Search This Blog

Tuesday 1 October 2013

இந்திய சினிமாவின் திறந்தவெளிப் பல்கலைக்கழகம்...!



சிவாஜி கணேசன்...!
******************
என் விருப்பத்திற்குரிய மாபெரும் நடிகர் என்பதை  விட ஒரு தலை சிறந்த  மனிதர் ஐயா சிவாஜி கணேசன் ஆவார். இலக்கியங்களிலும் வரலாறுகளிலும் வாழ்ந்து கொண்டிருந்த பல கதா பாத்திரங்களுக்கு உயிர் கொடுத்து எம் மனங்களில் உருவமாய் தக்க வைத்த பெருமை நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன் ஐயாவையே சாரும். அப்பர் சுவாமிகள் , கர்ணன் , வீர பாண்டிய கட்டப்பொம்மன் , அம்பிகாபதி போன்ற வராலாற்று நாயகர்களின் உருவம் என்றும் சிவாஜியின் வடிவில் தான் மனதில் நிழலாடும். தத்ருபமான அசர வைக்கும் நடிப்பால் இல்லை கதாபாத்திரமாகவே வாழ்ந்து   காட்டிய பெருந்தகைக்கு இன்று பிறந்தநாள்.

அவரைப்பற்றிய பல தகவல்களை எல்லோரும் அறிந்திருந்தாலும் அறிந்திராத சில விடயங்கள் விகடன் சினிமா இணையத்திலிருந்து.....


 எல்லா நடிகர்களுக்கும் ரசிகர்கள் இருப்பார்கள். ஆனால், அனைத்து நடிகர்களும் இவருக்கு ரசிகர்கள். அந்தக் கலைச் சமுத்திரத்திலிருந்து சில துளிகள்...

*சத்ரபதி சிவாஜி வேடத்தில் நடித்த வி.சி.கணேசனை மேடைக்குக் கீழ் இருந்து பார்த்த தந்தை பெரியார், 'இனி இவர்தான் சிவாஜி' என்று சொன்னார். அதுவே காலம் சொல்லும் பெயரானது!

* நடிகர் திலகம் முதன்முதலில் அரிதாரம் பூசியது பெண் வேடம் தான். உப்பரிகையில் நின்றுகொண்டு ராமனைப் பார்க்கும் சீதை வேடம்தான் சிவாஜி ஏற்ற முதல் பாத்திரம்.

* 1952-ல் நேஷனல் பிக்சர்ஸ் தயாரித்த 'பராசக்தி'யில், 'குணசேகரன்' பாத்திரத்தில் சிவாஜியைக் கதாநாயகனாக்க படத் தயாரிப்பாளர் பி.ஏ.பெருமாள் முடிவு செய்தபோது, பலரும் எதிர்ப்புத் தெரிவித்தனர். எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் சிவாஜியை ஹீரோவாக்கிய பெருமை பெருமாளுக்கே உண்டு.......

*சின்சியாரிட்டி, ஒழுங்கு, நேரந் தவறாமைக்கு சிவாஜி ஓர் உதாரணம். ஏழரை மணிக்கு ஷூட்டிங் என்றால், ஆறே முக்கால் மணிக்கே செட்டில் ஆஜராகிவிடுவார். தனது வாழ்நாளில் ஒரு நாள்கூடத் தாமதமாக ஷூட்டிங்குக்குச் சென்றது இல்லை.

*கலைஞரை 'மூனா கானா', எம்.ஜி.ஆரை 'அண்ணன்', ஜெயலலிதாவை 'அம்மு' என்றுதான் அழைப்பார்.


*வீரபாண்டிய கட்டபொம்மன், பாரதியார், வ.உ.சி., பகத்சிங், திருப்பூர் குமரன் போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்களின் பாத்திரங்கள் அனைத்தையும் ஏற்று நடித்தவர் சிவாஜி ஒருவரே.

* தன்னை 'பராசக்தி' படத்தில் அறிமுகம் செய்த தயாரிப்பாளர் பி.ஏ.பெருமாள் வீட்டுக்கு ஒவ்வொரு பொங்கல் அன்றும் சென்று, அவரிடம் ஆசி பெறுவதை வழக்கமாகவே வைத்திருந்தார் சிவாஜி.

* திருப்பதி, திருவானைக்கா, தஞ்சை மாரியம்மன் கோயில்களுக்கு யானைகளைப் பரிசளித்துள்ளார்.

*தமிழ் சினிமா உலகில் முதன்முதலாக மிகப்பெரிய கட்-அவுட் வைக்கப்பட்டது சிவாஜிக்குத்தான். 1957-ல் வெளிவந்த அந்தப் படம் 'வணங்காமுடி!'

*சிவாஜி தனது நடிப்புக்காக வாங்கிய முதல் பரிசு ஒரு வெள்ளித்தட்டு. 'மனோகரா' நாடகத்தைப் பார்த்த கேரளா - கொல்லங்காடு மகாராஜா கொடுத்த பரிசு அது.

*தனது அண்ணன் தங்கவேலு, தம்பி சண்முகம் போன்றவர்களுடன் ஒரே கூட்டுக் குடும்பமாக இறுதிவரை வாழ்ந்தார். சிவாஜியின் கால்ஷீட், நிர்வாகம் அனைத்தையும் கவனித்துக் கொண்டவர் அவரது தம்பி சண்முகம்தான்.

*சிவாஜி நடித்த மொத்தப் படங்கள் 301. இதில் தமிழ்ப் படங்கள் 270. தெலுங்கில் 9, ஹிந்தி 2, மலையாளம் 1, கௌரவத் தோற்றம் 19 படங்கள்.

* ஒவ்வொரு வருடமும் குடும்பத்துடன் தனது சொந்த ஊரான சூரக்கோட்டையில் பொங்கல் விழா கொண்டாடுவதை வழக்கமாகவே வைத்திருந்தார். அன்றைக்குப் பல சினிமா பிரபலங்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்வார்கள்.

*விநாயகர் மீது மிகுந்த பக்திகொண்டவர் சிவாஜி. வெள்ளியிலான சிறிய பிள்ளையார் விக்கிரகத்தை எப்போதும் கூடவே வைத்திருப்பார்.

* சிவாஜிக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம் இருந்தது. 'பராசக்தி' படத்தின் இயக்குநர்கள் கிருஷ்ணன் - பஞ்சு முன்னிலையில் மட்டும் சிகரெட் பிடிக்க மாட்டார்.

*'ரத்தத் திலகம்' படத்தில் இவரது நடிப்பைப் பாராட்டி  சென்னை சினிமா ரசிகர் சங்கம் கொடுத்த பரிசு - ஒரு துப்பாக்கி!

*படப்பிடிப்பின்போது அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுக்காத நேரங்களில் மற்றவர்கள் நடிப்பதை உற்றுக் கவனிப்பார். ஆர்வமாகக் கேட்டால் மற்றவர்களுக்கு டிப்ஸ் கொடுப்பார்.

* சிவாஜியும், எம்.ஜி.ஆரும் இணைந்து நடித்த ஒரே படம் 'கூண்டுக்கிளி'

* விதவிதமான கடிகாரங்களை அணிவதில் இவருக்கு அலாதி பிரியம். ஒமேகா, ரோலக்ஸ் போன்ற வாட்ச்களை ஏராளமாக வாங்கிவைத்திருந்தார்.

*தன் தாய் ராஜாமணி அம்மையாருக்கு சிவாஜி கார்டனில் சிலை ஒன்றை அமைத்தார் சிவாஜி. அந்தச் சிலையைத் திறந்துவைத்தவர் எம்.ஜி.ஆர்.

*'ஸ்டேனிஸ் லா வோஸ்கி தியரி' என்கிற நடிப்புக் கல்லூரி மாணவர்களுக்கான பாடப் புத்தகத்தில், 64 வகையான முகபாவங்களைப் பிரதிபலிக்கும் திறமை பெற்றவர் என்று குறிப்பிட்டு, சிவாஜியின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.


*அவரது தீவிரமான ஆசைகளில் ஒன்று தந்தை பெரியார் வேடத்தில் நடிப்பது. கடைசிவரை அது நிறைவேறவே இல்லை.

*பிரபல தவில் கலைஞர் வலையப்பட்டி, 'தமிழ் சினிமாவில் நீங்கள்தான் எல்லோருக்கும் ரோல் மாடல்' என்று சிவாஜியிடம் சொன்னபோது, 'டி.எஸ்.பாலையா, எம்.ஆர்.ராதா வரிசையில் மூன்றாவதாகத்தான் நான்' என்றாராம் தன்னடக்கமாக!

*பெருந்தலைவர் காமராஜரின் மீது அளவிட முடியாத அன்புகொண்டவர் இவர். 'அந்த சிவகாமியின் செல்வனின் அன்புத் தொண்டன் இந்த ராஜாமணியின் மகன்' - என்பதுதான் தன்னைப்பற்றி சிவாஜி செய்துகொள்ளும் அடக்கமான அறிமுகம்.

*கிரிக்கெட், கேரம்போர்டு இரண்டும் இவருக்குப் பிடித்தமான விளையாட்டுகள்.



நன்றி - விகடன் சினிமா இணையம் 

Monday 30 September 2013

எப்பொழுதும் பிணைப்பாய்,,, முப்பொழுதும் இருப்பாய்...!! (எப்பொழுதும்)


அன்பு குற்றுயிரிலும்....,
தென்பு உயிரற்றும் 
உணர்வற்ற வெற்று மெய்..! 
வாழ்வே முற்று பெற்ற நிலையாக
தாழ்வே எதிலும் பெற்ற சாதனை...!!!

சத்தியமாய் உண்மை....
பைத்தியமாய் உள்ளே...!

எப்பொழுதும் பிணைப்பாய்
முப்பொழுதும் இருப்பாய்...!!

கண்களோடு உறவாடி 
கரைத்திடும் கனமான 
கடுந்துயர்களை -என்
கள்ளக்கண்ணீர்....!!! 
   
நோக்குவோரின் கண்களுக்கு 
தொக்கு நின்று அள்ளிச்சொரிவாய் 
மும்மாரியாய் நிரினை- என் 
முரண்டு பிடிக்கும் நெஞ்சம் ஈரமாகும்...!
புரண்டு உருளும் மெய்யினை தாலாட்டிடுவாய்..!


உறக்கம் என்னும் திரைக்கு பின் உன்னோடு
உறவாட வரவேற்பேன் போகத்துடன் தினமும்...

விழிகள்  பிரசவித்து கன்னங்களில் தவழ்ந்து 
விஞ்சிடும் மயில் இறகின் வருடலாய் நீ தழுவும் 
தொடுகை யால் வலி மிகுந்த நெஞ்சச்சிறை நீங்கி 
விடுகையாவேன் முற்றிலுமாய்....!!!

எப்பொழுதும் என்னருகே 
தப்பாது ஓட்டிய கண்ணீரே 
எங்கே நீ....????

உலகத்தமிழ் வானொலி என்னோடு 
உறவாடும் பொறாமையால் உன்னோடு 
கொண்ட பிணைப்பை அறுத்து போனாயோ...???

தாண்ட முடியா துன்பங்களையும், 
தோண்டிப்புதைத்தாலும் மீண்டும் எழுந்திடும் வலிகளையும்
வரிகளாக்கி இதயம் பண்பாகிடும் "கவிதையும் கானத்தினையும்" 

வலி இதயம் பம்பரமாய் சுழன்று நிலை மறந்திடும் "பம்பரத்தினையும்" 
தமிழ்ச்சொற்களில் அபிநயம் பிடித்து புதிர்  எடுத்து அறிவோடு விளையாடும் "சொல்லாடலையும்"  
சிரிப்பு என்ற ஒன்றை நினைவு படுத்தி துன்பத்தை வெடித்து 
தகர்த்து எறிந்திடும் "சண்டே சரவெடியினையும்"  
வானலைகளில் பிடித்து கொடுத்து 
காதோரம் காதல் பேசும் உலகத்தமிழ் இணைய வானொலி...! 
எப்பொழுதும் பிணைப்பாய் 
முப்பொழுதும் இருப்பாய்...!

சலிக்காது விழித்து இருப்பேன் எப்பொழுதும் உன்னோடு...
வலிக்காது செழித்து இதயம் எப்பொழுதும் இருப்பதற்காய்.....!!!


அரசி நிலவன்




லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "எப்பொழுதும்" என்ற தலைப்பில் இன்று வழங்கிய கவிதை இது.


கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 மணிக்கும் மறு ஒலிபரப்பு பிற்பகல் 9.30 மணிக்கும்...... http://gtbc.fm/


Thursday 26 September 2013

ஏழ்மை...!!!

உடைமைகள் இழந்தோம்
உலகம் தராசினை நீட்டியது...! 
உதிரங்கள் கொடுத்தோம்
உயரத்தான் இருந்தது தராசு...!
உயிர்களையும் ஈந்தோம்...!
உலகத்தின் படிகளுக்கு சமனாகவில்லை..!!!
உலகத்தராசின் சமனுக்கு ஈடாய் வழங்கிட 
ஏதுமில்லா ஏழைகள்....!! 


நிலங்கள் சுரண்டப்டுகின்றன....!
நீர் உறிஞ்சப்படுகின்றது...!
கடல் அன்னையும் தூரமாய்...
கட்டுமரங்களின் அதிகரிப்பால்....!
வறுமையின் நிமித்தமே 
வந்தேறியவர்கள் அவர்கள் ...! 
கசங்கிய துணி தான்...
கல்லும் முள்ளும் கொண்ட பாதம் தான் 
அன்றாடம் உழைப்புத்தான் - ஆனாலும் 
அச்சப்பட்டு நடுங்கியதில்லை..!
  
வறுமைக்கோட்டிற்கு கீழ் என்று அவர்களை 
வரையறுத்து வைத்தாலும்....
வட கிழக்கில் வாழ்வோரை  விட 
வறுமையற்று இல்லையே...!

வந்தேறிய குடிகளை 
வந்த வழி திருப்பிட திராணியற்ற பண்டாரவன்னியன் 
வம்சத்து  ஏழைகள் ......!
வழி வழியாய் தொடர்கின்ற வரலாறே...


அசர வைக்கும் அரண் மனை இல்லம் 
அழகிய ஆடம்பர மகிழுந்து 
அவ்வப்போது அயல் நாட்டுக்கு சுற்றுலா
அனு தினமும் இறைவனுக்கு காணிக்கை
அள்ளி அள்ளி கொடுத்தாலும் வற்றிடா செல்வம்...!!
அட்சய பாத்திரம் இருந்தால் ஏழை இல்லையா??
அந்தரத்தில் தன் உயிர் ஊசல் ஆடும் 
அநாதை தமிழர்களின் ஏழ்மை யாருக்கும் தெரிவதில்லை...!!

அன்று தொட்டு இன்று வரை 
அதிகார பரவலாக்கல் பிச்சைத்தட்டில் 
அங்கு மிங்கும் விழும் சில்லறைகளை
அண்ணாந்து நோக்கி ஏம்பலிக்கும்
அக்னி நெஞ்ச தமிழர்களின் ஏழ்மை நிலை...
அகிலம் அறிந்திட வாய்ப்பில்லை....!!!


அரசி நிலவன் 



லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "ஏழ்மை" என்ற தலைப்பில் இன்று வழங்கிய கவிதை இது.


கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 மணிக்கும் மறு ஒலிபரப்பு பிற்பகல் 9.30 மணிக்கும்...... http://gtbc.fm/

  

தன்னுயிரை வருத்தி சிரித்து சென்றவன்..!!!


தமிழின் காதலால் கலம்பகம் கேட்டு
தன்னையே சாம்பலாக்கிய நந்திவர்மனை ஒத்து
தமிழீழத்தின் மேல் உயிர் கொண்டு பட்டினித்
தணலில் வெந்து கருகி பன்னிரு நாளாய்
தன்னுயிரை வருத்தி சிரித்து சென்றவன்..!

ஊரெழுவில் உதித்த உதய சூரியன்...!
ஊட்டம் நிராகரித்து நீர் துறந்து
ஊனை உருக்கி உயிரையும் ஈர்ந்தான்
ஊமையாகிய இந்திய வல்லாதிக்கத்தால்..!!!


நல்லூரில் பார்த்தீபன்
நாவறண்டு நாடி துவண்டான்...!
பல்லூரிலிருந்தும் திரண்ட
பாசக்கார உறவுகளின்
கண்ணீர்களை பறித்து...

தமிழீழத்தின் தாகத்திற்கு
தன் நீரினை பருக்கியவன்...!
தன்னிகரில்லா உயிரினை
தியாகத்தில் எரிய வைத்தவன்...!

வஞ்சகம்  இழைத்த அயல் தேசத்தால்
நெஞ்சகம் துவண்டு போன உறவுகளின்
சந்ததிகளும் கண்ணீரோடு நினைவேந்தும்
பந்தத்தோடு பிரிந்து சென்றவன் திலீபன்...!!


தமிழ் மனங்களை சுட்டெரித்த செஞ்சூரியன்...!!
தமிழினத்தை இருள் நீங்கி விழிக்க வைத்த அகல் தீபம்..!!
தலைவரே  கண்ணீர் சிந்திய கண்ணியத்தியாக வீரன்...!!

இந்திய வல்லாதிக்க தேசத்தை - நாணி
சிரம் தாழ வைத்த தியாகச்செம்மல்....!!

மக்கள் புரட்சி வெடிக்க வேண்டுமென்றாய்.!
மனம் குளிர வானத்திலிருந்து பார்ப்பேன்
மலரும் சுதந்திர தமிழீழமதை என்றாய்...!!!


காலங்கள் கடந்து தான் போகின்றன.....!
காத்திருப்பும் நீண்டு தான் போகின்றது...!
தமிழீழமோ தனியரசோ ஆண்டாலும்
தரணியில் உன் நாமம் அழியாது அண்ணா...!!!
தமிழர்கள் இங்கு வாழும் வரை.............................



அரசி நிலவன்


  

Wednesday 25 September 2013

ஐம்பொன்....!!!



ஐம்பொன்னின் நாணத்தால்
காத்து கருப்பு அண்டாதாம்..!
விலை கொடுத்து மழலை காலில்
சிலம்பு ஒன்று அணிவித்தாள்
தாய்லாந்து அயல் சிநேகிதி...!
தாய்நாட்டில் மட்டுமில்லை
தாய்லாந்திலும் காத்து கருப்போ....?

தொண்டைக்குள் சிக்கி கொண்டது
தொலைந்து போனவைகள்...!
நினைவில் நிற்பவை....!
கனவாகி போனவை....!
உயிரை உலுக்கி எடுப்பவை...!


எந்த காத்து கருப்பு குடித்து போன
எண்ணிலடங்கா உதிரம் - ஈழ
மண்ணில் சகதியாகி போனது....?

ஐந்தடிக்கொரு ஐம்பொன் சிலைகள்
அடங்கா மண்ணில் இருந்தன அன்று..!
இன்றும் இருக்கத்தான் செய்கின்றன....
கண்ணில் தென்படாத காத்து கருப்பு
மண்ணில் மனிதர்களை
எட்டிச்சோ தொட்டிச்சோ.?
நான் அறியேன்.....



கண்ணுக்கு புலப்பட்ட
சன்னங்களும் எறிகணையும்
ஐம்பொன் சிலைகளையே  நன்கு
எட்டி தொட்டு பதம்பார்த்தன அன்று..!


இன்றும் பச்சை நிற காத்து ஏ கே 47 உடன்
காவல் காக்கின்றது ஐம்பொன் சிலைகளை...
காக்கி கறுப்பும் கூட துணையாக...


ஐம்பொன்னை தள்ளி வைத்து
களிமண் அரசாளுகின்றது...!
இடம் அபகரிப்பதை மிரட்ட
இயலாத ஐம்பொன் சிலைகள்
இல்லாத காத்து கறுப்பை விரட்டுமா??

ஐம்பொன் கொண்டு மனிதர்களுக்கு
காவல் செய்யும் அறிவாளிகளே....!
ஈழத்தை உலுக்கும் காத்து கருப்புக்கு என்ன காவல்
விளக்கமாய் தான் உரத்து சொல்லுங்கோவன்...!



அரசி நிலவன்



லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "ஐம்பொன்" என்ற தலைப்பில் இன்று வழங்கிய கவிதை இது.


கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 மணிக்கும் மறு ஒலிபரப்பு பிற்பகல் 9.30 மணிக்கும்...... http://gtbc.fm/

Tuesday 24 September 2013

மலைக்காற்று...!




மலைகளின் மடியினில்
அலையாய் தவழ்ந்து - வெம்மையை
வலை வீசி அள்ளி  ஊதலில்
சிலையாக்கி நகரும் சீதளக்காற்று..!!!

காதில் தேன் மொழி பேசி சிணுங்கி எங்கோ
காதல் சொல்ல விரைகின்றது விரைவாக..



ஊதற்காற்றின்
ஊடல் விளையாட்டுக்கு அஞ்சி
ஊமையாகி நிற்கின்றன மலையின் தளிர்ச்செடிகள்...!


தவழ்ந்து விளையாடும் குளிர்காற்றோடு
தகதிமி ஆட நெருங்கி வரும் வெண் பஞ்சு
முகில்களை முட்டி மோதும் பர்வத உச்சி
தொட்டுச்செல்லும் மலைக்காற்றால்
சொட்ட சொட்ட நனைகின்றது வெட்கத்தால்...!



பட்டும் படாமலும் தொலைவில்
எட்ட நின்று ஓரப்பார்வை பார்க்கும்
வட்ட வெண்ணிலாவும் நாணி
மேகத்திரையில் ஒளிந்து கொள்கின்றதோ..???



கண் சிமிட்டும் விண் மீன்களின்
பண் பாடும் இசை கேட்டுத்தான்
விண்ணுக்கும் விரைகின்றதோ
மண்ணின் மலைக்காற்று....!


ஊதற்காற்றில் ஊஞ்சல் ஆடும்
ஊதாப்பூக்கள் சொரியும் தேனினை
காதலிக்கு அபகரித்துச்செல்கின்றதோ
கார்காலக்கள்ளக்காற்று....!!

ஊரெல்லாம் பரவும் தேனின் கடியால்
ஊதற்காற்றின் திருட்டு அம்பலமாக - நாணி
ஊமையாய் திரும்புகின்றது மலையின் மடிகளுக்கே...

தளிர் புற்கள் அள்ளிப்பருக  சொரிகின்றது
குளிர் தேனை பச்சை மலை மீது....
தெளித்து புன்னகைக்கும்  குறும்புக்காற்று
ஒளிந்து கொள்கின்றது ஒன்றுமறியாதது போல...


தற்கொலைக்கு முயலும் மலையருவியினை
தடுக்க விரையும் மலைக்காற்று  சினம் கொண்டு
மலையடிவாரத்தை உதைத்து சாந்தமாகி
மறுபடியும் சிலிர்த்து எழுகின்றது மேலே...


மலைக்காற்றை உதறி விட்டு திமிர் கொண்டு
மலையருவி  பாறையோடு கை கோர்த்து
மகிழ்வோடு  செல்கின்றது ....
மலைக்காற்றை முறைத்தவாறே


மாயமாய் சுழன்ற  சுழல்காற்று
மலையின் உச்சியில் வெண் பஞ்சு முகிலோடு
மந்திரப்புன்னகை புரிந்து வெறுப்பேற்றுகின்றது
மலையருவியினை-தன்
மனம் விரும்பியவாறு....!!!


குளிர் காற்றோடு மனம்  திறந்து பேசி மலை உச்சியின் உச்சந்தலை
குளிர்கின்றது ஊதற் காற்றின் ஊதலை போன்றே.....!!!
மலைக்காற்றின் ஊதற்காதலுக்காக இன்னும் தவம் இருக்கின்றன...
மயக்கும் வெண்ணிலாவும் வண்ண விண்  மீன்களும்....!!!




அரசி  நிலவன்

*********************************************************************************



லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "மலைக்காற்று" என்ற தலைப்பில் இன்று வழங்கிய கவிதை இது.


கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 மணிக்கும் மறு ஒலிபரப்பு பிற்பகல் 9.30 மணிக்கும்...... http://gtbc.fm/


Monday 23 September 2013

பறவையின் குரல்...!!!


பறவையின் குரல்களோடு
பிணைந்திருந்த மனித வாழ்வு
பிரிந்து காலமாயிற்று....!
பிரிந்த தாய் மண்ணோடு
பிரிந்து போனது  அன்றாட
பிணைப்புக்குரலிசைகளுமே...!!


அதிகாலை கொக்கரக்கோவோடு விடியல்..!
அங்கு மிங்கும் கீச் கீச் உடன் வானம்
அரைத்தூக்கம் கலைக்கும் அசைவோடு.....
அழகிய பச்சைக்கிளிகளின் கீ கீ புத்துணர்ச்சி..!

கட்டியம் கூறும் விருந்தினர் வருகையை
காவி வரும் கா கா குரலோடு
காதல் பறவைகளின் இனிய மழலை
காதிற்கு இனிமையான இசைகள்...!

சிட்டுக்குருவியின்
சிருங்கார இசைக்குரலில் மெய்மறந்து,
சின்ன சின்ன மைனாக்கள் பேசும்
வண்ண வண்ண குரலில் பின்தொடர்ந்து,


குயில் பாடும் குரலோடு மயங்கி - பின்
மயிலின் குரலோடு அரண்டு எழுந்து - நடை
பயிலும் புள்ளினங்களின் சின்ன மழலையில்
உலகம் மறந்திடும் நினைவு...!

அன்றில் பறவையின் அகவலும்
தேன் குருவியின்(ஹம்மிங் பேர்ட்) தேனிசைக்குரலும்
கொண்டைக்குருவியின் கொள்ளை கொள்ளும் இசையும்
நினைவுகளாகி தொலைந்து நாட்களாயிற்று....!

இயற்கையின் அணைப்பில் இறுகிக்கிடந்த
இனிமையான வாழ்வு - இன்று
இயந்திரத்திற்குள் சுருங்கிய
இருண்ட உலகத்தில் இயற்கையின்
இனிமை காணாமல் போய் விட்டது....!!!


இன்னும் சேவல்களும் குருவிகளும் கிளிகளும்
இருக்கத்தான் செய்கின்றன.....!!!
முகப்புத்தகத்தில் முகம் புதைத்து
அகப்புத்தகத்தில் நிம்மதி தொலைத்து
அலையும் மானிடனின் பரிதாபத்தை
நிலைத்து நின்று கூவுகின்றன சேவல்களும்
சிரித்து கதைபேசும் பச்சைக்கிளிகளும் - இராகம்
இசைக்கின்றன குயில்களும் புள்ளினங்களும்
இரசிக்கத்தான் பாவம் மனிதனுக்கு நேரமில்லை....!


அரசி நிலவன் - தாய்லாந்து


லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "பறவையின் குரல்" என்ற தலைப்பில் இன்று வழங்கிய கவிதை இது.


கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 மணிக்கும் மறு ஒலிபரப்பு பிற்பகல் 9.30 மணிக்கும்......http://gtbc.fm/

Saturday 21 September 2013

வழுவாய் முடியாமல் தவிக்கின்றேன் வன்மை காதலால்...!!!


வலுவான இதயத்தை 
வலிய வம்புக்கிழுத்து,,
வலிந்த வன்னி வயன 
வல் அம்புகளால் துளைத்து,,
வலிக்க வைப்பதனால்.... 
வல்லவன் நீ எதில் 
வலங்கொள்கின்றாயோ...??

வழியற்று யான் உன்னை 
வழிக்கொள்ளவில்லை..!
வழுக்கினேன் உன் காதலில்..!
வழிபார்த்தேன் பற்பல உன்னிடம்...!
வழிபட்டேன் வழிபடுகடவுளாக...!

வழுக்களை வாரி இறைத்து,,
வசைமாரி பொழிந்து,,
வன்சொல் உதிர்த்து,,
வன்மம் தீர்க்கின்றாய்...!


வஞ்சித்து வசீகரித்தாய்..!
வஞ்சனாயினும்,,,,
வழுவாய் முடியாமல் தவிக்கின்றேன்
வன்மை காதலால்...!!!



அரசி நிலவன் 

Thursday 19 September 2013

விந்தை அன்பு புரிந்த தந்தையுமானவளே....!! (ஆறுதல்)


அன்பிற்கு  மட்டுமன்றி
ஆறுதலுக்கும் முகவரி
அன்னையே...!

தந்தையின் பிரிவில்
சிந்தை கலங்கி நின்றோம்..!
எந்தையும் தாயுமாகி
விந்தை அன்பு புரிந்த
தந்தையுமானவளே....!!



கந்தையில்லா துணிகளும்
சந்தையில் வகை வகையாய்
விளையாட்டு பொம்மைகளும்
அள்ளி வந்து குவிப்பாய்....!
அழகழகாய் கல கலக்கும் எமை
அகம் குளிர்ந்து அரவணைத்து
அன்பாய் உச்சி முகர்ந்து
ஆறுதல் கொடுத்து
ஆறுதல் அடைவாய்...!


ஆறுதல் பட உனக்குத்தான்
ஆருமில்லை அந்த தருணங்களில்...
ஆளாகாமல் நின்ற அரும்புகள் எமை
ஆட்படுத்தி அழகு பார்த்தாய்....!
ஆறுதல் ஆறுதலாகக்கூட உன்னை
ஆற்றவில்லை - மாறாய்  என்னை
ஆறுதல் படுத்திக்கொண்டும்
ஆறுதலாகவும் ஆற்றுப்படுத்தும்
ஆலயம் அம்மா நீ....!!!


பெண்மையாய்  என்னை
மென்மையாய் படைத்து
திண்மையாய் வாழப்பழக்கி
இன்மையிலும் புன்னகைத்திட
தொன்மை தொட்டு உணர்த்தி
உண்மையாய் என்றும் விளங்கிட
தன்மையாய் உரைத்தவள்- என்னுயிர்
பன்மையாகும் போதும்
பரவசம் அடைகின்றாள்
அருகிருந்தே ஆறுதலாக....என்
ஆறுதலுக்காக தன்
ஆற்றாமைகளை
ஆற்றத்திணறி
ஆற்றுப்படுத்துகின்றாள் எனை
ஆறுதல் என்ற உருவமாகி...


வாய் திறந்து தான்  பேசிட வேண்டுமா??
அருவமான ஆறுதலை அன்னையின்
உருவத்தில் கண் நோக்குகின்றேன்..!

அகராதி போதாது
அன்னையுன்னை விழிக்க...
ஒற்றைப் பதம் கொண்டு
ஒருமித்து உரைக்கின்றேன்..!!


ஆறுதலின் மின்னஞ்சல்..!
ஆறுதலின் கணிப்பொறி..!
ஆறுதலின் வரைவிலக்கணம்..!
ஆறுதலின் அகராதி..!
ஆறுதலாக அன்பை கொட்டும்
ஆரவாரமற்ற அன்னை நீயே...!!!

  


அரசி நிலவன்
 



லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "ஆறுதல்" என்ற தலைப்பில் இன்று வழங்கிய கவிதை இது.


கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 மணிக்கும் மறு ஒலிபரப்பு பிற்பகல் 9.30 மணிக்கும்......http://gtbc.fm/


Tuesday 17 September 2013

"எனக்காய்...!"

காற்றோடு  காது வைத்து காத்திருக்கின்றேன்...!
காற்றில் தவழ்ந்து வரும் உன் குரலோசை
காதுகளில் ஒலிக்க கேட்பதற்காய்....


ஒற்றைக்கவிதை ஒன்றில் - என்
உயிரினைக் கயிறு கட்டி இழுத்து விட்டாய்...!
நான் நீயாகி நீ நானாகி
நாமாகி நாள் கடந்தும்
நாடித்துடிப்பாக என் நினைவுகள்
நாளும் துடிக்கின்றது உன்னில்...!
நான் இங்கே நீ அங்கே
நாட்கள் நம்  நினைவுகளின்றி
நகருவதில்லை நமக்கு....!

பசித்திருந்தாலும்,,
பல இடர்கள் எனை அணைத்தாலும்
பஞ்சம் என்னை நெருங்கி வந்தாலும்,
பஞ்சாய் பறந்து ஓடிடும்.....!
நெஞ்சம் திறந்து பேசும் உன்
வஞ்சமில்லா பேச்சுக்களால்..!



கஞ்சத்தனம் இல்லாமல் - உன்
நெஞ்சத்திலே மாமனை கட்டி
வஞ்சி என்னை சொர்க்கத்தை
விஞ்சி நிற்கும் இன்பத்தில்
சஞ்சரிக்க வைக்கும் உன்
கொஞ்சிப்பேசும் இதமான அன்பு
மிஞ்சிடும் என் வலிகளை.....!

அஞ்சி நடுங்கி அடைபட்டிருந்தாலும்
கெஞ்சி தொலைபேசி பெற்று
கொஞ்சிடும் உன் பேச்சுக்கள்
எனக்காய் உளி கொண்டு
செதுக்கி நீ கொடுப்பவை...!


செய்வதறியாது கண்ணீரில்
கரைகின்றாய் - காற்றிலே
கலந்து வரும் உன் கண்ணீரின் உப்பில்
கறி சமைத்துக்கொள்கின்றேன் நான்....!

கண்ணாளனே.....!
கனவுகள் கொடுத்து அனுப்புகின்றாய்  இரவுகளிடம்
கடிதங்கள் சொல்லாத சங்கதிகளை
கனவுகள் உணர்த்தி விட்டு காணாமல் போகின்றன..
கணப்பொழுதுகளில்....!


கம்பி வாழ்வினை கடினப்பட்டு வாழ்ந்து கொண்டு
கண்ணீர் சிந்துகின்றாய் எனக்காக.....!
கடைசி வரை இவ்வாறே இருந்திட போவதில்லை...!
கண்கள் சேர்ந்திடும் காலம் வெகு தொலைவில் இல்லை...!

அருகருகே நாம் இருந்த போதும் காதலை
அறிந்து கொண்டதில்லை முழுதாக..!
அர்த்தமில்லா இந்த பிரிவு கூட எனக்காய் போலும்..!

காதலனே கடவுள் மேல் நான் கொண்ட
காதலின் ஆழத்தினால் வழங்கப்பட்ட
காதல் பரிசு "எனக்காய் நீ...!"  


அரசி நிலவன்


லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "எனக்காய்" என்ற தலைப்பில் இன்று வழங்கிய கவிதை இது.


கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 மணிக்கும் மறு ஒலிபரப்பு பிற்பகல் 9.30 மணிக்கும்......http://gtbc.fm/