Search This Blog

Monday 17 February 2014

கடற்சூரியன் (MV SUNSEA) தரையில் உருவாக்கிய கொந்தளிப்பு...!!! (பாகம் 8)


2011  இன் முற்பகுதியில் தாய்லாந்தின் குடிவரவு தடுப்பு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மதுரன், அங்கு தொடர்ந்தும் இருக்க முடியாத சூழ்நிலையில் நாடு திரும்புவதாக அங்கிருந்து வெளியேறி மலேசியா சென்று மீண்டும் தாய்லாந்தில் வெளியேறிய போது , ஏற்கனவே மூன்றாம் நாட்டுக்கான நேர்முகத்தேர்வினை பூர்த்தி செய்த நிலையில் நாட்டை விட்டு வெளியேறியதன் காரணமாக ஐ நா அகதிகள் உயர் ஸ்தானிகராலயம் மதுரனின் வழக்கினை நிலுவையில் வைத்திருந்தது. 

அந்தக்காலப்பகுதியில் மீண்டும் கனேடிய காவல் துறையினர் மோப்பம் பிடித்து மதுரனின் இருப்பிடம் அறிந்த, ஒரு எட்டப்பனுக்கு பணம் கொடுத்து நேரடியாகவே வந்து சந்தித்துக்கொண்டனர். அதாவது சிறையில் இட்டுக்கொள்ள முயற்சிக்காமல் வாரம் தோறும் பாங்கொக்கில் உள்ள ஒரு குறிப்பிட்ட நட்சத்திர விடுதியின் வரவேற்பு கூடத்தில் மதுரனையும் நிலாவினையும் சந்தித்து மூளைச்சலவை செய்தனர். 

அதாவது கனடாவில் குரியுரிமை மற்றும் வீடு வாகன வசதி பணம் போன்ற வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கின்றோம் தற்போது ஆட்கடத்தலில் ஈடுபட்டுள்ள கும்பலினை காட்டிக்கொடுக்குமாறும் அதற்கான வழிமுறையாக தாமே பணமும் நபர்களையும் ஒழுங்கமைத்து தருகின்றோம் என்றும் ஆட்கடத்தல் முகவர்களிடம் தொடர்பு கொண்டு வியாபாரம் பேசி நடித்து அவர்களைக்காட்டிக்  கொடுக்குமாறும்  கிட்டத்தட்ட இரு மணி நேரம் இடம்பெறும் அந்த சந்திப்பின் போது தம்மை கனேடிய தூதரக அதிகாரிகள் போன்று காட்டிக்கொண்ட அவர்கள் நாட்கள் செல்ல செல்ல தமது கடலை மதுரனிடத்திலும் நிலாவிடமும் வேகாது என்று அறிந்து மிரட்ட ஆரம்பித்தனர்.

அதாவது தமது அடையாள அட்டையினை காண்பித்து தம்மை சர்வதேச கனேடிய காவல் துறை அதிகாரிகள் என்று அடையாளப்படுத்திக்கொண்ட அவர்கள் "உங்கள் இருவரையும் கடற்சூரியன் வழக்கில் தொடர்பு படுத்தி சிறையில் தள்ளுவோம். அதன் பின் உங்கள் குழந்தை அனாதரவாகி விடும்.  எனவே எமக்கு ஒத்துழைப்பு கொடுத்தால் உங்கள் மகன் சர்வதேச பள்ளியில் கல்வி கற்கலாம். கனடாவில் ஆடம்பரமாக வாழலாம் "  என்று தமது தொலைபேசியினை வைத்து கனடாவில் உள்ள மேலிடத்திற்கு தொடர்பு எடுத்து மதுரன் நிலாவின் உரையாடலை பதிவு செய்தவாறு பேசிக்கொள்வார்கள். 

அன்றைய கால கட்டத்தில் தான் மதுரனும் நிலாவும் நன்கு புரிந்து கொண்டார்கள். இவ்வாறு தான் இங்குள்ள விலை போன தமிழர்கள் தம்மைக் காட்டிக்கொடுத்தார்கள் என்பதனை. அன்று மதுரனோ நிலாவோ  யாரையும் காட்டிக் கொடுத்திருந்தால் கனடாவில் அவர்களுக்கு  வசதியான வாழ்க்கை அமைந்திருக்குமோ  இல்லையோ நிச்சயம் இன்றைய மதுரனின் சிறை வாழ்வு தடுக்கப்பட்டிருக்கும். மதுரனைப்போல் அல்லாது நேரடியாக பணம் பெற்று ஆட்கடத்தல்  முகவர்களாக செயற்பட்ட எத்தனையோ தமிழர்கள் இன்று பாங்காக்கில் கடவுச்சீட்டு இல்லாமலே சுதந்திரமாக நடமாடித்திரியும் இரகசியம் என்னவென்பது இப்போது உணர்ந்து கொள்ள முடியும். 

2011 இன் ஐப்பசியில் இருந்து தை வரை , கிட்டத்தட்ட மூன்று மாத காலமாய் மதுரனுக்கும் நிலாவிற்கும் பின்னால் அலைந்து கொண்ட அந்த ஒரு பெண் மற்றும் ஆண் கனேடிய காவல் துறை அதிகாரிகள் 2012 தை மாதத்தின் பின் தொடர்பே இல்லாமல் போய்விட்டனர். 

மதுரன் நிலா இருவருக்கும் காட்டிக் கொடுப்பு என்பது தெரியாது என்பதனை விட யார் ஆட்கடத்தலில் ஈடுபடுகின்றார்கள் என்பதே அறியாத போது எவ்வாறு விபரம் கொடுக்க முடியும். அவர்கள் முக்கியமாக தேடுவது மிகப்பெரிய ஒரு நபர் ஒருவரையே. அவரின் பெயரைத் தவிர அவரின் விபரங்கள் அறியாத இவர்களால் தகவல் எவ்வாறு கொடுக்க முடியும். எந்தவிதமான தகவல்களும் மதுரனும் நிலாவும் வழங்காமையே மேலும் மேலும் கனேடிய அதிகாரிகளுக்கு அவர்கள் மேல் சந்தேகம் வலுக்க பிரதான காரணமாகியது. 

ஏற்கனவே கனேடிய காவல் துறையின் சந்தேக நபரான மதுரனை பணத்திற்காக மற்றவர்கள் காட்டி கொடுத்தது போன்று வேறு யாரையாவது கை நீட்டிக்காட்ட மதுரனுக்கோ நிலாவிற்கோ அதிக நேரம் எடுக்காது. எல்லோரும் நேர்மை பற்றி அளவளாவலாம். ஒரு சிலராலேயே அதன் வழியில் ஒழுகிட முடியும். 

உதாரணமாக இலங்கையின் கருணா என்பவர் புலிகள் அமைப்பில் பல காலம் ஒரு தளபதியாக இருந்தவர். அதே நேரம் இறுதி யுத்தத்தில் சரணடைந்த எத்தனையோ போராளிகளில் இன்னும் சிலர் இருக்கும் இடமே தெரியவில்லை உயிரோடு இருக்கின்றார்களோ என்று கூடத்  தெரியாது. 

அந்தப் போராளிகளை விட கருணா என்பவர் அதிக காலம் போராட்டத்தில் இருந்து பல குற்றச்சாட்டுகளோடு தொடர்பு பட்டும்  இலங்கை அரசிற்கு இன்று வரை உயர்ந்த விசுவாசியாக இருப்பதற்கும், சாதாரண போராளிகள் சிறையிலும் அல்லது இல்லாமலும் போனதற்கும்  என்ன காரணம். சுயநல நோக்கிற்கான காட்டிக்கொடுப்பு ஒன்றே. அந்த காட்டிக்கொடுப்பு ஒன்றினை நிகழ்த்தினால் நாட்டில் ஆட்சி  கிடைக்கும். இல்லாவிடில் இறந்து போனாலும் மனச்சாட்சி ஒன்றில் மட்டும்  நாம் ஆட்சி புரியும் பேறு கிடைக்கும். இங்கு இரண்டாவது ஆட்சி நடத்தும் மதுரனும் நிலாவும் எந்த ஆட்சி உலகில் மாறினாலும் அவர்களே அவர்களின் மனச்சாட்சிக்கு மகுடம் சூட்டிய ஆட்சியாளர்கள்.


அந்த கனேடிய அதிகாரிகள் தை மாதத்தின் பின் தாம் கனடாவுக்கு மாற்றல் ஆகி செல்வதாகவும் ஏதும் தகவல் தெரிந்தால் மின்னஞ்சலுக்கு தகவல் கொடுக்குமாறும் தெரிவித்து இறுதியாக விடைபெறும் போது வைத்தியசாலையில் வைத்து மதுரனிடம் கைப்பற்றிய மடிக்கணினி  மற்றும் தொலைபேசிகளை திருப்பி ஒப்படைத்து விட்டு சென்றார்கள். 

அதன் பின் பணியில் இணைந்த வேறு அதிகாரிகள் மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பித்தனர். அதாவது தாய்லாந்து வந்தடைந்து தமிழர்களை சந்தித்து மறுபடி விலை பேச இருக்கவே இருந்த மதுரனின் தலை உருள மதுரனின் வீட்டிற்கே சென்று தாய்லாந்து குடிவரவுத்துறை கைது செய்து சென்றது. எந்த வித பிரச்சினையும் இல்லை. தகவல் தெரிந்தால் கொடுக்கவும் என்று சென்ற பழைய கனேடிய அதிகாரிகளிடம் இருப்பிட முகவரியில் இருந்து தொலைபேசி வரை கொடுத்து வைத்த மதுரன் குற்றம் செய்பவனாக இருந்திருந்தால் அவர்கள் சென்றதும் நாட்டினை விட்டுத்  தப்பியல்லவா சென்றிருக்க வேண்டும்.

அதற்கிடையில் ஐ நா மதுரனுக்கான வழக்கினை மீண்டும் செயற்படுத்தி மூன்றாம் நாட்டிற்கு அவர்களது வழக்கினைக் கொடுக்கும் தறுவாயில் இருக்கும் போது கனேடியச்சதியால் அது இன்னும் கால தாமதமாக்கப்பட்டது. 

அதாவது இலங்கையில் பல போராளிகளை காட்டிக்கொடுத்து தடுப்பு முகாமில் இருந்து வெளியேறி பணத்திற்காக  மூன்று பெண்களின் வாழ்வினை சீரழித்து விட்டு தாய்லாந்திற்கு தப்பி ஓடி வந்த ஒரு துரோகி(ஏற்கனவே தமிழ் இணையத்தளங்களில் வெளிவந்த செய்தி) தாய்லாந்தில் அகதிக்கான கோரிக்கை விடுத்து ஐ நாவால் அகதியாக அங்கீகரிக்கப்படாமல் இருந்த சமயம், கனேடிய காவல் துறை அவனை கொள்வனவு செய்து மதுரனுக்கு எதிராக ஐ நாவில் முறைப்பாட்டினை பதிவு செய்ய வைத்தது.

அதாவது அவனிடம் இருந்து மதுரன் பணம் பெற்று ஏமாற்றிகொண்டதாக பதிவு செய்யப்பட்ட அந்த முறைப்பாடு மதுரனின் ஐ நா வழக்கினை மூடும் நிலைக்கு நெருங்கியது. காரணம் சாதாரண நபர்களின் முறைப்பாட்டினை ஏற்காத ஐ நா ஏற்கனவே அகதி கோரிக்கை விடுத்த ஐ நாவில்  பதிவு  செய்து கொண்ட ஒருவரால் முறைப்பாடு செய்யுமிடத்து அது உடனடியாக நடவடிக்கை எடுத்தே தீரும்.

நிலாவினையும் மதுரனையும் உடனடியாக அழைத்து ஒரு நாளிலேயே விசாரித்த ஐ நா அவர்களின் வழக்கினை தள்ளுபடி செய்யும் இறுதிக்கட்ட நேரத்தில் உண்மையினை உணர்ந்து கொண்டது.

பெண்களின் வாழ்வினை சீரழித்த காரணத்தால் அதனை ஊடகங்களுக்கு தெரியப்படுத்திய நிலா மீது முன் விரோதம் கொண்ட அந்த நபர் தனது ஐ நா வின் அகதி ஏற்பு வழக்கினையே அடகு வைத்து கனேடியர்களிடம் பணம் பெற்று இந்த முறைப்பாட்டை வழங்கியிருக்கின்றார். விளைவு ஐ நா அவரது வழக்கினை நிராகரித்து தள்ளுபடி செய்து கொண்டது.

இது அந்த நபருக்கான தோல்வி அல்ல. கனேடிய அதிகாரிகளுக்கு நிலா மற்றும் மதுரனால் அள்ளிப்பூசப்பட்ட கரியே. அந்தப்படுதொல்வியினை பொறுத்துக் கொள்ள முடியாத கனேடிய காவல் துறையினர் வேறு வழியின்றி தாய்லாந்து குடிவரவு துறையினருக்கு அழுத்தம் கொடுத்து குடிவரவு சட்டங்களை மீறினார் என்ற குற்றச்சாட்டில் மதுரனை மீண்டும் கைது செய்ய வைத்தது. 

2012 ஆனி 29  அன்று காலை மதுரனின் இருப்பிடம் புகுந்த குடிவரவுத்துரையினர் அங்கிருந்த கணினி தொலைபேசிகளை எடுத்துச்சென்றனர். கணினியில் தேசியத்தலைவரின் அரிய புகைப்படங்களை சேமித்து வந்திருந்த நிலாவிடம் கனேடிய அதிகாரிகள் " LTTE இற்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு ? உனது கணவர் அதன் உறுப்பினரா? ஏன் இந்த புகைப்படங்கள் வைத்திருக்கின்றீர்கள்? என்ற பல வினாக்களை தொடுத்தனர். காரணம் எந்தவிதமான ஆதாரங்களும் இல்லையே . எனவே புலி என்று குற்றச்சாட்டு கொடுத்து சிறையிடலாம் என்ற எண்ணமாக இருந்திருக்கலாம். 

இவர் எமது தேசியத்தலைவர். இவரை நாங்கள் நேசிக்கின்றோம். இவரது படங்கள் வைத்திருந்தால் புலி உறுப்பினர் என்று அர்த்தமல்ல. அப்படி இருந்தாலும் உங்களால் என்ன செய்ய முடியும்? தாய்லாந்து அதிகாரிகளே அதைப்பற்றி கேட்கவில்லையே நீங்கள் ஏன் கேட்கிறீர்கள்? என்று உரைத்த நிலாவிடம் ஏதும் பேசாத கனேடிய காவல் துறை அந்த கணினியினையும் தொலைபெசியினையும் திருப்பி ஒப்படைத்து சென்றது.


குடிவரவு தடுப்பு மையத்தின் சாதாரண இலங்கையர்கள் உள்ள அறை 3 இல் தடுத்து வைக்கப்பட்ட மதுரனின் உண்மை நிலை விளங்கிக்கொண்ட ஐ நா அகதிகள் உயர் ஸ்தானிகராலயம் துரித கதியில் மீண்டும் மூன்றாம் நாட்டிற்கான நேர்முகத்தேரிவினை நடாத்தி ஐக்கிய அமெரிக்காவிற்கு அவனது வழக்கு கொடுக்கப்பட்டது.

இதற்கிடையில் மதுரன் கைதாகும் போது கர்ப்பிணியாக இருந்த நிலா கையில் குழந்தையோடு தவிப்பதை கண்ணுற்ற ஐ நா வானது தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றின் ஊடாக வலிந்து சென்று மதுரனை பணப்பிணையில் விடுதலை செய்தது. முற்று முழுதாக மதுரன் மீது கொண்ட நன்னடத்தை காரணமாக அந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் தமது பணத்தினை செலுத்தியது. 

மூன்றாம் நாட்டிற்கு பரிந்துரைக்கப்படுபவர்களே பிணையில் வெளியேற முடியும். அத்துடன் ஒவ்வொரு பதினைந்து நாட்களுக்கும் கையெழுத்தும் இட்டு செல்ல தடுப்பு மையம் சென்று வர வேண்டும். இரண்டாவது தடவையாக கையெழுத்திட சென்ற மதுரன் வீடு திரும்பவில்லை. அங்கும் கனேடிய காவல் துறை தனது சதி வலையினை விரித்து அந்த பிணையினை இல்லாமல் ஆக்கியது.

மதுரனை வெளித்தொடர்புகள் இன்றி தனியாக அடைத்து வைத்ததோடு அவனை அவனது மனைவி பிள்ளை தன்னும் சென்று பார்க்க முடியாதவாறு அவனுக்கான பார்வையிடலும் தடுக்கப்பட்டு கிட்டத்தட்ட மூன்று மாத காலமாக தடுத்து வைத்திருந்தனர். தாய்லாந்து குடிவரவுத்துறையினரிடம் சென்று விசாரித்த நிலாவிடம் அவர்கள் " கனேடிய காவல் துறையின் விசாரணை இருப்பதால் யாரும் சந்திக்க முடியாது " என்று கூறினர். ஆனால் இன்று வரை அதாவது இரு ஒன்றரை வருடங்கள் நிறைவடைந்த நிலையில் இன்னும் விசாரணையே இடம்பெறவில்லை. விசாரணையா அல்லது பழிவாங்கலா?

ஆத்திரம் அடைந்த நிலா கனேடிய காவல்துறையினரின் தொலைபேசிக்கு அழைத்து அவர்களை சந்திக்க விரும்புவதாக தெரிவித்ததும் உடனேயே சம்மதித்து சந்தித்த அவர்களிடம் என்ன விசாரணை எதற்காக மதுரனை தடுத்து வைத்திருக்கின்றீர்கள் என வினவியதும் தமக்கு தெரியாது தாய்லாந்து குடிவரவுத்துறையினரிடம் விசாரியுங்கள் என்று குத்துக்கரணம் அடித்த அவர்களிடம் நிலா " எனது கணவரோடு தொடர்பு கொள்ள அனுமதிக்காவிடில் மனித உரிமைகள் அமைப்பிற்கு முறைப்பாடு செய்து விட்டு இலங்கை சென்று தற்கொலை செய்வோம். வயிற்றில் இருக்கும் குழந்தையின் சாவிற்கும் கனேடிய அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் " என்று உரைத்து விட்டு எழுந்ததும் , அவர்கள் " எமக்கு சில சந்தேகங்கள் உள்ளன அதை தீர்க்க வேண்டும் " என்று இன்னொரு நாள் அவளை வரவழைத்து வினவிய வினாக்கள்  நிலாவிற்கு சிரிப்போடு இந்த நிலையில் கனேடிய காவல் துறை உள்ளதா என்ற ஏளனமும் ஏற்பட்டு கொள்ள காரணமாய் அமைந்தன.

ஆம்...கணினியில் இருந்த சில நிலாவின் கவிதைகள் மற்றும் கட்டுரைகளைப்பற்றி ஆழமாக விசாரித்த அவர்கள் அவளின் முகப்புத்தக மற்றும் வலைப்பூ முகவரிகளைப்பெற்றுக்கொண்டு இன்று வரை அவற்றினை தொடர்கின்றனர்.

அத்துடன் பிறக்க இருக்கும் குழந்தைக்காக எண் சோதிடப்படி தமிழ்ப்பெயர்கள் எழுதி சேமித்து வைத்திருந்த ஆவணத்தினை பிரதி எடுத்து வைத்திருந்து அவை யாருடைய பெயர்கள் என்று பல வினாக்கள் தொடுத்த அவர்களுக்கு அதனை விளக்கி சொல்வதற்கிடையில் நிலாவிற்கு  போதும் போதும் என்றாகி விட்டது. ஆங்கில எழுத்தின் "L"  வரிசையில் ஒரு பத்து பெயர்கள் அருகில் அந்த எழுத்துக்களுக்கான எண்களின் கூட்டுத் தொகையோடு இருப்பதனை அவர்கள் அறிந்து கொள்ள முடியாதவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு தகவல் கொடுக்கும் தமிழர்களுக்கு தெரிந்திருக்கும் அன்றோ?

ஆக ஆதாரம் ஒன்றினை உருவாக்க பிரயத்தனப்பட்ட கனேடிய படை ஆபிரிக்காவில் மதுரனுக்கு சொந்தமாக நிலம் அதாவது நைஜீரியா நாட்டில் காணி கொள்வனவு செய்து இருக்கின்றீர்களா? என்று வினவியதும் நிலாவிற்கு சிரிப்பே அடக்க முடியவில்லை. அவள் சிரிப்பதனை பார்த்து இருக்கையில் இருந்து எழுந்து கொண்ட அந்த அதிகாரி மதுரன் அங்கு போயிருக்கின்றாரா? என்றும் வினவினார்.

சம்பந்தமே இல்லாத நாட்டிற்கும் மதுரனுக்கும் தொடர்பு படுத்திய அவர்களிடம் "ஒவ்வொரு மாதமும் எமது வாழக்கை சக்கரத்தினை நகர்த்துவதே ஒரு பெரிய திண்டாட்டம். தாய்லாந்தில் பணிபுரியவோ அன்றாட சீவனத்திற்கு உழைக்கவோ முடியாது. தெரிந்தவர்களின் உதவியில் வாழ்க்கை நகரும் போது நிலம் கொள்வனவு செய்யும் நிலை எமக்கில்லை. அவ்வாறு இருந்தாலும் நாம் இலங்கையில் தான் கொள்வனவு செய்வோம். இப்படி அந்நிய தேசத்தில் வாங்க வேண்டிய தேவைதான் என்ன? என்ன காரணமாய் இதைக்கேட்கின்றீர்கள் தெரிந்து கொள்ள முடியுமா என்ற நிலாவின் கேள்விக்கு அவர்கள் கணினிப்பிரதி ஒன்றினைக்கொடுத்தார்கள்.

அதாவது அந்த கணினியில் இருந்து நைஜீரியா நாட்டில் நிலம் வாங்க இணையத்தில் தேடல் செய்து கொண்டதற்கான ஆதாரமாய் ஒரு பிரதி. உடனே அவள் "மதுரன் கணினியில் முகப்புத்தகம் மற்றும் தமிழ் செய்திகளை பார்வையிடுவதைத் தவிர வேறெதுவும் செய்வதில்லை. இது எத்தனையாம் ஆண்டு தேடல் செய்யப்பட்டது என்று தெளிவாக கூற முடியுமா" என்றதும், அதன் பின் அந்த பிரதியை மேலும் கீழும் பார்த்து விட்டு 2009 என்றார்கள்.

அந்தக்காலப்பகுதியில் மதுரனின் கையில் அந்த கணினி இருந்திருக்கவில்லை. 2011 இல் அவன் முதற்தடவை வைத்தியசாலையில் கைதாகும் போது அவனிடம் இருந்த மடிக்கணினியினை ஏற்கனவே கனேடியப்படை எடுத்துச்சென்ற காரணத்தினால் அதன் பின் தாய்லாந்தில் அந்தக் கணினி அரைப்புதிதாக 2011 இன் பிற்பகுதியில் தான் மதுரனால் கொள்வனவு செய்யப்பட்டது.

அதற்கான பற்றுச்சீட்டு ஆதாரம் நிலாவினால் அடுத்த சந்திப்பில் கொடுக்கப்பட்டதும் எதுவும் பேசாத அந்த அதிகாரியிடம் "எனது கணவரினை நேரில் பார்த்தும் அவரின் குரல் கேட்டும் பல மாதங்கள் ஆகின்றது. அவரை தனிமைப்படுத்தி வைக்காமல் தயவு செய்து ஏனைய தமிழ் தடுப்பு அகதிகளோடு இணைத்து விடுங்கள் இல்லையெனில் என்னையும் உள்ளே அடைத்து விடுங்கள் அல்லது எல்லோரையும் கொன்று விடுங்கள்"  என்று அவள் கண்ணீரோடு கோபமாய் கேட்டாள். தாய்லாந்து அதிகாரிகளுடன் பேசி அதனைச்செய்து விடுவதாகவும் தமது சந்தேகங்களை தீர்த்து வைத்தமைக்கு நன்றியினையும்  கூறி விடைபெற்றனர்.

அதற்கு முதலே நிலா " நாங்கள் சட்ட ரீதியாக ஐ நா மூலமாக இன்னொரு நாட்டில் குடியேறுவதற்காக பல இன்னல்கள் மத்தியில் நான்கு ஆண்டுகளுக்கு மேலாக காத்திருக்கின்றோம். நீங்கள் இங்கு வந்து இவ்வாறு துன்பங்கள் கொடுத்தால் நாம் என்ன செய்வது ? அப்போ எம்மை சட்ட விரோதமாய் இன்னொரு நாட்டில் குடியேற நீங்கள் தூண்டுகின்றீர்களா? உங்களது நோக்கம் தான் என்ன? " என்றவளிடம்  அவர்கள் இல்லை என்ற ஒரு சொல்லோடு  மதுரனின் ஐ நா வழக்கு பற்றியும் மூன்றாம் நாடு எது என்றும் கேட்டு அறிந்து கொண்டனர். அதன் பிரதிபலிப்பு இன்றைய மதுரனின் நிலை என்பது தற்போதே நிலாவினால் உணர்ந்து கொள்ள முடிந்தது.

ஓரிரு நாளில் மதுரனின் தடைகள் நீங்கி அவன் தொலைபேசி மூலமாக நிலாவுடன் தொடர்பு கொண்டான். ஐக்கிய அமெரிக்காவின் நேர்காணல் முடிவு சாதகமாகி மருத்துவ பரிசோதனையும் முடிவுற்று விமானப் பயணச்சீட்டிற்காக காத்திருந்த மதுரன் நிலாவிற்கு ஐக்கிய அமெரிக்க மீள்குடியேற்ற சேவை நிறுவனம் அவர்களின் வழக்கு முடக்கப்பட்டதாக  இடி ஒன்றை கொடுத்தது.

அந்த நிலுவையில் இருக்கும் காலப்பகுதி இன்று ஒரு வருடம் கடந்த நிலையில் இன்னும் செயற்படுத்த முடியாத நிலையில் இருப்பதன் காரணம் இது வரை  தெரியாமல் ஐ நா இருந்தாலும் நிலாவிற்கும் மதுரனுக்கும் அதன் முக்கிய பின்னணி நிச்சயம் விளங்கும்....!

(தற்போது மிக மோசமான நிலையில் இருக்கும் மதுரனுக்கு  மருத்துவ சிகிச்சை வழங்கப்பட வேண்டும் என்பதற்காகவும் அவனின் நிலை வெளி உலகத்திற்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காகவும் எழுதஆரம்பித்த இந்த தொடர் இணயத்தளங்களில் வலம் வருகின்ற இந்த ஒரு மாத கால இடைவெளியில் மதுரனின் தொடர்பு துண்டிக்கப்படுள்ளது.இன்று வரை அவரிடமிருந்து எந்தவிதமான தகவலும் இல்லை. அத்துடன் அவரிற்கான பார்வையும் தடை செய்யப்பட்டுள்ளதோடு அவரை ஒரு நாற்சுவரிற்குள் அடைத்து வைத்திருக்கின்ற கொடுமையினை தட்டிக்கேட்க யாருமே இல்லை.  ஐ நாடுகள் அகதிகள் உயர் ஸ்தானிகராலயமும் சென்று பார்வையிடாமல் உயிரோடு கொல்கின்ற இந்த அவல நிலையினை யாரிடம் சென்று முறையிடுவது? )

தொடரும்........

அரசி நிலவன்
தாய்லாந்திலிருந்து 



அடுத்த பதிவிற்கு செல்ல 
http://arasikavithaikal.blogspot.com/2014/03/mv-sunsea-9.html

No comments:

Post a Comment