Search This Blog

Monday 14 April 2014

களிப்பு...!

தொடர்கதையாகிய எம்மினத்துன்பம்
படர்கின்ற கொடியாகி துரத்துகின்ற கன்மம் 

சுடர் விடும் நெருப்பாய் சுட்டெரிக்கும் வலிகள் 
அடர் வனத்து இருளாய் பயமுறுத்தும் நிகழ்வுகள்...
இடர் ஒன்றே எமக்கான சொத்து என்று எழுதி வைத்தது போன்று
தொடர்கின்ற வரலாறு சொல்லிக்கொள்வது ஒன்று மட்டுமே
களிப்பு என்பதை கடினப்பட்டும் கண்டிட முடியாது 
களிப்பு என்பது வார்த்தைகளோடு மட்டுமே எமக்கு சொந்தமாம்...!

கை கட்டி கண் கட்டி சுட்டுத்தள்ளி - இலகுவாக 
கை காட்டி போகின்றார்கள் புலி என்று 
இல்லாத புலி களை வில்லங்கமாய் பிரசவிக்கின்றார்கள் 
இருக்கின்ற பாவிகளை பலி கொள்ளுகின்றார்கள் 
இந்த வருடம் எத்தனை உறவுகளுக்கு 
இருட்டில் விடிந்ததோ...?
யாரறிவார்...?
யாரிடம் சொல்லி அழுவது - எம்மினத்தின் அவலத்தினை 
யாராவது கண்டு கொள்ள மாட்டார்களா 

வருடம் பிறக்கின்றது....
வருடங்கள் பிறந்தன...
நம்பிக்கைகளும் பிறந்து இறந்தன....
நல்ல ஒரு முடிவு எமக்கு கிட்டாதா 
களிப்புடன் வரவேற்போம் புது வருடத்தினை...
களிப்பாய் செழிப்பாய் மலர வேண்டும் என்று 
இனிப்பாய் விருப்பாய் வரவேற்போம் 
ஜெயம் கொடுக்க வரும் ஜெய வருடத்தினை..


லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "களிப்பு" என்ற தலைப்பில் இன்று (14.04.2014 )வழங்கிய கவிதை இது.

கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 (இலங்கை இந்திய நேரம் பிற்பகல் 7.30 மணிக்கு )மணிக்கு... http://gtbc.fm/



No comments:

Post a Comment