Search This Blog

Saturday 24 October 2009

அடங்கா மண்ணிலே... அமைதியாய் துயில் கொண்டிருப்பேன்..!!!




இலட்சியங்கள் கனவாகி விடுமோ...??
இரவுகள் விடியாது போகுமோ...??

காத்திருந்து...,
காலங்கள் அழிந்தது..!
காதலன் காற்றோடு கரைந்து போனான்..!

சொந்தங்கள் சிதறி...
சொர்க்கம் ஏகின..!
சொல்ல வார்த்தை இல்லை..
சொப்பனத்திலும் அழுகை தான்..

கால் போன போக்கிலே,
காடு மேடெல்லாம் நடந்து...,
பித்து பிடித்தவள் போல,
பிதற்றி பிதற்றி வந்தேன்...!

பிஞ்சுகளை பிய்த்து போட்ட எறிகணை,
பேதை என்னை விட்டு வைத்தது ஏனோ..??
உறவுகள்.. உயிரை விட்ட கிபிரின் குண்டுக்கு - நான்
உயிர் தப்பியது ஏனோ..??

இடைத்தங்கல் முகாமில் வந்து...,
இடிபடுவதற்காக....,உயிர் மீண்டு வந்தேனோ...??
இதற்கு...நான் என் மண்ணுக்கு,
உரமாகி போயிருக்கலாம்..!

அடங்கா மண்ணிலே...!
அமைதியாய் துயில் கொண்டிருப்பேன்..!
அன்பு மண்ணிலே...! உயிர்
அடங்கி போயிருப்பேன்...!!!

உணர்வை உயிர்ப்பித்து,,
உயிரைக்கொடுத்து...,
உடலை மண்ணுக்கு தந்திருப்பேன்...!
உண்மையோடு நான் தூங்கி போயிருப்பேன்..!

மாறாக...

உணர்வை இழந்து...,
உடலை வருத்தி....,
பொய்மையோடு போராடி,,
உயிரோடு மரணித்து கொண்டிருக்கின்றேன்...!!!.

" அரசி "

No comments:

Post a Comment