Search This Blog

Monday 23 September 2013

பறவையின் குரல்...!!!


பறவையின் குரல்களோடு
பிணைந்திருந்த மனித வாழ்வு
பிரிந்து காலமாயிற்று....!
பிரிந்த தாய் மண்ணோடு
பிரிந்து போனது  அன்றாட
பிணைப்புக்குரலிசைகளுமே...!!


அதிகாலை கொக்கரக்கோவோடு விடியல்..!
அங்கு மிங்கும் கீச் கீச் உடன் வானம்
அரைத்தூக்கம் கலைக்கும் அசைவோடு.....
அழகிய பச்சைக்கிளிகளின் கீ கீ புத்துணர்ச்சி..!

கட்டியம் கூறும் விருந்தினர் வருகையை
காவி வரும் கா கா குரலோடு
காதல் பறவைகளின் இனிய மழலை
காதிற்கு இனிமையான இசைகள்...!

சிட்டுக்குருவியின்
சிருங்கார இசைக்குரலில் மெய்மறந்து,
சின்ன சின்ன மைனாக்கள் பேசும்
வண்ண வண்ண குரலில் பின்தொடர்ந்து,


குயில் பாடும் குரலோடு மயங்கி - பின்
மயிலின் குரலோடு அரண்டு எழுந்து - நடை
பயிலும் புள்ளினங்களின் சின்ன மழலையில்
உலகம் மறந்திடும் நினைவு...!

அன்றில் பறவையின் அகவலும்
தேன் குருவியின்(ஹம்மிங் பேர்ட்) தேனிசைக்குரலும்
கொண்டைக்குருவியின் கொள்ளை கொள்ளும் இசையும்
நினைவுகளாகி தொலைந்து நாட்களாயிற்று....!

இயற்கையின் அணைப்பில் இறுகிக்கிடந்த
இனிமையான வாழ்வு - இன்று
இயந்திரத்திற்குள் சுருங்கிய
இருண்ட உலகத்தில் இயற்கையின்
இனிமை காணாமல் போய் விட்டது....!!!


இன்னும் சேவல்களும் குருவிகளும் கிளிகளும்
இருக்கத்தான் செய்கின்றன.....!!!
முகப்புத்தகத்தில் முகம் புதைத்து
அகப்புத்தகத்தில் நிம்மதி தொலைத்து
அலையும் மானிடனின் பரிதாபத்தை
நிலைத்து நின்று கூவுகின்றன சேவல்களும்
சிரித்து கதைபேசும் பச்சைக்கிளிகளும் - இராகம்
இசைக்கின்றன குயில்களும் புள்ளினங்களும்
இரசிக்கத்தான் பாவம் மனிதனுக்கு நேரமில்லை....!


அரசி நிலவன் - தாய்லாந்து


லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "பறவையின் குரல்" என்ற தலைப்பில் இன்று வழங்கிய கவிதை இது.


கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 மணிக்கும் மறு ஒலிபரப்பு பிற்பகல் 9.30 மணிக்கும்......http://gtbc.fm/

2 comments:

  1. அருமை... ரசித்தேன்...

    அன்புடன் DD

    ReplyDelete
  2. உங்கள் தளம் .in என்று முடிவதால் தமிழ்மணம் இணைப்பதிலும், ஓட்டு அளிப்பதிலும் சில மாற்றங்கள் html-ல் செய்ய வேண்டும்... தொடர்பு கொள்ளவும்... dindiguldhanabalan@yahoo.com நன்றி...

    அன்புடன் DD

    ReplyDelete