Search This Blog

Wednesday 8 January 2014

தினந்தோறும்........!

தினந்தோறும் இங்கே நாம் பிய்த்து
தின்னப்படுகின்றோம்...!

வலிகளும் வழக்கமாயிற்று..!
பயங்களும் பழகிப்போயிற்று..!


வழக்கின்றி, தீர்ப்பின்றி , உண்மையின்றி
நாடின்றி. நாதியின்றி நாலு சுவருக்குள்
நாட்டாண்மை புரிவோரால் தினந்தோறும்
எட்டி உதைபடுகின்றோம் பந்தாக...

எம்பிக்குதித்து அடைக்கலம் தேடி வரும்
எம்மை எதிர்த்து நிற்கின்றன
நாற்சுவர்கள் கூட...

தமிழீழம் பேசும் உணர்வாளர்களே..!
தரணி எங்கும் ஈழப் பரணி பாடும் புலவர்களே
நாடு கடந்து  நிற்கும் அரசுகளே...!
நாடு விட்டு நாடு வாழும் உறவுகளே..!

தினந்தோறும் நாம்  மரணிக்கின்ற செய்தி அறிவீரோ??
வனந்தோறும் விழித்திருந்து காத்திருந்து காவல் செய்தோம்...!
நினைவிருக்கின்றதா??

காட்டு யானையும், புலியும், சிங்கமும் நட்பாகி போன தேசத்தின்
காவலர்களின் தடுப்புக்கூடம்  கொடும் வனத்தை விட
கொடூரமாய் கழிகின்றது தினந்தோறும்..!


நின்று போன யுத்தம் இன்று வரை எம்மில் புரியப்படும் கொடுமையும்
தொன்று தொட்டு வந்த இனவாதம் எம்மேல் எய்யப்படும் குரூரமும்
ஒன்று பட்டு நின்ற இனத்தின் எச்சங்களாய் நோக்கப்படும் சங்கதியும்
அறிந்தும் அறியாமல் போவதேனோ??

தினந்தோறும் எழுதும் ஊடகங்களே...!
மனந்தோறும் விழுத்துங்கள் நாங்கள்
கணந்தோறும் சாகடிக்கப்படும் நிலையினை....

பெயரும்  நினைவில் இல்லை..
ஊரும் அருகில் இல்லை...
குருதி வாசனை இன்றி - தினந்தோறும்
குடலுக்குள் ஆகாரம் இறங்குவதில்லை..!

சலம் நிறைந்த சாக்கடையில் தினந்தோறும்
வலம் வரும் நுளம்பும் தீண்டாமல் செல்லும்
பலம் அற்றுப்போன பிணங்களாய் நாம்...!!!

விடிகின்ற பொழுதுகள்
மடிகின்ற எமக்கு தினந்தோறும்
இடிகின்ற பொழுதுகளே...!!!


எனது உனது பாகுபாடின்றி - உடல்
பிழிந்து பீறிடும் குருதி தினந்தோறும்
வழிந்தோடுகின்றது எம் மேலே...

சகதியாகிப்போன குருதி நெடிக்குள்
சலனமின்றி சடலங்களாக...

தினந்தோறும் சடலங்கள்
தட்டி எழுப்பப்படுவதும்
வெட்டி விழுத்தப்படுவதுமாய்
கட்டி எழுப்பப்படும் சவச்சாலையில்
முட்டி மோதி கட்டிப்போட்ட பிணக்குவியலாய்
நாம் இங்கே குவிந்து கிடப்பதையும் நீங்கள்
தட்டிக்  கேளுங்கள்....!

ஒட்டிய வயிறும்
கட்டிய கரங்களும் - நீர்
முட்டிய விழிகளுமாய்
வேற்றுக்கிரக வாசிகளை ஒத்து - சுவாசிக்கவே
தோற்றுக்கிடக்கும் நாசிகளையும் - அசைவின்றி
வீற்றுக்கிடக்கும்  குருதிப்பாசி படிந்த
உடலங்களையும் உற்று நோக்குவீராக...!
உலகத்திற்கு உரத்து உரைப்பீராக....!


அரசி நிலவன்




லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "தினந்தோறும் " என்ற தலைப்பில் இன்று வழங்கிய கவிதை இது.

கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 (இலங்கை இந்திய நேரம் பிற்பகல் 8.30 மணிக்கு )மணிக்கும் மறு ஒலிபரப்பு பிற்பகல் 9.30 மணிக்கும்...... http://gtbc.fm/









1 comment: