Search This Blog

Thursday 23 January 2014

கொடை...!!!

உலகத்தில் உயிரைக்கொடுப்பதுதான்
உச்சமான கொடை என்று அறிந்ததுண்டு...!

வாழ்ந்து கொண்டே மரணிக்கின்றான்
வாழ்நாளை கொடுத்து விட்டான் பிறருக்காக...
வாழ்வின் அரிய தருணங்களை வாரி வழங்கி
வாடிக்கிடக்கும் இவனின் கொடை எங்கு சேரும்?

பணம் கிடைக்கும் என்றால் பிணம் பேசுகின்ற காலத்தில்
பிணமாய் கிடக்கின்றான் பணம் என்பதனை புறந்தள்ளி...!
உறவுகளின் நலன் விரும்பியதால் தன்
நாக்கிற்கு பூட்டு இட்டுக்கொண்டு சாவியினை
தெரிந்து கொண்டே தொலைத்துக்கொண்டவன்...!
கடக்கின்ற கொடுமை வாழ்விற்கும்
களங்கம் அள்ளிப்பூசி அர்த்தமற்றதாக்கி விடுமா...?

புரிந்துணர்வு அற்றோரின் புரிதல்கள்
வதந்திகளாய் அவனை மூச்சுத்திணற
வைக்கின்றன....!
முகவுரையும் முடிவுரையும் இன்றி
நடுவில் கொஞ்சம் மேய்ந்தவர்கள்
விமர்சனம் புரிந்திடத்தகுதியானவரோ?

அவனது கொடை
அவனை அறிந்தவர்கள்
அறிவார்கள்...!

உயிர்க்கவசத்தினை அறுத்து
உயிரினை கொடையாக்கியவன் கர்ணன்..!
உயிரைத்தினம் தினம் அறுத்துக்கொடுக்கின்றான் இவன்...!
உயிர் கொண்ட இவன் விசுவாசிக்காக...

உண்மையும் இவனோடு சேர்ந்து தடுப்புக்காவலில்
உறைந்து கிடக்கின்றது நெடுநாளாக....!

உயிரை இவன் துறந்திட்டாலும்
உண்மை தன் உயிரைக்கொடையாக்கி
உலகம் எங்கும் உரத்துச்சொல்லும் அவன்
உயிர்க்கொடையினை....!


அரசி நிலவன்
  

No comments:

Post a Comment