Search This Blog

Monday 4 February 2013

இங்கிலாந்தில் இங்கிலீசு இரண்டாம் மொழியாகி இருந்திருக்கும் ..!!!



மனித எச்சங்கள் மண்ணுக்குள்
மலிவாக கிடைக்கின்ற 
மகத்தான நாட்டில்  
சிங்களமும் புத்தமும் 
சிறுபான்மையை தின்கின்ற கொடுமை 
சிங்காரச்செந்தமிழ் படுகொலையாகும் அவலம் 
சிவனை துரத்தி புத்தன் தியானிக்கும் வன்மம் 
சிங்க(ள)த்து கொடியின் பறப்பின் பின்னே..!!!  


 

ஆயுதங்களை கண்டதும்
ஆகாயப்பறவைகள் எச்சங்களை துப்பியதும் 
ஆண்டவனின் இருப்பிடங்கள் 
அகதி முகாம்களாகியதும் 
ஆங்கிலேயனுக்கு பிற்பாடே...!!!




மண்ணுக்குள் இருந்து 
மண்டையோடுகள் முளைப்பதும் 
மண்ணை விற்று  
மக்களை ஏய்க்கும் குள்ளநரி மந்திரிமார் 
மாற்றானுக்கு குடை பிடிப்பதற்காய் 
மழை பெய்ய வைப்பதும் 
வெள்ளையனை கலைத்த பிற்பாடே..!!! 



கோலோச்சும் நாட்டு மக்களை 
கொன்றொழிக்க கொடுங்கோலர்,
கொத்து கொத்தாய் குண்டுகளையும்  
கொடிய நச்சு வாயுக்குண்டுகளையும் 
கொட்டிய கொலை வெறித்தனம்..!!
கொடுக்கப்பட்ட சுதந்திரம் என்ற 
சொல்லின் பிற்பாடே...?? 
ஆங்கில பிரபுக்களின் ஆட்சியில்  
ஆங்கிலமும் மேலைத்தேய கலாச்சாரமும் 
வெட்ட வெளிச்சமாய்  புகுத்தப்பட்டது 
ஆலயங்கள் இடிக்கப்பட்டது தான் 
வெள்ளையனின் ஆட்சியில் 
வெள்ளை வான் கடத்தல் இல்லை..!
வெட்டுப்புள்ளி விவகாரம் இல்லை..! 
விலை வாசி ஏற்றமும் இல்லை..! 

 
முள்ளுக்கம்பிக்குள் முடக்கப்பட்ட 
முதுகெலும்பு அற்ற வாழ்வு...!!!
அத்திவாரக் கல்லுக்கு பதில் 
அப்பாவித்தமிழனின் என்புக்கூடு..!! 
காணாமல் போனவன் 
மரண சான்று பெறுகின்றான் 
அகழ்வாராச்சியால்...!!

இலங்கையர் என்று ஒன்றுபட்டு 
இருவேடமிட்ட சிங்களவனை நம்பியதற்கு    
தனியே வெள்ளைத்துரைகளை 
தட்டி கேட்டிருந்தால் 
வெள்ளையனை வேட்டி  கட்ட வைத்திருப்பான் 
வெள்ளைத்தமிழன்...!!!
இங்கிலாந்தில் இங்கிலீசு 
இரண்டாம் மொழியாகி இருந்திருக்கும்..!!!

இருந்தவற்றை தொலைத்து ஆண்டியான
இளிச்சவாய் தமிழன் - இன்று 
இலங்கையில் ஏதோ கொண்டாடுகிறானாம்..!!! 
நடு வானில் பறப்பது சிங்க கொடியல்ல
நலிந்து போய்விட்ட தமிழனின் இயலாமை...!!!
சிங்களவன் கொண்டாடி மகிழ்வது 
வெள்ளையன் கொடுத்த விடுவிப்பை அல்ல
வீரத்தமிழனின் தற்காலிக வீழ்ச்சியை...!!!

நாற்பத்தேழுகளின் பின்னோக்கிய
நாட்களை விட மோசமான காலத்தை நோக்கி 
நகருகின்ற தமிழனுக்கு எதற்கு இந்த தினம்?

நன்றி கெட்ட மனித பச்சோந்திகள்..!
நரிபுத்தி கொண்டு சிங்களத்தை 
நக்கிப்பிழைக்கும் கட்டாக்காலிகள்- இவர்கள்   
நாளை புலி வாலும் பிடிப்பார்கள் ...!!! 

No comments:

Post a Comment