Search This Blog

Wednesday 30 April 2014

சிரிப்பு...!


தொலைத்து விட்டேன்..!
தொலைந்த இடம் மறந்து விட்டேன்..!

இதயத்தினை அரிக்கும் துன்பத்தால்
இடம் பெயர்ந்திட்ட சிரிப்பு
இன்னும் மீள் குடியேறவில்லை...!

அவ்வப்போது இடம் பார்க்க
அதிசயமாய் வந்து போகும் சிரிப்பு...
கண்ணீரை கலைத்துச் செல்வதுண்டு...!
கடுகதியில் விரைந்து சென்றிடுவதுமுண்டு...!

நிரந்தர இருப்பிடம் அமைத்துக்கொள்ள என் உள்ளம்
நிம்மதி இல்லாத பிரதேசம் போலும்....

உயர் பாதுகாப்பு வலயம் போன்று அடிக்கடி
உலவுகின்ற பிரச்சனைகளின் ஆதிக்கத்தால்
சிரிப்பு தடை செய்யப்பட்டு வருடங்களாயிற்று...!
சிந்தையில் நிரம்பி வழியும் கணக்கற்ற சோலிகள்
சிரிப்பினை அருகிலும் அண்ட விடுவதில்லை...!

அத்து மீறி நுழைந்திடும் சிரிப்பு
அதிக நேரம் தங்கிடாது - சிரிப்பு கூடவே
இருக்கின்ற நேரத்தில்
இதயம் இடம்பெயரும்
இன்பம் பொங்கிய தருணம்
இழந்து போனவையும் திரும்பிடும்...!!!

இப்போதெல்லாம் சிரிப்பை
இங்கே வலுக்கட்டாயமாய்
வரவழைத்து சிரிக்கின்றேன்...!
வலிகள் யாவும் பலிகள் ஆகின்றன...!

எந்தன்  நிலை தனை எண்ணி எண்ணி
எக்காளமிட்டு சிரிக்கின்றேன்...!

என்னை ஆளும் துன்பங்களே விலகி ஓடுங்கள்.....!
எப்போதும் சூழ்ந்துள்ள வேதனைகளே மறையுங்கள்...!
சிரிப்பு என்னும் ஆயுதம் தாங்கி நான் போராடுகின்றேன்...!
சித்தம் கலங்கிபோச்சு என்ற பேச்சுக்கும்
சிறிதும் செவி சாய்க்காமல் சிரிக்கின்றேன்- நான்
சிரித்துக்கொண்டே இருக்கின்றேன்....!



லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "சிரிப்பு" என்ற தலைப்பில் இன்று (30.04.2014 )வழங்கிய கவிதை இது.

கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 (இலங்கை இந்திய நேரம் பிற்பகல் 7.30 மணிக்கு )மணிக்கு... http://gtbc.fm/



  

No comments:

Post a Comment