Search This Blog

Friday 3 January 2014

இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்...!!!



முந்நூறு நாட்கள் வளர்ந்து
முழுமதியாய்  வந்தவனே...!!
முந்நூற்று அறுபத்தைந்து நாட்கள்
முதிர்ச்சி பெற்று நிற்கின்றாய்...!
முந்தி வந்து என்னை முத்தமிட்ட
முத்துப்பல் சிரிப்பழகா..!

தத்தி நடை பயிலும் உன் 
தங்கப்பாதம் பட்டு சுற்றும் 
தரணியும் இடை விட்டுச் சுழல்கின்றதே...!
மொட்டு உன்னைத்தொட்டுச்செல்லும் 
தென்றலும் உன் வாசம் அள்ளி வீசுகின்றதே....!

விழி மூடி திறந்து சின்னச்சின்ன
விளையாட்டுக்காட்டும் என் விழுதே..!
விடியலாய் உதித்தவனே தொழுவேன் - உனை
விதைத்து விட்டு என் கரம் சேர்த்தவனை


உயிரின் ஒளியும் நீயானாய் - என்
உயிரில் ஒளிந்த உயிரும் நீயானாய்...!!!

வலியின் எழுதலும் நீயானாய் - கண்
மணியின் பார்வையும் நீயானாய்

இதயத்தில் ஒலிக்கும் நாதமானாய் - என்ன
இல்லாமல் போனாலும் நான்
இருப்பேன் உன் உயிர்ப்பிலே...

கருவில் கவிதை கேட்டு என்னோடு
கை குலுக்கி கொண்டவனே - சின்ன சின்ன
கதை சொல்லி என்னை தாலாட்டிக்
கண்ணுறங்க வைத்தவனே.... !

பட்டுப்பாதம் கொண்டு எட்டி உதைத்து
திட்டி விளையாடிய கட்டிக்கரும்பே...!
உதிரத்தில் சொட்ட சொட்ட நனைந்து
பட்ட வலி நீக்கி தொட்டுச்சிரித்தவனே..!
      
பிஞ்சு விரல் நீட்டி வானம் காட்டி தலை ஆட்டி
கொஞ்சிப்பேசுகின்றாய்...!
வானத்தை அளந்து கானம் பாடுகின்றாயோ
வானம் வரைக்கும் உன் மானம் காப்பேன் என
மழலை மொழியில் உரைக்கின்றாயோ..?

பால் நிலாவும் வானம் இறங்கி வருகின்றதே...!
கால் முளைத்து உன் கரம் பிடித்து விளையாடவே..!
விண் மீன்கள் கண் சிமிட்டி அழைக்கின்றன..!
மண் ணில் பிரகாசிக்கும் சிவசூரியன் - உன்னில்
கண் வைத்து காதல் புரிகின்றனவே...!


துள்ளித் துடினம் காட்டும் புள்ளி மான் குட்டியே...!!!
அள்ளிக்கொண்டு உன்னை வாழ்த்துகின்றேன்...!!!
பள்ளி சென்று பல்கலையும் கற்று வானத்து - விடி
வெள்ளியாய் மிளிர்ந்து விண் தாண்டிப்புகழ் பரப்பி
அகிலம் அரவணைத்து பண்போடும் பணிவோடும்
அன்புடன் தென்புடன் என்றென்றும் நலமோடு நீ
வாழ்க வாழ்க பல்லாண்டு ..!!!

இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்...!!!

அரசி நிலவன் 

2 comments:

  1. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. வணக்கம்
    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்... என்றென்றும் சீரும் சிறப்பும் பெற்று வாழ்க...

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete