Search This Blog

Friday 4 April 2014

ஏட்டுச்சுரைக்காய்..!!!

தேர்தல் காலத்து வாக்குறுதிகள்
தேய்ந்து போன விசைப்பலகையினை நம்பிய
காரசாரமான முகப்புத்தக அரசியல் அரட்டை
காற்றிலே பறக்கும் வீரப்பேச்சுக்கள் - யாவும்
கறிக்குதவாத ஏட்டுச்சுரைக்காய் போலத்தான் என்பது
கன பேருக்கு தெரிந்த உண்மை..!

எழுத்தில் எழுதிய ஒப்பந்தங்களும்
எழுதாத புரிந்துணர்வுகளும்
எழுந்து வந்த சமாதானமும்

பின்னர் நம்பி நாம் கை நீட்டிய ஐ நாவும்
பிடித்து வந்த வெள்ளைக்கொடியும்

நிறைந்து வழிந்து ஓடிய உதிரமும்
நினைவில்லாமல் போன யுத்தமும்

நேரடியான காணொளிகளும் - சாட்சிகளின்
நேர்காணல்களும் கதறல்களும்

சுடுகாடாய் போன தேசமும் - புதை குழிகளின்
சுவடுகளாகிப் போன மண்ணும்

இன்னும் இன்னும்
இன்று வரை தொடரும்
இனம் தெரியாத கடத்தல்களும்
அடக்குமுறைகளும்
அநியாயங்களும் - வெறும்
ஏட்டுச்சுரைக்காய்கள் தான் - விழியாலும்
ஏறெடுத்தும் பார்க்க முடியாத
ஏட்டுச்சுரைக்காய்கள் என்பது
ஏன் இன்னும் எவருக்கும் விளங்கவில்லை...!

ஏட்டில் எழுதப்பட்ட
ஏட்டுச்சுரைக்காயினைப் பார்த்து ரசிக்கலாம் - இங்கு
ஏதிலிகள் எம் வரலாற்றில் கிறுக்கிய
ஏட்டுச்சுரைக்காய்களாக இவை என்றும்
ஏணி வைத்து எம்மை நோக்கி
ஏறி வரும் சாபங்கள் அன்றோ??





லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "ஏட்டுச்சுரைக்காய்" என்ற தலைப்பில் இன்று (31.03.2014 )வழங்கிய கவிதை இது.

கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 (இலங்கை இந்திய நேரம் பிற்பகல் 7.30 மணிக்கு )மணிக்கு... http://gtbc.fm/





1 comment:

  1. வெறும் எழுத்தாக இருக்கும் வரை வெற்றுக் காகிதமே..
    நடைமுறைக்கு வரவேண்டும் நல்லவைகள் என்று விளம்பும்
    அருமையான ஆக்கம் சகோதரி...

    ReplyDelete