சொந்தமே...!!!
சொந்த மண்ணில் காணாமல் போனவனே....!
காணாமல் போனோர் பட்டியலில்
காத்திருப்பது...
உன் பெயர் மட்டுமா..?
என் உயிரும் அல்லவா...??
என்னை வழியனுப்பி சென்ற நீ..!
அன்னை இல்லம் ஏகாமல் மறைந்தாயோ..??
இடியென இறங்கிய செய்தி, என் செவி வழியே..
இதயத்தை தாக்கியதும் அதிர்ந்தேன்...!
சட்டென்று போயிருப்பேன்..!
பொட்டென்று உயிரை நீக்கி...,
எங்கே...
உயிர் மீண்டு வந்து- நீ
என்னைக்கண் தேடுவாயோ...?
எண்ணிக்காத்திருக்கின்றேன்...!
எண்ணியபடி நாட்களை...
உன்னை நெஞ்சிலும் - உன்
உயிரினைக்கருவிலும் சுமந்தபடி..
கண்ணா..!
கல்லறையில் உன்னை விதைத்திருந்தால், அங்கே
கண்மூடித்துயில் துயில் கொள்ளும் - உந்தன்
காலடியில் மலர்களைத்தூவி...,
கண்ணீர் விட்டு கதறியிருப்பேன்...!
அனலோடு சங்கமமாகி - நீ
அருவமாகி போயிருந்தால்
அன்பே உன் உடலின் சாம்பலை
புனலோடு கரைத்து - நானும்
புனித மண்ணுக்குள்
புதைந்து போயிருப்பேன்...!
கண்ணுக்கு தெரியாமல் - நீ
கலைந்து போனாயோ..??
காரணம் இன்றி கயவரால்
கடத்தப்பட்டாயோ..?
தலை கோதி முத்தமிட்டு சென்றவனே...!
தனிமையில் தவிக்கின்றேன்..!
உன் நிலை எண்ணி....
எவ்விடம் ஏகினாயோ...??
என்னையும் அழைத்திடு..!
என்னுயிர் நீங்கி,,,
என்றைக்கும் - நீ
விழி மூடாதே..!!
- அரசி நிலவன் -
No comments:
Post a Comment