Search This Blog

Tuesday 24 September 2013

மலைக்காற்று...!




மலைகளின் மடியினில்
அலையாய் தவழ்ந்து - வெம்மையை
வலை வீசி அள்ளி  ஊதலில்
சிலையாக்கி நகரும் சீதளக்காற்று..!!!

காதில் தேன் மொழி பேசி சிணுங்கி எங்கோ
காதல் சொல்ல விரைகின்றது விரைவாக..



ஊதற்காற்றின்
ஊடல் விளையாட்டுக்கு அஞ்சி
ஊமையாகி நிற்கின்றன மலையின் தளிர்ச்செடிகள்...!


தவழ்ந்து விளையாடும் குளிர்காற்றோடு
தகதிமி ஆட நெருங்கி வரும் வெண் பஞ்சு
முகில்களை முட்டி மோதும் பர்வத உச்சி
தொட்டுச்செல்லும் மலைக்காற்றால்
சொட்ட சொட்ட நனைகின்றது வெட்கத்தால்...!



பட்டும் படாமலும் தொலைவில்
எட்ட நின்று ஓரப்பார்வை பார்க்கும்
வட்ட வெண்ணிலாவும் நாணி
மேகத்திரையில் ஒளிந்து கொள்கின்றதோ..???



கண் சிமிட்டும் விண் மீன்களின்
பண் பாடும் இசை கேட்டுத்தான்
விண்ணுக்கும் விரைகின்றதோ
மண்ணின் மலைக்காற்று....!


ஊதற்காற்றில் ஊஞ்சல் ஆடும்
ஊதாப்பூக்கள் சொரியும் தேனினை
காதலிக்கு அபகரித்துச்செல்கின்றதோ
கார்காலக்கள்ளக்காற்று....!!

ஊரெல்லாம் பரவும் தேனின் கடியால்
ஊதற்காற்றின் திருட்டு அம்பலமாக - நாணி
ஊமையாய் திரும்புகின்றது மலையின் மடிகளுக்கே...

தளிர் புற்கள் அள்ளிப்பருக  சொரிகின்றது
குளிர் தேனை பச்சை மலை மீது....
தெளித்து புன்னகைக்கும்  குறும்புக்காற்று
ஒளிந்து கொள்கின்றது ஒன்றுமறியாதது போல...


தற்கொலைக்கு முயலும் மலையருவியினை
தடுக்க விரையும் மலைக்காற்று  சினம் கொண்டு
மலையடிவாரத்தை உதைத்து சாந்தமாகி
மறுபடியும் சிலிர்த்து எழுகின்றது மேலே...


மலைக்காற்றை உதறி விட்டு திமிர் கொண்டு
மலையருவி  பாறையோடு கை கோர்த்து
மகிழ்வோடு  செல்கின்றது ....
மலைக்காற்றை முறைத்தவாறே


மாயமாய் சுழன்ற  சுழல்காற்று
மலையின் உச்சியில் வெண் பஞ்சு முகிலோடு
மந்திரப்புன்னகை புரிந்து வெறுப்பேற்றுகின்றது
மலையருவியினை-தன்
மனம் விரும்பியவாறு....!!!


குளிர் காற்றோடு மனம்  திறந்து பேசி மலை உச்சியின் உச்சந்தலை
குளிர்கின்றது ஊதற் காற்றின் ஊதலை போன்றே.....!!!
மலைக்காற்றின் ஊதற்காதலுக்காக இன்னும் தவம் இருக்கின்றன...
மயக்கும் வெண்ணிலாவும் வண்ண விண்  மீன்களும்....!!!




அரசி  நிலவன்

*********************************************************************************



லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "மலைக்காற்று" என்ற தலைப்பில் இன்று வழங்கிய கவிதை இது.


கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 மணிக்கும் மறு ஒலிபரப்பு பிற்பகல் 9.30 மணிக்கும்...... http://gtbc.fm/


Monday 23 September 2013

பறவையின் குரல்...!!!


பறவையின் குரல்களோடு
பிணைந்திருந்த மனித வாழ்வு
பிரிந்து காலமாயிற்று....!
பிரிந்த தாய் மண்ணோடு
பிரிந்து போனது  அன்றாட
பிணைப்புக்குரலிசைகளுமே...!!


அதிகாலை கொக்கரக்கோவோடு விடியல்..!
அங்கு மிங்கும் கீச் கீச் உடன் வானம்
அரைத்தூக்கம் கலைக்கும் அசைவோடு.....
அழகிய பச்சைக்கிளிகளின் கீ கீ புத்துணர்ச்சி..!

கட்டியம் கூறும் விருந்தினர் வருகையை
காவி வரும் கா கா குரலோடு
காதல் பறவைகளின் இனிய மழலை
காதிற்கு இனிமையான இசைகள்...!

சிட்டுக்குருவியின்
சிருங்கார இசைக்குரலில் மெய்மறந்து,
சின்ன சின்ன மைனாக்கள் பேசும்
வண்ண வண்ண குரலில் பின்தொடர்ந்து,


குயில் பாடும் குரலோடு மயங்கி - பின்
மயிலின் குரலோடு அரண்டு எழுந்து - நடை
பயிலும் புள்ளினங்களின் சின்ன மழலையில்
உலகம் மறந்திடும் நினைவு...!

அன்றில் பறவையின் அகவலும்
தேன் குருவியின்(ஹம்மிங் பேர்ட்) தேனிசைக்குரலும்
கொண்டைக்குருவியின் கொள்ளை கொள்ளும் இசையும்
நினைவுகளாகி தொலைந்து நாட்களாயிற்று....!

இயற்கையின் அணைப்பில் இறுகிக்கிடந்த
இனிமையான வாழ்வு - இன்று
இயந்திரத்திற்குள் சுருங்கிய
இருண்ட உலகத்தில் இயற்கையின்
இனிமை காணாமல் போய் விட்டது....!!!


இன்னும் சேவல்களும் குருவிகளும் கிளிகளும்
இருக்கத்தான் செய்கின்றன.....!!!
முகப்புத்தகத்தில் முகம் புதைத்து
அகப்புத்தகத்தில் நிம்மதி தொலைத்து
அலையும் மானிடனின் பரிதாபத்தை
நிலைத்து நின்று கூவுகின்றன சேவல்களும்
சிரித்து கதைபேசும் பச்சைக்கிளிகளும் - இராகம்
இசைக்கின்றன குயில்களும் புள்ளினங்களும்
இரசிக்கத்தான் பாவம் மனிதனுக்கு நேரமில்லை....!


அரசி நிலவன் - தாய்லாந்து


லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "பறவையின் குரல்" என்ற தலைப்பில் இன்று வழங்கிய கவிதை இது.


கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 மணிக்கும் மறு ஒலிபரப்பு பிற்பகல் 9.30 மணிக்கும்......http://gtbc.fm/

Saturday 21 September 2013

வழுவாய் முடியாமல் தவிக்கின்றேன் வன்மை காதலால்...!!!


வலுவான இதயத்தை 
வலிய வம்புக்கிழுத்து,,
வலிந்த வன்னி வயன 
வல் அம்புகளால் துளைத்து,,
வலிக்க வைப்பதனால்.... 
வல்லவன் நீ எதில் 
வலங்கொள்கின்றாயோ...??

வழியற்று யான் உன்னை 
வழிக்கொள்ளவில்லை..!
வழுக்கினேன் உன் காதலில்..!
வழிபார்த்தேன் பற்பல உன்னிடம்...!
வழிபட்டேன் வழிபடுகடவுளாக...!

வழுக்களை வாரி இறைத்து,,
வசைமாரி பொழிந்து,,
வன்சொல் உதிர்த்து,,
வன்மம் தீர்க்கின்றாய்...!


வஞ்சித்து வசீகரித்தாய்..!
வஞ்சனாயினும்,,,,
வழுவாய் முடியாமல் தவிக்கின்றேன்
வன்மை காதலால்...!!!



அரசி நிலவன் 

Thursday 19 September 2013

விந்தை அன்பு புரிந்த தந்தையுமானவளே....!! (ஆறுதல்)


அன்பிற்கு  மட்டுமன்றி
ஆறுதலுக்கும் முகவரி
அன்னையே...!

தந்தையின் பிரிவில்
சிந்தை கலங்கி நின்றோம்..!
எந்தையும் தாயுமாகி
விந்தை அன்பு புரிந்த
தந்தையுமானவளே....!!



கந்தையில்லா துணிகளும்
சந்தையில் வகை வகையாய்
விளையாட்டு பொம்மைகளும்
அள்ளி வந்து குவிப்பாய்....!
அழகழகாய் கல கலக்கும் எமை
அகம் குளிர்ந்து அரவணைத்து
அன்பாய் உச்சி முகர்ந்து
ஆறுதல் கொடுத்து
ஆறுதல் அடைவாய்...!


ஆறுதல் பட உனக்குத்தான்
ஆருமில்லை அந்த தருணங்களில்...
ஆளாகாமல் நின்ற அரும்புகள் எமை
ஆட்படுத்தி அழகு பார்த்தாய்....!
ஆறுதல் ஆறுதலாகக்கூட உன்னை
ஆற்றவில்லை - மாறாய்  என்னை
ஆறுதல் படுத்திக்கொண்டும்
ஆறுதலாகவும் ஆற்றுப்படுத்தும்
ஆலயம் அம்மா நீ....!!!


பெண்மையாய்  என்னை
மென்மையாய் படைத்து
திண்மையாய் வாழப்பழக்கி
இன்மையிலும் புன்னகைத்திட
தொன்மை தொட்டு உணர்த்தி
உண்மையாய் என்றும் விளங்கிட
தன்மையாய் உரைத்தவள்- என்னுயிர்
பன்மையாகும் போதும்
பரவசம் அடைகின்றாள்
அருகிருந்தே ஆறுதலாக....என்
ஆறுதலுக்காக தன்
ஆற்றாமைகளை
ஆற்றத்திணறி
ஆற்றுப்படுத்துகின்றாள் எனை
ஆறுதல் என்ற உருவமாகி...


வாய் திறந்து தான்  பேசிட வேண்டுமா??
அருவமான ஆறுதலை அன்னையின்
உருவத்தில் கண் நோக்குகின்றேன்..!

அகராதி போதாது
அன்னையுன்னை விழிக்க...
ஒற்றைப் பதம் கொண்டு
ஒருமித்து உரைக்கின்றேன்..!!


ஆறுதலின் மின்னஞ்சல்..!
ஆறுதலின் கணிப்பொறி..!
ஆறுதலின் வரைவிலக்கணம்..!
ஆறுதலின் அகராதி..!
ஆறுதலாக அன்பை கொட்டும்
ஆரவாரமற்ற அன்னை நீயே...!!!

  


அரசி நிலவன்
 



லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "ஆறுதல்" என்ற தலைப்பில் இன்று வழங்கிய கவிதை இது.


கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 மணிக்கும் மறு ஒலிபரப்பு பிற்பகல் 9.30 மணிக்கும்......http://gtbc.fm/


Tuesday 17 September 2013

"எனக்காய்...!"

காற்றோடு  காது வைத்து காத்திருக்கின்றேன்...!
காற்றில் தவழ்ந்து வரும் உன் குரலோசை
காதுகளில் ஒலிக்க கேட்பதற்காய்....


ஒற்றைக்கவிதை ஒன்றில் - என்
உயிரினைக் கயிறு கட்டி இழுத்து விட்டாய்...!
நான் நீயாகி நீ நானாகி
நாமாகி நாள் கடந்தும்
நாடித்துடிப்பாக என் நினைவுகள்
நாளும் துடிக்கின்றது உன்னில்...!
நான் இங்கே நீ அங்கே
நாட்கள் நம்  நினைவுகளின்றி
நகருவதில்லை நமக்கு....!

பசித்திருந்தாலும்,,
பல இடர்கள் எனை அணைத்தாலும்
பஞ்சம் என்னை நெருங்கி வந்தாலும்,
பஞ்சாய் பறந்து ஓடிடும்.....!
நெஞ்சம் திறந்து பேசும் உன்
வஞ்சமில்லா பேச்சுக்களால்..!



கஞ்சத்தனம் இல்லாமல் - உன்
நெஞ்சத்திலே மாமனை கட்டி
வஞ்சி என்னை சொர்க்கத்தை
விஞ்சி நிற்கும் இன்பத்தில்
சஞ்சரிக்க வைக்கும் உன்
கொஞ்சிப்பேசும் இதமான அன்பு
மிஞ்சிடும் என் வலிகளை.....!

அஞ்சி நடுங்கி அடைபட்டிருந்தாலும்
கெஞ்சி தொலைபேசி பெற்று
கொஞ்சிடும் உன் பேச்சுக்கள்
எனக்காய் உளி கொண்டு
செதுக்கி நீ கொடுப்பவை...!


செய்வதறியாது கண்ணீரில்
கரைகின்றாய் - காற்றிலே
கலந்து வரும் உன் கண்ணீரின் உப்பில்
கறி சமைத்துக்கொள்கின்றேன் நான்....!

கண்ணாளனே.....!
கனவுகள் கொடுத்து அனுப்புகின்றாய்  இரவுகளிடம்
கடிதங்கள் சொல்லாத சங்கதிகளை
கனவுகள் உணர்த்தி விட்டு காணாமல் போகின்றன..
கணப்பொழுதுகளில்....!


கம்பி வாழ்வினை கடினப்பட்டு வாழ்ந்து கொண்டு
கண்ணீர் சிந்துகின்றாய் எனக்காக.....!
கடைசி வரை இவ்வாறே இருந்திட போவதில்லை...!
கண்கள் சேர்ந்திடும் காலம் வெகு தொலைவில் இல்லை...!

அருகருகே நாம் இருந்த போதும் காதலை
அறிந்து கொண்டதில்லை முழுதாக..!
அர்த்தமில்லா இந்த பிரிவு கூட எனக்காய் போலும்..!

காதலனே கடவுள் மேல் நான் கொண்ட
காதலின் ஆழத்தினால் வழங்கப்பட்ட
காதல் பரிசு "எனக்காய் நீ...!"  


அரசி நிலவன்


லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "எனக்காய்" என்ற தலைப்பில் இன்று வழங்கிய கவிதை இது.


கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 மணிக்கும் மறு ஒலிபரப்பு பிற்பகல் 9.30 மணிக்கும்......http://gtbc.fm/

Monday 16 September 2013

பிளவு...!

மொழியால் வேறுபட்டு உன் மொழியா என் மொழியா என்றாகி
தம்மொழிக்கே முன்னுரிமையும் கொடுத்து 
தமிழ் மொழியை மட்டுமல்ல தமிழர்களையும் பின்தள்ளிய 
தரங்கெட்ட இனவாதச்சிங்களம் கஞ்சத்தனம் காட்டியது
தமிழர்களின் உரிமையைக்கொடுத்திட
தகுந்த நல்ல தாராளம் காட்டியது
தமிழர்களின் உயிர்களைப்பறித்திட


சிங்களம், தமிழ் என்று பிளவு படுத்தியவர்கள்
சிங்களத்தீவில் பிளவினை நன்றாக விசாலமாக்குகின்றார்கள்
சீனாவை அந்த பிளவிற்குள் சொருகி- பெரிய
சீனா கடினப்பட்டு ஒருவாறு புகுந்து விட்டது....!!!
சின்னப்பிளவு பெரிதாகி தளர்வதால் எப்போது
சின்ன வாயில் கிடைக்கும் புகுந்திடலாம் என
சுற்றி நிற்கின்றனவாம் சில வல்லரசு நாடுகள்
அணில் ஏற விட்ட நாய்கள் போன்று....



சிங்கத்தின் நகம் பட்ட முயல் குட்டிகளாய்
சினம் தாங்காது அங்குமிங்கும் அலைகின்றன
தமிழின உறவுகள்....


பூசாவில் இதயம் துடிக்கின்றது
பூநகரியில் பிரிந்திருக்கும் மனைவிக்காக...
பம்பை மடு தடுப்பில் தவிக்கும் கணவனை நினைத்து
பளையில் ஒரு பெண்மை தேநீர் கலக்கின்றாள்
பயணிகளுக்காக......
அடங்கா மண்ணில் அதிகாரமாய் வாழ்ந்தோர்
அடக்கி ஒடுக்கப்படுவதும்.
அங்கும் இங்குமாய் பிளவு பட்டுக்கிடப்பதும்
அரக்க குணம் படைத்த இனவாத சிங்களனின்
அர்த்தமில்லா பேரினவாதப்பிளவால்...!!!


அலை கடல் மீதிலே
ஆங்கோர் மீன்பிடிப் படகை நம்பி
அருமை உயிர்களை பணயம் வைத்து
அடிக்கடி விபத்தாகியும் அச்சமின்றி
அந்தரத்தில் பயணித்து கரை சேராமல்
அந்த சமுத்திரத்தின் கோரப்பசிக்கு தம்மை
அள்ளிக்கொடுப்பதும் - இலங்கை என்ற
அரக்க நாட்டின் கோர முகத்தைப்பார்த்து
அரக்கப்பரக்க ஓடி வருவதாலேயே - ஒருவேளை
அந்த இலங்கை சொல்லித்தான் சமுத்திரம்
அலைகளால் அடித்து விரட்டுகின்றதோ??
அங்கேயும் இனவாதப்பிளவா தமிழன் என்று...!

இலங்கை என்றொரு தேசத்தில்
இன்று வரை எத்தனை எத்தனை உறவுகள்
தந்தை, அண்ணன் , கணவன் மாரை
அந்நிய தேசத்துக்கு அகதியாக
நாடு கடத்தி விட்டு தனித்திருந்து
நாளும் பொழுதும் ஏக்கத்தில் கடக்கின்றார்கள்..

இலங்கை என்ற தேசத்தின் பிளவு
இன்னும் பிரிக்கப்படுமா பிரிவினைகளால் - இல்லை
எதிர்காலமதில் தன்னும் ஒன்றாகுமா- அட
கனவு தன்னும் காண முடியவில்லை...!
கனவில் கூட கொட்டச்சிரிப்புடன் சிங்களம் தான்
கர்சிக்கின்றது,,,,,
இசைவாக்கமே அடந்திட்டோம் - நாம்
இந்த இனவாதப்பிளவால்....



அரசி நிலவன்






லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "பிளவு" என்ற தலைப்பில் இன்று வழங்கிய கவிதை இது.


கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 மணிக்கும் மறு ஒலிபரப்பு பிற்பகல் 9.30 மணிக்கும்......http://gtbc.fm/



Sunday 15 September 2013

தமிழ் நாட்டில் உள்ளோர் நரியின் ஊளையிடலை தொடர்ந்தும் நாட்டிற்குள் அனுமதிக்க போகின்றார்களா??

உலக வல்லரசுகளே மூக்கில் விரல் வைத்து அசரக் கூடிய மிகத்திறமையான ஒரு நிர்வாகக் கட்டுமானத்தை கட்டியாண்ட, மக்களைப் பாதுகாத்து  போராளிகளை  வழி  நடாத்தி குறுகிய காலத்தில் பிரமாண்டமான அரசமைப்பை நிறுவி நீதியை நிலை நாட்டி ஒரு கட்டுக்கோப்பான   நிர்வாகத்தில் கொடி கட்டிப்பறந்த தமிழீழ விடுதலைப்புலிகளைப் பற்றி ஒரு குறை குற்றம் கூறக்   கூட வாய் திறக்கவே சிந்திக்க வேண்டும். ஆனால் எவ்வளவு ஒரு துணிச்சல்??? ஒரு சிங்களவன் தன்னும் இந்த நினைப்பை உண்மையாக்க துணிந்ததில்லை. நாம் எல்லோரும் காறி உமிழ்கின்ற எச்சில்களில்  இந்த அற்ப புழு  மூச்சுத்திணறி தத்தளிக்க வேண்டும்.

வல்லரசாகிடப்போகும் இந்தியா என்னும் அண்டப் புளுகை அள்ளி விட்டுக்கொண்டு அரைகுறை அரசாங்கம் நடாத்தும் அம்மணிமாரின் அரச வரையறைக்குட்பட்ட இந்திய வல்லாதிக்க தேசத்தில் நிர்வாக சேவைகள் அதிகாரியாக பணி புரிந்தவராம் இந்த சிவகாமி. இவர்களைப்போன்றவர்களின் நிர்வாகத்தில் தான் ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவி கயவர்களால் குதறப்படுவதும் பதின்ம வயது பாலகிகளின்  கருக்கள்  நரிகளால் குதறப்படுவதும் வழமையான நிகழ்வுகள் ஆகி தொடர்கின்ற தொடர்கதைகளாக மாற்றம் பெற்று விட்டனவே. அதாவது சிவகாமிக்கு நன்கு பழக்கமான நிகழ்வுகள் அவை. அவரின் நிர்வாக சேவையில் அவர் கற்றுக் கிழித்து அதிகாரம் செலுத்தி வந்த நாட்டில் நடக்கும் ஒரு சிறிய அட்டுழியத்தைத் தட்டி கேட்க துப்பிலாத சிவகாமி கடல் தாண்டி உள்ள ஈழத்துக்கு போய் விட்டாராம் பெண்களின் உரிமை பற்றி பேச. இல்லை இல்லை  விடுதலைப்புலிகளின் பெண் புலிகளை வசை பாட.

நான்கு வருடங்களுக்கு முன்பு எம் வீரப்பெண் புலிகள் தெருநாய்களாலும் நரிகளாலும் நயவஞ்சகமாக குதறப்பட்டு, இணையங்களிலும் சனல் 4 இலும் கிழிபட்டு தொங்கும் போது அம்மணி வேற்றுக்கிரகம் சென்றிருந்தாரா.? அல்லது அம்மணியின் இந்த வீர வசனங்களை அவர் புலிகள் ஆட்சியில் இருக்கும் போது கேட்டிருக்கலாமே...??? ஒருவேளை இப்பதான் சகாக்களை வைத்து திட்டம் தீட்டி இப்படி ஒரு யோசனை மூலம் பிரபலம் பெற முடிவு பண்ணியிருக்கின்றார்களோ?

ஒரு பாலியல் பலாத்கார கொடிய நிகழ்வு இடம்பெற்று, இன்று அரையாண்டு முடிகின்ற நிலையில் தான் அதுவும் அரையும் குறையுமாகத் தீர்ப்பு வழங்கப்பட்டு (அதுவும் மாணவர்களின் போராட்டம் மக்களின் எதிர்ப்பு என்பனவற்றிற்கு அஞ்சி) இருக்கின்றது. இந்த அம்மணியின் சேவைகள் பெற்றுக்கொண்ட ஒரு ஜனநாயக நாட்டில் மனிதாபிமானம் மற்றும் பெண்மைக்கு கிடைக்கின்ற மரியாதையின் இலட்சணம் உலகறிந்த உண்மையாக இருக்கும் போது இந்த அம்மணி தன் மூளையினை கழற்றி அடகுக்கடையில் வைத்து விட்டு விவாதம் பேச வந்ததா?? அல்லது மூளையே இல்லையா ?



இனவாதம் என்ற ஒன்று தலை தூக்கியதால் தால் இலங்கையில் மனித உரிமை மீறப்பட்டது . ஆனால் இந்தியாவில் அதுவும் தலை நகரில் பெரும்பான்மை பெண்ணே குரல் வளை நசிக்கப்பட்டு கதறக் கதறக் கருவறுத்துக்கொல்லப்பட்டாள். தமிழ் பெண்கள் தமிழ் கயவர்களால் திராவகம் தெளிக்கப்பட்டும் பலாத்காரம் பண்ணப்பட்டும் உருக்குலைக்கப்பட்டதிற்கும் இந்த மாதிரியான பொறுப்பற்ற நிர்வாக சேவைகள் அதிகாரிகளும் அவர்களின் அதிகார துஷ்பிரயோகங்களும் தான் முதற்காரணம் என்பது நாம் கூறித்தெரிய வேண்டிய அவசியம் இல்லை. உலக நாடுகளினால் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடு என்று உறுதி  வழங்கபட்ட இந்திய நாட்டில் இருந்து கொண்டு உலகில் உள்ள எந்த பெண்ணை பற்றியும் பேசத் தகுதி இல்லாத போது பெண்களுக்கு பெருமையையும் மரியாதையையும் அள்ளிக்கொடுத்து பெண்ணடிமைத்தனத்தை தகர்த்தெறிந்த புலிகளை விமர்சிக்க என்ன அருகதையும் தைரியமும் இந்த அற்பம் தன்னகத்தே கொண்டுள்ளது.???




எது எப்பிடியோ உலகில் இன்று மிக மிக முக்கியமானவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகள் தான் என்பதை அறிந்து வைத்திருக்கும் வரை மகிழ்ச்சியே...! அதாவது கடவுளைப்பற்றி அவதூறு பேசினாலும் இவ்வுலகில் யாரும் இந்தளவு கொதித்து எழ மாட்டார்கள். இந்த உலகில் தமிழினத்தால் மிகவும் நேசிக்கப்படும் நிலையிலும் அவர்களின் நம்பிக்கைக்கும் மரியாதைக்கும் உரிய புலிகளைப்பற்றி பேசி பிரபலம் ஆக நினைத்து வந்த இந்த பெண்ணுக்கு யாரும் அறிவுரை சொல்லவில்லை போலும். அல்லது புலிகளைப்பற்றி அந்த தெரு நாய்க்கு ஏதும் தெரியாது போலும். இல்லாவிட்டால் மற்றவர்களைப்போல் அதாவது சிங்களவனைப்போல் பயங்கரவாதி என்றோ அல்லது போர்க்குற்றம் என்றோ பிதற்றி இருக்கும். ஒட்டு மொத்தத்தில் ஈழத்தில் என்ன நடைபெற்றது என்று அறியாத இந்த அற்பம் எப்படி இந்திய நிர்வாக சேவைகள் அதிகாரியாகப்பணி புரிந்தது?
பெண்புலிகள் எதற்கு பயன்படுத்தப்பட்டார்கள் என்று விளக்கம் கொடுத்த இந்தப்பெண்ணும் அவ்வாறு தான் பயன்படுத்தப்பட்டு அதிகாரியானவளா??

பொதுவாக எம் புனிதர்களைப் பற்றியோ அல்லது புனிதப்போர் பற்றியோ அவதூறு பேசுபவர்களைப் பற்றி நான் கருத்தில் கொள்வதில்லை. மலையினைப்பார்த்து நாய் குலைப்பதால் மலை காயப்பட்டு போவதில்லை என்று நன்கறிந்த எனக்கு இன்றும் என் நண்பர்கள் பலர் இதைப்பற்றி எழுத வேண்டாம் அவளை ஒரு பொருட்டாக எடுக்க வேண்டாம் என்று தான் கூறி இருந்தார்கள். ஆனால் இது தெரு நாய் அல்லவே... இதை என்னவென்றே அழைப்பது என்று எனக்குப்புரியவில்லை..ஆம் அசிங்கத்தை அள்ளி புனிதம் மீது தெளிக்கின்ற இந்த அற்பத்தை நாலு வார்த்தையால் சாட்டை அடி அடிக்காமல் விட்டால் நான் தமிழச்சியாய் பிறந்ததிற்கு அர்த்தமே  இல்லை.

சாதி ஒழிப்பை பற்றி இந்தியாவில் போராட்டம் மற்றும்  இயக்கம் நடாத்தி வரும் இந்த அம்மணியால் ஒரு சிறிய ஊரிலாவது சாதி வெறியை ஒழிக்க முடிந்ததா?? உண்மையில் சாதி ஒழிப்பு இயக்கமா இவள் நடாத்தி வருகின்றாள்?? அப்படியாயின் விடுதலைப்புலிகள் பற்றி இவ்வாறு பேசியிருக்க மாட்டாள். ஆம், சாதி என்பது புலிகளின் நிர்வாக ஆட்சியில் காணாமல் போயிருந்த ஒன்று. ஒட்டு மொத்தமாக சாதி என்பது ஈழத்தில் வேரறுக்கப்பட்டு இருந்தது புலிகளால். உண்மையில் சாதியத்திற்கு எதிராக குரல் கொடுப்பவளாயிருந்தால் அவள் புலிகளுக்கு தான் முதல் புகழ் மாலை சூடி   இருந்திருப்பாள். சாதி ஒழிப்பு என்கின்ற போர்வையில் இருந்து கொண்டு சாதியை தூபம் போட்டு புகைத்து குளிர் காயும் இந்த அம்மணி தான் உண்மையில் சாதி ஒழிப்பு என்ற நற்பயிருக்கு எதிரான களை. அதனால் தான் போராட்டங்கள் என்று ஊரையும் நாட்டினையும் ஏமாற்றி வயிறு வளர்த்து தொலைக்காட்சி , விவாதம் என்று விளம்பரம் தேடுகின்றாளே தவிர சாதி தன்பாட்டில் கொழுந்து விட்டு எரிவதைக்கண்டும் காணாமலும் இருக்கின்றாள்.


ஒரே ஒரு அறிவிப்பில் சாதி என்பது ஈழத்தில் காணாமல் போனதும் அங்கு அர்த்த இராத்திரியிலும் இளம் பெண்கள் நடமாட முடிந்ததும் புலிகளால் என்பதை கேள்விப்பட்டே இருந்திருக்க மாட்டாள் இந்த அற்பம். இவளின் பேச்சுகளை நினைத்துப்பார்க்கவே அருவெருப்பாகவே இருக்கின்றது. ஈழம் பற்றி பேசவும், புலிகளை பற்றி அவதூறு பேசவும் இந்த அற்பத்திற்கு என்ன அருகதை இருக்கின்றது? யார் அந்த உரிமையை கொடுத்தது?





சொந்த உறவுகளைத்துறந்து மண்ணின் மேல் காதலுற்று ஒரு இலட்சியப்பாதையில் தலைவன் பின்னால் அணிதிரண்டு கல்லிலும் முள்ளிலும் குளிரிலும் நெருப்பிலும் கடலிலும் பயணித்தவர்கள் எம் வீர மறத்தமிழச்சிகள்.  




எம் வெஞ்சினப் புலி வேங்கைகள் இந்த அம்மணி உளறிய அப்பட்டமான பச்சை வார்த்தைகளுக்கு   அப்பாற்பட்டவர்கள் என்பதை உண்மைத்தமிழ் நெஞ்சங்களால் தான் உணர்ந்து கொள்ள முடியும். அந்த இலட்சியப்புருசர்களின் தியாகங்களை உண்மை இதயங்களால் தான்  அறிந்து கொள்ள முடியும்.



தமிழ் நாட்டில் தொட்டதிற்கும் போராட்டம் , தீக்குளிப்பு என்பனவற்றை நிகழ்த்தும்  மக்கள் இந்த நரியின் ஊளையிடலை தொடர்ந்தும் நாட்டிற்குள் அனுமதிக்க போகின்றார்களா?? அல்லது குரல்வளையை நெரித்து எதிர்காலத்தில் இனிமேல் ஊளையிடவே நினைக்காதவாறு செய்வார்களா??
இப்படிப்பல நரிகள் , ஓநாய்களை நாட்டில் ஊளையிட அனுமதித்து விட்டு நாட்டிற்கு வெளியே உள்ள ராஜபக்சவையும் ஐ. நாவையும் தட்டி கேட்கின்றோம் என்றோ அல்லது அழுத்தம் கொடுக்கின்றோம் என்றோ போராட்டம் செய்வதால் என்ன பிரயோசனம்? உங்கள் நாட்டில் உள்ள களைகளுக்கு கிருமி நாசினிகளை தெளிக்க முதலில் முயற்சி செய்யுங்கள்...! அதன் பின் நாற்றுக்களுக்கு எப்படி உரமிடலாம் என்று சிந்தியுங்கள்...!


அரசி நிலவன்    

Friday 13 September 2013

எம் ஈழத்து உறவுகளின் கண்ணீரால் சகதியாகின்றது துபாய் மண்..!!!



சொந்த நாட்டிலே வாழ வழியற்று, உயிர் அச்சுறுத்தல் மரண பீதியில் உயிரைக்கையில் ஏந்தி எத்தனையோ துன்பங்களை தாண்டி சிறைகளில் சித்திரவதை அனுபவித்து மீண்டும் உயிர் பிழைப்போமா என்ற கொடிய நிலை தாண்டி, அவதியுற்று நாடு விட்டு இந்தியா சென்றவர்கள். அங்கும் அகதி என்ற அவல வாழ்வினை வாழ்ந்து இடர்களை தாங்கி எதிர்கால வாழ்வுக்காய் அங்கலாய்த்து கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான ஈழத்தமிழர்களில்  ஒருவர்களாய் இருந்து, எந்த நேரமும் மறுபடி இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டு விடுவோம் என்ற பீதியால் ஆபத்து நிறைந்த கடற்பயணத்தை குழந்தைகளோடும் முதியவர்களோடும் ஆஸ்திரேலியா நோக்கித்தொடர்ந்த இவர்கள் தமது கனவுகளின் கரையினைத்தொட்டுக்கொள்ளாமல் இன்றும் நடுக்கடலில் தத்தளித்து முக்குளிக்கின்றார்கள்.



தம் எதிர்காலம் உலகில் உள்ள இலங்கையைத்தவிர வேறு எந்த ஒரு நாட்டிலும்  நிம்மதியாகத்  தொடரப்படும் என்ற அதீத நம்பிக்கையிலும் ,உயிர் வாழும் ஆசையிலும் கடலில் பயணிக்க தொடங்கிய அவர்கள் பயணம் செய்த படகானது நடுக்கடலில் விபத்துக்குள்ளாகி, கடலில் தத்தளித்து ஒரு வழியாக துபாய் சென்று கொண்டிருந்த சிங்கப்பூர் கப்பல் ஒன்றினால் காப்பற்றப்பட்டு துபாய் துறைமுகத்தில் கரை சேர்க்கப்பட்டார்கள். அங்கு ஐ நாவுக்கான அகதிகள் உயர் ஸ்தானிகராலயத்தால் பொறுப்பேற்கப்பட்ட அந் நாற்பத்தாறு உறவுகளில் ஏழு பேர் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டு விட்டார்கள். மீதியுள்ளவர்கள் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயத்தினால் அகதிகளாக  ஏற்றுக்கொள்ளப்பட்டு அதில் இருபத்தியேழு அகதிகள் அமெரிக்கா , சுவீடன் மற்றும் பின்லாந்தினால் மீள் குடியேற்றப்பட்ட நிலையில் மீதி  பன்னிரண்டு உறவுகள்  இன்று வரை துபாயில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.
அவர்கள் அமெரிக்கா , சுவீடன், பின்லாந்து , கனடா போன்ற மீள்குடியேற்ற நாடுகளினால் ஏற்றுக்கொள்ளப்படாத நிலையில் கடந்த பத்து மாத காலமாக அங்கு அவதியுற்று வருகின்றார்கள்.

எத்தனை இடையூறுகள் ,அவதிகள், துன்பங்கள் எல்லாவற்றையும் தாங்கி அனுபவித்துக்கொண்டு ஏதோ ஒரு நாட்டுக்கு தாம் நிம்மதியாக சென்று வாழ முடியும் என்ற நம்பிக்கையில் இருந்து வந்த அவர்களை கடந்த சித்திரை மாதத்தில் கூட இலங்கைக்கு திருப்பி அனுப்ப துபாய் அரசாங்கம் முடிவு செய்த போது மனித உரிமைகள் ஆணையம் ,புலம் பெயர் அமைப்புக்கள், மற்றும் தமிழ் அமைப்புக்களின் வேண்டுகோள்கள் போராட்டங்களினால் அது தடுத்து நிறுத்தப்பட்டது.

தற்போது மீண்டும் அவர்கள் அதே முடிவினை அதாவது இலங்கைக்கு அவர்களைத் திருப்பி அனுப்ப போவதாக ஐ நா அகதிகள் உயர் ஸ்தானிகராலயம் கையை விரித்து அவர்களை மீண்டும் கண் கலங்க வைத்து விட்டது.

ஏற்கனவே உயிர் அச்சுறுத்தல் மிகுந்த கொலைக்களமான இலங்கையில் இருந்து தப்பித்து வந்த அவர்கள் கடல் பயணத்தை மேற்கொண்டு இப்படி வேற்று நாட்டில் அகதி தஞ்சம் கோரி ஐ நாவின் அகதிகள் பொறுப்பில் இருந்து எந்த நாடுகளும் ஏற்றுக்கொள்ள நிராகரித்த பின் அவர்கள்  மீது இலங்கைக்கு இன்னும் அதிகமான ஆத்திரமும் கொலை வெறியும் நிச்சயமாக இருக்கும் என்பது திண்ணம்.
GG
உதாரணமாக இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்ட ஏழு உறவுகளில் இலங்கை உளவுத்துறையினரின் மிரட்டல் காரணமாக நால்வர் காணாமல் போயுள்ளார்கள்.  இலங்கை அரசங்கத்தால் எந்த விதமான பிரச்சனைகளும் இல்லை என்று அகதி அந்தஸ்த்து நிராகரிக்கப்பட்டு ஐ.நாவால் இலங்கைக்கே திருப்பி அனுப்பப்பட்டவர்களுக்கே அங்கு பிரச்சனைகள் இருக்கும் போது. இலங்கையில் அச்சுறுத்தல் உண்டு என்று ஐ.நா வினால் அகதிகளாக இனங் காணப்பட்ட துபாயில் உள்ள பன்னிருவருக்கும் எப்படியான அச்சுறுத்தல்கள் உயிர் ஆபத்துக்கள்  இருக்கும் என்று நினைத்துக்கூட பார்க்க இயலாது. 

பத்து மாதங்களாக ஊடகங்கள் மற்றும் இணையத்தளங்கள் மூலமாக அவர்களைப்பற்றி பல விதமான  செய்திகள் வெளிவந்த நிலையிலும் இலங்கைக்கு இதன் காரணமாக பல அழுத்தங்கள் கொடுக்கப்பட்ட பின்னரும் அவர்களின்  உண்மை நிலை உலகிற்கும் இலங்கைக்கும் தெரிந்த பின்னரும் இலங்கை என்ற நாட்டின் திசைப்பக்கம் சென்றாலே அவர்கள்  படுகொலை செய்யப்படுவது உறுதி. அல்லது அங்கு அவர்களைத்திருப்பி அனுப்பினால் நிச்சயமாக அவர்களுக்கு சித்திரவதையுடன் கூடிய உயிர் வதை நரகம் கண்ணில் காட்டப்படும். அங்கு செல்வதற்கு பதிலாக அவர்கள்  துபாயிலேயே தம்மைத்தாமே சாகடித்துக் கொள்ளலாம். இருந்தாலும் இறுதிக்கட்ட முயற்சியாக உயிர் வாழும் ஆசையில் கண்ணீர் மல்க உலகத்தமிழ் உறவுகளின் உதவிகளை வேண்டி நிற்கின்றார்கள்.


அவர்கள்  இலங்கை சென்றால் அங்கு அவர்கள் ஒவ்வொருவருக்கும்  தலா இரண்டாயிரம் டொலர்கள் வழங்கப்படும் என்று ஐ.நா அதிகாரிகள் கூறியிருக்கின்றார்கள் . அவர்கள் அந்த  இரண்டாயிரம் டொலர்களுக்காகவா தங்கள் உயிரைப் பணயம் வைத்து கடல் தாண்டி தத்தளித்து வந்தார்கள்? அல்லது ஐ.நா  கோடி பணம் தன்னும் அள்ளிக் கொடுத்தாலும் அவர்கள்  இலங்கை மீண்டு அதனை அனுபவிக்கஉயிரோடு தான்  இருப்பார்களா?? இரண்டாயிரம் டொலர்களுக்காக தமது  உயிரை இழக்க முன் வருவார்களா? ஈழத்தமிழர்களின் உயிரை வெறும் இரண்டாயிரம் டொலர்களுக்கு மதிப்பீடு செய்யும் உரிமையினை ஐ.நாவுக்கு யார் கொடுத்தது?? இலங்கை அரசாங்கமா?? எம் உறவுகளின்  உயிர்களுக்கு விலை நிர்ணயித்து அதனை இலங்கைக்கு இந்த ஐ நா அதிகாரிகள் விற்றுக் கொடுக்கின்றார்களா??



அத்துடன் இலங்கை போக மறுத்தால் சட்ட விரோதமாக துபாய்க்குள் நுழைந்ததாக வழக்குப் பதிவு செய்து தனித்தனியாக சிறைக்குள் அடைத்து விடுவதாக மிரட்டுகிறார்கள். நடுக்கடலில் இருந்து  காப்பற்றப் பட்ட வேளை இதே ஐ நா தான் அந்த  நாட்டுக்குள் அவர்களை  அழைத்து வந்து வெளியுலகத் தொடர்புகள் இல்லாமல், கடந்த பத்து மாதங்களாக அடைத்து வைத்திருந்தது. அன்றைக்கே அவர்களை கைது செய்து சட்ட விரோத நுழைவாளிகள் என்று  சிறைப்படுத்தியிருக்கலாமே.

அது மட்டுமன்றி சிறையில் கூட மருத்துவ வசதி, சுகாதார வசதி, தொலை பேசி வசதி, உறவினர்கள் வந்து பார்க்கக்கூடிய வசதி, மாற்று உடை வசதி அனைத்தும் இருக்கும் ஆனால் அங்கு  எந்தவிதமான வசதிகள் எதுவும் இல்லாமல் மிருகங்களை விட மிகவும் கேவலமான நிலையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்கள். மிருகங்களைக் கூட பகலில் மேய்ச்சலுக்கு திறந்து விட்டு இரவில் அடைப்பார்கள். ஆனால் துபாயில் எம் உறவுகள் ஆரம்ப  நாளிலிருந்து இன்று வரை வெளி உலகக்காற்றினை சுவாசிக்க முடியாமல் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்கள். மனதளவிலும் உடல் அளவிலும் மிக்க பாதிப்புக்குள்ளாகி கிட்டத்தட்ட இந்த உலகத்தில் தான் உள்ளோமா என்ற ஒரு சந்தேக நிலையில் அவர்களின்  உளநிலை மிகவும் மோசமடைந்து காணப்படுகின்றது. அதாவது வெளி உலகத்தை பார்த்து அரளும் நிலையில் உள்ள அவர்களால் நிச்சயமாக அவர்களின் அனுபவத்தால் பயங்கரமாய் விளங்கும் இலங்கை என்னும் நாட்டினையோ அங்குள்ள அரசினையோ எதிர்கொள்வதென்பது மிகப்பயங்கரமே.

அன்று முள்ளிவாய்க்காலில் குருதி ஆறு ஓட தன் தலை தப்பினால் போதும் என்று ஓடி ஒளிந்து சென்ற ஐ. நா, கை கட்டி வாய் பொத்தி இலங்கை அரசுக்கு சாமரை வீசிய வீசிக்கொண்டிருக்கும் சர்வதேச நாடுகள் எல்லாம் வெறும் பன்னிரண்டு உயிர்களை எண்ணத்தில் கொள்ளுமா??? ஒன்றரை இலட்சங்கள் உயிர்களை கண்டும் காணாது விட்ட ஐ நாவுக்கு அந்த பன்னிரண்டு உயிர்கள் பெரிதாக எண்ணத்தில் படப்போவதுமில்லை. இன்றைய அவர்களின் இந்த அவல  நிலைக்கு ஐ நாவும் ஒரு காரணமே.

ஆம், அன்று அந்த முள்ளிவாய்க்கால் அவலத்தை தடுத்து நிறுத்தி இருப்பின் எம் உறவுகளுக்கு  ஏன் இந்த அவலம்? நவுரு தீவுகளில் ஆஸ்திரேலியா அகதிகளை குடியமர்த்த வேண்டாம் என்று குரல் கொடுக்க தெரிந்த ஐ நாவுக்கு துபாய்  மனித காட்சி சாலை பற்றி எள்ளனவேனும் அக்கறை இல்லை. உலக அரங்கில் வாய் கிழிய குரல் கொடுக்கும் ஐ நா ஈழத்தமிழர் எம் படுகொலைகளை இலங்கையில் தட்டிக்கேட்கத்தான் முடியவில்லை என்றாலும் அவர்களுக்கு தீனி போடும் வகையில் அகதி என்ற  நிலையில் உலகத்தின் கண்களுக்கு தெரிந்து கொண்டிருக்கும் எம் சொந்தங்களை இலங்கைக்கு அனுப்பி அங்கு இரையாகப்போகும் அவர்கள் உயிர்களையாவது காப்பாற்றவுமா முடியாது??

வெகு இலகுவாக ‘”நீங்கள் அனைவரும் ஈழத்தமிழர் என்பதால் உங்களை எந்த நாடுகளும் ஏற்றுக் கொள்ளாது , ஐநா சபையானது உங்கள் (அகதிகள்) சம்மந்தமான அனைத்துப் பணிகளையும் இன்றுடன் நிறுத்திக் கொண்டுவிட்டது, ஆகையால் எங்களால் எதுவும் செய்ய முடியாது, நீங்கள் திரும்பவும் இலங்கை செல்வதுதான் சரியான வழி!!! அதனால், அடுத்த வாரம் இலங்கைக்கு செல்வதற்கான முடிவுகளை எடுத்து வையுங்கள், நாங்கள் ”IOM” அதிகாரிகளுடன் வருகிறோம்” என்று கூறி துபாய் இல் உள்ள ஐ நா அதிகாரிகள் அவர்களுக்கு  மரண தேதியை குறித்துச் சென்று விட்டார்கள். ஆக பத்து மாத காலமாக அவர்களை அகதியாக ஏற்றுக்கொண்டு செயற்படும் போது அவர்கள்  ஈழத்தமிழர் என்பது தெரியவில்லையா?? ஏற்றுக்கொள்ளாத நாடுகளில் எம் ஈழத்தமிழர்கள் இல்லையா??? அப்படியென்றால் அகதியாக ஏற்றுக்கொண்ட ஐ. நா வில் தான் தவறோ?? முதலிலேயே அவர்ளை நீங்கள் அந்த நாட்டுக்குள் பிரவேசிக்க அனுமதிக்காமல் திருப்பி அனுப்பி இருக்கலாமே??



போர் அவலத்தால் சிக்கி சின்னாபின்னமாகி உருக்குலைந்து போன எம் சொந்தங்களின்  வாழ்வினை மீட்டெடுக்க சிறு நம்பிக்கை ஒளியினை கையில் ஏந்தி சிறைகளில் தவமிருந்து இருளில் வாசமிருந்து நரக வாழ்வினை நான்கு வயது சிறுமி முதற்கொண்டு அறுபத்தைந்து வயதான முதியவர்கள் , பெண்கள் என்று எந்தவிதமான அடிப்படை வசதிகள் அற்று, அவசிய மருந்துகள் மாற்று உடைகள் இன்றி கழித்து துன்பத்தில் துவண்ட போன அவர்களின்  நெஞ்சங்கள் உயிர் பயத்தில் உறைந்து நடுங்கிப் போயிருக்கின்றார்கள். 

எங்கள் சொந்த உறவுகள் அந்நிய தேசமதில் நிர்க்கதியாகி நிற்கும் இந்த அவல நிலையில் அவர்களுக்கு உயிர்ப்பிச்சை கொடுத்து, அவர்களை  காப்பாற்றி வாழ வைக்க தமிழர்களின் அரசாங்கம் என்று கூறிக்கொண்டிருக்கும் நாடு கடந்த தமிழீழ அரசு மற்றும் புலம் பெயர் அமைப்புக்கள் ஏன் முயற்சிகள் எடுத்து அவர்களின் கண்ணீரைத்துடைக்க கூடாது? தமிழ் நாட்டு தமிழ் அரசியல் வாதிகள் சிறிதாக முயற்சி எடுத்து அக்கறை காட்டும் போது , இலங்கையில் தேர்தல் களத்தில் சாகசங்கள் புரியும் உள்ளூர் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இவர்களின் கண்ணீர் பெரிதாக தெரியவில்லையா? இலட்சக்கணக்கான உயிர்கள் அலறும் போதே குறட்டை   விட்டு பஞ்சணையில் படுத்துறங்கிய பெரிய மனிதர்கள் அந்த பன்னிருவரின் நிலை பற்றி எள்ளனவேனும் எண்ணுவார்கள் என்பது சந்தேகமே...!

வாழ வழியற்று இறுதிப்பயணத்தில் தத்தளிக்கும் அவர்களை கை தூக்கி விடுங்கள் என்று தமிழ் அமைப்புக்கள் , மாணவர் அமைப்புக்கள் , புலம்பெயர் அமைப்புக்கள் , மனித உரிமைகள் அமைப்புக்களிடம் மன்றாடிக் கேட்கின்றோம். அவர்களின்  கண்ணீரால் நனைந்த அந்த துபாய் மண்ணில் இருந்து உதிரங்களால் தோய்ந்த இலங்கைக்கு நாடு கடத்தப்படுவதை கண்டும் காணாமல் இருக்காமல் உங்களால் முடிந்த  வரை அவர்களின் இருப்பினை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். தயவு செய்து உங்கள் உறவுகளின் கூக்குரல்களை செவி மடுத்து  நாடு கடத்தல் என்ற பெயரில் அவர்களுக்கு அரங்கேறப்போகும் அவலச்சாவினை தடுத்து நிறுத்த ஆவன செய்யுங்கள்..!


உயிர் வாழத்துடிக்கும் எம் உறவுகளின் குரலாக

அரசி நிலவன் 
தாய்லாந்திலிருந்து 

மண்டியிடாத மறத்தமிழ் வேந்தே..!!! மரணித்து அவதரிப்பது அவதார புருஷர்கள் மட்டுமே..!!


தமிழீழ தேசமது...
இருள் மூடி கிடந்தாலும் - தமிழர்  நாம்
இழிநிலை அடைந்தாலும்  
அருவமாய் உருவம் காட்டும்
இறையே... !!!

நின்னை,,
நின் பிறப்பெடுத்த நாளில் மட்டும்
நினைப்பதில்லை - என்றும் எம்  
விழியோடு கண்ணீராக...,
இதயக்கூட்டிலே துடிப்பாக...,
இரத்த நாளங்களில் செங்குருதியாக...,
கணப்பொழுதிலும் எம்முடன் தானே...!

கலங்கின கலக்கம் என்ன...?
கலக்கிய துலக்கம் என்ன...?
கண் பார்த்து..,
செவி கேட்டு..,
இதயம் உறைந்து போனாலும்...,
அறிவு ஏற்க போவதில்லை...!!!
கல்லை கடவுள் என்று 
கண் நம்பி, கை கூப்புவது..
கட்டாயம் உண்மை என்றால்
நின் வாழ்வும் மெய்மையே..!!!

அஞ்சிடா புலித்தலைவனே...!!
அகராதி போதாது உன் புகழ் பாட..
ஒற்றைத்தலைவனே..!!! 
ஒரு மொழி போதாது நின் வரலாறு  பாட 

அகவைகள் ஐம்பத்தேழு அல்ல..
அகவைகள் ஆயிரம் ஆனாலும் - என்றும் 
தமிழினத்தின் கலங்கரை விளக்கம் நீங்களே ..!!!!

கரிகால பெருஞ்சோழா....!!!
உன் வீரம் வாங்கி  
கையிலே துப்பாக்கி ஏந்தி - களமாடிய 
காவிய நாயகர்கள் - இன்று
கை கட்டி வாய் பொத்தி 
சிங்களவனின் காலடியில் 
சிறுமைத்தனமாய் அடிமைகளாகி
வாழ்வதை தொலைக்க..
வாழ்வு என்ற ஒன்றே கசப்பாகி போன..
அந்த உத்தம வீரர்களின் மானம் காக்க..

தமிழினத்தாலேயே வேறு கண் கொண்டு நோக்கி,,
விளிக்கப்படும்  "முன்னாள் போராளிகள்" என்ற 
வில்லங்கமான அடைமொழி நீக்கிட..

விரைவாக உங்கள் உயிர்ப்பு..!!! 
விளங்க வேண்டும் உலகிற்கு..

மண்டியிடாத மறத்தமிழ்  வேந்தே..!!!
மரணித்து அவதரிப்பது அவதார புருஷர்கள் மட்டுமே..!!
மடையர்களின் மண்டை கலங்க வெகு விரைவில் 
நின் வரவு உறுதியாகும் நாளை எதிர்பார்ப்புடன்....


அரசி நிலவன் 

வீரத்தோடு நிமிர்ந்து நிற்கும் வீர மறவர்களே..!!! கோழைகள் எம்மை பார்த்து ஏளனமாய் சிரிக்காதீர்..!!!


தமிழீழத்துக்காக,
தமிழினத்துக்காக,
துடித்து களம் மீதேறி 
தியாக வேள்வியிலே
நீறான திரவியங்களே..!!

பஞ்சணையை தூக்கி எறிந்து
ஏவுகணையை தோள் மீதேற்றி 
உயிரை விலை கொடுத்த 
உத்தம புத்திரர்களே..!!!

படி தாண்டா கண்மணிகள்
வெடி தாங்கி போயினரோ ..!!

கந்தக நெடி வாசனையோடு..
கல்லும் முள்ளும் கடந்து..
நீவிர் மீட்டெடுத்த - அங்குல 
நிலம்  கூட இன்று எம்மிடமில்லை - எம் 
நிம்மதிக்காக,, 
நித்திரை தொலைத்து..,
நீங்கள் சிந்திய குருதி...,
உங்கள் வித்துடல்களை,,  தானும் 
பொத்தி வைக்க முடியா பாவிகள் நாம் 
பொல்லாத சிங்களத்தோடு போராடாது 
கார்த்திகை மாதத்தில் மட்டும் குரல் கொடுக்கும் 
கோழைகள் எம்மை பார்த்து  ஏளனமாய் சிரிக்காதீர்..!!! 
வெட்கி தலை குனிந்து அஞ்சலிக்கின்றோம்....!!!

வீறு கொண்டெழுந்து,, 
வீர மரணத்தில் வீழ்ந்து,,
வித்தாகி,, 
விருட்சமாகி ,,
வீரத்தோடு நிமிர்ந்து நிற்கும் 
வீர மறவர்களே..
வீர வணக்கங்கள் உங்களுக்கு...!!!


அரசி

Thursday 12 September 2013

எண்ணம்...!!!


ஒவ்வொரு தனி மனிதனின் எண்ணங்களால்
ஒட்டு மொத்த உலகமே துண்டாடப்படுகின்றது..!
ஒரு சிறு மனிதனின் எண்ணங்கள் திசை மாறி -உலகத்தின்
ஒவ்வொரு உயிரையும் வேரறுக்க வல்லது...!


வல்லரசுகளின் வல்லாதிக்க எண்ணத்தால்
வறுமை தேசங்கள் பட்டினி என்னும் வர்ணம் கொண்டு
வண்ண மயமாக்கப்படுகின்றது....!



அணுவாயுதம்  சர்வ சாதாரணமாகி
அதைக்காரணம் காட்டி வலிந்து தொடுக்கும்
அத்து மீறிய யுத்தத்தினால்
அழிக்கப்படுகின்றது பல்லுயிர்கள்..!!
அநியாயமாக்கப்படுகின்றது தேசங்கள்...!!


இன்றும் இலங்கை பிளவு பட்டு கிடக்கின்றது
இனவாத எண்ணங்களால்.....!

அதிகாரம் ஆட்சி கொண்டோர் எண்ணியிருந்தால்
அடிமைத்தனமும் அராஜகமும் அழிக்கப்பட்டிருக்கும்..!
அந்த குட்டித்தீவில் அமைதி ஆட்சி புரிந்திருக்கும்....!
அட்டூழியம் காணாமல் போயிருக்கும்...!!!


எண்ணம் வழி தவறிப்போனதால்.....
அடிமைத்தனம் மேலோங்கியது....!
இலங்கை இரத்தம் குடிக்க ஆரம்பித்தது....!
இன்றும் குடித்துக்கொண்டே இருக்கின்றது....!

அடிமை விலங்கொடிக்க அன்று
ஆயுதம் ஏந்த நிர்ப்பந்தித்தார்கள்..!
ஆரம்பித்து வைத்தார்கள் அன்று
ஆட்சியின் உச்சத்தில் இருந்தோர்...!


பேரினவாத எண்ணங்கள் இன்றும் நாட்டினை
பேயாட்டம் ஆட்டிக்கொண்டே தான் இருக்கின்றது..!
பேய்கள் பிசாசுகளை கண்ணுற்றதில்லை யாரும்  ஆனால்
பேய்கள் பிசாசுகள் பாராளுமன்றமே நடாத்துகின்றன  இலங்கையில்..!
பேரினவாதமும் மனித உரிமை மீறல்களும் கை கோர்த்து
இல்லறம் நடாத்தும் அழகே தனிதான்...!



நிலையில்லா உலகை ஆள நினைத்த மனிதன் நிலைப்பதில்லை...!!!
நிலைத்து நின்று ஆட்சி புரிகின்றது அவன் நினைத்த எண்ணங்கள்..!!!
நீண்டு செல்கின்றது குற்றங்களும் உரிமை மீறல்களும்...!

பணம் உள்ளவன் எண்ணினால்
பரதேசியும்  பசியாற முடியும்...!!!
பலம் மிக்கவன் கேடு நினைத்தால்
பாலகனும் படுகொலையாவான்...!!!

எண்ணங்களின் அரச சபையில்
எல்லா மனிதனும் ஆளப்படுகின்றான்...!!!
எண்ணங்களுக்கு கிரீடம் சூடி சாமரை வீசும்
எடுப்பார் கைப்பிள்ளை தான் இந்த மனிதன்....!!!





லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "எண்ணம்" என்ற தலைப்பில் இன்று வழங்கிய கவிதை இது.


கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 மணிக்கும் மறு ஒலிபரப்பு பிற்பகல் 9.30 மணிக்கும்......http://gtbc.fm/