Search This Blog

Monday 27 January 2014

முத்து...!!!


இந்து சமுத்திரத்தின் முத்து - என
அடைமொழி கொண்டு
பூரித்த இலங்காபுரியில்...
கொத்து கொத்தாய் மனித மண்டையோடுகள்..!
கொன்றொழித்து மறைத்த எச்சங்கள்
குட்டி போடுகின்றனவோ...?


அள்ள அள்ள குறையாத
அமுத சுரபி போன்று
தோண்ட தோண்ட விளையும் என்புகளின்
வற்றாத மனித புதைகுழிகள்
வகை வகையாய் மலிந்து கிடக்கின்ற
வளமான நாடு...!

இந்து சமுத்திரத்தின் முத்து
நன்றாகவே பொருந்துகின்றது...!
 
யார் யாரோ...?
யார் இவரோ..???

யார் அறிவார் இவர்களை - உயிர்
யாசகம் கேட்டு
தோற்றுப்போய் தாண்டவர்கள்
தோண்டப்படுகின்றார்கள் இதயம்
உக்கிய மண்ணை நீக்கி....

என்புகளின்  விளைச்சல்
எதிர்பார்க்காத அளவிற்கு
வரலாறு காணாதவாறு
வளமாய் விளைகின்றது...!

சர்வதேச சந்தையில் விற்று
சரிந்து நிற்கும் பொருளாதாரத்தினை
சற்று உயர்த்திடலாமோ..???

சமரச பேச்சுவார்த்தைநடக்கின்றது
சத்தமின்றி என்புகளை நாடு கடத்திட....

இறந்தவர்கள் வாழ்வதாய்
இருப்பவர்கள் தேடி அலையும் தேசத்தில்
தோண்டி எடுக்கப்படும் இவர்கள்
தொன்மையான தொல்பொருள் சான்றுகளா??


யார் யாரோ...?
யார் இவரோ...?
யார் அறிவார்கள்...?

கொத்து கொத்தாய் மனித என்புகளை
சொத்தாக கொண்ட இலங்காபுரிக்கு
"இந்து சமுத்திரத்தின் முத்து"
நன்றாகவே பொருந்துகின்றது...!




1 comment:

  1. என்ன கொடுமை.... துயரம் வரிகளில் புரிகிறது...

    ReplyDelete