Search This Blog

Tuesday 23 July 2013

சிவப்பு ஆறு ஓடிய "கறுப்பு ஆடி" யின் 30ம் ஆண்டு நினைவில்.....


     

சிங்கள பேரினவாதிகளின் வெறித்தனத்தால்  தமிழ் உறவுகளுக்கு இழைக்கப்பட்ட  கொடூரங்கள், கொடுமைகள் நடந்தேறியது வெளி உலகம் அறிந்திட முடியாத கால கட்டமான எண்பதுகளில் தான். அதாவது 1983 இல் உதிரமே  உறைந்து விடும் அளவுக்கு ஒட்டுமொத்த தமிழினமும் கதி கலங்கி போயிருந்த நாட்கள் உண்மையில் தமிழர்களின் வாழ்வில் கறுப்பு வடுக்களை உண்டாக்கிய மறக்க முடியாத காலப்பகுதியாகும் . கறுப்பு யூலை எனப்படுகின்ற சிவப்பு இரத்த ஆறு ஓடிய ஆடிக்கலவரம் முடிந்து முப்பதாண்டு காலம் முழுமையடைந்து விட்டது. 
இந்த 30 வருட இடைவெளியில் என்ன வேறுபாடு??
திருநெல்வேலியில் வெடித்த தாக்குதலின் எதிரொலி இந்த ஆடிக்கலவரம் என்பது உலகமே அறிந்த உண்மை. அதற்கு பின்னான காலகட்டத்தில் எத்தனையோ தாக்குதல்கள் சிங்கள இனத்திற்கு எதிராக நடாத்தப்பட்டு அன்று திருநெல்வேலியில்  கொல்லப்பட்ட பதின் மூவரை விட நூற்றுக்கணக்கில், ஆயிரக்கணக்கில் சிங்கள இராணுவமோ அல்லது  காவல் துறையோ கொல்லப்பட்ட போது மீண்டும் ஒரு கலவரம் தமிழருக்கு எதிராக அதாவது 1983 ஐ போன்று இடம்பெறாமல் இருந்தமைக்கு தமிழர்களுக்கு கவசமாய் இருந்த தமிழீழ விடுதலைப்புலிகள் தான் காரணம் என்பது சொல்லித்தெரிய வேண்டியதில்லை. தமிழர்களை தொட்டு பார்க்கவே சிங்களவன் அஞ்சி நடுங்கும் அளவிற்கு தங்கத்தலைவன் வழிவகுத்து வைத்திருந்த காலமும் இருந்தது என்பதை தலை நிமிர்ந்து  சொல்லிக்கொள்ளும் நேரத்தில் இன்றைய நிலையில் மக்களை விட அதிகமாய் ஊசலாடும் இராணுவ மயமான தமிழர் தாயகத்தில் குறைந்த பட்சம் 5 இராணுவத்தினர் தாக்கப்பட்டால் அதன் எதிரொலி 1983 அதாவது கறுப்பு யூலையினை விட மிகக்கொடுரமாகவே இருக்கும். இல்லை என்று எதிர்வு கூறுவதற்கும் சிங்களவன் பயந்து நடுங்கிடக் கூடும்  என்று எண்ணிக்கொள்ளும் அளவிற்கும் தைரியம் நிச்சயமாக யாருக்கும் இருக்க போவதில்லை.
புத்த விகாரைகள்  தான்  தோன்றித்தனமாய் தமிழர் தாயகம் எங்கும் முளைப்பதையும்  சிங்களக்குடியேற்றங்கள் அதிகாரமாக வந்தேறுவதையும் தடுக்க முடியாத உள்நாட்டு அரசியல் பேர்வழிகள் அல்லது மாயை வலையாகிப்போன சர்வதேசம் என்பனவற்றால்  தமிழர்களுக்கு பாதுகாப்பு வழங்கிட முடியுமா??
ஆம் என்றால் அது வெறும் முட்டாள்தனமே....
உண்மை...
1983 ஆடிக்கவரம் என்பது உலகத்திற்கு ஒரு சிறு புள்ளியாக அதாவது உலகம் புரிந்திராத காலத்தில் சிங்கள பேரினவாதத்தால் , காடையர்களால் தமிழினத்தை சுத்திகரிக்க ஆடப்பட்ட கோரத்தாண்டவம்.,! அன்று தமிழனுக்கு குரல் கொடுக்க எந்தவொரு அமைப்போ உலக ஆதரவோ இருந்திருக்கவில்லை. இருந்திருந்தாலும் ஒன்றும் மாற்றம் நிகழ்ந்திருக்காது... 
ஏறக்குறைய 25 வருட  ஆடிக்கலவர நினைவுகள் தழுவிச்சென்ற கால கட்டங்களில் உலக அரங்கில் பெரிதும் வெளிக்கொண்டு வரப்பட்ட ஈழப்போராட்டம் முக்கிய கட்டம் பெற்றிருந்த உச்ச காலத்திலேயே...அதாவது 2009 இல் ஒட்டுமொத்த தமிழினமும் கண்ணீர் சிந்த காட்சிகளாக, ஒளிப்படங்களாக சர்வதேசமும் உலக வல்லரசுகளும் பார்க்க பார்க்க சிங்களக் காடையர் படையால் தமிழினம் நவீன முறையில்  கொன்று குவிக்கப்பட்டது. இல்லை உலக நாட்டின் ஆதரவுடன் தமிழனின் இரத்தம்  ஆறாக  ஓடியது முள்ளி வாய்க்காலில்...
 என்ன வேறுபாடு??? அது இனக்கலவரம்...! இது இன  யுத்தம்...! 
பெயர் ஒன்றுதான் வேற்றுமை...
                                         

கொல்லப்பட்டதும் கொள்ளையிடப்பட்டதும் தமிழர்களின் உயிரும் உடமைகளும் தான்....! 
தமிழன் உதிரத்தில் உறைந்து போனது தமிழர் தாயகமே...! 
மண்ணோடு மண்ணாகி உரமாகிப்போனது எம்முறவுகளே...!
குருதியில் தோய்ந்த முகங்களையும் உடலங்களையும் கண்ணுற்று மரத்து போயிருப்பது எம் உள்ளங்களே..! 
அச்சம் நீக்கி தமிழர்களை தலை நிமிர வைத்து பாதுகாப்பு   கொடுத்த புலிகளை முடக்கி மெளனிக்க வைத்த சர்வதேசம் ,  இனப்படுகொலையை திட்டமிட்டு அரங்கேற்றிய சிங்கள அரசை குற்றவாளிக் கூண்டில் நிறுத்த அருகதை அற்ற ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் , இன்றுவரை இனப்பிரச்சினைக்கு தீர்வு எட்ட சிங்கள அரசை அழுத்தம் கொடுக்க தவறி வரும் அயல் நாடு இந்தியா  என்று பட்டியலிடும் நாடுகளும் அமைப்புக்களும் தமிழனுக்கு இலங்கையில் அரங்கேறும் ஏதேனும் ஒரு கொடூரத்தை தட்டி கேட்க முன்வருவார்களா?? வெறும் கண்துடைப்புக்களும் , பத்திரிகைச்செய்திகளும் , கோஷங்களும் , விளம்பரங்களும் தமிழனை காப்பாற்ற முன் வரப்போவதில்லை. வீறு கொண்டெழுந்த வீர மறவர்களை தவிர வேறெவரும் தட்டிக்கேட்க முன்வரப்போவதுமில்லை...!      

அன்று சிங்கள பேரினவாதம் அரங்கேற்றிய காட்டேறித் தனத்தை 25 வருடங்களாக தட்டிக்கேட்காத அதாவது 2009 வரை ஏன் என்று வினவாத சர்வதேச சமூகத்தின் பொறுப்பற்ற அசமந்த போக்கு 2009 இனப்படுகொலையை முள்ளிவாய்க்காலில் சர்வதேசத்தின் கண் முன்னால்  சிங்களம் ஆற்ற வித்திட்டது.
                                   

அன்றைய ஆடிக்கலவரத்தை தட்டி கேட்டு தமிழர்களுக்கு ஒரு தீர்வினை  சர்வதேசம் வழங்கியிருக்குமானால் ஈழப்போராட்டத்திற்கும் அவசியம் இருந்திருக்காது. இன்று முள்ளிவாய்க்கால் வரை தமிழன் விரட்டி விரட்டி கொல்லப்பட்டு இருக்க மாட்டான். அத்துடன் மட்டும் நின்று விடாமல்  இன்னும் இன்னும் அடக்கி ஒடுக்கப்படும் தமிழன் என்றோ ஒருநாள் ஒட்டுமொத்தமாக காணாமல் போக போகின்றான். அதுவரைக்கும் பாழாய்ப்போன சர்வதேசம் பார்த்துக்கொண்டே தான் இருக்கும். தமிழனுக்கு எதிரான கொடுமைகளை தட்டி கேட்க தயங்கும் சர்வதேச சமூகமானது  தன்  இனத்துக்கு எதிரான கொடுமைகளை தமிழன் நிமிர்ந்து தட்டி கேட்டால் "பயங்கரவாதம்" என்று முத்திரை குத்தி தடை செய்ய மட்டும் தயங்குவதில்லை,
ஆக... சிங்கள அரசின் நலன் விரும்பியாக சர்வதேசம் இருந்து வருவதை யாராலும் தடுக்க முடியாது. தமிழனுக்கு எதிரான ஒடுக்குமுறைகளையும் யாராலும்  தடுத்து நிறுத்த முடியாது. எம்மினத்துக்கான நினைவு  கூரல்கள் மட்டும் நீண்டு செல்கின்றன. அதையும் தடுக்க முடியாது. ஆதங்கங்களையும் வீர வணக்கங்களையும் தெரிவித்து விட்டு அமைதியாக இருக்கும் நாம் "தமிழன்" என்று எம் மனதளவில் மட்டும் பெருமைப்பட்டு கொண்டிருக்க வேண்டியது தானா???
என்றும் தொடரலாம் எமக்கெதிரான வேட்டை.  தற்சமயம் விடுப்பு பெற்று இருக்கின்றது தமிழினப்படுகொலை. சிங்களம் நாளுக்கு  நாள் விதைக்கும் சிங்கள விதை தமிழர் தாயகத்தில் பெரு  விருட்சங்களாக வளர்ந்தோங்கும் போதோ அல்லது விருட்சங்கள் வேரறுக்கப்படும் போதோ தமிழன் உதிரம் மீண்டும் சிந்த தொடங்கும்....!

No comments:

Post a Comment