Search This Blog

Monday 16 September 2013

பிளவு...!

மொழியால் வேறுபட்டு உன் மொழியா என் மொழியா என்றாகி
தம்மொழிக்கே முன்னுரிமையும் கொடுத்து 
தமிழ் மொழியை மட்டுமல்ல தமிழர்களையும் பின்தள்ளிய 
தரங்கெட்ட இனவாதச்சிங்களம் கஞ்சத்தனம் காட்டியது
தமிழர்களின் உரிமையைக்கொடுத்திட
தகுந்த நல்ல தாராளம் காட்டியது
தமிழர்களின் உயிர்களைப்பறித்திட


சிங்களம், தமிழ் என்று பிளவு படுத்தியவர்கள்
சிங்களத்தீவில் பிளவினை நன்றாக விசாலமாக்குகின்றார்கள்
சீனாவை அந்த பிளவிற்குள் சொருகி- பெரிய
சீனா கடினப்பட்டு ஒருவாறு புகுந்து விட்டது....!!!
சின்னப்பிளவு பெரிதாகி தளர்வதால் எப்போது
சின்ன வாயில் கிடைக்கும் புகுந்திடலாம் என
சுற்றி நிற்கின்றனவாம் சில வல்லரசு நாடுகள்
அணில் ஏற விட்ட நாய்கள் போன்று....



சிங்கத்தின் நகம் பட்ட முயல் குட்டிகளாய்
சினம் தாங்காது அங்குமிங்கும் அலைகின்றன
தமிழின உறவுகள்....


பூசாவில் இதயம் துடிக்கின்றது
பூநகரியில் பிரிந்திருக்கும் மனைவிக்காக...
பம்பை மடு தடுப்பில் தவிக்கும் கணவனை நினைத்து
பளையில் ஒரு பெண்மை தேநீர் கலக்கின்றாள்
பயணிகளுக்காக......
அடங்கா மண்ணில் அதிகாரமாய் வாழ்ந்தோர்
அடக்கி ஒடுக்கப்படுவதும்.
அங்கும் இங்குமாய் பிளவு பட்டுக்கிடப்பதும்
அரக்க குணம் படைத்த இனவாத சிங்களனின்
அர்த்தமில்லா பேரினவாதப்பிளவால்...!!!


அலை கடல் மீதிலே
ஆங்கோர் மீன்பிடிப் படகை நம்பி
அருமை உயிர்களை பணயம் வைத்து
அடிக்கடி விபத்தாகியும் அச்சமின்றி
அந்தரத்தில் பயணித்து கரை சேராமல்
அந்த சமுத்திரத்தின் கோரப்பசிக்கு தம்மை
அள்ளிக்கொடுப்பதும் - இலங்கை என்ற
அரக்க நாட்டின் கோர முகத்தைப்பார்த்து
அரக்கப்பரக்க ஓடி வருவதாலேயே - ஒருவேளை
அந்த இலங்கை சொல்லித்தான் சமுத்திரம்
அலைகளால் அடித்து விரட்டுகின்றதோ??
அங்கேயும் இனவாதப்பிளவா தமிழன் என்று...!

இலங்கை என்றொரு தேசத்தில்
இன்று வரை எத்தனை எத்தனை உறவுகள்
தந்தை, அண்ணன் , கணவன் மாரை
அந்நிய தேசத்துக்கு அகதியாக
நாடு கடத்தி விட்டு தனித்திருந்து
நாளும் பொழுதும் ஏக்கத்தில் கடக்கின்றார்கள்..

இலங்கை என்ற தேசத்தின் பிளவு
இன்னும் பிரிக்கப்படுமா பிரிவினைகளால் - இல்லை
எதிர்காலமதில் தன்னும் ஒன்றாகுமா- அட
கனவு தன்னும் காண முடியவில்லை...!
கனவில் கூட கொட்டச்சிரிப்புடன் சிங்களம் தான்
கர்சிக்கின்றது,,,,,
இசைவாக்கமே அடந்திட்டோம் - நாம்
இந்த இனவாதப்பிளவால்....



அரசி நிலவன்






லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "பிளவு" என்ற தலைப்பில் இன்று வழங்கிய கவிதை இது.


கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 மணிக்கும் மறு ஒலிபரப்பு பிற்பகல் 9.30 மணிக்கும்......http://gtbc.fm/



No comments:

Post a Comment