்பு பிரச்சினை என்ற சாக்குப் போக்கு தேவையற்றது. இலங்கை அரசின் கையில் யார் யார் போராளிகள் என்ற முழுக் கணக்கெடுப்பே இருக்கும் போது உதவி செய்ய ஆரம்பித்து அவர்களை காட்டிக்கொடுப்பதாக ஆகி விடுமோ என்று நினைத்து வாளாவிருப்பதே உண்மையான துரோகத்தனம் ஆகும். 

யாருக்காக நடைப்பயணம் செய்கின்றீர்கள்? எதற்காக தமிழீழம் கேட்கின்றீர்கள்? இந்த உன்னத உறவுகள் பசியோடு வலுவிழந்து கிடந்து கண்ணீர் விடும் போது புலம்பெயர் போராட்டங்கள் வலுப்பெறுமா ? குரல் கொடுத்து கேட்கின்ற தமிழீழத்தில் வாழப்போவது யார் ? உயிர் கொடுத்துப் போராடி எம்மினத்தினை உலகிற்கு வெளிக்காட்டியவர்களை புறந்தள்ளி எம்மால் வாழ்ந்திட முடியுமா? ஒட்டுமொத்த தமிழினத்திற்கே அது சாபக்கேடாகும். 

எமது தற்கால போராட்டங்களை குறை குறைவில்லை. ஆனால் அதற்கு முன் ஆற்ற வேண்டிய பல செயல்களை நிறைவேற்றிக்கொண்டு  போராடுவோம். ஐந்தாண்டு காலமாக ஜெனிவாவிற்கு செல்லாத கால்கள் இல்லை உயர்த்தாத கைகள் இல்லை. என்ன பயன்? இருக்கின்ற எமது போராளிப்  பெரும்மக்கள் உயிரை இழப்பதும் வாழ்வை இழப்பதும் அதிகமாகி செல்கின்றது அன்றோ? 


வாழ வழியற்று மன விரக்தியில் தற்கொலை செய்யும் நிலைக்கு ஒரு போராளி செல்கின்றார் என்றால் இத்தனை லட்சம் புலம்பெயர் உறவுகள் இருந்து என்ன பயன்? கேட்கவே வெட்கமாக இல்லையா? ஒரு போராளியினை வாழ வைக்க முடியாதவர்கள் ஒரு அரசிடம் நியாயம் எதிர்பார்க்க முடியுமா? போர்க்குற்ற விசாரணை வேண்டும் தான். அதில் மாற்றுக்கருத்தே இல்லை. ஆனால் அதற்காக அலைந்து இன்னும் உயிரோடு இருக்கின்றவர்களையும் இழக்க முடியுமா? 


சரணடைந்த போராளிகள் சுடப்பட்டார்கள், வன்முறைக்கு உட்படுத்தப்பட்டார்கள் ,உயிரோடு சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டார்கள் என்றெல்லாம் ஆதாரங்கள் வெளியாகி அதை வைத்து போராடுகின்ற நீங்கள் அதே போன்ற போராளிகள் இன்னும் ஈழத்தில் இருப்பதை மறந்து விட்டீர்களா? அல்லது அவர்கள் போராளிகள் இல்லையா ? யாருக்காக நீங்கள் நியாயம் தேடுகின்றீர்கள்? உயிர் துறந்த போராளிகள் விசாரணைகளால் எழுந்து வரப்போவதில்லை. அவர்களைப்போன்றவர்கள் இன்னும் உயிரோடு இருக்கின்றவர்களை காப்பாற்ற என்ன போராட்டம் செய்கின்றீர்கள்.? உண்மையில் போராளிகள் மேல் கொண்ட அக்கறையால் நீங்கள் போராடுகின்றீர்களா? அல்லது வெறுமனே இலங்கை அரசினை எதிர்க்க கிடைத்த ஆயுதமா இந்த போர்க்குற்ற விசாரணை? ஏனெனில் உயிருடன் இருக்கின்றவர்கள் கவனிப்பாரற்று அல்லவா இருக்கின்றார்கள். அவர்களின் உயிருக்கு உத்தரவாதம் இருக்கின்றதோ  இல்லையோ முதலில் அவர்களின் உணவுக்கு உத்தரவாதம் இல்லையே. 

புலம்பெயர் தேசத்தில் இருந்து  ஈழத்துக்குச்செல்லும் தமிழ்  உணர்வாளர்கள் எனத்தம்மை காட்டிக்கொள்ளும்  சிலர்  அங்குள்ள பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வெளிநாட்டு ஆசை காட்டி தமது தேவைகளை நிறைவேற்றியபின் ஏமாற்றி விட்டு  புலத்திற்கு திரும்பி விடுகின்றார்கள்  என்று கடந்த வாரம் ஒரு செய்தி வானொலி ஒன்றில் கேட்க நேர்ந்தது. ஆக சிங்களவர்கள் தேவையில்லை எமது இனத்தை கருவறுக்க என்பது நன்றாகவே விளங்குகின்றது. ஈழப்போராட்டம் , பாதிக்கப்பட்ட மக்கள் என்பன தற்போது  அரசியல் பேசுவதற்கும் ஏமாற்றுவதற்கும் நல்ல கருவிகள் ஆகிவிட்டன. 

தட்டிக்கேட்க எவருமில்லை. இருந்தால் இந்த அநியாயங்கள் , அசிங்கங்கள் அரங்கேறுமா? தமிழ்நாட்டில் பலர் தேசியத் தலைவரின் புகைப்படத்தை வைத்து அரசியல் செய்வதும், ஈழத்தை வைத்து தேர்தலில் வெற்றி பெறுவதும் என்று நன்றாகவே பிழைப்பு நடத்துகின்றார்கள். எங்கே அவர்கள் எமது போராளிகளுக்கு உதவட்டும் பார்ப்போம். நிச்சயமாக அதெல்லாம் பேச்சோடு சரி. யாருமே முன்வரப்போவதில்லை. 


எங்கேயோ இருக்கும் அவர்களுக்கு உதவி செய்வதால் இவர்களுக்கு அவர்களின் வாக்கு விழப்போவதில்லையே. அவர்கள் எக்கேடு கெட்டால் என்ன? ஆக போராளிகளுக்கு இலங்கை அரசினை தவிர வேறு எவராலும் உதவிட முடியாது போலும். தேர்தலுக்காக இலங்கை அரசு அவர்களுக்கு உதவி புரிந்து வாக்கினைப் பெற்றுக்கொள்ளவோ அல்லது தமிழர்களின் வாக்கினைப் பெற்றுக்கொள்ளவோ  போராளிகளுக்கு புனர்வாழ்வு அளிக்க முன்வரும். இலங்கை அரசின் புனர்வாழ்வு நடவடிக்கைகளை பார்த்து புலம்பெயர் தேசத்தில் இருந்து நக்கல் நையாண்டி பண்ண மட்டும் அங்குள்ள ஊடகங்கள் முண்டியடிக்கும். "முன்னாள்" போராளிகள் என்று ஒரு அடைமொழியுடன் அவர்களின் மனதினை நார் நாராக கிழிக்கத்தெரிந்த அந்த ஊடக மக்கள் தாம் ஏதாவது செய்ய வேண்டும் உதவ வேண்டும் என்ற எண்ணம் அறவே இல்லாமல் இவ்வாறு எதற்கு அவர்களை கொச்சைப்படுத்த வேண்டும்.

அவர்கள் மட்டுமா? ஈழத்தில் அரசின் புனர்வாழ்வு பெற்று இல்லம் திரும்புகின்ற  போராளிகளில் எத்தனையோ  பேர் மன உளைச்சலில் இருந்து இன்னும் திரும்பாமல் இருக்கின்றனர்? இராணுவ சித்திரவதைகள் மிரட்டல்கள் என்பன ஒரு புறமிருக்க சமூகத்தில் அவர்களை நோக்குகின்ற பார்வைகள் காரணமாக இன்னும் இன்னும் விரக்தி நிலைக்கு தள்ளப்படும் அவர்கள் என்ன குற்றம் இழைத்தார்கள்? கேடு கெட்ட எமது தமிழினம் பச்சோந்திகள் போன்று காலத்திற்கு காலம் குணம் மாறும் இயல்பு கொண்டவர்கள் என்பது தெரிந்தாலும் இவ்வாறு எமக்காக தம் வாழ்வை தொலைத்துத் தனித்து வந்தவர்களை கரம் நீட்டி அணைக்கத் தெரியாத கல் நெஞ்சம் கொண்டவர்கள் என்பது போரிற்கு பின்னான காலம் நன்கே  உணர்த்தி நிற்கின்றது.

வசைப்பேச்சுக்களும் , கதை கட்டும் வதந்திகளும் , முகத்திற்கு நேராகவே காறி உமிழ்ந்து வதைக்கின்ற சொந்த இனத்து மக்கள் , அண்டை அயலார் என்று அவர்களை வெந்தணலில் இட்டுச்சுட்டுக்கொல்லும் கொடுமை இன்னமும் அரங்கேறிக்கொண்டிருக்க யாருக்காக நாம் போர்க்குற்ற விசாரணை நாடாத்தப்  போராட்டம் நடாத்துகின்றோம்?


போரில் காணாமல் போனவர்களை தேடியலையும் நாம் அவர்களை கண்டு பிடித்துக் கொள்ள முடியாமல் போனாலும், இருக்கின்ற இவர்களை காணாமல் போகாமலிருக்கவாவது ஆவன செய்வோம். இலங்கை அரசின் புனர்வாழ்வில் இருந்து மீண்டு வருபவர்களை மீண்டும் இலங்கை அரசு கைது செய்யாமல் இருக்க வேண்டும் எனில் புலம்பெயர் தேசத்தில் இருந்து கொண்டு அவர்களை வைத்து எழுச்சிகரமான பதிவுகளும், அவர்களின் பழைய தோற்றத்து புகைப்படங்களையும் தற்போதைய படங்களையும் இணைத்து ஒப்பிட்டு க்கட்டுரைகளும் எழுதி கடினப்பட்டு வெளியேறிய அவர்களை மீண்டும் சிறைக்குள் தள்ள முயற்சிக்காதீர்கள் அல்லது காணாமல் போக வைக்காதீர்கள் இல்லை தற்கொலைக்கு தூண்டாதீர்கள். புலத்தில் பாதுகாப்புடன் இருந்து கொண்டு எதுவும் பேச முடியும். முள்ளுக்கம்பிக்குள் முதுகை வளைத்துக்கொண்டு இருப்பவர்கள் வளைந்து நெளிந்து தான் இருக்க வேண்டும் அதுதான் காலத்தின் கட்டாயமும் ஆகும். 

இறுதிப்போர் என்பதே உலக நாடுகளின் இணைப்பில் அரங்கேறியது என்பதை அறிந்தும் இன்னும் ஏன் அவற்றினை நம்பிக்கொண்டு எம்மை அவர்களுக்கு கோமாளிகளாக சித்தரிக்க வேண்டும்? எமக்கு நீதி வழங்க முன்வருவார்கள் என்றால் அது போர் முடிவுற்ற காலத்திலோ அல்லது அதற்கு அடுத்த ஆண்டுகளிலோ வழங்கப்பட்டிருக்கும். தம்மை பெரியவர்களாக காட்டிக்கொண்டு நல்லவர்களாக சித்தரித்துக்கொண்டு பிரேரணைகள் தயாரிக்கும் வல்லரசை மீறி எமக்கு என்ன நீதி கிடைக்க போகின்றது? விசாரணை ஒன்று ஆரம்பித்தாலே அது எங்கு வந்து முடியும்? யார் அதில் மாட்டிக்கொள்வார்கள் என்று அறியாதவர்களா நாம்? குற்றம் இழைத்தவன் தானே கூண்டில் ஏறி நின்று சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கூறுவான் என்று நாம் எதிர்பார்க்க முடியாது. ஏதோ ஒரு காரணத்தை வைத்து காலங்கடத்திச்செல்லுகின்ற நிலையில் நிச்சயம் எமக்கான நீதி கிட்டும் என்பது எட்டாக்கனியே.


எமது காலத்தினையும் நோக்கத்தினையும் இவ்வாறு சேதாரப்படுத்தி வலுவிழக்க வைக்கும் இந்த வல்லரசுகள் தாம் நினைப்பதனை நன்றாகவே சாதித்துக்கொள்கின்றன. எம்மினமே திரண்டு வந்து நின்று நடு வீதியில் ஒவ்வொருத்தராய் செத்து மடிந்தாலும் திரும்பி பார்க்க யாருமில்லை. தமக்கு பின்னால் அலைய விட்டு வேடிக்கை பார்த்து இலங்கையோடு நட்போடு கை குலுக்கி கொண்டு விருந்துண்ணவே அவர்கள் பெரிதும் விரும்புவர்.

ஆக...நாம் எமது கடமைகளை செய்ய முற்படுவோம். போர்க்குற்ற விசாரணை எம்மால் தொடங்க முடியாது என்றால் எம்மால் நிறைவேற்ற முடிந்த எத்தனையோ பணிகள் இருக்கின்றனவே. எங்கள் மக்களுக்கு தன்னலமற்ற உதவிகளை அள்ளி வழங்குங்கள். போரினால் அவயங்களை இழந்தவர்களும் போராளிகளும் காணாமல் போனவர்களின் உறவுகளும்  என்று எண்ணிலடங்காமல் வறுமையில் வாழும் எமது உறவுகளின் கண்ணீரை துடையுங்கள். அவர்கள் நலனுக்காக அமைப்பு ஒன்றினை நிறுவி அவர்களை வளம்படுத்தி அவர்களின் வாழ்வை நிலையாக்குங்கள்.

இலங்கையிலுள்ள  பாராளுமன்ற உறுப்பினர்களும் , அமைச்சர்களும் தத்தமது சொந்த வேலைகளை பார்த்து , தமது சுயலாபம் தேடி அலையும் போது அவர்களுக்கு இவர்களின் நினைவு தேர்தல் காலங்களில் மட்டுமே வந்து போகும். எனவே அந்த பெரிய மனிதர்களை விடுத்து , எமது உறவுகளுக்கு நாமே உதவுவோம்.

எமது போராளிப்பெருமக்களின் கண்களில் கண்ணீர் பெருகாமல் பார்த்துக்கொள்வதே எமது முப்பதாண்டு போராட்டத்திற்கும்  மதிப்பிற்குரிய எமது தேசியத்தலைவரிற்கும் நாம் ஆற்றும் நன்றியும் மரியாதையும் ஆகும். அநாதரவற்று அவர்கள் நிற்கும் போது யாருக்காக நாம் புலத்தில் போராட வேண்டும்?
.



அரசி நிலவன்    


Thursday 13 March 2014

அற்புதம்...!!!


தமிழ் உறவுகள் மேல்
தமிழ் மண் கொண்ட காதல்..!
தமிழ் உதிரத்தோடு கலந்து
தமிழ் இனத்தை தன்னோடு அணைத்த காதல்...!!

உயிர்களை அள்ளி எடுத்து
உதிரத்தில் நீராடி தன்
உள்ளே கட்டியணைத்து
உருவம் கொண்ட மண் அன்றோ?

எங்கள் வலிகளை சுமந்து சுமந்து
கண்ணீர் விட்டு கதறிய மண்...!
கனவுகளை காலடியில் புதைத்து
கல கலப்பாக நடித்து மினுங்குகின்றது...!

காதலும் சாதலும் யாவுமறிந்து
மாண்டு போன உறவுகளை எண்ணி  - அவள்
மாதக்கணக்காய் வடித்த கண்ணீரால்
நந்திக்கடலோரம் உயர்ந்தது அறிவீரோ?


கொஞ்சிப்பேசிய குழந்தைகளும்
பிஞ்சு காலால் முத்தமிட்ட ரோஜாக்களும்
நஞ்சுக்குண்டுகளால் பிய்த்தெறியப்பட்டு
பஞ்சுக்குவியலாய் தன் கரமேந்திய அதிர்ச்சியால் இன்றும்
சித்தம் கலங்கி கிடக்கின்றது தமிழ்த்தேசத்து மண்...!

வஞ்சகரைக்கண்டும் கொதித்து எழுந்திட முடியாமல்
வரலாறு சொல்லும் காலத்திற்காக காத்துக்கிடக்கின்றது...!
அவ்வப்போது அழுது இதயம் வெடித்திடும் போதெல்லாம் - தன்
அகத்தே உயிரோடு அணைத்துக்கொண்ட தன் இதயத்து உறவுகளின்
மண்டையோடுகளை மனிதம் செத்த உலகிற்கு
மனம் திறந்து காட்டி தன் பாரம் நீக்கிடும்
மகத்தான மண்ணின் காதல் ஒன்றே உலகில் அற்புதம்..!


மண்ணும் கண் திறந்து உலகை பார்த்து கண்ணீர் சிந்துகின்றது...
மரத்துப்போன அகில வாழ் மனிதர்களை விட உயர்வானது
எம் தேசத்து தாய்மண்..!

பெற்ற தாயினைப்போன்று புனிதமானவள் எங்கள் தாய்மண்..!
அற்புதங்களில் அற்புதம் எங்கள் தமிழ்த்தாய் மண்ணே..!

நீங்காத காதல் கொண்டு நீடித்த உறவோடு என்றும் பிணைப்பில்
நீ இருப்பாய் என் தாயவளே...!





லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "அற்புதம் " என்ற தலைப்பில் இன்று (13.03.2014 )வழங்கிய கவிதை இது.

கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 (இலங்கை இந்திய நேரம் பிற்பகல் 7.30 மணிக்கு )மணிக்கு... http://gtbc.fm/

Wednesday 12 March 2014

உன் நிழலில்...!


வெந்தணலில் வெந்தாலும்
அந்தமில்லாதவனடி நான்...!
உந்தன் குளிர்மை பார்வையில்  
வெம்மை காய்ந்திடுவேன்....!

இரும்புக்கம்பிகள் என்னை முறுக்கிட்டாலும் - உன் 
கரும்பு போன்ற வார்த்தைகள் நித்தம் சிறை மீட்டிடும் எனை 
அரும்புகின்ற மொட்டாய் தினம் விடியலுக்காய் காத்திருந்து  
துரும்பாகி இளைத்து இறுதியில் சருகாகி போவேனோ??

விரும்புகி ன்றேனடி உன் நிழலில் கிடந்து மடிந்திடவே..
தொலைந்து போன நாட்களை தேடியலையும் பாவி என்னில் - உன்னை  
தொலைத்து பட்ட மரமாய் வெட்ட வெளியில் தனித்திருப்பவளே..!
துளிர் விட்டு நீ செழித்திடவே என் உயிரை நுனி விரலில் ஏந்தி 
கடக்கின்றேன் பொழுதுகளை...

ஒருவேளை.... 
இறுதி வரை உன்னைச்சேராமல் போனாலும் 
வந்து விடு என்னோடு என் தாயானவளே...!
இறுதி தருணத்திலும் உன் நிழலில் நான் 
பயணித்திடவே....

பிணைப்பான இதயங்கள் இணைந்த பொழுது 
பிரிந்து கொண்டோம் -மீண்டும் 
பிரிவேயின்றி இணைந்து கொள்ள 
பிராணன்கள் பிரிய வேண்டுமடி...!

பிறப்பின்றி இறப்பின்றி உந்தன் 
நிழலில் என்றும் யான் ஒன்றிடவே..!


  

லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "உன் நிழலில்   " என்ற தலைப்பில் இன்று (12.03.2014 )வழங்கிய கவிதை இது.

கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 (இலங்கை இந்திய நேரம் பிற்பகல் 7.30 மணிக்கு )மணிக்கு... http://gtbc.fm/


Tuesday 11 March 2014

விழியோரம்..!


கடலோராமாய் கால் நனைக்கும் அலைகளாய்
விழியோரமாய் இமை நனைக்கும் விழிநீர்...!

உந்தன் நினைவோரம் மெல்ல சாய்ந்தேன்
எந்தன் விழியோரம் வந்து விம்பமானாய் நீ..!
வாழ்வின் வழியோரம் யாவும்  வலிகளின் அறிகுறி
எமக்கான கனவோரம் தன்னும் கண்ணீரின் தொடக்கமே...

கனக்கின்ற இதயம் எச்சமிடும்
கண்ணீரின் ரேகை படிந்து
கண்டிக்கிடக்கின்றது விழியோரம்...!

களைத்துப்போன விழிகள் ஓய்வெடுக்க
கண்டறியாத கண்ணீர் விட்டபாடில்லை...!

பனிக்கின்ற விழிநீரின் அளவுக்கு குறைவில்லை...!
இனிக்கின்ற செய்திகள் வந்தாலும் துளிர்விடும்
கண்ணீரால் விழியோரம் நித்தமும் ஈரமாய்...!

சிரிக்கின்ற தருணங்கள் எமக்கில்லை...
சிலையாகிய உடலில் வடிகின்ற கண்ணீர் மட்டும்
அசைகின்றது நிலம் நோக்கி....

நிரம்பி வழியும் உன் நினைவுகளும் வலிகளும்
பயணிக்கின்றன விழியோரமாய் - வலிகளை
விழிகள் உணர்ந்து  இமை மூட மறுக்கின்றன...!


ஆழிகள் தோற்று விடுமன்றோ - என்
விழி நீரின் ஆழத்தோடு...


அரசி நிலவன்

லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "விழியோரம்  " என்ற தலைப்பில் இன்று (11.03.2014 )வழங்கிய கவிதை இது.

கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 (இலங்கை இந்திய நேரம் பிற்பகல் 7.30 மணிக்கு )மணிக்கு... http://gtbc.fm/

Monday 10 March 2014

கோபதாபம்..!


உண்டெனக்கொஞ்சம்  அதிகமாய் நீராடினால்
உயருகின்ற நீர்ப்பட்டியல் கண்டு புழுங்கும் மனது...

வற்றியும் வற்றாமலும்
வறண்டு கிடக்கின்ற ஊரின் தோட்டக் கேணியில்
தென்னோலையும் பாளையும் ஊதிப்போயிருக்க
குடித்தனம் நடத்துகின்ற நுளம்புகள் மீது கோபதாபம் தான்...

வெட்ட வெளியில் சுதந்திரமாய்
கொசுவை வால் கொண்டு விரட்டி
பிரட்டி அசை போடும் பசுக்களின் மேலும்
கொஞ்சம் கோப தாபம் தான்...

அத்திவாரம் கொத்திய தரையாகி
சுடுகாடாகி போன வளவு கண்டு
கொஞ்ச நஞ்சமல்ல கோபதாபம்...!

அடையாளத்தை தொலைத்து நிற்கும்
அழகான முற்றமே...

உன்னை தினம் எண்ணாத நாளில்லையே..
நான்கு சுவரின் ஆதிக்கத்தில் பொசுங்கும் நெஞ்சம்..

நாளும் பொழுதும் அள்ளி எறிந்த மணல்
நாட்டில் தொலைந்து போகும் அபாயம்...!

முள் முருங்கையும் கிளிசறியாவும் நிமிர்ந்து
நின்ற வீரம் விழுத்தி முள்கம்பிகளின் ஆதிக்கம்...!
யாரோடு கோபம் கொள்வது - எல்லை
வரிந்து கட்டும் சிப்பாய்களோடா அன்றி எம்மினம்
சரிந்து போக வழி வகுத்த அய்யா மாரோடா?
புரிந்து கொண்டும் வாளாவிருக்கும் மூத்தவர்களோடா?

வீரம் பேசும் உணர்வாளர்களுக்கு நாவில் மட்டுமே வீரம்..!
தூரம் நின்று கருத்துக்களும் விழாக்களும் நன்றே தொடருகின்றன
பாரம் கொண்ட எங்கள் உள்ளங்கள் கோபம் கொண்டு பலனேது?

அகதியாகியதால் அள்ளி விளையாடிய மண் ஆக்கிரமிப்பில்  - குருதியில்
சகதியாகிய நிலம்  அரசின் சுவீகரிப்பில்....!
வாரிக்கொடுக்க காத்திருக்கும் எம்மவர்கள் மீது கோபதாபம் இல்லை
அடக்கியாளும் அவர்கள் மீதும் கோபதாபம் இல்லை...!

எம்மை தமிழனாய் படைத்தவன் எவனோ
எம்மை அகதியாக்கி அழகு பார்ப்பவன் எவனோ
எங்கு கிடைத்தாலும் சொல்லி சொல்லி அடிப்பேன்
கோபதாபம் என்பதை நன்கு உணர்த்தியடிப்பேன்...!


அரசி நிலவன்



லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "கோபதாபம் " என்ற தலைப்பில் இன்று வழங்கிய கவிதை இது.

கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 (இலங்கை இந்திய நேரம் பிற்பகல் 7.30 மணிக்கு )மணிக்கு... http://gtbc.fm/



Friday 7 March 2014

கலக்கம்...!!!


அடித்து ஓய்ந்து நின்ற மழையின் பின்
சிணுங்கும் தூறலாய்
துடித்துக் கொள்ளும் இதயத்தின் மேல்
விட்டுச்சென்ற எச்சங்களாய் உன் நினைவுகள்...!

தொட்டுச்சென்ற தொடுகைகளும்
பட்டுச்சென்ற முத்தங்களும்
எட்டிச்சென்ற உன் தடம் தேடிய படி
முட்டி வழியும் விழி நீராய்
கொட்டிக்கிடக்கும் ரணங்கள்....!

தொண்டைக்குழிக்குள்
துளைத்து வதைக்கும்
ஏதோ ஒன்று
உயிர் எல்லை வரை
உருக்குலைத்து
துரத்தியடிக்கின்றது....!

நடை பயிலும் கால்கள்
விடை பெறும் நினைவுகளால்
நடு வழியில் மறந்து நிற்கின்றன...

மறை கழன்றவளாக - உன்
உறை விடம் நாடி அலையும்
கறை இல்லா காதலை சுமந்தவள்
சிறை வாழும் உந்தன் முகம் காண

கலக்கம் நிறைந்த மனம் கொண்டு
துலக்கம் இன்றிய இருளில் தவித்த படியே
வழக்கமான கண்ணீரின் துணையுடன்
வடிந்த வெள்ளத்தின் ரேகை கொண்ட மணலைப்
போன்று சலனமின்றிக்கிடக்கின்றேன்....!

கலங்கும் உந்தன் விழிகளை துடைக்க
கனவில் ஓடி வருகின்றேன்...!
கருணை இல்லா காவலர் அங்கும்
விரட்டியடிக்க கலங்குகின்றேன் கனவில் கூட....




அரசி நிலவன்





Thursday 6 March 2014

தீசன் வேலாவின் "தொலைந்தது " பாடல்..!!!


இந்த பாடல் ஒரு காதல் வலியினை எடுத்து சொல்லும் பாடலாகும். அதாவது உயிருக்குயிராய் காதலித்த காதலி இன்னொருவனோடு சுற்றித்திரியும் வலி கொண்ட துன்பத்தை எடுத்துக்காட்டும் இந்த பாடல்  சமூகத்திற்கு ஒரு விழிப்புணர்வை கொடுக்கும் பாடலாக அமைகின்றது. அதனால் வழமையான காதல் தோல்வி பாடல்களிலிருந்து சற்று மாறுபட்டதாக சோகம் நிறைந்ததாய் இல்லாமல் காதல் உணர்வு மற்றும் பிரிவு அத்துடன் ஒரு சமூகத்திற்கான செய்தி என்று சற்று வித்தியாசமான படைப்பாக இன்று வெளி வந்திருக்கும் இந்த பாடலுக்கான இசையானது மூன்று வருடங்களுக்கு முன்பே அமைக்கப்பட்ட நிலையில் பாடலினை முழுமையான நிலைக்கு கொண்டு வருவதற்கு இப்போது தான் காலம் கனிந்து வெளியிடப்பட்டுள்ளது.. 

ஏனோ தானோ என்று பாடலை பாடி வெளியிட நினைத்திருந்தால் எப்போதோ வெளியிட்டிருக்க முடியும். பாடலினை உயர் தர ஒலிப்பதிவுடன் கூடிய காணொளியுடன் ஒரு தரமான படைப்பாக கொடுப்பதற்காக காத்திருந்து அதற்கான வசதிகள் தற்போதே கிடைக்கப்பெற்று இன்று வெளியாகின்றது. 

இசையில் சாதிக்க துடிக்கும் இளம் இசையமைப்பாளன் தீசன் வேலா தன் தனி முயற்சியில் எந்த ஒரு பின்புலமும் இன்றி பல இடையூறுகளின் மத்தியிலும் எதிர்ப்புக்களின் மத்தியிலும் இந்த படைப்பினை ஒரு கனவாக சுமந்து வந்து நனவாக்கியுள்ளார். அதற்கு பக்கபலமாக பல இளம் படைப்பாளிகளும் கை கோர்த்து எல்லோரது முயற்சியும் சேர்ந்து ஒரு சிறந்த  படைப்பாக இது வெளிவந்திருக்கின்றது.    

தீசன் வேலாவின் சிறப்பான இசையில் அவரே பாடலினைப் பாடியுள்ளார். பாடலினை கேட்கும் போது அதனோடு ஒன்றிப்பயணிக்க வைத்த இசையமைப்பாளர் பாடலின் ஆரம்பித்ததிலிருந்து இறுதி வரை டெம்போ குறையாமல் பார்த்து அருமையான படைப்பை கொடுத்த அவர் தகுந்த இடத்தில் உரையிசையினையும்(Rap) கொடுத்து மேலும் பாடலினை மேருகேற்றியுள்ளார்.

நடிப்பில் அசத்தி இருக்கும் நிதனுக்கு சிறப்பான வாழ்த்துக்கள். அருமையாக  ஒளிப்பதிவு செய்திருக்கும் வேணுதரன் மற்றும் சஜித் இப்பாடலை இயக்கியுள்ளனர். டிலானி அஜய் மற்றும் குழந்தை நட்சத்திரம் சது நடித்திருக்க  Droom Vangers நடனக்குழுவினர் நடனத்தில் அசத்தியிருக்கின்றனர்.

சான் டிஜிற்றல் மற்றும் Dds Universal இன் தயாரிப்பில் வெளிவந்திருக்கும் இந்த பாடலில் உரையிசை பாடகர் தனுசியன் தன் வரிகளில் பாடியுள்ளார். பாடல் வரிகள் கவி அஜய் மற்றும் அஞ்சலி தீசன். சினிமா வரைகலை கிறேட்சன் ,எடிட்டிங் வேணுதரன் மற்றும் மேகவர்ணன் என்று ஒரு இளம் படைப்பாளிகள் பட்டாளமே இதில் கலக்கி உள்ளது...!

இந்திய படைப்பிற்கு நிகராக வெளிவந்திருக்கும் இந்த பாடலின் அழகிய காட்சிகள் கிழக்கின் மட்டக்களப்பில் படமாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இனிய நல்  வாழ்த்துக்கள் படைப்பாளிகளுக்கு.....!



அரசி நிலவன் 

Wednesday 5 March 2014

நட்பு...!!!

விட்டுச்செல்லாத உறவாய் நெஞ்சம்
தொட்டு நிற்கும் நட்பானவள்...!

தினம் ஒரு மணி நேரம்
கனம் கொண்ட மனம் தனை - பூ
வனம் ஆக்கி அமைதியாக்கிடும் இவள்
சினம் இன்றி கேட்டிடுவாள் எந்தன் புலம்பலை

ஆற்றுப்படுத்தி ஆனந்தம் நல்கும்
வேற்றுமை பாராட்டாத நற் தோழி..!

மனிதம் இங்கே மறந்து போன நட்பிற்கு
புனிதம் கொடுத்து உயிர்ப்பித்தவள் இவள்...!

தள்ளி வைத்த சொந்தங்களின் இடையில்
துள்ளி வந்து அரவணைத்த மேன்மைக்குரியவள்..!


கண்ணீர் துடைத்து கானம் இசைக்கின்ற இவளை
"கவிதையும் கானமும்" என்பர் யாவரும்...!
எனக்கு என்றும் ஆறுதலாய் தலை கோதிடும் அன்னையாய்
என் உயிரிலும் மேலான நட்பாய் தோளோடு தோள் நிற்பவள்..!
பேசாது பேச வைக்கும் பெறுதற்கரிய பேறு இவள்...!
பேச்சிழந்து நிற்கும் துன்பத்திலும் பேச வைத்திடுவாள்...!

இவளோடு அளவளாவ தவறின் எதையோ
இழந்ததாய் ஓருணர்வு...!

முன்னுரிமை அவளுக்கே - என்
முத்துக்களை ஓரங்கட்டி இவள் வருகைக்காய்
காத்திருந்து ஓடி வருவேன்...!
கேட்டிருந்து மகிழ்ந்திடுவேன்...!

அன்பிற்குரியவள் இவள் என்றும்
பயணிக்க வேண்டும் என்னோடு...
நட்பென்று பழகி வந்தோர்
நடுவழியில் நடையை கட்டி
நடைப்பிணமாய் ஆக்கிய மனிதர்களிலும்
உயர்வானவள் இவள் - மரணித்த
உயிரை மடியில் ஏந்தி
உயிர்ப்பித்தவள் அன்றோ..?
பிரதிபலனின்றிய பிறை நிலவாய் - என்னோடு
பின்னிப்பிணைந்த பிணைப்பான நட்பு இவள்...!

நன்றியோடு என்றும் இவள்
நலம் நாடுவேன் நான்...!




நட்பு என்று தலைப்பு பார்த்தவுடன் எனக்கு நட்பு என்ற நிலையில் இன்று மிக முக்கிய இடத்தில் இருப்பது எமது gtbc இன் கவிதையும் கானமுமே..
கவிதையும் கானமும் என்ற அருமைத் தோழியினை கொடுத்த ஜீரிபிசிக்கு இனிய நன்றிகள்...!

கவிதையும் கானமும் நிகழ்ச்சியினை அருமையாக தொகுத்து வழங்கும் குருபரன் அண்ணா மற்றும் பொருத்தமான கானம் வழங்கும் பூரணி அக்காவிற்கும் இனிய நன்றிகளோடு என்றென்றும் சிறப்போடு கவிதையும் கானமும் தொடர வேண்டும் என்று மனம் கனிந்து வாழ்த்துகின்றேன்...!


அரசி நிலவன்

நல்வாழ்த்து...!!!

உந்தன் இசை வெள்ளம் இன்று
உலகத் திசை எங்கும் பரவுகின்றது
உன்னை வசை பாடி தூற்றினோரும் -நாவினால்
உனக்கு கசையடி கொடுத்தோரும் வாய் பிளந்து நிற்க....
உந்தன் பாடல் காற்றிலே கனிந்துருகி
தவழ்கின்றது....!


காற்றும் மயங்கி அசையாது போனதோ...!
செவிகளில் விழுந்து செல்கள் சிலையாகியதோ..!

உயிர்ப்பான உந்தன் இசை கேட்டு
கல்லான கடவுளும் உயிர்த்திடுவான்...!
கருமேகம் களிப்புற்று கண்ணீர் சிந்திடுமே...!

ஒன்றல்ல இரண்டல்ல ஏழாண்டு தவம் அன்றோ?
ஒடிந்து விழுந்த சருகாய் உக்கிடாமல் காற்றில்
எழுந்து பறந்து எதிர்நீச்சல் இட்டு  காலம் கடந்து - நீ
சுமந்த கனவுக்கருக்கள் வளமாய் பிரசவமாகினவோ..?

உந்தன் பாதை நற் செதுக்கலோடு வளமாகட்டும்...!
உன் வரலாறு பேசிட உந்தன் இசை என்றும் பயணிக்கட்டும்...!

கனவுகள் நனவான இந்நாளில்
வினவிய  வினாக்கள் காணாமல் போகின்றன...!
அட உந்தன் முகம் மறந்தோர்
அசடு வழிந்து அணைக்க கரம் நீட்டுகின்றனரே..!

நாளும் பொழுதும் கலங்கிய உள்ளத்திற்கு - இசையை
ஆளும் பொழுது விரைவில் சூழ வேண்டும்...!


உரையிசையும் மெட்டமைப்பும் தாளமும்
கரை இல்லாமல் உன்னகத்தே குடி கொண்டவையன்றோ...!
காந்தக்குரலும் கனிவு மொழியும் எங்கும் பரவட்டும்..!
விசைப்பார்வையும் அசராத நடிப்பும் உலகை ஆளட்டும்..!
திசையெங்கும் உன் புகழ் பரவி
இசையால் இசைவாக்கம் பெற்ற நீ இசையோடு புகழோடு
இறுதிவரை வாழ்க...!
இனிய  நல்வாழ்த்துக்கள்...!!



அரசி நிலவன்



Monday 3 March 2014

கடற்சூரியன் (MV SUNSEA) தரையில் உருவாக்கிய கொந்தளிப்பு...!!! (பாகம் 9 - இறுதிப்பாகம் )


தொலைந்து போன நாட்களை தோண்டி எடுக்க முடியாது அல்லவா ? அவை கொடுத்த பிரிவுகளும் வலிகளும் அட்சய பாத்திரத்து அமுதம் போன்று அள்ள அள்ள குறையாமல் நினைத்து நினைத்து கண்ணீர் சிந்தச் சிந்த அதிகரித்தே செல்லுமே தவிர குறைவதில்லை. 

மதுரனுக்கு தொடருகின்ற துன்பம் ஆனது தொலைந்து போகாமல் அடம்பிடித்து கொண்டு அவனையும் குடும்பத்தினரையும் ஆட்டம் காண வைத்துக்கொண்டே இருக்கின்றது. 

என்ன வழிகளில் தீர்வைத் தேடினாலும் அவை யாவும் அவனுக்கு எதிராகவே முடிவை கொடுப்பதும் சில சமயம் எதிர்பாராத விதமான முடிவுகளை கொடுப்பதுமாய் நகரும் காலம் அவர்களுக்காய் செதுக்கப்பட்டு இருக்கின்றது எனலாம். 

ஆம்..! 

மீள்குடியேற்ற  நாட்டுக்கான அமெரிக்காவின் நேர்காணல்கள் முடிவுற்று மருத்துவ பரிசோதனைகளும் சாதகமான நிலையில் மதுரனினதும் நிலாவினதும் அமெரிக்க வழக்கு நிலுவை நிலைக்கு தள்ளப்பட்டதன் காரணம் மதுரன் தடுத்து வைக்கப்பட்டிருந்த தடுப்பு மையத்தில் உள்ள ஒரு சிலரது மோசமான நடவடிக்கைகள் ஆகும். அதன் பின்னணியில் கனேடிய அரசு உள்ளது என்பதனை எவராலும் நம்ப முடியாது.

மதுரனுக்கு நினைத்தாலே இந்த துன்பத்திலும் சிரிப்பு தான் ஏற்படும். இந்தளவிற்கு துரத்துகின்ற கனேடிய அரசின் இவ்வாறான நடவடிக்கைகளுக்கு தான் தகுதியானவனா? என்பது அடிக்கடி அவனிடம் எழும் வினாவாகும். பணத்தினையும் காலத்தையும் வீணடிக்கும் இவர்களை நினைத்து கோபத்தை விட அவனுக்கு ஏளனமே அதிகமாக ஏற்படுகின்றது.

மதுரனுக்கு அமெரிக்க மருத்துவ பரிசோதனை முடிவுற்றது அறியாமல்  தடுப்பு மையத்தில் இருந்த ஒரு சிலர்  மதுரனின் குடி நீரில் தூக்க மாத்திரைகளோடு போதை மருந்தினையும் கலந்து வைத்திருந்தார்கள். அதனை அறியாத மதுரன் அந்த நீரினைப்பருகி மயக்கமானான். ஒரு நாள்  பூராவும் முழு மயக்கமான அவனை தாய்லாந்து காவல்துறை வைத்தியசாலைக்கு எடுத்து சென்று அனுமதித்தது.

மதுரனின் மருத்துவ அறிக்கையின் பிரகாரம் ஐ நா அகதிகள் உயர் ஸ்தானிகராலயம் ஆனது கொலை முயற்சி என்னும் சந்தேகத்தில் பாங்காக் குடிவரவு தடுப்பு மையத்தில் விசாரணை நடாத்தியதில் குட்டு வெளிப்பட்டு தமிழர்கள் சிலர் அங்கிருந்து விலங்கிடப்பட்டு வேறு இடத்திற்கு மாற்றப்பட்டனர். அது சதித்திட்டம் என்பது ஐ நா அறிந்து சம்பந்தப்பட்டவர்களுக்கு விசாரணையும் ஆரம்பித்து மீள்குடியேற்ற நடவடிக்கையினையும் தற்காலிகமாக நிறுத்தியது.

ஏற்கனவே மருத்துவ பரிசோதனை முடிவுற்று சாதகமான முடிவை பெற்ற மதுரன் விமான பயணச்சீட்டிற்கு காத்திருக்க, அவனது உடலில் மயக்க மருந்து மற்றும் போதை கலந்திருப்பதாக உறுதிப்படுத்திய மருத்துவ அறிக்கையினை அங்கிருந்த தன்னார்வ தொண்டு நிறுவன தாதி 
அமெரிக்க மீள்குடியேற்ற அமைப்புக்கு(Resettlement Support Centre - RSC) அனுப்பி தனது சேவையினை கனேடியர்களுக்கு செவ்வனே செய்தாள்.

தடுப்பு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகளுக்கு மிகத்துரிதமாக செயலாற்றும் அமெரிக்க மீள்குடியேற்ற அமைப்பு அந்த மருத்துவ அறிக்கையின் காரணமாக ஏற்கனவே வழக்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட மதுரனுக்கு மீண்டும் வழக்கினை நிலுவையில் வைத்துக்கொண்டது. 

மதுரனின் நிலையினையும் நிலாவின் துயரத்தினையும் விளங்கி கொண்ட ஐ நா உடனடியாக அவர்களது வழக்கினை அமெரிக்காவிடமிருந்து வாபஸ் பெற்று நியூசிலாந்திற்கு ஒப்படைத்தது. நியூஸிலாந்து மதுரனுக்கு மிகத்துரிதமாக இரு வாரங்களில் வழக்கினை ஏற்று நேர்முகத்தேர்வினை நடாத்தியது. நேர்முகத்தேர்வின் போது அந்நாட்டு அதிகாரி நிலாவிடம் " உங்களின் வழக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டது. நீங்கள் மிகவும் அவசரமான நிலையில் உள்ளீர்கள் என்று ஐ நாவால் பரிந்துரை செய்யப்பட்டவர்கள். ஆகவே இன்னும் இரு வாரங்களில் மருத்துவ பரிசோதனை இடம்பெற்று  நீங்கள் நியூஸிலாந்திற்கு உள்வாங்கப்படுவீர்கள் " என்றுரைத்து அந்நாட்டு சட்ட திட்டங்கள் நடைமுறைகள் பற்றி விளக்கமளித்துமிருந்தார்.

பயணத்திற்கு ஆயத்தமாகிய நிலா இரு வாரங்கள் கடந்த பின் ஒரு வித பயத்தில் உறைந்தாள். ஆம்..! இரு வாரங்களாகியும் அவர்களை  மருத்துவ பரிசோதனைக்கு அழைக்கவில்லை. நியூஸிலாந்தினால் வழக்குகள்  ஏற்றுக்கொள்ளப்பட்ட  ஏனையவர்களுக்கு விமான பயணச்சீட்டும்  வழங்கப்பட்டு விட்டது. நிலாவிற்கும் மதுரனுக்கும் எந்த  வித பதிலும் கொடுக்கவில்லை.

எனவே ஐ நாவிடம் சென்று விசாரித்த நிலாவிடம் "நியூசிலாந்து உங்களை நிராகரித்து விட்டது" என்றும் காரணம் தெரியவில்லை என்றும்  கூறிய ஐ நா மீண்டும் அவர்களது வழக்கு நெதர்லாந்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று நிலாவிற்கு நம்பிக்கை கூறி அனுப்பியது. மீண்டும் ஒரு மாத இடைவெளியில் நெதர்லாந்தும் நிராகரித்து விட்டது என்ற ஐ நா அதிகாரிகள் நிராகரிப்பிற்கான காரணம் தெரியாமல் குழம்பிய போதும் மதுரனோ நிலாவோ குழம்பிக்கொள்ளவில்லை.

ஐ நாவானது மிகவும் மனிதாபிமான முறையில் மதுரனுக்கு சார்பாக நடந்து கொண்டது. அதாவது ஒரு நாடு நிராகரித்து இன்னுமொரு நாட்டிற்கு பரிந்துரை செய்யப்படுவது என்பது கல்லில் நார் உரிப்பது போன்று கால இடைவெளி அதிகமான ஒரு செயற்பாடாகும். ஆனால் மதுரன் மற்றும் நிலாவின் நன்னடத்தை காரணமாக ஒரு வருடத்திற்குள் மூன்று நாடுகளுக்கு பரிந்துரைத்த ஐ நாவால் ஏனோ கனேடிய அரசிற்கு எதிராக குரல் கொடுக்க முடியவில்லை.அத்துடன் கனேடிய அரசின் குற்ற சாட்டு உண்மை எனில் ஐ நா மதுரனை அகதி என்ற நிலையில் இருந்து நிராகரித்திருக்கும். (ஏற்கனவே முதல் பாகங்களில் இது பற்றி நன்கு தெளிவு படுத்தப்பட்டுள்ளது.)

அமெரிக்கா ஒரு மீள்குடியேற்ற வழக்கினை ஏற்றுக்கொள்வது என்பது மிகப் பெரிய விடயமாகும். எத்தனையோ நடைமுறைகளின் பின் பல நேர்காணல் பரிசோதனைகளை நடாத்தியே அது ஒருவரை தன் நாட்டிற்குள் உள்வாங்கிக்கொள்ளும்.


அமெரிக்கா நிராகரித்த பலரை மேற்குறிப்பிட்ட அந்நாடுகள் ஏற்றுக்கொள்ளும் போது அமெரிக்காவே ஏற்றுக்கொண்ட மதுரனின் வழக்கினை நெதர்லாந்தோ நியூஸிலாந்தோ நிராகரிக்க வேண்டிய தேவை இல்லை. இந்த இடத்தில் இதனை வாசிப்பவர்கள் நிச்சயம் புரிந்து கொள்ள முடியும் இது யாருடைய சதி என்பது.

ஒரு ஏற்றுக்கொள்ளப்பட்ட வழக்கு மீண்டும் நிராகரிக்கப்படுவதும் , நிலுவையில் வைக்கப்படுவதும் எந்தளவிற்கு சாத்தியம்? சாதாரண ஒரு நபரால் இதனைச் சாதிக்க முடியாது. நிச்சயம் ஒரு அரசால் அல்லது காவல் துறையால் மட்டுமே இது முடியும். கனேடிய அரசின் நோக்கம் மதுரன் தாய்லாந்தில் தடுப்பு மையத்தில் இருந்தே கடைசிக்காலத்தை முடிக்க வேண்டும் அல்லது இலங்கை திரும்பிச்செல்ல வேண்டும் என்பதாகும். எத்தனை நாடுகள் ஐ நா மூலமாக மதுரனை ஏற்க முன்வந்தாலும் நிராகரிக்க வைக்க கனேடிய அரசு காத்திருக்கின்றது.

நிலுவையில் இருக்கும் மதுரனின் அமெரிக்க மீள்குடியேற்ற வழக்கினை செயற்படுத்த அதாவது உண்மை நிலையினை ஆதார பூர்வமாக எடுத்து விளக்கி அவர்களுக்கு தெளிவு படுத்த அனுமதிக்காது இடையூறு விளைவிக்கும் அந்தத்தன்னார்வ தொண்டு நிறுவனத்  தாதி மதுரனை முற்று முழுதாக மனநிலை பாதிக்கப்பட்டவன் என்று முத்திரை குத்தி ஐ நாவிற்கும் அறிக்கை கொடுத்து இருக்கின்றாள்.

முதல் பாகத்தில் எழுதப்பட்ட மதுரனின் தற்போதைய நிலை அதாவது உணவின்றி உருக்குலைந்த அவனது உடலினை மருத்துவமனை கொண்டு சென்று இதுவரை பரிசோதிக்கவில்லை. நடக்கவே சக்தியற்று கிடக்கும் அவனை மனநிலை மருத்துவமனை எடுத்து சென்ற அந்த தாதியின் மனநிலை எப்படிப்பட்டது என்பதனை இன்னும் நினைக்கவே ஆத்திரமாக உள்ளது. ஐ நா மூலமாக வேறு மருத்துவமனை கொண்டு செல்ல விடாது தடுக்கும் அளவிற்கு அந்த தாதிக்கு யார் அதிகாரம் கொடுத்தது? அதனை யார் தட்டிக்கேட்பது?

அவர்கள் கூறுவது போன்று மதுரன் மனநிலை பாதிக்கப்பட்டவன் என்றே வைத்துக்கொள்ளுவோம். எதற்காக இன்னும் அவனைத் தடுத்து வைத்திருக்க வேண்டும்? விடுதலை செய்யலாமே? அல்லது பிணையில் விடுவிக்கலாமே? மதுரனை சந்திக்க வந்திருந்த ஐ நா அதிகாரியிடம் மதுரன் " நான் மனநிலை சரியில்லாதவன் என்றால் என்னை இன்னும் ஏன் இங்கு வைத்து உள்ளீர்கள்? என்னை விடுவிக்கலாமே ? என்று கேட்டதும் அவர் ஏதும் பேசவில்லை. விரைவாக இன்னொரு நாட்டிற்கு மீள் குடியேற்றுகின்றோம் என்று உரைத்து ச்சென்றிருக்கின்றார். ஆக ஐ நாவால் கூட அநியாயத்தினை தட்டி கேட்க முடியவில்லை. உண்மையில் மனநிலை சரியில்லை என்றால் விடுவிப்பார்கள் அல்லவா? எனவே இது வெறும் நாடகம் என்பது ஐ நாவிற்கே விளங்குகின்றது.

சட்ட விரோதமாக ஒரு நாட்டிற்குள் காலடி எடுத்து வைக்காமல், சட்ட ரீதியாக அனுமதி பெற்று ஒரு நாட்டில் குடியேறி அமைதியாக வாழ விரும்புகின்ற மதுரனை கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளாக வதைக்கும் கனேடிய காவல் துறை அவனை இலங்கைக்கு திருப்பி அனுப்ப கடும் பிரயத்தனம் செய்கின்றது.

தமக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்பதற்காக இந்தளவு வன்மம் கொண்டு ஒரு தனிநபர் மீது படுபாதகம் இழைக்கும் கனேடிய அரசு இறுதி முள்ளிவாய்க்கால் தருணத்தில் தமிழர்களுக்காக ஒரு குரல் கொடுத்திருந்தால் கனடாவிற்கு எதற்கு கப்பலில் அகதிகள் செல்லப் போகின்றார்கள்? கனடாவில் எதற்கு கால் வைக்கப்  போகின்றார்கள்? அதற்கு காரணம் என்று வதைபடும் உறவுகள் எதற்காக சிறைகளில் உயிரை கையில் பிடித்து தினம் தினம் மடிந்து கொண்டிருக்கப்போகின்றார்கள்?

நடந்து முடிந்து விட்டது பற்றி பேசிப்பிரயோசனம் இல்லை எனிலும், கப்பலில் வந்திறங்கிய மக்கள் மீதும் கப்பலினைத் தவற விடப்பட்டவர்கள் மீதும் வன்மைத்தினை தீர்ப்பதை விடுத்து அதற்கு காரணமான இலங்கை அரசினை கேள்வி கேட்க கனேடிய அரசிற்கு துப்பில்லை அத்துடன்  துணிவுமில்லை. போர்க்குற்றம் , இனவழிப்பு என்று சனல் நான்கும் வேறு பல ஊடகங்களும் கத்திக்கொண்டே தான் இருக்கின்றன. அதை முன்னின்று வினா எழுப்பி விசாரிக்க கனேடிய அரசிற்கு காலம் இல்லை துணிவில்லை. ஆக மொத்தத்தில் திராணியற்று செத்த பாம்பினை அடிப்பது போன்று நொந்து கெட்டு கிடக்கும் உறவுகளை எத்தனை நாட்களுக்கு அடித்து வேஷம் போட முடியும்?

தமிழனுக்கு எதிரி சிங்களவன் மட்டும் அல்ல இலங்கை அரசு மட்டும் அல்ல. அகதி என்று ஓடி வரும் அத்தனை உறவுகளையும் வதைக்கும் சம்பந்தப்பட்ட நாட்டு அரசுகளும் தான். உங்கள் நாட்டினை எதற்காக நாடி வருகின்றார்கள் காரணம் என்ன அதற்கான தீர்வு என்ன என்று ஆராய்ந்து நியாயம் பெற்றுக்கொடுத்த பின் அவர்களை நாடு கடத்தினால் அது நீதி. அதை விடுத்து பள்ளத்தில் துன்புற்று இருந்து  வதைபட்டு மீண்டு எழுந்து வருபவனை மீண்டும் பள்ளத்தில் தள்ளி விழுத்தும் அநியாயத்தினை தட்டிக்கேட்க எந்த அமைப்பு இருக்கின்றது? தமிழர்களுக்கு என்று யாருளர்?

ஆடிக்கொன்று ஆவணிக்கொன்று என்று போர்க்குற்ற ஆதாரங்கள் வெளி வந்த வண்ணம் தான் இருக்கின்றன. புதைகுழிகளும் தோண்டப்பட்டுக்கொண்டு தான் இருக்கின்றன. ஒரு சின்னம் ,ஒரு இலச்சினை ,ஒரு தலைமை அலுவலகம் ,பல கிளைகள் என்று உலகம் பூராவும் பரந்து கிடக்கும் அமைப்புக்கள் பொழுது போக்கிக்கொண்டு  தான் இருக்கின்றன. ஒரு இனத்தை கொன்று குவிப்பவர்கள் அதை செய்து கொண்டே இருப்பார்கள். தட்டிக் கேட்பதற்கு ஐ நாவும் கால அவகாசம் கொடுத்துக்கொண்டே இருக்கும் . ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் துன்புற்றுக்கொண்டே தான் இருக்க வேண்டும்.


இல்லாத கடவுளே நேரில் வந்து இறங்கினாலும், மனித உரிமைகள் அமைப்பு என்பதும் ஐ நா என்பதும் நிச்சயம் அநியாயத்தினை தட்டிக்கேட்கப்போவதில்லை. யாவும்  ஒரு மாயை.

அப்பேற்பட்ட இனவழிப்பினையே ஏன் என்று கேட்க முன் வர யாருமில்லை. அப்படிக்கேட்டாலும் நியாயமும் கிடைக்க போவதில்லை. நியாயம் கிடைக்கும் போது தமிழினம் உலகில் இருக்குமா என்பது சந்தேகமே.

இவ்வாறு இருக்கையில் தனிப்பட்ட நபர்களின் வாழ்க்கைக்கு குரல் கொடுக்க எந்த அமைப்பு இருக்கின்றது. ஒரு பெரிய வல்லரசான கனேடிய அரசினை எதிர்த்து குரல் கொடுக்க ஐ நாவே பின்னிற்கும் போது நிச்சயம் மதுரனுக்கு நீதி கிடைக்க போவதில்லை. அவனுக்கு மட்டுமல்ல கனடாவில் சிறையில் வாடும் பைந்தமிழிற்காகவும் யாரும் குரல் கொடுக்க போவதில்லை. தமக்குத்தாமே கதறி கண்ணீர் வடித்துக்கொள்ள வேண்டியதே.

சிதறிய கூட்டின் குருவிகளைப்போன்று திக்கொன்றாய் கிடக்கும் எத்தனையோ உறவுகள் யுத்தம் என்ற சூறாவளியில் சுழன்றடிக்கப்பட்டு சின்னாபின்னமாகி பின் கடற்சூரியன் என்னும் கப்பல் உருவாக்கிய கொந்தளிப்பில் இன்னும் சிக்கித்தவித்துக்கொண்டிருக்கும்  துரும்புகள் ஆக தத்தளித்துக்கொண்டிருக்கின்றனர்.

ஆனால் இறைவன் ஒருவன் இருப்பானாக இருந்தால் நிச்சயம் காலத்தால் பதில் கொடுப்பான். உறங்கும் உண்மைகள் நிச்சயம் விழிக்கும். அன்று யாவரும் கடந்த காலத்தினை மறந்திடுவர். இழந்து போன காலத்தையும் தருணத்தையும் நினைத்து வேதனைப்பட்டாலும் உண்மை விழித்து பொய் என்னும் திருடனை விலங்கிட்டு கொள்கின்ற அந்த மகத்தான நாளினை நோக்கி எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றாள் நிலா.

கனேடிய தேசத்தில் தந்தைக்காக ஏங்கும் பைந்தமிழின் குழந்தையின் நம்பிக்கையும் ஏக்கமும் அவளின் பாசமும் நிச்சயம் அவளையும் அவளின் தந்தையினையும் ஒன்று சேர்த்து வைக்கும்.

ஒரு நிமிடத்திற்கு மேல் பேச சக்தியற்று கிடக்கும் மதுரன் நிச்சயம் தன்னோடு இணைவான் என்ற அதீத நம்பிக்கையும் துணிச்சலும் இறை நம்பிக்கையும் கனேடிய அரசின் சதிகளை முறியடிக்கும் என்ற வைராக்கியத்தோடு உண்மை என்னும் தேவதையின் வரவிற்காக தினம் தினம் காத்திருக்கின்றாள்.

அவளின் பிஞ்சு மழலைகளும் தந்தையின் முகம் கண்ணுற்றும் அருகே சென்றிட அச்சமுற்று வேற்று மனிதனை நோக்கியது போன்ற பிரம்மையில் திகைத்து நிற்கும் கொடுமையினை கண்ணுற்று விக்கி அழுகின்ற மதுரன் முற்றிலும் நம்பிக்கையினையே தொலைத்து விட்டவனாக நடப்பது நடக்கட்டும் என்று ஒவ்வொரு சொற்ப நேரத்தையும் யுகமாக கழிக்கின்றான். இந்தப்பிஞ்சுக்  குழந்தைகள் என்ன குற்றம் இழைத்தனவோ?  

உண்மையின் நிழல் கூட இன்னும் தோன்றவில்லை. திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை நிற்க முடியும். அமைப்புக்களும் அரசுகளும் அறிக்கை விட்டு தம்மை விளம்பரப்படுத்தி ஆதாயம் தேடுவதோடு நிறுத்திக்கொள்கின்றன. அனால் இறைவன் அறிக்கை விட்டு வேடிக்கை பார்ப்பதில்லையே.

ஆக...! நாமும் பிரார்த்தனை செய்வதை தவிர வேறு வழியில்லை. சிதறிக் கிடக்கும் உள்ளங்களின் எதிர்பார்ப்பு நிறைவேறவும் அவர்களின் நீண்ட கால வலிகள் நீங்கி வாழ்வு வளம்பெறவும்  நாமும் இறைவனைப் பிரார்த்திப்போம்.


***முற்றும் ***

அரசி நிலவன்
தாய்லாந்திலிருந்து

Wednesday 19 February 2014

காலங்கடந்து மகுடம் சூடிய உண்மை...!!!


கனவிலும் நனவிலும்
கழன்று விழாத தூக்குக்கயிறு
காலம் கடந்து
காணாமல் போனது....!!!

இழந்து போன காலம்
இனி வராது தான்...!
தொலைந்து போன தருணங்களும்
தொலைத்து விட்ட உயிர்களும்
திரும்பிட போவதில்லை தான்...!


கட்டியணைக்க காத்திருக்கும்
கருவில் சுமந்து கண்ணீரில்
கரைந்து நிற்கும் தெய்வங்களை
கலைந்து நிற்கும் உடன் பிறப்புக்களை
கண்ணுக்குள் விம்பமாய் விழுத்திட துடிக்கும்
அந்த அரிய பொன்னான தருணம்
அழித்து விட்ட கடந்த காலத்தினை
அள்ளிக்கொடுக்கும் கைகளில்....

அம்மாவின் மடி சாய்ந்து
அழுது புரண்டு அங்கிருக்கும் தாய்  மண்
அள்ளித்தின்று உருண்டாலே போதுமே...!


உடன் பிறவா சகோதரியின்
உயிர் கருக்கலில்
உயிர்த்து வந்த வாழ்வு...!

உண்மைக்கு ஆயுள் அதிகம்..!
உயிரை தொலைத்து பிணமானவர்கள்
உயிர்த்து மீண்டார்கள்...!

உயிரற்று மூர்ச்சை ஆகிக்கிடந்த
உடலமாய் துள்ளி எழுந்த உண்மை..!
காலங்கடந்து மகுடம் சூடிக்கொண்டது...!

அன்னைகளின் விழி நீரின் ஆழத்தில்
அமிழ்ந்து போன மரணம்....!
வற்றிப்போனாலும் கால்களை
சுற்றி வராத வரம் வேண்டும்...!









Monday 17 February 2014

கடற்சூரியன் (MV SUNSEA) தரையில் உருவாக்கிய கொந்தளிப்பு...!!! (பாகம் 8)


2011  இன் முற்பகுதியில் தாய்லாந்தின் குடிவரவு தடுப்பு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மதுரன், அங்கு தொடர்ந்தும் இருக்க முடியாத சூழ்நிலையில் நாடு திரும்புவதாக அங்கிருந்து வெளியேறி மலேசியா சென்று மீண்டும் தாய்லாந்தில் வெளியேறிய போது , ஏற்கனவே மூன்றாம் நாட்டுக்கான நேர்முகத்தேர்வினை பூர்த்தி செய்த நிலையில் நாட்டை விட்டு வெளியேறியதன் காரணமாக ஐ நா அகதிகள் உயர் ஸ்தானிகராலயம் மதுரனின் வழக்கினை நிலுவையில் வைத்திருந்தது. 

அந்தக்காலப்பகுதியில் மீண்டும் கனேடிய காவல் துறையினர் மோப்பம் பிடித்து மதுரனின் இருப்பிடம் அறிந்த, ஒரு எட்டப்பனுக்கு பணம் கொடுத்து நேரடியாகவே வந்து சந்தித்துக்கொண்டனர். அதாவது சிறையில் இட்டுக்கொள்ள முயற்சிக்காமல் வாரம் தோறும் பாங்கொக்கில் உள்ள ஒரு குறிப்பிட்ட நட்சத்திர விடுதியின் வரவேற்பு கூடத்தில் மதுரனையும் நிலாவினையும் சந்தித்து மூளைச்சலவை செய்தனர். 

அதாவது கனடாவில் குரியுரிமை மற்றும் வீடு வாகன வசதி பணம் போன்ற வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கின்றோம் தற்போது ஆட்கடத்தலில் ஈடுபட்டுள்ள கும்பலினை காட்டிக்கொடுக்குமாறும் அதற்கான வழிமுறையாக தாமே பணமும் நபர்களையும் ஒழுங்கமைத்து தருகின்றோம் என்றும் ஆட்கடத்தல் முகவர்களிடம் தொடர்பு கொண்டு வியாபாரம் பேசி நடித்து அவர்களைக்காட்டிக்  கொடுக்குமாறும்  கிட்டத்தட்ட இரு மணி நேரம் இடம்பெறும் அந்த சந்திப்பின் போது தம்மை கனேடிய தூதரக அதிகாரிகள் போன்று காட்டிக்கொண்ட அவர்கள் நாட்கள் செல்ல செல்ல தமது கடலை மதுரனிடத்திலும் நிலாவிடமும் வேகாது என்று அறிந்து மிரட்ட ஆரம்பித்தனர்.

அதாவது தமது அடையாள அட்டையினை காண்பித்து தம்மை சர்வதேச கனேடிய காவல் துறை அதிகாரிகள் என்று அடையாளப்படுத்திக்கொண்ட அவர்கள் "உங்கள் இருவரையும் கடற்சூரியன் வழக்கில் தொடர்பு படுத்தி சிறையில் தள்ளுவோம். அதன் பின் உங்கள் குழந்தை அனாதரவாகி விடும்.  எனவே எமக்கு ஒத்துழைப்பு கொடுத்தால் உங்கள் மகன் சர்வதேச பள்ளியில் கல்வி கற்கலாம். கனடாவில் ஆடம்பரமாக வாழலாம் "  என்று தமது தொலைபேசியினை வைத்து கனடாவில் உள்ள மேலிடத்திற்கு தொடர்பு எடுத்து மதுரன் நிலாவின் உரையாடலை பதிவு செய்தவாறு பேசிக்கொள்வார்கள். 

அன்றைய கால கட்டத்தில் தான் மதுரனும் நிலாவும் நன்கு புரிந்து கொண்டார்கள். இவ்வாறு தான் இங்குள்ள விலை போன தமிழர்கள் தம்மைக் காட்டிக்கொடுத்தார்கள் என்பதனை. அன்று மதுரனோ நிலாவோ  யாரையும் காட்டிக் கொடுத்திருந்தால் கனடாவில் அவர்களுக்கு  வசதியான வாழ்க்கை அமைந்திருக்குமோ  இல்லையோ நிச்சயம் இன்றைய மதுரனின் சிறை வாழ்வு தடுக்கப்பட்டிருக்கும். மதுரனைப்போல் அல்லாது நேரடியாக பணம் பெற்று ஆட்கடத்தல்  முகவர்களாக செயற்பட்ட எத்தனையோ தமிழர்கள் இன்று பாங்காக்கில் கடவுச்சீட்டு இல்லாமலே சுதந்திரமாக நடமாடித்திரியும் இரகசியம் என்னவென்பது இப்போது உணர்ந்து கொள்ள முடியும். 

2011 இன் ஐப்பசியில் இருந்து தை வரை , கிட்டத்தட்ட மூன்று மாத காலமாய் மதுரனுக்கும் நிலாவிற்கும் பின்னால் அலைந்து கொண்ட அந்த ஒரு பெண் மற்றும் ஆண் கனேடிய காவல் துறை அதிகாரிகள் 2012 தை மாதத்தின் பின் தொடர்பே இல்லாமல் போய்விட்டனர். 

மதுரன் நிலா இருவருக்கும் காட்டிக் கொடுப்பு என்பது தெரியாது என்பதனை விட யார் ஆட்கடத்தலில் ஈடுபடுகின்றார்கள் என்பதே அறியாத போது எவ்வாறு விபரம் கொடுக்க முடியும். அவர்கள் முக்கியமாக தேடுவது மிகப்பெரிய ஒரு நபர் ஒருவரையே. அவரின் பெயரைத் தவிர அவரின் விபரங்கள் அறியாத இவர்களால் தகவல் எவ்வாறு கொடுக்க முடியும். எந்தவிதமான தகவல்களும் மதுரனும் நிலாவும் வழங்காமையே மேலும் மேலும் கனேடிய அதிகாரிகளுக்கு அவர்கள் மேல் சந்தேகம் வலுக்க பிரதான காரணமாகியது. 

ஏற்கனவே கனேடிய காவல் துறையின் சந்தேக நபரான மதுரனை பணத்திற்காக மற்றவர்கள் காட்டி கொடுத்தது போன்று வேறு யாரையாவது கை நீட்டிக்காட்ட மதுரனுக்கோ நிலாவிற்கோ அதிக நேரம் எடுக்காது. எல்லோரும் நேர்மை பற்றி அளவளாவலாம். ஒரு சிலராலேயே அதன் வழியில் ஒழுகிட முடியும். 

உதாரணமாக இலங்கையின் கருணா என்பவர் புலிகள் அமைப்பில் பல காலம் ஒரு தளபதியாக இருந்தவர். அதே நேரம் இறுதி யுத்தத்தில் சரணடைந்த எத்தனையோ போராளிகளில் இன்னும் சிலர் இருக்கும் இடமே தெரியவில்லை உயிரோடு இருக்கின்றார்களோ என்று கூடத்  தெரியாது. 

அந்தப் போராளிகளை விட கருணா என்பவர் அதிக காலம் போராட்டத்தில் இருந்து பல குற்றச்சாட்டுகளோடு தொடர்பு பட்டும்  இலங்கை அரசிற்கு இன்று வரை உயர்ந்த விசுவாசியாக இருப்பதற்கும், சாதாரண போராளிகள் சிறையிலும் அல்லது இல்லாமலும் போனதற்கும்  என்ன காரணம். சுயநல நோக்கிற்கான காட்டிக்கொடுப்பு ஒன்றே. அந்த காட்டிக்கொடுப்பு ஒன்றினை நிகழ்த்தினால் நாட்டில் ஆட்சி  கிடைக்கும். இல்லாவிடில் இறந்து போனாலும் மனச்சாட்சி ஒன்றில் மட்டும்  நாம் ஆட்சி புரியும் பேறு கிடைக்கும். இங்கு இரண்டாவது ஆட்சி நடத்தும் மதுரனும் நிலாவும் எந்த ஆட்சி உலகில் மாறினாலும் அவர்களே அவர்களின் மனச்சாட்சிக்கு மகுடம் சூட்டிய ஆட்சியாளர்கள்.


அந்த கனேடிய அதிகாரிகள் தை மாதத்தின் பின் தாம் கனடாவுக்கு மாற்றல் ஆகி செல்வதாகவும் ஏதும் தகவல் தெரிந்தால் மின்னஞ்சலுக்கு தகவல் கொடுக்குமாறும் தெரிவித்து இறுதியாக விடைபெறும் போது வைத்தியசாலையில் வைத்து மதுரனிடம் கைப்பற்றிய மடிக்கணினி  மற்றும் தொலைபேசிகளை திருப்பி ஒப்படைத்து விட்டு சென்றார்கள். 

அதன் பின் பணியில் இணைந்த வேறு அதிகாரிகள் மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பித்தனர். அதாவது தாய்லாந்து வந்தடைந்து தமிழர்களை சந்தித்து மறுபடி விலை பேச இருக்கவே இருந்த மதுரனின் தலை உருள மதுரனின் வீட்டிற்கே சென்று தாய்லாந்து குடிவரவுத்துறை கைது செய்து சென்றது. எந்த வித பிரச்சினையும் இல்லை. தகவல் தெரிந்தால் கொடுக்கவும் என்று சென்ற பழைய கனேடிய அதிகாரிகளிடம் இருப்பிட முகவரியில் இருந்து தொலைபேசி வரை கொடுத்து வைத்த மதுரன் குற்றம் செய்பவனாக இருந்திருந்தால் அவர்கள் சென்றதும் நாட்டினை விட்டுத்  தப்பியல்லவா சென்றிருக்க வேண்டும்.

அதற்கிடையில் ஐ நா மதுரனுக்கான வழக்கினை மீண்டும் செயற்படுத்தி மூன்றாம் நாட்டிற்கு அவர்களது வழக்கினைக் கொடுக்கும் தறுவாயில் இருக்கும் போது கனேடியச்சதியால் அது இன்னும் கால தாமதமாக்கப்பட்டது. 

அதாவது இலங்கையில் பல போராளிகளை காட்டிக்கொடுத்து தடுப்பு முகாமில் இருந்து வெளியேறி பணத்திற்காக  மூன்று பெண்களின் வாழ்வினை சீரழித்து விட்டு தாய்லாந்திற்கு தப்பி ஓடி வந்த ஒரு துரோகி(ஏற்கனவே தமிழ் இணையத்தளங்களில் வெளிவந்த செய்தி) தாய்லாந்தில் அகதிக்கான கோரிக்கை விடுத்து ஐ நாவால் அகதியாக அங்கீகரிக்கப்படாமல் இருந்த சமயம், கனேடிய காவல் துறை அவனை கொள்வனவு செய்து மதுரனுக்கு எதிராக ஐ நாவில் முறைப்பாட்டினை பதிவு செய்ய வைத்தது.

அதாவது அவனிடம் இருந்து மதுரன் பணம் பெற்று ஏமாற்றிகொண்டதாக பதிவு செய்யப்பட்ட அந்த முறைப்பாடு மதுரனின் ஐ நா வழக்கினை மூடும் நிலைக்கு நெருங்கியது. காரணம் சாதாரண நபர்களின் முறைப்பாட்டினை ஏற்காத ஐ நா ஏற்கனவே அகதி கோரிக்கை விடுத்த ஐ நாவில்  பதிவு  செய்து கொண்ட ஒருவரால் முறைப்பாடு செய்யுமிடத்து அது உடனடியாக நடவடிக்கை எடுத்தே தீரும்.

நிலாவினையும் மதுரனையும் உடனடியாக அழைத்து ஒரு நாளிலேயே விசாரித்த ஐ நா அவர்களின் வழக்கினை தள்ளுபடி செய்யும் இறுதிக்கட்ட நேரத்தில் உண்மையினை உணர்ந்து கொண்டது.

பெண்களின் வாழ்வினை சீரழித்த காரணத்தால் அதனை ஊடகங்களுக்கு தெரியப்படுத்திய நிலா மீது முன் விரோதம் கொண்ட அந்த நபர் தனது ஐ நா வின் அகதி ஏற்பு வழக்கினையே அடகு வைத்து கனேடியர்களிடம் பணம் பெற்று இந்த முறைப்பாட்டை வழங்கியிருக்கின்றார். விளைவு ஐ நா அவரது வழக்கினை நிராகரித்து தள்ளுபடி செய்து கொண்டது.

இது அந்த நபருக்கான தோல்வி அல்ல. கனேடிய அதிகாரிகளுக்கு நிலா மற்றும் மதுரனால் அள்ளிப்பூசப்பட்ட கரியே. அந்தப்படுதொல்வியினை பொறுத்துக் கொள்ள முடியாத கனேடிய காவல் துறையினர் வேறு வழியின்றி தாய்லாந்து குடிவரவு துறையினருக்கு அழுத்தம் கொடுத்து குடிவரவு சட்டங்களை மீறினார் என்ற குற்றச்சாட்டில் மதுரனை மீண்டும் கைது செய்ய வைத்தது. 

2012 ஆனி 29  அன்று காலை மதுரனின் இருப்பிடம் புகுந்த குடிவரவுத்துரையினர் அங்கிருந்த கணினி தொலைபேசிகளை எடுத்துச்சென்றனர். கணினியில் தேசியத்தலைவரின் அரிய புகைப்படங்களை சேமித்து வந்திருந்த நிலாவிடம் கனேடிய அதிகாரிகள் " LTTE இற்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு ? உனது கணவர் அதன் உறுப்பினரா? ஏன் இந்த புகைப்படங்கள் வைத்திருக்கின்றீர்கள்? என்ற பல வினாக்களை தொடுத்தனர். காரணம் எந்தவிதமான ஆதாரங்களும் இல்லையே . எனவே புலி என்று குற்றச்சாட்டு கொடுத்து சிறையிடலாம் என்ற எண்ணமாக இருந்திருக்கலாம். 

இவர் எமது தேசியத்தலைவர். இவரை நாங்கள் நேசிக்கின்றோம். இவரது படங்கள் வைத்திருந்தால் புலி உறுப்பினர் என்று அர்த்தமல்ல. அப்படி இருந்தாலும் உங்களால் என்ன செய்ய முடியும்? தாய்லாந்து அதிகாரிகளே அதைப்பற்றி கேட்கவில்லையே நீங்கள் ஏன் கேட்கிறீர்கள்? என்று உரைத்த நிலாவிடம் ஏதும் பேசாத கனேடிய காவல் துறை அந்த கணினியினையும் தொலைபெசியினையும் திருப்பி ஒப்படைத்து சென்றது.


குடிவரவு தடுப்பு மையத்தின் சாதாரண இலங்கையர்கள் உள்ள அறை 3 இல் தடுத்து வைக்கப்பட்ட மதுரனின் உண்மை நிலை விளங்கிக்கொண்ட ஐ நா அகதிகள் உயர் ஸ்தானிகராலயம் துரித கதியில் மீண்டும் மூன்றாம் நாட்டிற்கான நேர்முகத்தேரிவினை நடாத்தி ஐக்கிய அமெரிக்காவிற்கு அவனது வழக்கு கொடுக்கப்பட்டது.

இதற்கிடையில் மதுரன் கைதாகும் போது கர்ப்பிணியாக இருந்த நிலா கையில் குழந்தையோடு தவிப்பதை கண்ணுற்ற ஐ நா வானது தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றின் ஊடாக வலிந்து சென்று மதுரனை பணப்பிணையில் விடுதலை செய்தது. முற்று முழுதாக மதுரன் மீது கொண்ட நன்னடத்தை காரணமாக அந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் தமது பணத்தினை செலுத்தியது. 

மூன்றாம் நாட்டிற்கு பரிந்துரைக்கப்படுபவர்களே பிணையில் வெளியேற முடியும். அத்துடன் ஒவ்வொரு பதினைந்து நாட்களுக்கும் கையெழுத்தும் இட்டு செல்ல தடுப்பு மையம் சென்று வர வேண்டும். இரண்டாவது தடவையாக கையெழுத்திட சென்ற மதுரன் வீடு திரும்பவில்லை. அங்கும் கனேடிய காவல் துறை தனது சதி வலையினை விரித்து அந்த பிணையினை இல்லாமல் ஆக்கியது.

மதுரனை வெளித்தொடர்புகள் இன்றி தனியாக அடைத்து வைத்ததோடு அவனை அவனது மனைவி பிள்ளை தன்னும் சென்று பார்க்க முடியாதவாறு அவனுக்கான பார்வையிடலும் தடுக்கப்பட்டு கிட்டத்தட்ட மூன்று மாத காலமாக தடுத்து வைத்திருந்தனர். தாய்லாந்து குடிவரவுத்துறையினரிடம் சென்று விசாரித்த நிலாவிடம் அவர்கள் " கனேடிய காவல் துறையின் விசாரணை இருப்பதால் யாரும் சந்திக்க முடியாது " என்று கூறினர். ஆனால் இன்று வரை அதாவது இரு ஒன்றரை வருடங்கள் நிறைவடைந்த நிலையில் இன்னும் விசாரணையே இடம்பெறவில்லை. விசாரணையா அல்லது பழிவாங்கலா?

ஆத்திரம் அடைந்த நிலா கனேடிய காவல்துறையினரின் தொலைபேசிக்கு அழைத்து அவர்களை சந்திக்க விரும்புவதாக தெரிவித்ததும் உடனேயே சம்மதித்து சந்தித்த அவர்களிடம் என்ன விசாரணை எதற்காக மதுரனை தடுத்து வைத்திருக்கின்றீர்கள் என வினவியதும் தமக்கு தெரியாது தாய்லாந்து குடிவரவுத்துறையினரிடம் விசாரியுங்கள் என்று குத்துக்கரணம் அடித்த அவர்களிடம் நிலா " எனது கணவரோடு தொடர்பு கொள்ள அனுமதிக்காவிடில் மனித உரிமைகள் அமைப்பிற்கு முறைப்பாடு செய்து விட்டு இலங்கை சென்று தற்கொலை செய்வோம். வயிற்றில் இருக்கும் குழந்தையின் சாவிற்கும் கனேடிய அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் " என்று உரைத்து விட்டு எழுந்ததும் , அவர்கள் " எமக்கு சில சந்தேகங்கள் உள்ளன அதை தீர்க்க வேண்டும் " என்று இன்னொரு நாள் அவளை வரவழைத்து வினவிய வினாக்கள்  நிலாவிற்கு சிரிப்போடு இந்த நிலையில் கனேடிய காவல் துறை உள்ளதா என்ற ஏளனமும் ஏற்பட்டு கொள்ள காரணமாய் அமைந்தன.

ஆம்...கணினியில் இருந்த சில நிலாவின் கவிதைகள் மற்றும் கட்டுரைகளைப்பற்றி ஆழமாக விசாரித்த அவர்கள் அவளின் முகப்புத்தக மற்றும் வலைப்பூ முகவரிகளைப்பெற்றுக்கொண்டு இன்று வரை அவற்றினை தொடர்கின்றனர்.

அத்துடன் பிறக்க இருக்கும் குழந்தைக்காக எண் சோதிடப்படி தமிழ்ப்பெயர்கள் எழுதி சேமித்து வைத்திருந்த ஆவணத்தினை பிரதி எடுத்து வைத்திருந்து அவை யாருடைய பெயர்கள் என்று பல வினாக்கள் தொடுத்த அவர்களுக்கு அதனை விளக்கி சொல்வதற்கிடையில் நிலாவிற்கு  போதும் போதும் என்றாகி விட்டது. ஆங்கில எழுத்தின் "L"  வரிசையில் ஒரு பத்து பெயர்கள் அருகில் அந்த எழுத்துக்களுக்கான எண்களின் கூட்டுத் தொகையோடு இருப்பதனை அவர்கள் அறிந்து கொள்ள முடியாதவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு தகவல் கொடுக்கும் தமிழர்களுக்கு தெரிந்திருக்கும் அன்றோ?

ஆக ஆதாரம் ஒன்றினை உருவாக்க பிரயத்தனப்பட்ட கனேடிய படை ஆபிரிக்காவில் மதுரனுக்கு சொந்தமாக நிலம் அதாவது நைஜீரியா நாட்டில் காணி கொள்வனவு செய்து இருக்கின்றீர்களா? என்று வினவியதும் நிலாவிற்கு சிரிப்பே அடக்க முடியவில்லை. அவள் சிரிப்பதனை பார்த்து இருக்கையில் இருந்து எழுந்து கொண்ட அந்த அதிகாரி மதுரன் அங்கு போயிருக்கின்றாரா? என்றும் வினவினார்.

சம்பந்தமே இல்லாத நாட்டிற்கும் மதுரனுக்கும் தொடர்பு படுத்திய அவர்களிடம் "ஒவ்வொரு மாதமும் எமது வாழக்கை சக்கரத்தினை நகர்த்துவதே ஒரு பெரிய திண்டாட்டம். தாய்லாந்தில் பணிபுரியவோ அன்றாட சீவனத்திற்கு உழைக்கவோ முடியாது. தெரிந்தவர்களின் உதவியில் வாழ்க்கை நகரும் போது நிலம் கொள்வனவு செய்யும் நிலை எமக்கில்லை. அவ்வாறு இருந்தாலும் நாம் இலங்கையில் தான் கொள்வனவு செய்வோம். இப்படி அந்நிய தேசத்தில் வாங்க வேண்டிய தேவைதான் என்ன? என்ன காரணமாய் இதைக்கேட்கின்றீர்கள் தெரிந்து கொள்ள முடியுமா என்ற நிலாவின் கேள்விக்கு அவர்கள் கணினிப்பிரதி ஒன்றினைக்கொடுத்தார்கள்.

அதாவது அந்த கணினியில் இருந்து நைஜீரியா நாட்டில் நிலம் வாங்க இணையத்தில் தேடல் செய்து கொண்டதற்கான ஆதாரமாய் ஒரு பிரதி. உடனே அவள் "மதுரன் கணினியில் முகப்புத்தகம் மற்றும் தமிழ் செய்திகளை பார்வையிடுவதைத் தவிர வேறெதுவும் செய்வதில்லை. இது எத்தனையாம் ஆண்டு தேடல் செய்யப்பட்டது என்று தெளிவாக கூற முடியுமா" என்றதும், அதன் பின் அந்த பிரதியை மேலும் கீழும் பார்த்து விட்டு 2009 என்றார்கள்.

அந்தக்காலப்பகுதியில் மதுரனின் கையில் அந்த கணினி இருந்திருக்கவில்லை. 2011 இல் அவன் முதற்தடவை வைத்தியசாலையில் கைதாகும் போது அவனிடம் இருந்த மடிக்கணினியினை ஏற்கனவே கனேடியப்படை எடுத்துச்சென்ற காரணத்தினால் அதன் பின் தாய்லாந்தில் அந்தக் கணினி அரைப்புதிதாக 2011 இன் பிற்பகுதியில் தான் மதுரனால் கொள்வனவு செய்யப்பட்டது.

அதற்கான பற்றுச்சீட்டு ஆதாரம் நிலாவினால் அடுத்த சந்திப்பில் கொடுக்கப்பட்டதும் எதுவும் பேசாத அந்த அதிகாரியிடம் "எனது கணவரினை நேரில் பார்த்தும் அவரின் குரல் கேட்டும் பல மாதங்கள் ஆகின்றது. அவரை தனிமைப்படுத்தி வைக்காமல் தயவு செய்து ஏனைய தமிழ் தடுப்பு அகதிகளோடு இணைத்து விடுங்கள் இல்லையெனில் என்னையும் உள்ளே அடைத்து விடுங்கள் அல்லது எல்லோரையும் கொன்று விடுங்கள்"  என்று அவள் கண்ணீரோடு கோபமாய் கேட்டாள். தாய்லாந்து அதிகாரிகளுடன் பேசி அதனைச்செய்து விடுவதாகவும் தமது சந்தேகங்களை தீர்த்து வைத்தமைக்கு நன்றியினையும்  கூறி விடைபெற்றனர்.

அதற்கு முதலே நிலா " நாங்கள் சட்ட ரீதியாக ஐ நா மூலமாக இன்னொரு நாட்டில் குடியேறுவதற்காக பல இன்னல்கள் மத்தியில் நான்கு ஆண்டுகளுக்கு மேலாக காத்திருக்கின்றோம். நீங்கள் இங்கு வந்து இவ்வாறு துன்பங்கள் கொடுத்தால் நாம் என்ன செய்வது ? அப்போ எம்மை சட்ட விரோதமாய் இன்னொரு நாட்டில் குடியேற நீங்கள் தூண்டுகின்றீர்களா? உங்களது நோக்கம் தான் என்ன? " என்றவளிடம்  அவர்கள் இல்லை என்ற ஒரு சொல்லோடு  மதுரனின் ஐ நா வழக்கு பற்றியும் மூன்றாம் நாடு எது என்றும் கேட்டு அறிந்து கொண்டனர். அதன் பிரதிபலிப்பு இன்றைய மதுரனின் நிலை என்பது தற்போதே நிலாவினால் உணர்ந்து கொள்ள முடிந்தது.

ஓரிரு நாளில் மதுரனின் தடைகள் நீங்கி அவன் தொலைபேசி மூலமாக நிலாவுடன் தொடர்பு கொண்டான். ஐக்கிய அமெரிக்காவின் நேர்காணல் முடிவு சாதகமாகி மருத்துவ பரிசோதனையும் முடிவுற்று விமானப் பயணச்சீட்டிற்காக காத்திருந்த மதுரன் நிலாவிற்கு ஐக்கிய அமெரிக்க மீள்குடியேற்ற சேவை நிறுவனம் அவர்களின் வழக்கு முடக்கப்பட்டதாக  இடி ஒன்றை கொடுத்தது.

அந்த நிலுவையில் இருக்கும் காலப்பகுதி இன்று ஒரு வருடம் கடந்த நிலையில் இன்னும் செயற்படுத்த முடியாத நிலையில் இருப்பதன் காரணம் இது வரை  தெரியாமல் ஐ நா இருந்தாலும் நிலாவிற்கும் மதுரனுக்கும் அதன் முக்கிய பின்னணி நிச்சயம் விளங்கும்....!

(தற்போது மிக மோசமான நிலையில் இருக்கும் மதுரனுக்கு  மருத்துவ சிகிச்சை வழங்கப்பட வேண்டும் என்பதற்காகவும் அவனின் நிலை வெளி உலகத்திற்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காகவும் எழுதஆரம்பித்த இந்த தொடர் இணயத்தளங்களில் வலம் வருகின்ற இந்த ஒரு மாத கால இடைவெளியில் மதுரனின் தொடர்பு துண்டிக்கப்படுள்ளது.இன்று வரை அவரிடமிருந்து எந்தவிதமான தகவலும் இல்லை. அத்துடன் அவரிற்கான பார்வையும் தடை செய்யப்பட்டுள்ளதோடு அவரை ஒரு நாற்சுவரிற்குள் அடைத்து வைத்திருக்கின்ற கொடுமையினை தட்டிக்கேட்க யாருமே இல்லை.  ஐ நாடுகள் அகதிகள் உயர் ஸ்தானிகராலயமும் சென்று பார்வையிடாமல் உயிரோடு கொல்கின்ற இந்த அவல நிலையினை யாரிடம் சென்று முறையிடுவது? )

தொடரும்........

அரசி நிலவன்
தாய்லாந்திலிருந்து 



அடுத்த பதிவிற்கு செல்ல 
http://arasikavithaikal.blogspot.com/2014/03/mv-sunsea-9.html

Wednesday 12 February 2014

கற்பனை...!!!


உருளைக்கிழங்கு கறி பிரட்டலும்
உனக்குப் பிடித்த பாகற்காய் பொரியலும்
உளுந்து வடை பாயசமுமாய்
உன்னை உட்கார வைத்து
உன் முகம் பார்த்து நான்
உவகையோடு பரிமாற - நீ பார்க்கும்
உந்தன் ஓரப்பார்வையின் நீளத்திற்காக
ஊர்ந்து ஊர்ந்து மெதுவாக அகப்பை துளாவும்
என்னை தட்டி நீ இல்லாத நிஜத்தினை உணர வைக்கும்
எம் செல்ல மகனின் நினைவே இன்றிய
கற்பனையில் கட்டுண்ட கொடுமை தொடர்கின்றது
கன காலமாக...

கற்பனையில் உன் முகம் பார்த்து
கடதாசியில் உன் உணர்வுகளை அறிந்து
கரைந்த காலங்கள் கடந்து இன்று
கணப்பொழுதுகள் தன்னும் கற்பனையில் தான்
கடந்து செல்கின்றன...!

கற்பனை என்பதனையே உணர முடியாத நிலையில்
கடந்த கால உன் நினைவுகள் நிகழ் காலத்தில்
நிகழுவதாய் நிதர்சனத்தினை தொலைத்து
நின்று நிலை தடுமாடுகின்றேன்....!

முற்றிய நோயின் அறிகுறியோ...!
முழுவதும் உன் நினைவுகள்
முக்காடிட்டு மூலைக்கொன்றாய்
முனகியபடி கிடக்க - நானும்
முன்னுக்கு பின்னாக அவற்றை உயிர்ப்பிக்கும்
முயற்சியில் மூழ்கி நிஜம் மறந்த பைத்தியமாக
முடிவில்லாத கற்பனையில்.....

முகம் பார்த்து முழுதாய் வருடம் ஒன்று
முழுங்கப்பட்டதன் எதிரொலியோ...?

முகவரி தொலைத்த தபால்களாக
முடங்கி கிடக்கும் நீயும் நானும்
முற்று முழுதாய் கற்பனையில்
முகம் பார்த்து தான் இறுதியில்
முடிவுரை பெற வேண்டுமோ??

கடந்து போன கண்ணீரின் அத்தியாயத்தின் பின்
கடக்கின்ற கற்பனை செயல்கள் ஒரு நிலையில்
கரை தாண்டும் போது கடைசி அந்த நிமிடமும்
கண்மணிகளுக்கான கற்பனை உலகை மீண்டும்
கரங்களில் கொடுத்து தொடரத்தான் போகின்றது...!!

அரசி நிலவன் 

Monday 10 February 2014

கடற்சூரியன் (MV SUNSEA) தரையில் உருவாக்கிய கொந்தளிப்பு...!!! (பாகம் 7)


2010 ஆவணி 13 இல் கனடாவினை அடைந்த "கடற்சூரியன்"(MV SUNSEA) என்ற கப்பலில் சென்ற 492 தமிழ் ஏதிலிகளில் 380 ஆண்களும்  62 பெண்களும்  49 குழந்தைகளும் அடங்குவர். இவர்களில் பலர் கனேடியக்காவல் துறையினரின் விசாரிப்புக்களின் பின்பு வெவ்வேறாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டனர்.

பின்னர் படிப்படியாக கிட்டத்தட்ட எல்லோரும் விடுவிக்கப்பட்டாலும் சிலர் இன்று வரை சிறையில் வாடுகின்றனர்.

ஆரம்பத்தில் கப்பலின் மாலுமியும்  மற்றும்  பைந்தமிழ் என்னும் எரிபொருள் பொறியியலாளரும் கனேடியப்படைகளால் வன்கூவர் பிரதான சிறையில் இடப்பட  அவரது மனைவி  கர்ப்பிணியான இனியா அகதிகள் சிறையில் உதவியின்றி தனியே தவித்தாள். கூடவே சென்றிருந்த தெரிந்தவர்கள் உறவினர்கள் யாவரும் கைவிட்டு அவள் தவிப்பதைக் கண்ணுற்றும் குருடர்களாயினர். நிறை மாதக்கர்ப்பிணி என்ற மனிதாபிமானமே அற்று மிக மோசமாக நடாத்தப்பட்ட இனியாவின் அந்த நிலைக்கு கப்பலில் அவளின் கூடவே பயணம் செய்த ஒருவர் அவளை ஒரு விடுதலைப்புலி உறுப்பினர் என வழங்கிய ஒரு  பொய்யான தகவலே காரணமாகும்.

"நாட்டிற்குள் அனுமதிக்க முடியாத  மற்றவர்களுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய ஒரு நபர் " என்ற வழக்கினை அந்த நிறைமாதக்கர்ப்பிணி மேல் பதிவு செய்த கனேடிய எல்லைப்பாதுகாப்பு பிரிவினர் (CBSA) , இக்குற்றச்சாட்டினை மறுத்த இனியாவினை  மீண்டும் மூன்று மாத காலம் தடுப்புக்காவலில் வைத்தனர்.அதாவது அந்த கால அவகாசத்திற்குள் தகுந்த ஆதாரத்துடன் இனியாவினை விடுதலைப்புலி உறுப்பினர் என நிருபிக்கின்றோம் எனக் கூறி விடுதலை செய்யப்பட்ட அவளினை மீண்டும் நீதிமன்ற ஆணை மூலம் தொடர்ந்தும் தடுப்புக்காவலில் வைத்திருந்தார்கள்.

சிறை வைக்கப்பட்டிருந்த அந்த நெருக்கடியான சூழலில் தாய்நாட்டில் உள்ள உறவுகளுடன் தொடர்பு கொள்ளத்தன்னும் பணமின்றித்தவித்த இனியாவினை ஏதோ தீவிரவாதியினை நோக்குவதைப்போன்று அங்கிருந்த ஏனைய தமிழ்ப்பெண்கள் நோக்கினர்.காவல்துறை அங்கு பார்வையிட வரும் தருணங்களில் அவளை விட்டு விலகி இருப்பதும் தம்மை தெரிந்ததாக காட்டிக்கொள்ள வேண்டாம் என்று எச்சரிப்பதுமாக அங்கிருந்த ஈன மனம் படைத்தவர்கள் நடந்து கொண்டார்கள். ஒரு சிறு உதவி கூட அவளுக்கு அவர்கள் செய்ய எத்தனிப்பதுமில்லை. கையில் பணமின்றி தவித்த இனியா. அந்தச்சிறையில் இருந்த அந்தப் பெண்களின் தலையில் பேன் பார்த்து அதன் மூலமாக கிடைக்கும் ஒன்று இரண்டு கனேடிய டொலர்களை வைத்து ஈழத்தில் உள்ள தனது உறவுகளுடன் தொடர்பு கொண்டு தனது வழக்கிற்கு தேவையான ஆவணங்களைப்பெற்றுக்கொள்ளவும் கனடாவில் வழக்கறிஞருக்கான பணத்தினை ஒழுங்கு செய்யவும் முயற்சி செய்தாள்.

அந்தக்கனேடியச்சிறையில் ஒரு தனி நபருக்கே போதுமான உணவே கிடைக்காத போது  ஒரு நிறைமாதக்கர்ப்பிணிக்கு போதுமானதாக இருக்க முடியுமா? கையில் பணம் இன்றி ஏனையோர் உண்ணும் உணவுகளைப் பார்த்து ஏங்கி , சிறிது நேரம் நிற்கவே  சக்தியற்று பல மணி நேரம் நின்று கொண்டு தமிழ் பெண்களுக்கு தலையில் பேன் பார்த்து பணம் பெற வேண்டிய கால கட்டம் அவளுக்கு ஏன் ஏற்பட்டது? ஒரு கர்ப்பிணியினை நிற்க வைத்து வேலை வாங்கி பணம் கொடுக்கும் அளவிற்கு தமிழினத்தின் மனிதாபிமானம் தேய்ந்து போனதை எண்ணி வெட்கி தலை குனியும் நிலை அதிகரித்து செல்கின்றதே அன்றி குறைந்து விடவில்லை.


தாய்லாந்தில் நிர்க்கதியாகிய பல உறவுகளையும் போரால் பாதிக்கப்பட்ட எத்தனையோ உறவுகளையும் தன்னிடத்தில் அடைக்கலம் கொடுத்து பசியாற்றிய இனியா தனது குழந்தை பிறக்கும் தருணத்தில் பசியோடு தவித்த கொடுமையினை தனக்குள்ளே புதைத்து வைத்தாலும் அது இன்று வேர் விட்டு கிளை பரப்பி நிற்கின்றது.

அன்றைய நாளில் அதாவது குழந்தை பிறக்கும் தருணத்தில் தன்னும்  அதனை அவளது கணவனுக்கு தெரியப்படுத்த அனுமதிக்க முடியாத இறுக்கமான நிலையில் அவள்  சிறை வைக்கப்பட்டு இருந்தாள். குழந்தை பிறந்தும் உளவியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட அவள் உண்ணவோ உறங்கவோ முடியாமல் அவதிப்பட்டாள். ஏதேச்சையாக தொலைபேசி அழைப்பினை மேற்கொண்ட அவளது கணவன் பைந்தமிழுக்கு குழந்தை பிறந்த செய்தி தெரிவிக்கும் நிலையில் கனேடிய சட்டம் இருக்கின்றது என்றால் நம்ப முடிகின்றதா? இலங்கை அரசு ஓரளவு மேல் என்றே எண்ணத்தோன்றுகின்றது.


வாய்மையே வெல்லும் என்பது இனியாவின் விடயத்தில் உறுதியானது. 
ஆம்...! கடும் பிரயத்தனங்கள் மேற்கொண்ட கனேடியப்படைகளால் குறிப்பிட்ட அந்தக்காலப்பகுதிக்குள் ஆதாரங்களை சமர்ப்பிக்க முடியவில்லை. எனவே இனியா மீதான அந்தப்பொய்யான வழக்கு நீதிமன்றத்தினால் தள்ளுபடி செய்யப்பட்டது.

இதற்கிடையில் சிறையில் இனியா இருந்த காலப்பகுதியில் கனடா ரோறன்ரோ(Toronto) நகரில் இருந்த தமிழ் வழக்கறிஞர் ஒருவர் இனியாவை விடுதலை செய்கின்றேன் என்று உறுதிமொழி வழங்கி ஈழத்தில் உள்ள அவளது குடும்பத்தவர்களிடம் தொடர்பு கொண்டு கிட்டத்தட்ட இரண்டாயிரம் கனேடிய டொலர்களை பெற்றுக்கொண்டு எந்தவிதமான வாதங்களையோ நியாயங்களையோ நீதிமன்றத்தில் முன்வைக்காது ஏமாற்றியும் இருக்கின்றார். விடுதலை பெற்றிடலாம் என்று தினம் நம்பி நம்பி அந்தச்சிறையின் ஓரத்தில் வடித்த இனியாவின் கண்ணீரின் அளவினை அந்தச்சிறைக்கம்பிகள் மட்டுமே அளந்து வைத்திருக்கும்.

கனவுகளோடு கனடா சென்ற அந்த இளம் தம்பதிகளின் முதற்குழந்தை பிறந்து மூன்றாண்டுகள் நிறைவு பெறுகின்ற இந்த வேளையில் , தந்தையின் தொடுகை என்னவென்றே உணராத அந்தப்பச்சிளம் பாலகி தான் காண்கின்ற ஆண்கள் எல்லோரையும் அப்பா அப்பா என்று அழைத்து ஏங்கும் கொடுமையினை  யார் அறிவார்கள்? வெறுமனே அவளின் குரலினை கேட்டு தினம் தனக்குள் விம்மி அழும் தந்தையும் சிறுமியின் பாசத்தின் ஏக்கத்தினைக்கண்ணுற்று கண்ணீர் வடிக்கும் அன்னையும் மூன்றாண்டுகளாக முகவரி தொலைத்த தபால்களாக எந்தவித நம்பிக்கையும் இன்றி பிரிந்து கிடக்கின்றார்கள். பரிகசிப்புக்களும் ஏளனங்களும் ஒதுக்கல்களும் நன்கே பழகி புண்பட்டுப் போன உள்ளங்களுக்கு உதவிட யாருளர்?  

அந்தச்சிறுமி கல்வி கற்கச்செல்லும் கனேடியப்பள்ளியில் உள்ள குழந்தைகள் தமது தந்தைகளுடன் விளையாடுவதையும் அன்பு பொழிவதையும் கண்ணுற்று அவர்களின் பின்னே அப்பா என்று அழைத்து ஓடிச்செல்லும் அச்சிறுமியின் உணர்வுகளைச்சாகடிக்கின்ற கனேடிய அரசு  சிறுவர் உரிமைகள் மனித உரிமைகள் பற்றி உலக அரங்கில் வெறும் வெளித்தோற்றத்திற்காகவா குரல் கொடுக்கின்றது?

கப்பலினை ஓட்டிச்சென்ற மாலுமியினை பிணையில் விடுவித்த கனேடிய அரசு, கனடா வருவதற்காக கப்பலில் எரிபொருள் பொறியியலாளராக பணியாற்றிய குற்றத்திற்காக இனியாவின் கணவர் பைந்தமிழினை சிறையில் அடைத்த காவல் துறையினர் ஒரு கையெழுத்திற்காக இன்னமும் அவரது வழக்கினை தொடராமல் அவருக்கு பிணை அனுமதியும் கொடுக்காமல் ஒவ்வொரு தவணைக்கும் மீண்டும் மீண்டும் தவணைகளை பிற்போட்டு காலத்தை இழுத்துக்கொண்டு செல்வது பைந்தமிழினை உளவியல் ரீதியாக தண்டிப்பதற்காகவே. இன்னும் சிறிது காலம் இந்த நிலை நீடிக்குமேயானால் அவர் மட்டுமன்றி இனியா மற்றும் அவர்களின் சிறுமியும் உளவியல் ரீதியில் மிகவும் மோசமான நிலையினை எதிர்நோக்குவார்கள்.

உடலியல் ரீதியான சித்திரவதைகளை தன்னும் தாங்கிக் கொண்டு இருந்திடலாம். ஆனால் திட்டமிட்டே இவ்வாறு தனிமைப்படுத்தி நீண்ட காலத்திற்கு தீர்வின்றி ஒரு குடும்பத்தினை சின்னாபின்னமாக்குவது என்பது எந்த வகையான சித்திரவதை என்பது அனுபவித்து உணர்ந்தால் மட்டுமே விளங்கிக்கொள்ள முடியும்.

ஈழத்தில் இருந்தால் பிரச்சினைகள் என்று தப்பி வந்தவர்கள் அதை விட மோசமான நிலையினை புகலிடம் புகுந்த நாடுகளில் அனுபவிப்பதும் ஈழத்தில் காணாமல் போன அல்லது போரில் இறந்த கணவன்களின் மனைவிகள் படுகின்ற துன்பத்தினை விட அதிகமாய் மொழி தெரியாத நாட்டில் சிக்கித்தவித்து குழந்தைகளுடன் வாழ்க்கையினை நகர்த்திச்செல்வதும்  எந்தளவிற்கு சவாலானது என்பது இனியா மற்றும் நிலாவைப்போன்ற ஒவ்வொரு ஈழ அகதிப்பெண்களினதும் அன்றாட வாழ்வு விளக்கிச்செல்லும்.

அத்துடன் பைந்தமிழிற்கு வழக்கறிஞர் என்று அமர்த்திக்கொள்ள பணவசதி இன்றி கனேடிய அரச வழக்கறிஞர் ஒருவரே இவ்வளவு காலமும் செயற்பட்டு வருகின்றார். அவர் இதுவரை வாதாடும் நிலை ஒருநாள் தன்னும் இடம்பெறவில்லை. காரணம் இன்னமும் வழக்கே இடம்பெறவில்லை. நான்காண்டுகள் எட்டப்படும் நிலை இருக்கின்ற இந்த வேளை எதற்காக வழக்கினை தள்ளி வைத்தே காலம் தள்ளுகின்றார்கள். தற்போது அந்த வழக்கறிஞர் தொலைபேசி அழைப்பிற்கு கூட பதில் அளிப்பதில்லை. இலங்கையில் வழக்குகளே இல்லாமல் இருக்கும் அரசியல் கைதிகளின் நிலையே இங்கும் காணப்படுகின்றது. இதை யார் தட்டிக்கேட்பது?

இலங்கையில்  தான் அந்த அரசிற்கு எதிராக குரல் கொடுக்க முடியாத உலக தமிழ் அமைப்புக்கள் கனடாவில் மற்றும் தாய்லாந்தில் அந்தந்த அரசுகளின் முரட்டுப்பிடிக்குள் சிக்கித்தவிக்கும் உறவுகளை மீட்க முயற்சி செய்ய முடியும்.

வெறுமனே பொழுது போக்கிற்காக எழுதி நாலு பேர் வாசித்து பெருமூச்செறிய இந்ததொடரினை எழுதவில்லை. சிக்கித்தவிக்கும் உறவுகளுக்காக குரல் கொடுக்க தமிழ் மற்றும் மனிதாபிமான அமைப்புக்கள் முன் வர வேண்டும் என்ற நோக்கில் இறுதிக்கட்ட முயற்சியாக எழுதப்படுகின்றது.

சென்ற தொடரில் குறிப்பிட்ட இலங்கைக்கு நாடு கடத்த இருக்கும் அருமைத்துரை தர்மரத்தினம் என்பவரும் பைந்தமிழுடன் சிறை வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழர் என்ற போர்வை போர்த்திக்கொண்டு கனடாவில் தேர்தலில் வென்ற ராதிகா அம்மணிக்கு எத்தனையோ கண்ணீர் மடல்கள் இனியாவினால் தனது கணவரின் நிலைக்கு உதவி புரியுமாறு வரையப்பட்டும் ஒரு பதில் தன்னும் அம்மணி இனியாவிற்கு உரைக்கவில்லை. கனேடிய அரசிடம் பரிந்துரை செய்ய துப்பில்லை என்றாலும் ஒரு பெண் என்று ஆறுதல் அளிக்கவும் உள்ளம் இல்லாதவர் வெறும் பெயருக்கும் புகழுக்கும் அரசியல் வாதியாக இருப்பதிலும் இல்லாமல் இருக்கலாம்.


ஒரே இனம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று கனடாவில் கால் பதித்த அத்தனை தமிழர்களும் ஒரே குரலில் அகதிகள் என்பதை உரத்துச்சொல்லி எவரையும் காட்டிக்கொடுக்காமல் இருந்திருந்தால் இன்று அத்தனை பேருமே அங்கு அகதி அந்தஸ்து பெற்று இருந்திருப்பர். கனேடிய காவல் துறையினரால் மறுத்து எதுவும் செய்து விட இயலாமல் இருந்திருக்கும். ஆனால் இன்று கிட்டத்தட்ட 100-120 வரையானோரை தவிர ஏனையோருக்கு அகதி அந்தஸ்தும் கொடுக்கப்படாமல் வழக்குகள் நிராகரிக்கப்பட்டும் வழக்குகள் ஏற்கப்படாமலும் இருக்கின்றது. கிட்டத்தட்ட 360 இற்கு மேற்பட்டோரின் நிலை நிலையில்லாத ஒரு தன்மையில் இருப்பதற்கு எமது இனத்தின் அடிப்படைக்குணமே காரணம்.

ஒட்டுமொத்த மக்களும் ஒன்றுபடாமல் ஒரு சிறிய அகதி ஏற்பினை கூட பெற்றுக்கொள்ள முடியாமல் திணறும் போது தனி நாடும் சுய உரிமையும் அவ்வளவு இலகுவில் கைகளில் சேர்ந்திடுமா? குறிப்பிட்ட ஒரு தொகையினர் அதுவும் ஒரு மாத காலமாய் ஒன்றாகப்பயணித்தவர்கள் தமது சுயநலன்களுக்காக அடுத்தவர்களை கை நீட்டியவர்கள் இருக்கின்ற எமது இனம் இருக்கும் வரை இப்படி நாடு விட்டு நாடு அலைந்து கொண்டே இருக்க வேண்டிய நிர்ப்பந்தம் வேற்று  இனத்தால் ஏற்படுவதற்கு முன் எம்மினத்தால் தான் நிச்சயம் ஏற்படும்.


தொடரும்......

அரசி நிலவன்
தாய்லாந்திலிருந்து 




அடுத்த பதிவிற்கு செல்ல
http://arasikavithaikal.blogspot.com/2014/02/mv-sunsea-8.html

Thursday 6 February 2014

கடற்சூரியன் (MV SUNSEA) தரையில் உருவாக்கிய கொந்தளிப்பு...!!! (பாகம் 6)


ஈழத்து உறவுகளை தன் வயிற்றில் அடைக்கலம் கொடுத்த தாய்லாந்தின் கடற்சூரியன் கனடாவின்  பிரிட்டிஷ் கொலம்பியாவில் கரை சேர்த்தது. பல இன்னல்களின் மத்தியில் பயணம் செய்து கரையிறங்கியவர்களை வினாக்கள் பல  தொடுத்து கனேடிய எல்லை பாதுகாப்பு துறையினர் (CBSL) துருவித்துருவி ஆராய்ந்தனர். 

உண்மை சொன்னால் தப்பி விடலாம் என்று சிலரும் , உண்மைகளை தமக்கு சாதகமான பொய்களாக்கிய பலருமாக பல்வேறுபட்ட வாக்கு மூலங்கள் பதிவளிக்கப்பட்டன. எத்தனையோ ஆட்கடத்தல் முகவர்களின் விபரங்கள்  எடுத்துரைக்கப்பட்டும் அவர்களை கைது செய்ய முடியாமல் இன்றும் கனேடிய காவல் துறையினர் அலசிக் கொண்டு அலைகின்றனர். காரணம் குற்றம் செய்தவன் தங்கி இருந்து வருகவே என்னை பிடித்துச்செல்கவே  என்று பிரச்சினைக்குரிய நாட்டில் குந்தி இருக்கவா போகின்றான் ? அப்படி குந்தி இருப்பவன் தான் குற்றவாளி என்று நான்கு வருடமாய் ஒருவனை பிடித்து தடுத்து வைத்து  பைத்தியமாக்கும் கனேடிய காவல் துறை என்ற குரங்கின் கையில் அகப்பட்ட மாலையா அகப்பட்டவன்? 

தப்பி ஓடிய பிரதான குற்றவாளிகள் மீண்டும் மீண்டும் மக்களை ஏமாற்றி பணம் பறித்து நிர்க்கதியாக்கி கொண்டே இருக்கின்றார்கள். ஏன் இன்னும் அவர்களை கைது செய்ய துப்பில்லாமல் மதுரனின் மேல் மப்பில் அலைகின்றார்கள்?

கடந்த வருடமும் தாய்லாந்தின் கரையோரப்பகுதியான பத்தையாவில்(Pattaya) கப்பலுக்கு என்று தங்கியிருந்த நாற்பதுக்கு மேற்பட்ட ஈழத்தவர்கள் கைது செய்யப்பட்டு தடுப்பு மையத்தில் அடைக்கப்பட்டார்கள்? அதன் சூத்திரதாரி யார்? ஏன் இன்னும் கைது செய்யவில்லை? இங்கு யார் காட்டிக்கொடுக்கின்றார்களோ அவர்களே இந்த ஏற்பாட்டினையும் நடாத்திக்கொண்டு இரு வேடமிடுகின்றார்கள். தமது தப்புக்களை மூடி மறைக்க ஒருவனின் மீது மீண்டும் மீண்டும் குற்றம் சுமத்தி அதில் குளிர் காயும் மனிதர்களையும் அவர்களின் வேடத்தினையும் கண்டு கொள்ள தெரியாத சிறுபிள்ளைத்தனமான அறிவு கொண்டவர்கள் தான் கனேடிய காவல் துறையினரா? 

தாய்லாந்தில் உள்ளவர்களை மட்டுமன்றி கடற்சூரியனில் சென்றவர்களும் காட்டிக்கொடுப்புக்களால் இன்னமும் பாதிக்கப்பட்டு  வாடி வதங்கிக்கொண்டு தான் இருக்கின்றனர். ஒருவரையொருவர் காட்டிக்கொடுத்து அகதி அந்தஸ்தும் இல்லாமல் வழக்கும் ஏற்கப்படாமல் இருப்பவர்கள் அநேகர். அதில் சென்ற பல போராளிகள் மற்றவர்களால் காட்டிக்கொடுக்கப்பட்டதால் இன்னமும் அவர்களின் வழக்கே ஏற்கப்படாமல் இருக்கும் நிலை காணப்படுகின்றது.

அத்துடன் போராளி என நிரூபிக்கப்பட்டு ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கப்பட்ட "அருமைத்துரை தர்மரத்தினம்" என்கின்ற வல்வெட்டித்துறையினை சேர்ந்தவர் வருகின்ற பெப்ரவரி பதினோராம் திகதி இலங்கைக்கு நாடு கடத்தப்பட இருக்கின்றார். இவரை  நீதிமன்றம் நாடுகடத்த உத்தரவிட்ட நிலையில் இலங்கையில் அவர் எதிர்நோக்க விருக்கும் அபாயத்தினை எண்ணி அச்சத்தில் கனேடியச் சிறையில் தவிக்கும் அவரது நாடு கடத்தலை தடுக்கப்  பல முயற்சிகள் எடுக்கப்பட்டும் எதுவும் பலன் அற்று இறுதிக்கட்ட நிலையில் தவிக்கும் அந்த போராளி செய்த குற்றம் என்ன? ஈழத்துக்காகப்போராடிய ஒரு உத்தம கடற்புலிப்போராளியின் இறுதிக்கட்ட வாழ்வின் போராட்டத்தில் உலகத்தில் இன்னும் தமிழ் அமைப்புக்கள் என்றும் நாடுகள் கடந்த அரசுகள் என்றும் வெறுமனே பெயருக்கு இயங்குகின்ற அமைப்புக்களின் பங்களிப்பு என்ன? கனடாவில் தமிழருக்கான பிரதிநிதியாக பாராளுமன்றம் சென்று வரும் ராதிகா சிற்சபை ஈசன் இந்த நாடு கடத்தலை தடுத்து நிறுத்த முயற்சி எடுத்துண்டா?

அர்ப்பணிப்பும் சுயநலம் இன்றிய ஒரு  தனிமனிதன் ஒருவன் தன் குடும்பத்தினையும் காவு கொடுத்து ஒரு இனத்துக்காகவே மடிகின்றான் என்றால் அவனே தலைவன். அவனின் காலத்தின் பின் தம்மை தலைவர் என்று தமக்கு தாமே முடி சூடுபவர்கள் எவரும் தலைவர்கள் ஆகிவிட முடியாது. ஒரு போராளியினை காப்பாற்ற முடியாதவர்களால் ஒரு இனத்தை காப்பாற்ற முடியுமா?

 மேற்படி அருமைத்துரை தர்மரத்தினம் என்ற போராளியின் நாடுகடத்தலை தவிர்ப்பதற்காக ஏற்கனவே கனடாவில் இருந்து நாடு கடத்தப்பட்டு இலங்கையில் படுகொலையான கப்பல் அமைப்பாளர் ஒருவரது மரண ஆதாரங்களை நீதிமன்றில் சமர்ப்பித்தும், அதனை நீதிபதியின் கண்களில் இருந்து மறைத்துக்கொண்ட கனடா எல்லைப்பாதுகாப்பு துறையினரின்(CBSL) நோக்கம் என்ன? நிச்சயம் அது கொலைக்கள நாட்டில் படுகொலை செய்யத்தீட்டுகின்ற சதித்திட்டமே.

தனிப்பட்ட ஒரு நபர் அதாவது முன்னொரு காலத்தில் ஆயுதம் ஏந்தி போராடி தற்போது அகதியாக புகலிடம் புகுந்த ஒரு உயிருக்கு அடைக்கலம் கொடுக்க முடியாத அளவுக்கு கனடாவின் சட்டம் உள்ளதா? அன்றி கனடாவின் மனித உரிமைகள் இதற்கு இடமளிக்காதா?

அவர் நாடு கடத்தப்பட்டு அவரின் உயிருக்கு அங்கு உத்தரவாதம் அற்றுப்போனால் கனடா அரசு அவரின்  உயிரை அவரது குடும்பத்தவர்களுக்கு திருப்பிக்கொடுக்க முடியுமா?

இவற்றுக்கு பின்னால் கனேடிய இலங்கை சதி இருப்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? கடற்சூரியனில் பயணம் செய்து இத்தொடரின் ஆரம்ப தொடரில் குறிப்பிட்ட பல  காட்டிக்கொடுப்புக்களை நிகழ்த்திய அந்த பிரதான கப்பல் ஏற்பாட்டாளர் கனடாவில் பலரை காட்டிக்கொடுத்து தான் தப்பிக்க முயன்றும் கனேடிய அரசு அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கியது. உண்மை நேர்மை என்று ஒழுகாத ஒரு மனிதர் தண்டனைக்கு அடங்க ஒத்துக்கொள்ள மாட்டார் . எனவே அவர் சுய விருப்பில் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார். 

அவர் ஒரு விடுதலைப்புலி உறுப்பினர் அல்ல. ஆனால் விடுதலைப்புலிகளுக்காக ஆயுதக்கடத்தலில் ஈடுபட்டு பண மோசடிகள் புரிந்தவர். இருந்தாலும் அவருக்கு எதிராக தாய்லாந்து மற்றும் கனடாவில்  ஆயுதக்கடத்தல் வழக்குகள்  நிலுவையில் இருக்கும் போது இலங்கை மட்டும் அவரை செங்கம்பளம் விரித்து வரவேற்குமா? இலங்கையில் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். வழமையான " சித்திரவதை வெகுமதிகள் "அங்கு அவருக்கு நிறையவே வழங்கப்பட்டன. இருந்தாலும் இலங்கையில் பணம் பாதாளம் மட்டுமல்ல அண்டம் வரை பாயும் என்பதால் அவர் சிறிது காலத்தில் விடுவிக்கப்பட்டார். 

ஆனால் கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து , கடந்த ஆண்டு அவர் ஒரு விபத்தில் பலியானதாக செய்தி பரப்பப்பட்டது. இந்த விபத்தின் பின்னணியில் நிச்சயமாக இராணுவம் இருப்பதாக அவரின் குடும்பத்தார் சந்தேகிக்கும் அதே வேளை அவரது தலையில் பலமான இரும்புக்கம்பி கொண்டு தாக்கப்பட்டதாலேயே அவருக்கு இறப்பு ஏற்பட்டதாகவும் இரு வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. எவ்வாறாயினும் இந்த விபத்தின் பின்னணியில்  இலங்கை இராணுவம் இருக்குமேயானால் அது நிச்சயம் கனேடிய எல்லை பாதுகாப்பு துறையின் கூட்டுச்சதி என்று உறுதியாக நம்ப முடியும். காரணம் இலங்கை இராணுவத்திற்கு அவரை தனிப்பட்ட ரீதியில் கொல்ல வேண்டிய தேவை இல்லை. அவரை விட அதிக கடத்தல்களில் ஈடுபட்டவர்களே அரசோடு சேர்ந்து இயங்கும் போது, அவரைக்கொல்ல வேண்டிய தேவை மிக மிக அரிது. பணத்தினைப் பெற்றுக்கொண்டு விடுதலை செய்தவர்களே அவரைத் தேடிப்பிடித்து கொலை செய்வதிலும் பார்க்க பணத்தினை இன்னும் கறக்கவே எண்ணுவார்கள். 

அத்துடன் கனேடிய அரசு சாதரணமான ஒரு வாக்கு மூல குற்றச்சாட்டுக்கே நான்கு வருடமாக மதுரனை இந்த நாட்டில் உலவ அனுமதிக்காமல் தடுத்து தமது கண்காணிப்பில் வைத்திருக்கும் போது கப்பலோடு நேரடியாக தொடர்பு பட்டு பிரதானமாக குற்றம் சாட்டப்பட்ட தற்போது அமரரான அந்த கப்பல் ஏற்பாட்டாளரை தமது கண்காணிப்பில் இருந்து எவ்வாறு நீக்கிக் கொள்ளும்? இலங்கை அனுப்பி அங்கு சாகடிக்கவே அது திட்டம் தீட்டி அங்கு அவரை அனுப்பி இருக்கின்றது. அவர் ஒரு காட்டிக்கொடுப்பாளர் பலருக்கு அநியாயம் செய்த ஒருவர் என்றாலும் கனேடிய சதியில் கொலையுண்டவர் என்னும் போது சற்று மனம் வேதனைப்படவே செய்கின்றது. அவருக்கு ஒரு பெண்குழந்தையும் மனைவியும் கனடாவில் இன்னும் அகதி அந்தஸ்து கோரலுக்கான வழக்கு ஏற்கப்படாமல் இருக்கின்றார்கள் . 

காட்டிக்கொடுப்புக்களும், பணத்தால் கொள்வனவு செய்யப்படும் வாழ்வும் நெடு நாட்கள் நீடிக்கப்போவதில்லை. கனேடிய அரசிடம் இருந்தும் இலங்கையிடமும் இருந்தும் தப்பி பணம் கொடுத்து சுதந்திரம் பெற்றுக்கொண்டவர் , காலத்திடம்  விலை பேச தன்னகத்தே நீதி நேர்மையினைக்கொண்டிருக்கவில்லை என்பது அவரது படுகொலையில் இருந்து நாம் அறிய வேண்டிய அப்பட்டமான உண்மையாகும்.

தற்போது சிறையில் வாடும் எல்லோருக்கும் காலம் பகைத்துக்கொள்ளலாம். பணம் தங்காமல் இருக்கலாம். ஆனால் அளவுக்கு அதிகமான நீதி நேர்மை உண்மைகளை தம் அகத்தே மலை போல் குவித்து வைத்திருக்கும் போது என்றோ ஒரு நாள் காலம் அவற்றை விலை பேசி அவர்களுக்கு சுதந்திரம்  என்னும் நிலையான அமிர்தம் என்னும் கனியினைக் கொடுக்கும். கனேடிய தாய்லாந்து ,இலங்கை அரசுகள் தீட்டும் சதிகள் காலத்தால் தோற்கடிக்கப்படும். அன்று காட்டிக்கொடுப்புக்கள் அர்த்தமற்றுப்  போகும் போது காட்டிக்கொடுத்தவர்கள் நிச்சயமாகக் காலத்தால் தண்டிக்கப்படுவார்கள். அதுவரை வளமாக , நலமாக வாழட்டும். 

அப்பேற்பட்ட தேசிய தலைவரையும், ஈழப் போராட்டத்தையுமே கொச்சைப்படுத்தவும் காட்டிக்கொடுக்கவும் பலர் துணிந்து அதில் வெற்றியும் கண்டார்கள். அந்த மாபெரும் இயக்கம் இவற்றுக்கு பலியாகி மெளனித்து உறங்கும் போது அவர்களின் கால் விரலுக்கு சமனான தனி நபர்கள் இவற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியுமா?   

தொடரும்...........

கடற்சூரியனில் பயணித்த ஒரு கர்ப்பிணியின் மகளான கனடாவில் பிறந்த ஒரு பச்சிளம் பாலகி இன்று மூன்று வருடங்கள் கழிந்த நிலையிலும் ஒரே மாகாணத்தில் சிறை வைக்கப்பட்டிருக்கும் இன்னும் விடுதலை செய்யப்படாத தனது தந்தையின் ஸ்பரிசம் இன்றி தினம் தந்தைக்காக ஏங்கித்தவிக்கின்றாள்..? அந்தப்பிஞ்சுக்குழந்தை செய்த தவறு என்ன? விரைவில் அடுத்த தொடரில்......

அரசி நிலவன்
தாய்லாந்திலிருந்து 



அடுத்த பதிவிற்கு செல்ல
http://arasikavithaikal.blogspot.com/2014/02/mv-sunsea-7.html