Search This Blog

Tuesday 17 September 2013

"எனக்காய்...!"

காற்றோடு  காது வைத்து காத்திருக்கின்றேன்...!
காற்றில் தவழ்ந்து வரும் உன் குரலோசை
காதுகளில் ஒலிக்க கேட்பதற்காய்....


ஒற்றைக்கவிதை ஒன்றில் - என்
உயிரினைக் கயிறு கட்டி இழுத்து விட்டாய்...!
நான் நீயாகி நீ நானாகி
நாமாகி நாள் கடந்தும்
நாடித்துடிப்பாக என் நினைவுகள்
நாளும் துடிக்கின்றது உன்னில்...!
நான் இங்கே நீ அங்கே
நாட்கள் நம்  நினைவுகளின்றி
நகருவதில்லை நமக்கு....!

பசித்திருந்தாலும்,,
பல இடர்கள் எனை அணைத்தாலும்
பஞ்சம் என்னை நெருங்கி வந்தாலும்,
பஞ்சாய் பறந்து ஓடிடும்.....!
நெஞ்சம் திறந்து பேசும் உன்
வஞ்சமில்லா பேச்சுக்களால்..!



கஞ்சத்தனம் இல்லாமல் - உன்
நெஞ்சத்திலே மாமனை கட்டி
வஞ்சி என்னை சொர்க்கத்தை
விஞ்சி நிற்கும் இன்பத்தில்
சஞ்சரிக்க வைக்கும் உன்
கொஞ்சிப்பேசும் இதமான அன்பு
மிஞ்சிடும் என் வலிகளை.....!

அஞ்சி நடுங்கி அடைபட்டிருந்தாலும்
கெஞ்சி தொலைபேசி பெற்று
கொஞ்சிடும் உன் பேச்சுக்கள்
எனக்காய் உளி கொண்டு
செதுக்கி நீ கொடுப்பவை...!


செய்வதறியாது கண்ணீரில்
கரைகின்றாய் - காற்றிலே
கலந்து வரும் உன் கண்ணீரின் உப்பில்
கறி சமைத்துக்கொள்கின்றேன் நான்....!

கண்ணாளனே.....!
கனவுகள் கொடுத்து அனுப்புகின்றாய்  இரவுகளிடம்
கடிதங்கள் சொல்லாத சங்கதிகளை
கனவுகள் உணர்த்தி விட்டு காணாமல் போகின்றன..
கணப்பொழுதுகளில்....!


கம்பி வாழ்வினை கடினப்பட்டு வாழ்ந்து கொண்டு
கண்ணீர் சிந்துகின்றாய் எனக்காக.....!
கடைசி வரை இவ்வாறே இருந்திட போவதில்லை...!
கண்கள் சேர்ந்திடும் காலம் வெகு தொலைவில் இல்லை...!

அருகருகே நாம் இருந்த போதும் காதலை
அறிந்து கொண்டதில்லை முழுதாக..!
அர்த்தமில்லா இந்த பிரிவு கூட எனக்காய் போலும்..!

காதலனே கடவுள் மேல் நான் கொண்ட
காதலின் ஆழத்தினால் வழங்கப்பட்ட
காதல் பரிசு "எனக்காய் நீ...!"  


அரசி நிலவன்


லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "எனக்காய்" என்ற தலைப்பில் இன்று வழங்கிய கவிதை இது.


கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 மணிக்கும் மறு ஒலிபரப்பு பிற்பகல் 9.30 மணிக்கும்......http://gtbc.fm/

No comments:

Post a Comment