அலாரம் போன்று.... அடிக்கடி ஒலித்துக்
கொண்டேயிருக்கின்றது....! இந்த சின்ன ஒலியின்
இதய நாதம் எனக்குள் - அவனின்
இதயத் துடிப்பாக துடித்து...,
இரும்பின் பிணைப்பாக அவனோடு
இணைத்து ஒலிக்கின்றது
இன்று வரை...!
இதயத்தை கழற்றி எனக்குள்
இடம் மாற்றி வைத்து - என்
இதயமதை கொண்டு சென்றவன்
இந்த ஒலியை மட்டும் தன்
இதயத்துடிப்பாக விட்டு சென்றான்...!
இதய நாதமாய் உன்னோடு - உன்
இறுதிக்கணம் வரை...
இசைத்துப் பயணிக்கட்டும்....!
இழந்திடாதே எவ்விடர் வந்திடினும்
இறுக்கி கரம் பற்றி என்னவன்
இறுதியாய் உதிர்த்த வார்த்தைகள்.....!
இறுதிக்கிரியையில் - என்னவனின்
இதய நாதமதை துறக்க மறுத்த என்னை
இன்று வரை முச்சந்திகளிலும் தெருக்களிலும்
இகழ்ந்து பேச பின்னிற்போர் அரிதே....!
கடவுளை கல்லாய் பார்க்கும் மனிதர்களை போன்று
வெறும் கண் கொண்டு நோக்குவோருக்கு
வெள்ளி மெட்டியாய் காட்சி கொடுக்கும் - இந்த
வெள்ளி ஒவ்வொரு முறையும் ஒலிக்கும் போது
அள்ளி செல்லும் என் மனதை என்னவனை நோக்கி...
தரையைத்தொட்டுச்செல்லும் உராய்வால் என்னை
வருடிச்செல்வான் அவன் தன் நினைவுகளால் என்பதை
முச்சந்தி முக்கியஸ்தவர்கள் அறிந்திட நியாயமில்லை...!
முதுகெலும்பு அற்றோரின் கேலிக்குப் பலியாகி - என்னவனின்
மூச்சினை நிறுத்திட போவதுமில்லை....!
முத்தான என் மெட்டியினை துறந்திட போவதுமில்லை...!
நடை பயில்கின்றேன் அதிகமாக...
நன்றாக ஒலிக்கட்டும் என்னவனின் இதயம்...!
நகைப்புக்களின் ஒலியை அடக்கிட
நன்றாக ஒலிக்கட்டும் என் மெட்டியில் அடங்கிய
என் இதயவனின் மூச்சொலி.....!!!
எட்டி எட்டி போகின்றேன் விரைவாக
தட்டி தட்டி அழைத்து - என்னவன்
முட்டி முட்டி உதைக்கின்றான்
முச்சந்தி வாய்களை அவன்
மூச்சொலியால்......!!!
வெட்டி வெட்டி சாய்க்கின்றான்
வெட்டி பேச்சு மனிதர்களை
மெட்டி ஒலியால்...!!!
பூட்டி பூட்டி வைத்திருக்கும் என்னவனின்
புனிதமான உயிர் மூச்சு..!!!
அரசி நிலவன்