Search This Blog

Wednesday 12 February 2014

கற்பனை...!!!


உருளைக்கிழங்கு கறி பிரட்டலும்
உனக்குப் பிடித்த பாகற்காய் பொரியலும்
உளுந்து வடை பாயசமுமாய்
உன்னை உட்கார வைத்து
உன் முகம் பார்த்து நான்
உவகையோடு பரிமாற - நீ பார்க்கும்
உந்தன் ஓரப்பார்வையின் நீளத்திற்காக
ஊர்ந்து ஊர்ந்து மெதுவாக அகப்பை துளாவும்
என்னை தட்டி நீ இல்லாத நிஜத்தினை உணர வைக்கும்
எம் செல்ல மகனின் நினைவே இன்றிய
கற்பனையில் கட்டுண்ட கொடுமை தொடர்கின்றது
கன காலமாக...

கற்பனையில் உன் முகம் பார்த்து
கடதாசியில் உன் உணர்வுகளை அறிந்து
கரைந்த காலங்கள் கடந்து இன்று
கணப்பொழுதுகள் தன்னும் கற்பனையில் தான்
கடந்து செல்கின்றன...!

கற்பனை என்பதனையே உணர முடியாத நிலையில்
கடந்த கால உன் நினைவுகள் நிகழ் காலத்தில்
நிகழுவதாய் நிதர்சனத்தினை தொலைத்து
நின்று நிலை தடுமாடுகின்றேன்....!

முற்றிய நோயின் அறிகுறியோ...!
முழுவதும் உன் நினைவுகள்
முக்காடிட்டு மூலைக்கொன்றாய்
முனகியபடி கிடக்க - நானும்
முன்னுக்கு பின்னாக அவற்றை உயிர்ப்பிக்கும்
முயற்சியில் மூழ்கி நிஜம் மறந்த பைத்தியமாக
முடிவில்லாத கற்பனையில்.....

முகம் பார்த்து முழுதாய் வருடம் ஒன்று
முழுங்கப்பட்டதன் எதிரொலியோ...?

முகவரி தொலைத்த தபால்களாக
முடங்கி கிடக்கும் நீயும் நானும்
முற்று முழுதாய் கற்பனையில்
முகம் பார்த்து தான் இறுதியில்
முடிவுரை பெற வேண்டுமோ??

கடந்து போன கண்ணீரின் அத்தியாயத்தின் பின்
கடக்கின்ற கற்பனை செயல்கள் ஒரு நிலையில்
கரை தாண்டும் போது கடைசி அந்த நிமிடமும்
கண்மணிகளுக்கான கற்பனை உலகை மீண்டும்
கரங்களில் கொடுத்து தொடரத்தான் போகின்றது...!!

அரசி நிலவன் 

1 comment: