Search This Blog

Friday 27 June 2014

விதைத்து விட்டவள் வினையறுக்கட்டும்...!!


அகவைகள் ஐந்தில்
அடி எடுத்து வைத்த
அழகிய தேவதை இவள்..!!!

வடிவுகள் வழித்தெடுக்கப்பட்டு
வனத்திலே கசக்கி எறியப்பட்டு
உருமாறிக்கிடக்கின்றாள்..!!

குழந்தை என அறிந்திடாமல்
குதறிக்கிழித்த வெறி நாயின்
பற்களின் தடமங்கே - இளம் பிஞ்சின்
பட்டு வண்ணக்கன்னங்களில்
தொட்டு ருசி பார்த்த வடுக்களாய்
புதைந்து கிடக்கின்றது...!!

பெண்மை உணர்வே அறியாத பிஞ்சானது
பெண்மை குறி  கொண்டதால் பஞ்சாகப்
பிய்த்தெறியப்பட்டதோ...?

துளை ஒன்று வேண்டும் என்றால்
மண்ணுக்குள் துளையிடுங்கள்
மரத்தினில் துளையிடுங்கள்
மரணிக்கும் வரை உங்களைச்
சொருகிக்கொள்ளுங்கள்...!!

உணர்ச்சிகள் பிறக்காத சிசுவில்
உணர முடிகின்ற காமத்தினைச்
சடப்பொருளிலும் உணரமுடியும்..!!

ஆண்மைத்தன்மையினை அற்பமாக
பெண்மை யில் வக்கிரம் பாய்ச்சி
மென்மை யினை வன்மை கொண்டு
நோக்கி மலர எத்தனிக்கும் மொட்டைத்
தாக்கி அழித்து கசக்கி போடும் கோழைகளே..!

உக்கிப்போன உங்கள் வீரம் இது தானோ??
மக்கிப்போகும் மண்ணில் உங்கள் குறிகள்
தொக்கி நின்று அரசாளுமோ??
சிக்கித்தவிக்கும் பெண்மையினை ரசித்தவனே..!
விக்கி நிற்கும் பாலகியைச்சிதைப்பதிலும்
நக்கிப்பிழைக்கும் பிழைப்பு மேல்..!

தொட்டு தடவிப்பார்க்க பெண்மை வேண்டின் - உனை
நட்டு வைத்த தாய்மையிடம் தடவிக்கொள்
விஷச்செடி ஒன்றின் வித்தினை மண்ணில்
விதைத்து விட்டவள் வினையறுக்கட்டும்...!!


அரசி நிலவன்


நண்பர்கள் இணையத்தளத்தில் சித்திரை மாத பதிவில் அதிக புள்ளி(576) பெற்று முதலிடத்தில் இருந்திருந்தாலும் ஏற்கனவே முக நூலில் பதிவிடப்பட்ட காரணத்தால் அந்தப்பரிசை இழந்து சிறப்புப்பதிவாக தரமுயர்த்தப்பட்ட கவிதை இது என்பது குறிப்பிடத்தக்கது.

Thursday 29 May 2014

அகம்...!!!


அகம் வாழும் நினைவுகளை  
அசை மீட்டி அசை மீட்டியே 
அலுத்து போகின்றது...!

வெறும் நினைவுகளாய் 
சோபையிழந்து போனவைகள்..! 

உயிரற்று நாற்றம் வீசுபவைகள் 
தோண்டி துருவியெடுத்து 
ஆராய்ச்சி பண்ணும் புதைகுழியின்  
மனித எச்சங்களாய் இவை  பலனற்றவை..! 

இருந்தும் அசை மீட்டி பார்த்து 
இதயம் கனத்து போவதே மிச்சம் 

அகத்தை அழித்து போட 
அறிவியல் இன்னும் வளரவில்லை...!

ஆழிப்பேரலை அடித்து செல்ல முடியாமல் 
அகம் எனக்குள்ளே ஒளிந்து கிடக்கின்றது...!

அடி மனதில் ஓர் எண்ணம்  
அடிக்கடி அங்கலாய்ப்பில்....

நாறிய அகம் உயிர் பெற்றிடும் 
நாளை நற்செய்தி ஒன்று செவியில் விழுந்திடும் என 

அந்தோ 
நாட்கள் மின்னல் வேகத்தில் கடக்கின்றது 
அகம் இங்கே தவித்துக் கிடக்கின்றது - அட 
அலைகள் கூட  தொட மறுக்கின்றது
அமிழ்த்தும் அகத்தின் கனம் தாங்காமல் அவை
அகன்று போகின்றனவோ  கடல் தாண்டி - அன்றி  
அகத்தை தொட்டால் பிரளயம் ஒன்று உருவாகிடும் என்று 
அறிந்து போகின்றனவோ...?


Sunday 18 May 2014

சிந்துகின்ற கண்ணீரும் செந்நீரும் நாம் அரவணைக்கும் கரங்களால் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்...!!!


உதிரமும் கண்ணீரும் கலந்து சகதியான மண்ணில் சரித்திரம் படைத்துச்சென்ற பேரழிவுகளின் ஐந்து வருடங்கள் விரைவாக உருண்டோடி விட்டது. செந்நீரும் கண்ணீருமாய் நிரம்பி வழிந்த தாயக தேசம் இன்று  உயர் ரக நெடுஞ்சாலைகளும்  புகையிரத கடவைகளுமாய் உருமாறிப் போய் விட்டது. மக்கி மண்ணோடு மண்ணாகிப் போன உறவுகள் மற்றும் ஆங்காங்கோ காணாமல் போனவர்கள் என குறைந்து போன இனத்தின் நினைவினை வாரி வழங்கும் சான்றுகளாக  இன்னும் அங்கே கண்ணீர் வடிக்கும் உறவுகள் இருக்கத்தான் செய்கின்றார்கள்.

ஒவ்வொரு வருடமும் கோலாகலமாய் மண்டபம் ஒழுங்கமைத்து, விளக்கேற்றி, மாலையிட்டுக் கண்ணீர் சிந்தி இலட்சக்கணக்கில் பணத்தினை வாரி இறைத்து உலகம் பூராவும் அஞ்சலி செலுத்துகின்றோம். இதனை உயிர் துறந்தவர்கள் அறிந்திடப்போவதில்லை. உயிரற்றுப் போனவர்களால் தினம் தினம் வாழ்வினை நகர்த்த முடியாமல் போரின் எச்சங்களாக எஞ்சி அந்த இறுதி நாட்களை கண் முன்னே கொண்டு வரும் உறவுகள் இன்னமும் அங்கு இருக்கத்தான் செய்கின்றார்கள்.

ஆம்...!
இறுதி யுத்தமதில் கண்முன்னே கணவனை இழந்த கைம்பெண்கள், மகனை இழந்த தாய் தந்தையர்கள், தாய் தந்தையினை இழந்த குழந்தைகள், அண்ணாவை அக்காவை என்று குடும்பத்தின் மூலாதார உறுப்பினர்களை இழந்து இன்று தமது அன்றாட சீவனத்திற்கு கூலி வேலை செய்தும், கல்வி கற்க வேண்டிய குழந்தைகளை வேலைகளுக்கு அனுப்பியும் கரடு முரடான முட்கள் நிறைந்த வாழ்க்கைப்பாதையில் பயணிக்கும் எத்தனையோ எத்தனையோ உறவுகள் போரினால் தமது வாழ்வாதரத்தை மட்டுமல்ல தமது அங்கங்களையும் இழந்து தவிப்பது கொடுமையிலும் வேதனை.

அன்றாடத்தேவைகளை நிவர்த்தி செய்திடப் பெரும் பாடுபடும் அவர்களுக்கு செயலிழந்த அங்கங்கள், எறிகணையின் சிதறல்கள் மற்றும் துப்பாக்கி ரவைகள் துளைத்த உடற்பாகங்கள் கொடுக்கும் அளவில்லாத வேதனைகளும் வலிகளும் அனுபவித்து உணர்ந்தாலன்றி எழுத்தினில் விளக்கிட முடியாது. 
இலட்சம் இலட்சமாக பணத்தைக் கொட்டி மண்டபம் ஒழுங்கமைத்து, உணர்வான பேச்சுக்கள், கவிதைகள் மற்றும் நாடகங்கள் என்று நாம் நிகழ்வுகளை அரங்கேற்றி, விளக்கேற்றி அணைப்பதால் இந்த உறவுகளின் வேதனை ஒருபோதும் துடைக்கப்படுவதில்லை.


ஒட்டுமொத்த உலகமே கண் மூடி இருந்த அந்த நாட்களில்  மொத்தமாய் படுகொலையான எங்கள் உதிரத்து உறவுகள் இனி உயிருடன் எழுந்து வந்திடப்போவதில்லை. ஒரே  நாளில் ஆயிரக்கணக்கில் மக்கள் படுகொலையானதற்கான  காரண கர்த்தாக்களை தேடி, கொடி  பிடித்து, கோசம் போட்டே நாம் காலத்தைக் கடத்தி வந்த இந்த ஐந்தாண்டு காலப்பகுதியில் மெல்ல மெல்ல மரணித்துக்கொண்டிருக்கும் எத்தனையோ உறவுகளின் சமாதிகளை நாம் அறிந்திட வாய்ப்பில்லை. 

அங்கே ஒரு பிடி சோற்றுக்கு மடிப்பிச்சை ஏந்தும் எங்கள் உறவுகள் கவனிப்பாரற்று மடிந்து போவது ஏன் இன்னும் எங்கள் அறிவிற்கு புலப்படவில்லை. உலகம் கண் மூடி மெளனம் காத்த கொடும் செயலை நாமும் இப்போது அரங்கேற்றிக்கொண்டிருக்கின்றோம்  அல்லவா?  

எப்போதாவது சிந்தித்துப் பார்த்ததுண்டா...? என்ன செய்து இருக்கின்றோம்? ஒன்று பட்டு நாம் எழுந்து அவர்களுக்கு வாழ்வாதாரங்களைப் பெற்றுக்கொடுத்தோமா? கண்ணீரை துடைத்து விட கரங்களை கொடுத்தோமா? மடிந்தவர்களை கேட்டு காணாமல் போனவர்களை கேட்டு தமக்குத்தாமே போராடிப் போராடி சலித்து விழுந்து கிடக்கும் அவர்களுக்கு நாம் இங்கே எழுப்பிடும் கோசங்களும் அஞ்சலிகளும் கறிக்குதவாத ஏட்டுச்சுரைக்காய்களே..! 

ஒவ்வொரு வருடமும் மிக்க வலியோடு கடந்து செல்லும் இந்நாட்கள் மிகவும் ஏமாற்றமாகவும் நீங்கிச்செல்வதுண்டு. அந்த 2009  இற்கு பின்னர் தன்னலமற்று யாராவது எம் உறவுகளை கை தூக்கி விட முன் வர மாட்டார்களா? எம் உறவுகளின் கண்ணீர் துடைக்க யாராவது முன் வர மாட்டார்களா? கடந்து போன நான்காண்டுகளும் பதிலற்றுப் பறந்து சென்றிட 
இந்த ஆண்டு தக்க பதிலோடு மெல்லக் காலடி எடுத்து வைக்கின்றது.

வினாக்களுக்கு பதிலளித்து, உறவுகளின் கண்ணீரையும் துயரங்களையும் துடைத்து எறிந்திட முளைத்து வேர் விட்டு கிளை பரப்பி வானளவாய் உயர்ந்து நிற்கின்றது ஒரு ஆல விருட்சம்.

ஆம்...!
இறுதிப்போரில் பாதிக்கப்பட்டு  அலைந்து திரிந்து, கடல் தாண்டி தடுத்து வைக்கப்பட்டிருக்கும் உள்ளம் ஒன்று உதவும் உள்ளங்களை முகநூலில் இணைத்து உருவான "உலகத்தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள் ஆணையம்" ஒரு மாத கால இடைவெளியில் இறுதிப்போரில் அவயங்களை இழந்த இரு உறவுகளுக்கு உடனடி மருத்துவ சிகிச்சை மற்றும் வாழ்வாதரமான தொழில் வாய்ப்பினை உருவாக்கி கொடுத்ததுடன் இறுதி யுத்தத்தில் தந்தையினை இழந்து, தமிழகத்தில் தவித்த சிறுவனுக்கு சிகிச்சை வழங்கி, இந்தோனேசிய தமிழக துபாய் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஈழத்து உறவுகளுக்கு அடிப்படை உதவிகளையும் வழங்கியுள்ளது என்றால் நம்ப முடிகின்றதா?


அது மட்டுமன்றி வெளிப்படைத்தன்மையான உதவும் குறிக்கோள் கொண்டமையினால் அதாவது உதவுபவரது மற்றும் உதவி பெறுபவரது விபரங்கள் எல்லோருக்கும் வெளியிடப்படுகின்ற அதாவது மோசடித்தன்மை அற்ற தூய்மை நிறைந்ததனால் அசுர வேகத்தில் உறவுகளின் ஆதரவினைப் பெற்று வளர்ந்து நிற்கின்ற   இந்த ஆணையம் இன்னும் ஓரிரு நாட்களில் தமிழ் நாட்டில் "உலகத்தரச்சான்றிதழுடன் (ISO)" தமிழக அரசின் முழு ஆதரவுடன் சட்டரீதியாகவும், அதிகார பூர்வமாகவும் பதியப்பட்டு பெளதீக ரீதியில் தனது சேவையினை வெற்றிகரமாக ஆரம்பிக்க இருக்கின்றது. 

முற்று முழுதாக எங்கள் தமிழ் உறவுகளின் கண்ணீரைத்துடைத்து, அவர்களுக்கு மறுவாழ்வளித்து, அவர்களுக்கு புதிய வாழ்வாதாரத்தை உருவாக்கிக்கொடுத்து தமிழ் உறவுகள் மேல் உண்மையான அக்கறையோடும் பரிவோடும் அவர்களை " அன்பினால் அரவணைக்கும்" உலகத்தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள் ஆணையம் இந்த ஆண்டின் வைகாசியின் உதிரக்கறை படிந்த இந்த நாட்களை முதன் முதலாய் கடக்கும் இத்தருணம் இறுதிக்களத்தில் குருதி தோய்ந்து, எழுந்து வந்த அதரவற்ற  உறவுகளின் கரங்களை ஆதரவோடு பற்றி, அவர்களின் கரடு முரடான பாதையினை செவ்வனே செப்பனிட்டு அவர்களைப் பயணிக்க வைக்க முயற்சி செய்த ஆத்ம திருப்தியுடன் ஐந்தாண்டுகளுக்கு முன்பு அந்தோ அநியாயமாகப் படுகொலை யானவர்களை நினைவு கூர்ந்து கண்ணீரோடு அவர்களுக்கு ஆத்மார்த்தமாக அஞ்சலி செலுத்துகின்றது.

இன்றைய இந்த கறுப்பும் சிவப்புமான நாளில், எமது மக்களின் உதிரம் சிந்தப்பட்டது மட்டுமன்றி தாயகத்தில் இன்று வரை பாதிக்கப்பட்ட உறவுகளின் இதயத்திலிருந்து சிந்தப்படும் குருதி என்றும் எமக்கு நினைவில் நிற்க வேண்டியதொன்று. சிந்துகின்ற கண்ணீரும் செந்நீரும் நாம் அரவணைக்கும் கரங்களால் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். வைகாசி பதினெட்டில் மட்டும் நினைவில் கொள்ளாமல் எப்பொழுதும் எங்கள் உள்ளங்களில், இன்னல் அனுபவிக்கும் இவர்களை நினைவில் நிறுத்தி உதவிடுவோம். கருத்து வேற்றுமை இன்றி இந்த துக்க நாளில் உறுதி பூண்டிடுவோம். ஆதரவுக்கரங்களை ஆணையத்திற்கு கொடுப்போம். ஆதரவற்ற எங்கள் உறவுகளை அன்பினால் அரவணைப்போம்.



மரணித்து மண்ணுக்குள்
 மக்கிப்போன  எம் உறவுகளுக்கும் 

மண்ணுக்காய் மரணித்த  
மாண்பு மிகு எம் தெய்வங்களுக்கும்   

கண்ணீர்  அஞ்சலிகள்....!!!
  

" அன்பினால் அனைவரையும் அரவணைப்போம் "

உலகத் தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள் ஆணையம் 




Thursday 8 May 2014

வேதனை....!!!



தோணியினை நம்பி ஆழியில் பயணம்..!
தோற்றுப்போன பயணம் நடுக்கடலில் தத்தளிக்க 
நா வறண்டு கத்தி விக்கி கடலில் சிக்கி 
நாதியற்று நின்ற உயிர்களில் இவளும் ஒன்றானாள்...!

என்ன நடக்கின்றது என்பதை அறியாத பிஞ்சு மகள்...!
கடலுக்குள் ஆழம் அதிகம் என்றறிந்த இவள் - எம்மின 
கண்ணீர் அதை விட ஆழம் என்று அறியாதவள்...!

உடன் பிறந்தவளை கதற கதற பிரிந்து வந்தவள்...!
உண்மை பொய்யால் சிறை பிடிக்கப்பட்டதும் 
உலகம் எங்கும் அகதியாகி தமிழினம் அலைவதும் 
உயிர் பிழைப்பு தேடி கடல் கடப்பதும் விளக்கினாலும் 
உணர்ந்திட தெரியாத பச்சை மண் இவள்...!


ஆனாலும் இவள் 
ஆங்கோர் சிறையில் அடைபட்டு வதைபடுகின்றாள்...!
ஆண்டுகள் இரண்டு கடக்க அவசரப்படுகின்றது...!
ஆயிரம் மைல்கள் தாண்டி தவித்திருக்கும் அன்பு மகள்..!

அடிக்கடி நோய்த்தொற்றும் 
அளவு சாப்பாடும் கொண்டு 
அடைத்து வைக்கப்பட்ட இவள் 
அடைந்து வரும் வேதனை எழுத்தில் 
அடக்கிட முடியுமோ??

கல கல மழலை மொழி பேசி 
கவலைகள் மறக்க பண்ணும் தேவதையின் 
துயரங்களை யார் களைவார்கள்..???
அனல் அடிக்கும்  தேசமதில் 
அலுமினிய துகள் பறக்கும் துறைமுக வளாகத்தில்  
அந்த அசுத்த காற்றினை சுவாசிக்கின்றாள் 
ஆண்டுகள் இரண்டாக....

அகதி என்ற காரணம் கொண்டு 
அடைக்கப்பட்ட சின்னஞ்சிறு பாலகியின் 
அளவில்லா வேதனையே உலகில் 
அதிகமான வலி மிகுந்தது...!

எதையும் அறிந்து கொள்ள முடியாத 
அகவை மூன்றை கடந்தவளுக்கு
வேதனை என்பதை மட்டும் உணர 
முடிகிறதென்றால் அது எத்தனை 
கொடுமையான வேதனையோ???

கொடிது கொடிது இளமையில் வறுமை என்றஅவ்வை 
கொடுமையிலும் வேதனை மழலையில் சிறை என்ற 
இவளின் வேதனை கண்டு கவி எழுதுவதை கைவிட்டிருப்பார் 
இதயம் கனத்தால் அழுத்துகின்றது அகம் சிரித்து முகம் மலரும் 
இவள் அல்லல்படும் வேதனை அறிந்து....

மருந்தும் இல்லை உனக்கு விருந்தும் இல்லை
மரத்துப்போன ரொட்டியை அசைக்க பற்களும் 
வலிமை பெறவில்லை 
வழியற்று தவிக்கும் தந்தை முகம் தடவி 
ஆறுதல் உரைக்கும் அன்புக்கடவுள் இவளின்  
ஆற்ற முடியா வலிகளை யார் துடைப்பார் 
ஆறாய் பெருகும் கண்ணீரை தவிர வேறென்ன 
கொடுக்க முடியும் எம்மால்...??

என்ன குற்றம் இழைத்தாள்...?
எதற்காக சிறை வாசம்...?
எத்தனை முறை சிந்தித்தாலும் 
எதுவும் புலப்படவில்லை....!

தமிழ் தாயின் வயிற்றில் கருவானது குற்றமோ??
தமிழ் தேசம் தன்னில் பிறந்தது குற்றமோ..?
தரணி என்னும் நாமம் கொண்டவளுக்கு இந்த
தரணியில் ஒரு இடம் இல்லை உறங்கிட....
தங்கமே தரணி உந்தன் புன்னகை வதனம் கண்டாலும் 
தவிக்கின்றது உள்ளமம்மா...



தரணி எங்கும் உறவுகள் இருந்தும் 
தண்ணீர் அள்ளிட வாளி இல்லை 
தலை துவட்டிட துணி இல்லை...
செல்வந்த நாடு ஒன்றில் 
செல்லரித்து வாழும் இவள் வேதனை 
சென்றிடுமா விரைவில் இவளை நீங்கி...



லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "வேதனை" என்ற தலைப்பில் இன்று (08.05.2014 )வழங்கிய கவிதை இது.

கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 (இலங்கை இந்திய நேரம் பிற்பகல் 7.30 மணிக்கு )மணிக்கு... http://gtbc.fm/

  


Tuesday 6 May 2014

கவி....!!!

கவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன்,
வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி
      - பாரதி.




கவிக்கு இலக்கணம் நீயே கவியே...!
கவியே வாழ்க்கையாக கொண்டோனே 
கவிக்கடவுள் மகாகவியே...!

தேசிய கவி , மகாகவி , சீர்திருத்த கவி என்றெல்லாம் 
தேசம் எங்கும் புகழ் பரப்பி சாகா வரம் பெற்ற பாரதியே...!

பெண்ணுக்கு இலக்கணம் வகுத்தாய் - தமிழ் 
மண்ணுக்கு பெருமை சேர்த்தாய் மகா கவியே...!

தமிழுக்கு சுவாசம் கொடுத்த பிராண கவியே...!
தரணி எங்கும் தமிழ் தழைக்க எழுத்தாணியாய் 
எழுந்த அக்கினிக்குஞ்சே ....!

தமிழ்மொழியில் அளவற்ற காதல் கொண்டு 
தமிழே மூச்சாய் பேச்சாய் வீச்சாய் கொண்ட  
தமிழின் தன்னிகரற்ற கவியேறு எங்கள் பாரதி 

"யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் 
இனிதாவ தெங்கும் காணோம்" உயரத்தில் வைத்தான் 
உண்மையினை உரைத்தான் களங்கமில்லா கவிஞாயிறு பாரதி 

பாஞ்சாலி சபதத்தில் அக்கினியாய் எரிந்த கவி...!
பாவங்களை சுட்டிக்காட்டிய சுட்டுக்கவி...!

தீமைகளை தீயாய் சுட்டெரித்தாய்...!
தீண்டத் தகாத சாதிகள் இல்லை என்றாய்...!

வடிக்காத வரிகள் இல்லை...
வஞ்சனைகள் செய்யாத கவி நீ பாரதி...!

உன் புகழ் பாட அருகதை உண்டோ - தமிழின் 
உரிமை யால் கால் அடி எடுத்து வைத்தேன்..

கவி உன்னை புகழ தத்தி நடை பயில்கின்றேன்
கவி உந்தன் எல்லை இல்லா கவிப்புலமை 
கண்டு நான் தடக்கி விழுந்து எழுகின்றேன்...!

கவியே மகாகவியே தமிழின் உயிரே நீயே...!
கவிக்கு இன்று ஒருவர் உண்டோ....
கவிக்கு நிகராய் இனி யாரும் பிறந்திடுவாரோ..? 
கவிச்சிற்பி உனக்கு யாரும் நிகர் உண்டோ?


"தேடிச் சோறு நிதந்தின்று 
பல சின்னஞ் சிறுகதைகள் பேசி
மனம் வாடித் துன்பமிக உழன்று
பிறர் வாடப் பல செயல்கள் செய்து
நரை கூடிப் கிழப்பருவம் எய்தி
கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வே னென்று நினைத்தாயோ?"


Monday 5 May 2014

முல்லை...!!!


பிடிக்குதோ இல்லையோ - எனக்கு
பிடித்த உனக்கு பிடித்ததால்  
முல்லை எனக்கும் பிடிக்கும்..!

இன்று எனக்கு உயிராகி போனது 
இரத்த உறவாகி போனது
இதயத்து துடிப்பாகி போனது  
இந்த வாசம் கொண்ட பாச முல்லை...!!

தொல்லை என்றாலும் துன்பம் என்றாலும்
முல்லை வாசம் நுகர்ந்தால் உள்ளம் துள்ளி 
எல்லை இல்லா களிப்படையும் என்பாய்...!

நீ வளர்த்த முல்லைச்செடியினை 
நீங்காமல் காவிச்செல்லுகின்றேன் 
நான் செல்லும் இடமெல்லாம்...

கண்ணை இமை காப்பது போல 
கண்ணும் கருத்துமாய் காக்கின்றேன்...!
கமழும் வாசனை உள்ளத்தை மட்டுமல்ல 
கலங்கி போன உந்தன் பிரிவையும் நிரப்புகின்றது...!

உன்னை பார்க்க வேண்டும் என்ற 
உணர்வு எழுந்தால் முல்லையின் 
அருகே செல்வேன் பரிவோடு
அதன் வாசம் நுகர்வேன்...!

ஒரு மலரினை கூட 
ஒருக்காலும் உதிர்க்க மாட்டேன்...!
உதிர்ந்து விழும் மலர்களை பொறுக்கி 
உன் பெயர் சொல்லி சேகரித்து புத்தகத்தில்  

பக்கம் பக்கமாய் பாசத்தோடு 
பக்குவப்படுத்துகின்றேன்..!
பைத்தியக்காரத்தனம் என்றால் 
பரவாயில்லை இருந்து விட்டுப்போகட்டுமே...!

உந்தன் துயரம் நீக்கும் முல்லை 
எந்தன் துயரங்களையும் இல்லை 
என்றாக்கி ஆற்றுப்படுத்துகின்றது...!

பரவும் வாசனையில் 
பயணிக்கின்றேன் அதன் அருகே ...!
பம்பரமாய் முல்லை என்னை சுழலப் 
பண்ணியே பரந்து  செல்கின்றது காற்றிலே...!

எட்டிப்பிடிக்கின்றேன் காற்றினை 
எந்தன் முல்லையின் வாசம் காவி 
எங்கோ திருடிச்செல்லும் காற்றை 
எட்டி எட்டிப்பிடிக்கின்றேன்...
கட்டியணைத்து பறிக்க பார்க்கின்றேன் 
கெட்டியாக முல்லையின் வாசம் பற்றிய 
கள்ள காற்று காணாமல் போயிற்று...!

காற்று திருடியும் முல்லை தன் வாசத்தை 
அள்ளித்தான் வீசுகின்றது...!
துள்ளிக்குதிக்கும் உள்ளம் மயங்கி போகின்றது 
தள்ளி வைக்கின்றது முல்லை
தூரமாய் என் வலிகளை....


லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "முல்லை" என்ற தலைப்பில் இன்று (05.05.2014 )வழங்கிய கவிதை இது.

கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 (இலங்கை இந்திய நேரம் பிற்பகல் 7.30 மணிக்கு )மணிக்கு... http://gtbc.fm/

  








Thursday 1 May 2014

உழைப்பு..!!!


எட்டுமணி நேர உழைப்பு அல்ல
என்றுமே உழைக்கின்ற களைப்பிற்கு
ஆசுவாசமாய் உட்காரவும் முடியாது...!

ஓட்டம் என்றுமே  போராட்டமே..!
வாட்டம் கொண்டாலும் - வாழ்க்கை
ஆட்டம் கண்டாலும்  போராட்டமே...!

திண்டாட்டம் தினம் தினம் - இறை
மன்றாட்டம் கொண்டு போராட்டம்...!

துன்பங்களுக்கு எதிராய் உழைப்பு
துயில் கொள்ள முடியாத உழைப்பு...!

உயிர் பிழைப்பு வேண்டி எதிர்த்து உழைப்பு...!
அதிகார வர்க்கம் திணிக்கும் அநீதிக்கு எதிராய் உழைப்பு...!
ஆங்காங்கே முளைக்கும் துரோகங்களை முறியடிக்க உழைப்பு..!

அந்தி சாய்ந்தாலும் ஓய்வில்லை...!
அகால வேளையில் இளைப்பாற
துயரங்கள் விடுவதில்லை....!
துள்ளி வந்து உள்ளமதில் இடம் பிடித்து
ஊஞ்சல் ஆடி மகிழும் அவை
ஊமையாய் நித்தம் அழ வைக்கும்...!


சேற்றில் கால் வைத்து உலகிற்கு  உணவு
சேமித்து உலை வைக்க திண்டாடும் உழவர் பெருமக்களின்
வலிகள் என்றும் வற்றிப்போவதில்லை....
வறண்ட நிலத்தில் உறிஞ்சப்படும் நீரைப்போன்று
வயல்வெளிகள் உறிஞ்சிக்கொள்கின்றன உழைப்பினை...!

விதம் விதமாய் காய்கறிகள்
முத்து முத்தாய் நெல்மணிகள்
வித்து வீடு வந்தாலும்
பத்து காசு மிச்சமில்லை...!

உடலை உருக்கி வேலை வாங்கி
உயிர் போகும் வரை தொழிலாளியாக்கி..
உலகில் வாழும் முதலாளிகள் வீசி எறியும் பணம்
உன்னத தொழிலாளிகளின் உழைப்பில் உருவானது -இந்த
உண்மையினை ஏற்க மறுக்கும் ஒவ்வொருவரும்
உழைப்பாளியின் உதிரம் உறிஞ்சுபவர்களே..!

உதிரம் குடிக்கும் பூச்சிகள் அதிகமாகி
உழைப்பாளிகள் உயிரற்று போகும் நிலையும்
தொழிலாளர் தினத்தில் மட்டுமே
தொழிலாளர் துன்பங்களை நினைப்பவர்களாய்
தொலைத்து நிற்கின்றோம் மனிதாபிமானத்தை...

தொழிலாளர் இன்றிய உலகம்
தொலைந்து தான் போய் விடும்...!
தொழிலாளரை மதிப்போம்...!
தொழிலாளரை காப்போம்..!
தொழிலாளர் தினத்தில் மட்டுமல்ல
தொன்மை காப்போம் என்றும்...!


லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "உழைப்பு" என்ற தலைப்பில் இன்று (01.05.2014 )வழங்கிய கவிதை இது.

கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 (இலங்கை இந்திய நேரம் பிற்பகல் 7.30 மணிக்கு )மணிக்கு... http://gtbc.fm/

Wednesday 30 April 2014

சிரிப்பு...!


தொலைத்து விட்டேன்..!
தொலைந்த இடம் மறந்து விட்டேன்..!

இதயத்தினை அரிக்கும் துன்பத்தால்
இடம் பெயர்ந்திட்ட சிரிப்பு
இன்னும் மீள் குடியேறவில்லை...!

அவ்வப்போது இடம் பார்க்க
அதிசயமாய் வந்து போகும் சிரிப்பு...
கண்ணீரை கலைத்துச் செல்வதுண்டு...!
கடுகதியில் விரைந்து சென்றிடுவதுமுண்டு...!

நிரந்தர இருப்பிடம் அமைத்துக்கொள்ள என் உள்ளம்
நிம்மதி இல்லாத பிரதேசம் போலும்....

உயர் பாதுகாப்பு வலயம் போன்று அடிக்கடி
உலவுகின்ற பிரச்சனைகளின் ஆதிக்கத்தால்
சிரிப்பு தடை செய்யப்பட்டு வருடங்களாயிற்று...!
சிந்தையில் நிரம்பி வழியும் கணக்கற்ற சோலிகள்
சிரிப்பினை அருகிலும் அண்ட விடுவதில்லை...!

அத்து மீறி நுழைந்திடும் சிரிப்பு
அதிக நேரம் தங்கிடாது - சிரிப்பு கூடவே
இருக்கின்ற நேரத்தில்
இதயம் இடம்பெயரும்
இன்பம் பொங்கிய தருணம்
இழந்து போனவையும் திரும்பிடும்...!!!

இப்போதெல்லாம் சிரிப்பை
இங்கே வலுக்கட்டாயமாய்
வரவழைத்து சிரிக்கின்றேன்...!
வலிகள் யாவும் பலிகள் ஆகின்றன...!

எந்தன்  நிலை தனை எண்ணி எண்ணி
எக்காளமிட்டு சிரிக்கின்றேன்...!

என்னை ஆளும் துன்பங்களே விலகி ஓடுங்கள்.....!
எப்போதும் சூழ்ந்துள்ள வேதனைகளே மறையுங்கள்...!
சிரிப்பு என்னும் ஆயுதம் தாங்கி நான் போராடுகின்றேன்...!
சித்தம் கலங்கிபோச்சு என்ற பேச்சுக்கும்
சிறிதும் செவி சாய்க்காமல் சிரிக்கின்றேன்- நான்
சிரித்துக்கொண்டே இருக்கின்றேன்....!



லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "சிரிப்பு" என்ற தலைப்பில் இன்று (30.04.2014 )வழங்கிய கவிதை இது.

கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 (இலங்கை இந்திய நேரம் பிற்பகல் 7.30 மணிக்கு )மணிக்கு... http://gtbc.fm/



  

Tuesday 29 April 2014

தாலாட்டு....!


தாலாட்டு பாடிட இங்கு
தாய் அருகில் இல்லை...!

பராமரிப்பு இல்லத்து ஆயா 
பரிவில் தாயாக மாறிப்போனாள் 

விடுமுறை நாளிலும் வீட்டில் 
விருந்தினர் தொல்லை 

பேந்த பேந்த முழிக்கும் கண்மணிக்கு 
பேர்த்தியாரும் பக்கத்தில் இல்லை...!

தொட்டுப்பார்த்து முத்தமிட 
தொட்டில் கட்டி தாலாட்ட 
பெற்றவளுக்கு நேரமில்லை 

பிள்ளையின் எதிர்காலத்திற்கு 
எல்லையின்றி  உழைக்கின்றார்களாம்.
நிகழ் காலமதில் அநாதரவாக்கி...

பிஞ்சு  மனம் பாசத்திற்கு ஏங்கி 
நெஞ்சு பிளக்கின்றது...!

தாலாட்டி மெல்ல தட்டி தட்டி 
தரைப்பாயில் புரண்டு 
தாயவளின் அணைப்பில் உறங்கிடும் 
தாய் நாட்டு குழந்தைகள் பேறு பெற்றவை 

தங்கத்தால் இழைத்தாலும்  
தனியே பஞ்சணையில் கண் உறங்கிட
தவிக்கின்ற புலம்பெயர் தேசத்து  குழந்தைகள் - உள்ளம் 
புண்ணாகி போகின்றன தினம் தினம்...!

தாலாட்டு என்றால் என்ன 
தாயாரிடம்  வினா எழுப்ப 
தயார் படுத்துகின்றார்கள் இன்றே...

உழைத்து ஓய்ந்த அன்னை 
உண்மையில் வெட்கி நிற்பாள்..! 
ஒலிநாடாவில் தாலாட்டை 
ஒலிக்க வைத்து ஓடியவள்  
ஒளிந்து கொள்வாளோ...?

தாலாட்டும் தாயும் தூரமாகி 
தாய் மொழியும் மறந்து போன 
தேசத்தில் நேசமற்று வேசம் காட்டி 
வாசம் செய்கின்றோம்...!


லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "தாலாட்டு" என்ற தலைப்பில் இன்று (29.04.2014 )வழங்கிய கவிதை இது.

கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 (இலங்கை இந்திய நேரம் பிற்பகல் 7.30 மணிக்கு )மணிக்கு... http://gtbc.fm/


Monday 28 April 2014

ஏழை...!

பகட்டான பட்டு உடுத்தி 
பளிச்சிடும் நகைகள் அடுக்கி 
ஆடம்பரமான வாகனத்தில் 
ஆலயம் வந்திறங்கியவள் 

காலணிகளை களைந்தாள் 
காசுகளை அள்ளியபடி விரைந்தாள் 
காத்திருந்த ஏழைகளின் கரங்களை 
நிரப்பி அவர்கள் இதயத்தில் நிரம்பி வழிந்த 
அன்பினை யாசித்து தன் இதயம் நிரப்பினாள்...!

அகம் மலர்ந்து புன்னகைத்த ஏழைகளை விட 
முகம் மலர்ந்து அகம் சிரித்த அவளின் யாசகம் பெரிது...!

ஏழைகள் என்ற ஒற்றைச்சொல்லில் 
ஏழைகளை அடக்கி விட முடியாது...!

பணம் இன்றியவன் ஏழை அல்ல.
பணம் இருந்தும் பாசம்  இன்றி தவிப்பவர்களே
பலமான ஏழைகள்...!

பணக்கார  ஏழைகள் யாசிப்பதை 
பலர் அறிவதில்லை...!

குணம் இன்றிய பணக்காரர் விதைக்கின்ற விதைகள் 
முளைத்து ஏழைகள்  என்னும் பயிர்கள் விருட்சமாகின்றன...!

காட்சிக்கு வெறுமனே ஏழைகளாகிய இந்த 
ஏழைகளின் ஓட்டை வீடு அன்பு - என்னும் 
அட்சய பாத்திரத்தை தன்னகத்தே கொண்டதாய் 
சொர்க்கமாய் தெய்வீகமாய் என்றும் விளங்கும்...!

பல அடுக்கு மாடிகளில் 
வாசம் செய்யும் ஏழைகளுக்கு 
நேசம் காட்டத் தான்  யாருமில்லை...!

பகட்டு ஆடைகள் அணிந்தாலும் 
திகட்டி போகும் பல்சுவை விருந்துண்டாலும்
பக்கத்தில் உறவுகள் இல்லை 
அரவணைக்க யாருமில்லை...!

பணம் கொடுத்து வாங்கிய பரிவாரங்கள் 
பதறி த்துடிப்பதில்லை...!
பக்குவமாய் பணிவிடை செய்வதில்லை...!

கண்ணீரை சிந்தி கலங்கினாலும் 
கண் துடைக்க ஒரு கரமில்லை...!
பாசத்தினை கேட்டு யாசிக்க -அந்தோ 
அந்தஸ்து இடங்கொடுப்பதில்லை 
பாசம் கேட்டு யாசிக்க கூட  
இடம் என்று ஒன்றுமில்லை..!

சத்தமின்றி வந்து ஏழைகளின் கரம் நிரப்பி 
சந்தோசத்தால் தன் மனம் நிரப்புகின்ற - இந்த 
உண்மை ஏழைகள் இன்றைய நவீன 
உலகில் அதிகரித்துப் போனமை  
கையேந்தும் ஏழைகளுக்கு ஒரு வரப்பிரசாதமே..!  


லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "ஏழை" என்ற தலைப்பில் இன்று (28.04.2014 )வழங்கிய கவிதை இது.

கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 (இலங்கை இந்திய நேரம் பிற்பகல் 7.30 மணிக்கு )மணிக்கு... http://gtbc.fm/


Thursday 24 April 2014

சிலிர்ப்பு....!!!



சின்ன மொட்டில் அரும்பிய காதல் பூ
சிறிதாய் துளிர்த்தது உள்ளம் சிரித்தது..!
உணர்வுகள் விழித்தது உடலோ சிலிர்த்தது..!
உலகமோ மறைந்தது உறவுகளும் துறந்தது..!

என்னவென்று சொல்ல எப்படிச்சொல்ல – அட
என்னத்தை சொல்ல எதை தவிர்க்க....

பதினாறுகள் கடந்த பாதையது..!
பள்ளத்தாக்கும் மலையும் நிறைந்த
பயங்கர பருவம் என்று பலர் சொல்லி சொல்லியே
படலை தாண்ட விட்டதில்லை சிலரை....

பட்டி மாடுகளாய் படலை திறந்து ஓடிய விடலைப்பருவம்..!
கட்டி வைத்து தடை போட முடியுமோ – காதலை
கொட்டிக் காதலித்தார்கள் முட்டி மோதி நின்றார்கள்...!
எட்டி நின்று பார்த்து சிர்த்த சுட்டிகளில் ஒருத்தியாய்

காதலில் உருகி கசிந்து ஆங்காங்கே குடைகளில் கூடு கட்டி நிற்கும்
காதல் குருவிகளின் தற்காலிக சிலிர்ப்பினை கல்லெறிந்து கலைத்து
சிரித்து நாம் அடைந்த சிலிர்ப்பு இன்று வரை எட்டியதில்லை....!

காலி முகத்திடலில் கை கோர்த்து திரியும் குறுங்கால
காதல்களினையும் கூக்காட்டி கலைத்த இன்பமும்....

தாழை மர மறைவில் இலவச காட்சிகளை அரங்கேற்றும்
ஒரு நாள் காதலர்களை படம் பிடிப்பது போன்று பாசாங்கு காட்டி
விரட்டியடித்த அந்த களிப்பும் இன்று எண்ணினாலும் உள்ளம்
சிலிர்க்கின்ற நினைவுகளே...!

நீயின்றி நானில்லை என்றும் உயிரை துறப்பேன் என்றும்
காதல் என்னும் பனித்துளியில் நனைந்து சிலிர்த்து நின்ற – பல
கல்லூரி நண்பர்கள் இன்று உயிரோடு தான் இருக்கின்றார்கள்...!

கல்லூரியில் கற்கும் காதல் கம்பசிற்கு போகாது தான்...!
கனிந்துருகிய காதல் சோடிகளை கண்ணுற்று
கண் கலங்கியதுண்டு  உள்ளம் சிலிர்த்ததுண்டு...!
கண்டறியாத காதல் என்று இன்று நினைத்து சிரித்ததுமுண்டு..!


காதல் ஒன்றில் என்னை விழுத்தி சிலிர்க்க வைத்த உள்ளம் –கண்
காணாமல் இருப்பதும் ஒரு வித சிலிர்ப்பு தானோ??
கண்ணுக்குள் இருந்தால் நினைவுகள் வந்து தாலாட்டிட முடியாது..!
கனிவை கொடுக்கும் காதல் கவிதைகள் வாசித்து
முன்னோக்கி செல்லும் இதயம் சில்லென்று -ஒரு
தடவை சிலிர்க்கத்தான் செய்கின்றது....!

இன்றைய நிலையிலும் காதல் என்ற மலர் வீசிய நறுமணம்
எனக்குள் வீசிக்கொண்டே தான் இருக்கின்றது...!

முப்பதை தாண்டியும் சிலிர்ப்பினை கொடுக்கும் காதல்
முன்னர் கல்லெறிந்த குடைகளின் காதல் ஜோடிகளை
இன்று எண்ணி எண்ணிப்பரிதாபப்படுகின்றது...!


லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "சிலிர்ப்பு" என்ற தலைப்பில் இன்று (24.04.2014 )வழங்கிய கவிதை இது.

கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 (இலங்கை இந்திய நேரம் பிற்பகல் 7.30 மணிக்கு )மணிக்கு... http://gtbc.fm/

தடை..!!!


படை திரட்டி உலகை சாட்சியாக்கி கொன்றொழித்தார்கள்
மடை திறந்து ஓடிய தமிழ் உதிரம் உறிஞ்சிக்குடித்தார்கள்......!

தடை செய்து தூக்கிலிட அதிகாரம் யாருக்கும் இல்லை...!
அடை மழையாக எங்கள் உறவுகள் கண்ணீரை சொரிந்தார்கள்...!
துடை த்துப்போட நாதியின்றி அநாதரவாய்
இடை நடுவில் நிர்க்கதியானார்கள - இன்றும்
விடை தெரியாத வினாக்களை கால எல்லையின்றி சுமக்கின்றார்கள்..!

தடை இன்றி யாவருக்கும் உயிரை ஈய்ந்திடும்  தாராள மனம் கொண்ட
கொடை வள்ளல்கள் என்று கெளரவிக்க தான் யாருக்கும் மனமில்லை...!

தடை  விதிக்கின்றார்களாம் மரணித்தவர்களுக்கும்...!
எடை போட்டு பார்க்கின்றார்களோ போனவர்கள் வரக்கூடும் என்று..

வடை சுட்ட  பாட்டியின் கதை சொல்லி கரைந்த காகத்தின் வாயில்
வடையினை மீண்டும்  சுட்டுக்கொண்டதாக எத்தனை நாட்களுக்கு ஏமாற்றுவார்களோ?

கடை வாய் பல்லில் உதிரம் காய்ந்து கிடக்கின்றதை மறைத்து  - வேஷமிட்டு
நடை பயிலும் நரிக்கூட்டத்தின் தந்திரம் அறிந்தும்
குடை பிடிக்கும் உலகமே....!


தனி நபருக்கும் தடை விதிக்கின்றார்கள்
தமிழ் அமைப்புக்களுக்கும் தடை விதிக்கின்றார்கள்...!
தலை கவிழ்ந்து கொண்டு ஆமோதிக்கின்றீர்களா??

தங்கு தடையின்றி கொன்று போட்டவர்களுக்கு என்ன
தடை கொடுப்பீர்கள்...?

உயிர் குடிக்கும் ஆயுதம் உண்டென்று தடை விதித்து
உலகமே ஒன்றிணைந்து போராடி கொன்று போடுகின்றீர்கள்...!

அணுகுண்டு என்கின்றீர்கள் எச்சரிக்கை செய்கின்றீர்கள்
அட சும்மா சும்மா தடை செய்யப்பட்ட ஆயுதங்கள் என்று
அவ்வப்போது பீதியைக்கிளப்புகின்றீர்கள்..!
அப்பாவிகள் இலட்சக்கணக்கில் செத்து மடிந்த
தேசம் ஒன்று உண்டு நீங்கள் அறிந்ததுண்டோ...?

 நச்சுக்குண்டுகளை , விச வாயுக்களை வீசி
மயானம் ஆக்கிப்போன எங்கள் மண்ணில்
புதைந்து போனவர்களின் எண்ணிக்கை அறிவீர்களா?


எலும்புகள் பிறப்பெடுக்கும்மனிதப் புதைகுழிக்கு தடை விதியுங்கள்..!
எங்கள் உறவுகள் தினம் தினம்  கைதாவதை தடை செய்யுங்கள்...!
எங்கே எங்கே என்று தேடப்படும் காணாமல் போகின்றவர்களின்
தொடர்கதையினை தடை செய்யுங்கள்..!

உயிர்வதை பூசாவினை முதலில் தடை செய்யுங்கள்...!
உலகமே முடிந்தால் இதில் ஒன்றினையாவது தடை செய்..
உன்னால் முடியுமா???

உலகத்தினையே பயங்கரவாதிப்பட்டம் சூட்டி தடை செய்யும்
உரிமை அவர்களுக்கு உண்டென்பதை மறந்திடாதே...!


அதிர்ச்சி...!!!


இப்பவெல்லாம் இஞ்சை வாகனம் வருவதும்
இல்லாத கதை சொல்லி பூசாவுக்கு விருந்து
படைக்கவென்றே  கூட்டிச்செல்வதும் வழமையா போச்சு...

இன்றும் என் வீட்டுக்கு முன்னால்
இரைந்து வந்து நின்றது இரு கவச வாகனங்கள்
இதென்ன கொடுமை என்று எட்டிப்பார்த்தேன்...!

இளசுகள் எங்கட வீட்டில் இல்லையே..
இவங்கள் என்னை தான் கொண்டு போவாங்களோ
இதயம் துடிக்க அதிர்ச்சியோடு நோக்கினேன்...!

எழுந்து இரண்டடி எடுத்து வைத்தால் - மூட்டு
எலும்பு எல்லாம் ஒடிந்து விழும் நிலையில்

எப்ப போய் சேருவன் என்று முணு முணுக்கும்
எதிர் வீட்டு பாட்டியை கையில் பிடித்து தர தர என்று

இழுத்தபடி வந்து கொண்டிருந்தார்  உயர் திரு புலனாய்வாளர்...!
இழுக்கின்ற இழுவையிலே கை ஒடிந்து விடும் நிலை தான்...

அடக்கொடுமையே...!
"அய்யே மொனவத பிரஸ்னே.."
பரிதாப்பட்டு நான் கேட்டேன்....!!!
"கொட்டியா  கொட்டியா
கொழும்பெட்ட கெனியனவா.."
புலியை பிடிச்ச
புலனாய்வு அதிகாரி பெருமிதமாய் சொல்லியபடி
புளுகத்தொடு வாகனத்தில் ஏறினார்...!

பாட்டி கொட்டியாவா ??
பாதி அதிர்ச்சி மீளாத நிலையில் நான்...!


பாட்டிக்கு விளங்கிச்சோ தெரியலை
பாழ்பட்டு போவார்...!
பாடையில போக இருக்கிறதையும்
பாவிகள் பூஸா கொண்டு போறாங்கள்...!
பூஸா போறதுக்கிடையில் பாட்டி அதிர்ச்சியில்
வீசா எடுத்திடுவாள் சொர்க்கத்திற்கு...!





Monday 21 April 2014

பட்டினி..!


பட்டினி என்பது பழகிய ஒன்று தான்
பசி சுட்டுப்பொசிக்கிய குடலும் உடலும்
பல மாதங்களாய் கவனிப்பாரற்று கிடக்கின்றது...!

பழகிப்போன பசியால் இப்போதெல்லாம்
பட்டினி கிடக்கின்றோம் என்பதே தெரிவதில்லை...!

பரந்து விரிந்த உலகத்தில் எங்கோ ஒரு மூலையில்
பதுக்கி வைத்திருக்கும் அகதிகளில் நாமும் ஒன்றாய்..
வருடக்கணக்காய் மனப்பிரமை பிடித்து உள்ளம்
தொலைத்து வாடிக்கிடக்கின்றோம்...!

பசியாற உணவிருந்தாலும் உள்ளம் இல்லை...!
பரிதவித்து சத்தமிட்டு ஓலமிட்ட ஆண்களாக
பட்டினி கிடந்தோம் உள்ளம் அறிந்தே...!

பல நாட்களாகியும் எட்டிப்பார்த்திட யாருமில்லை...!
பட்டினி இங்கே யார் உள்ளத்தையும் கரைக்க முடியாமல்
பறந்தோடி போய்விட்டது...!

உலகம் அறிய அறிக்கை விட்டு
உண்ணா விரதம் இன்று தொடங்குகின்றோம்...!

பட்டினி கிடந்து பழகிய உடல் தான்...!
பட்டினி எம்மை சாகடிக்க போவதில்லை...!

பட்டினியே நீ எம்மை கண்டு
பயந்து மறுபடியும் பறந்தோடி போய்விடாதே...!

பட்டினி என்ற ஒற்றைப் பதத்தில் எங்கள் விடுதலையினை
அடக்கி கையேந்தி யாசிக்கின்றோம்..!

பட்டினிக்கு தீனி போட்டு எங்கள் சிறை
விடுதலையினை நிராகரித்து விடாதீர்கள்...!

பசி மிகுதியாகி நாம் பட்டினி கிடக்கவில்லை -வலியின்
பசியால் உள்ளம் சுருங்கிய பட்டினி இது...!

வீசிய யுத்த சூறாவளியில் அள்ளுப்பட்டு
ஆசிய எல்லையில் அவதிப்பட்டு - இந்தோ
னேசிய கடலில் தத்தளித்து சிறையில் வாடி வதங்கி
வழியின்றி பட்டினி போராட்டம் செய்கின்றோம்...!

உள்ளத்தின் வலிகள் உதிரமாக வடிய - தினம்
உலுப்பி நிற்கின்ற வதைகளும் வலிகளும் தாங்காமல்
உலகை நோக்கி ஒரு யாசகம் இந்த பட்டினி போராட்டம்..!

உலகத்து உறவுகளே...!
மன்றாடுகின்றோம் உங்களை நோக்கி
மரணத்தை தன்னும் யாசகமாய்
கொடுத்து விடுங்கள்...!

எங்களை கருணைக்கொலை தன்னும் செய்து விடுங்கள்...!
எம்மோடு சேர்ந்து மரணிக்கட்டும் எம் துன்பங்களும்...!

இது அரசியல் நாடகமல்ல...!
இறுதி முடிவாக பட்டினி என்றாலும்
மரணத்தை எங்களுக்கு வழங்கட்டும்...!

ஒன்றே ஒன்று கேட்கின்றோம்...!
காரணங்கள் காட்டி எங்கள் பட்டினியை
கலைத்து விடாதீர்கள்...!

எங்களை கொன்று போட்டு விடுங்கள்..!
எங்களை கொன்று போட்டு விடுங்கள்...!

கனவுகளும் ஆசைகளும் இதயம் நீங்கி நாளாயிற்று...!
கண்களில் கண்ணீரும் வற்றிப் போயிற்று...!

கடலும் அலையும் எம்மை காவு கொண்டிருந்தால்
கனவுகளோடு சேர்ந்து நாமும் சென்றிருப்போம் - இன்று
கண்களும் காதுகளும் மெல்ல உணர்விழக்கின்றன...!

கனக்கும் உள்ளத்தின் பாரம் தாங்க முடியாமல்
கால்களும் துவண்டு போகின்றன...!

காயம் கொண்ட அங்கங்கள் காலாவதியாகின்றன...!
காயமற்ற அவயங்கள் செயலிழக்கின்றன..!

எம்மை  கொன்று போட்டு விடுங்கள்...!
எம்மை கொன்று போட்டு விடுங்கள்...!

கண் திறந்து பாருங்கள் எங்கள் உறவுகளே..!
கடைசியாய் ஒரு தடவை கண் திறந்து பாருங்கள்...!




லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "பட்டினி" என்ற தலைப்பில் இன்று (21.04.2014 )வழங்கிய கவிதை இது.

கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 (இலங்கை இந்திய நேரம் பிற்பகல் 7.30 மணிக்கு )மணிக்கு... http://gtbc.fm/




பழி...!!!

உலகை  பொய்யும் ஏமாற்றங்களும் அரசாள
உண்மை சிறையில் மெளனித்து உறங்குகின்றது...!

நீதிகள் நியாயங்கள் கல்லெடுத்து அடித்து துரத்தப்படுகின்றது...
நீண்டு சென்றே போகின்றது அநியாயங்கள்...!

அரங்கேற்றும் அராஜகம்
அத்தோடு மட்டும் நின்றுவிடவில்லை...!
அப்பாவிகள் பழி சுமத்தப்பட்டு பலியாக்கப்படும்
அநியாயங்கள் இலகுவாக மறைக்கப்பட்டு
அப்பட்டமாய் நியாயமாக்கப்படுகின்றது
அதிகாரம் கொண்டவர்களால்...!

அந்தோ பரிதாபம்....!
அப்பாவிகளுக்கு மட்டும் பழி அல்ல.
அரங்கேறும் அநியாயங்கள்
உண்மைகளை பழி சுமத்தி
உலகின் கண்களுக்கு உண்மையும்
குற்றவாளியாக தான் காட்டுகின்றன...!

பொய்யால் நிறைந்த சமூகம்
பொல்லாத ஏமாற்றங்களால்
உண்மையினை ஏற்க மறுக்கின்றது...
உண்மை இங்கே கண்ணீர் விட்டு அழுகின்றது நெடுநாளாய்
உலகிற்கு கண்கள் தெரியவில்லை காதுகளும் கேட்கவில்லை
ஏந்திய பழிச்சொல்லை வழிநெடுக தாங்கி வருந்தும் உண்மை
ஏமாற்றங்களையும் பொய்களையும் ஒரு நாள் பிழிந்தெடுத்து
தன்னிலையில் செழித்திருக்கும் காலம் விரைவில் கனிந்திடும்...!

பழிகள் நியாயத்தின்
குழிகளில் பலியாகும் நேரம் - உண்மையின்
விழிகள்  சொரியும் ஆனந்த கண்ணீர்
ஆழிகளை தாண்டி பெருகும்...!
ஒழிந்து போகும் பொய்யும் அநியாயமும்
சுழியில் மாட்டியதை போன்று சிக்கித்தவிக்கும்...!

தண்டம்...!!!

அன்னையாய் அரவணைத்து
அமுது ஊட்டி கடமைகள் செய்து 
அரக்க பரக்க விரைகின்றாள்..!
அல்லும் பகலும் உழைக்கின்றாள்..!

இடை நேரம் ஒரு எட்டு எட்டி வந்து பார்த்து 
இமைக்குள் வைத்து என்னைப் பாதுகாக்கின்றாள்...!

இதயம் கனத்துப்போகின்றது - எந்தன் 
இயலாமையினால்... 

கண் கலங்காமல் - அவள் 
கரம் சிவக்காமல் 
கடைசி வரை நான் 
காப்பாற்றுவேன் என்று 
உள்ளம் திறந்து வாக்களித்தேன்..!
உனக்காக வாழுவேன் என்றேன்...!

எனக்காக வாழுகின்றாய் நீ...!
என்னை தூக்கி சுமக்கின்றாய் நீ...!

என்றும் அவளுக்கு  நான் தண்டமாய்...!
எதற்காக இருக்கின்றேனோ??
எந்தன் கால்களை துளைத்துப்போன 
எறிகணை இதயத்தினை துளைக்காமல் 
என்ன தண்டத்திற்கு என்னை விட்டு வைத்ததோ??

அவளின் கண்ணீரையும் உழைத்து சிவக்கும் 
அருமந்த கரங்களையும் காண முடியாதவாறு 
விழிகளையும் பறித்த சிதறல் எதற்காக என்னை
விட்டு வைத்ததோ?

அன்னம் ஊட்டும் அவள் கரங்கள் பற்றி 
தண்டம் போல உனக்கு நான் பாரமாய் 
தவிக்க விடுகின்றேன் என்றால் கண்ணீரை 
அவள் சொரிந்திடுவாள்....!

அதற்காகவே நான் இப்போதெல்லாம் 
அவளிடத்தில் உரைப்பதில்லை தண்டம் என்று 
அவளை வருத்தும் என் இயலாமை என்னை 
அடிக்கடி குறு  குறுக்க வைக்கின்றது....!

அவள் அன்பிற்கு முன்னால் நான் வெறும் தண்டமே..! 
அவளின் எதிர்காலத்திற்கும் நான் ஒரு தண்டமே...!
அன்புள்ளவளுக்கு நான் எதற்கு தண்டமாய்
இறுதி வரை இருக்க வேண்டும்?

இன்று அவளின் கையால் இறுதியாக அமுது உண்டு 
இறுதி முடிவொன்று எடுக்கின்றேன் எனக்கும் - என் 
இதயவளின் தண்டத்திற்குமாக....

எம்மை கொன்று போட்டு விடுங்கள்...!


முன்பு ஒரு காலத்தில் உலக வரை படத்தில் கூட
முழுமையாக சுட்டிக்காட்டத் தெரியாத தேசம் ஒன்றில்
முடங்கி கிடக்கின்றோம் நாம்...!

முன் பின் தெரியாத மொழியும் மனிதர்களும் கொண்ட தேசத்தின்
முரட்டுப்பிடிக்குள் சிக்கித்தவிக்கின்றோம்...!!!

அங்கம் இழந்தால் என்ன?
அரை உயிர் ஊசல் ஆடினால் என்ன??

அகதியாகி வந்தவனுக்கு
அடிப்படை வசதி இங்கு  மறுக்கப்படுவது
அத்தியாவசியமாகி விட்டது...!


யுத்தத்தின் தழும்புகளும் காயங்களும்
உதிரத்தினை வடிக்கின்றன...!

காயப்பட்ட போது வலித்த வலியினை மிஞ்சி
கணப்பொழுதும் ஊடறுக்கும் வலி சொல்லில்
சொல்லி மாளாது...!

இருளும் இடுக்கண்ணும்
இரு கண்களாகி போன நிலையில்
இங்கிருந்து தவிக்கின்றோம்....!

இன்னல் என்ற ஒற்றைப்பதத்தில்
இன்றைய எம் அவல நிலையினை
அடக்கி விட முடியாது...!

சித்தம் கலங்கி நித்தம் வாடும் கொடிய
சிறையில் ஒடுங்கி கிடப்பதிலும்..,

உதிரமும் சீழும் வடியும் அங்கங்கள் தாங்கி
உலகை காணாமல் முடங்கி கிடப்பதிலும்..,

அழுத்தி மூச்சுத்திணறடிக்கும் துன்பங்களுக்குள்
அமிழ்ந்து தினம் தினம் புதைந்து போவதிலும்...,

நெஞ்சம் கிழித்து இதயம் தனை இழுத்து நசுக்கும்
உணர்வை கொடுக்கும் வலியில் துவளுவதிலும்..,

வலிகள் உருகி உதிரமாய் கொட்டும் நிலையாய்
நெருப்பில் நின்று நித்தம் வெந்து துடிப்பதிலும்..,

மடிந்து மண்ணுக்குள் உரமாகிப்போகலாம்...!
மலையான துன்பத்தினை நீங்கிப்போகலாம்..!

மரணத்தை நேசிக்கின்றோம் - நாம்
மரணத்தை நேசிக்கின்றோம்...!

மரணத்தை எங்களுக்கு பிச்சையாக இடுங்கள்
மன்றாடி உங்களை யாசிக்கின்றோம்...!

எங்களை கருணைக்கொலை செய்து விடுங்கள்..!
எண்ணிலடங்கா துன்பங்களும் சேர்ந்து
எம்மோடு மரணிக்கட்டும்..!

எம்மை  கொன்று போட்டு விடுங்கள்...!
எம்மை கொன்று போட்டு விடுங்கள்...!

கனவுகளும் ஆசைகளும் இதயம் நீங்கி நாளாயிற்று...!
கண்களில் கண்ணீரும் வற்றிப் போயிற்று...!

கடலும் அலையும் எம்மை காவு கொண்டிருந்தால்
கனவுகளோடு சேர்ந்து நாமும் சென்றிருப்போம் - இன்று
கண்களும் காதுகளும் மெல்ல உணர்விழக்கின்றன...!

கனக்கும் உள்ளத்தின் பாரம் தாங்க முடியாமல்
கால்களும் துவண்டு போகின்றன...!


காயம் கொண்ட அங்கங்கள் காலாவதியாகின்றன...!
காயமற்ற அவயங்கள் செயலிழக்கின்றன..!

எம்மை  கொன்று போட்டு விடுங்கள்...!
எம்மை கொன்று போட்டு விடுங்கள்...!

கண் திறந்து பாருங்கள் எங்கள் உறவுகளே..!
கடைசியாய் ஒரு தடவை கண் திறந்து பாருங்கள்...!



◆ இந்தோனேசியா கொடுஞ் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் நமது ஈழத்து உறவுகளின் உண்ணாவிரத விடுதலைப் போராட்டத்திற்காக எழுதப்பட்ட வரிகள்..!


Tuesday 15 April 2014

சூரிய உதயம்....!


கரிய இருள் பரவிக் கிடக்கும் எங்கள் வானத்தில்- துன்பம்
விரிய வீழ்ந்து கிடக்கும் எங்கள் தேசத்தில்  தினம் உலகம்
தெரிய கதிர் பரப்பி உதயம் கொடுக்கும் - செஞ்
சூரிய உதயத்தினால் விடியல் இன்னும் இல்லையே...!!!

ஒவ்வொரு நம்பிக்கையிலும் ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு உறவுகளும் விடியலை தேடுகின்றன...!

சூடு பட்டுக்கிடக்கின்ற இதயங்கள் - தினம்
சூரிய உதயத்திற்கு ஏங்கித் தவிப்பது
உலகின் விடியலுக்கு மட்டுமன்றி
உருண்டு போகும் காலத்தால்
உருவாகிடாதோ ஒரு விடியல் என்றுமே...

தினம் தினம் சூரிய உதயத்தினை
தித்திப்புடன் தேடுகின்றன....!

காடு மேடெல்லாம் திரிந்து
பாடு பட்டு உழைக்கின்றவர்கள்....!
ஓடுகின்ற புவியோடு சேர்ந்து ஓடி
களைத்து இளைப்பாறி சுற்றி வரும்
சூரிய உதயத்தினை விரும்பியும்
விரும்பாமல் ஏற்கத்தான் செய்கின்றனர்...!

கதிர் பரப்பிக்கொண்டு சூரியன் நிற்கத்தான் செய்கின்றான்...
கலக்கமும் காலமும் உருண்டு வந்தாலும்
கணக்கெடுக்காமல் உதயக்
கதிரவன் தன் கருமமே கண்ணாய்....!


சூரிய உதயம் என்றும் போல ஒரே நிலையில் இருக்க
கரிய இருள் கொண்டு நாம் மட்டும் சுற்றுகின்றோம்...!
சூரியனை சுற்றி சுற்றி நாம் தான் தேய்கின்றோம்...!
சூரியன் என்றும் நிலையானவனாய் இருக்க
உதயம் தேடி அலையும் அலைச்சல்காரர் களாய்
நாமும் எம்முடன் ஒன்பது கோள்களும்...!

நாட்கள் மாதங்கள் வருடங்கள் யுகங்கள் தாண்டி
சுற்றிக்கொண்டே இருக்கின்றோம்...!
சுழற்சி முறையில் சூரிய உதயம் தேடியவாறு....



லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "சூரிய உதயம்" என்ற தலைப்பில் இன்று (15.04.2014 )வழங்கிய கவிதை இது.

கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 (இலங்கை இந்திய நேரம் பிற்பகல் 7.30 மணிக்கு )மணிக்கு... http://gtbc.fm/

Monday 14 April 2014

களிப்பு...!

தொடர்கதையாகிய எம்மினத்துன்பம்
படர்கின்ற கொடியாகி துரத்துகின்ற கன்மம் 

சுடர் விடும் நெருப்பாய் சுட்டெரிக்கும் வலிகள் 
அடர் வனத்து இருளாய் பயமுறுத்தும் நிகழ்வுகள்...
இடர் ஒன்றே எமக்கான சொத்து என்று எழுதி வைத்தது போன்று
தொடர்கின்ற வரலாறு சொல்லிக்கொள்வது ஒன்று மட்டுமே
களிப்பு என்பதை கடினப்பட்டும் கண்டிட முடியாது 
களிப்பு என்பது வார்த்தைகளோடு மட்டுமே எமக்கு சொந்தமாம்...!

கை கட்டி கண் கட்டி சுட்டுத்தள்ளி - இலகுவாக 
கை காட்டி போகின்றார்கள் புலி என்று 
இல்லாத புலி களை வில்லங்கமாய் பிரசவிக்கின்றார்கள் 
இருக்கின்ற பாவிகளை பலி கொள்ளுகின்றார்கள் 
இந்த வருடம் எத்தனை உறவுகளுக்கு 
இருட்டில் விடிந்ததோ...?
யாரறிவார்...?
யாரிடம் சொல்லி அழுவது - எம்மினத்தின் அவலத்தினை 
யாராவது கண்டு கொள்ள மாட்டார்களா 

வருடம் பிறக்கின்றது....
வருடங்கள் பிறந்தன...
நம்பிக்கைகளும் பிறந்து இறந்தன....
நல்ல ஒரு முடிவு எமக்கு கிட்டாதா 
களிப்புடன் வரவேற்போம் புது வருடத்தினை...
களிப்பாய் செழிப்பாய் மலர வேண்டும் என்று 
இனிப்பாய் விருப்பாய் வரவேற்போம் 
ஜெயம் கொடுக்க வரும் ஜெய வருடத்தினை..


லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "களிப்பு" என்ற தலைப்பில் இன்று (14.04.2014 )வழங்கிய கவிதை இது.

கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 (இலங்கை இந்திய நேரம் பிற்பகல் 7.30 மணிக்கு )மணிக்கு... http://gtbc.fm/



Friday 11 April 2014

கல்லாக்கி வைத்திருக்கின்றேன்..!

காண்கின்ற காட்சிகள் இதயத்தை உருக்கிப்போகும்...!
கண்ணுக்கு முன்னால் மரணிக்கின்றது எந்தன் உயிர்...!

கடவுள் மட்டுமா கல்லாக முடியும்..?
கல்லாக்கி வைத்திருக்கின்றேன்
கலங்கிய எந்தன் உள்ளத்தினையும்......
கரைந்து உருகிடாமல்...

இறுக்கமான சட்டம் கொண்ட அதிகாரியும் - மனம்
இளகி என்னை அழைத்து கரம் பிடித்து கொடுத்தார் -என்
இதயத்தை தொலைத்தவனிடம் அவனோ உடல்
தொலைத்து நின்றிருந்தான்...!

அருகிருந்தவர்கள் ஆறுதல் சொல்லி
அனுப்பினார்கள் அவனிடத்தில்..
பார்த்து கலங்க வேண்டாம்
சத்தமிட்டு அழ வேண்டாம்
திடமாக இருங்கள் என்றெல்லாம்...
விளங்கவில்லை எனக்கு...
வித்தியாசமாய் தோன்றியது...
எதற்கு இதெல்லாம் சொல்ல வேண்டும்
ஏன் நான் அழ வேண்டும்?

கரம் பற்றிய அவனின் கோலம் கண்டு
கல்லான உள்ளம் சொல்லாமலே
கலங்கிய விழிகளை
கட்டுப்படுத்த என் அறிவிற்கு
சக்தி போதவில்லை...!

பார்த்ததில்லை எவரையும் இக்கோலத்தில்
பார்க்க முடியவில்லை அதிக நேரம்...!
பலர் கூறிக் கேட்டேன் நிலைமையினை
பரிதவித்து அழுதும் இருக்கின்றேன்...
பக்கம் பக்கமாய் கட்டுரையும் எழுதி இருக்கிறேன்
அவனின் நிலைக்காக...

ஆனால்..
இந்தளவிற்கு
உருக்குலைந்து போயிருப்பதை
உயிருடன் இருந்து நோக்கும் நிலை
உண்டாயிற்று பாவி எனக்கு...
உண்மையில் ஒட்டுமொத்த பாவங்களும்
உலகில் புரிந்தவள் நானே...!

உயிரோடு ஒரு என்புக்கூட்டின்
உருவில் வாய் திறந்து ஒரு சொல் பேசவே
கடினப்பட்ட எனது இதயத்தினை வருத்தாது
கல்லாக்கிய  எனது உள்ளத்தினை தாங்கி
கனக்க கனக்க வீடு திரும்பினேன்....
கனதியான உள்ளத்தினை
கவிதை எழுதியும் பாரம் குறைக்க முடியவில்லை...
அந்த ஒளியிழந்த விழிகளும் இடிந்து போன கன்னங்களும்
வெளிறிய உதடுகளும்  மெல்ல மெல்ல - எந்தன்
உள்ளத்தினை எரித்து  வைக்கின்றது...!
உயிர் இன்னும் இருக்கத்தான் செய்கின்றது...!

இன்னமும் ஏன் மரணிக்காமல் இருக்கின்றாள் என்றும்...
இன்னும் இவளுக்கு ஏன் சித்தம் கலங்கவில்லை என்றும்
விசித்திரமாய் இங்குள்ளோர் நோக்குகின்றார்கள்...!

உள்ளுக்குள்ளே நான் எரிவது விளங்குமா இவர்களுக்கு...
உயிரோடு மரணிப்பது தெரியுமா இவர்களுக்கு...
உருக்குலைந்து போகின்றேன் தினம் தினம்...!
உயிரோடு எனக்கு நானே கொள்ளி வைக்கின்றேன்..!