Search This Blog

Monday 31 March 2014

கருவிழி..!


கருவிழி பார்வையாலே என்னை கடத்தி வந்தவனே - என் காதல் 
கருக்கொண்ட  உந்தன்  இதயக்குழியில் 
உருக்குலைந்து நான் புதையுண்டு கிடக்கின்றேன்...!

அன்பென்னும் மணல் அள்ளி என்னை தூர்த்தவனே..!
அதிசயமாய் என்னை உன்னில் வார்த்தவனே...!
கருவிழி கொண்டு நேருக்கு நேர் எனைப் பார்த்தவனே..!
கரையில்லா காதலில் கரை சேர்த்தவனே...!

அடியோடு அன்பில் சாய்த்தவனே...!
அரை உயிரையும் முழுதாய் மாய்த்தவனே..!
எனக்காய் என்றும் வாய்த்தவனே...!
எந்தன் உயிரை நிலவாய் தேய்த்தவனே..!


காந்தக்கரு விழியில் பசை பூசியவனே..!
காதோரம் வந்து காதல் பேசியவனே...!

சிணுங்கும் குழந்தையாய் கெஞ்சிடுவான்...!
சின்ன சின்ன குழப்படிகளில் மிஞ்சிடுவான்..!

கண்டித்தால் கருவிழிகளால் வென்றிடுவான்...!
கண்டறியாத பார்வையால் மெல்ல தின்று மென்றிடுவான்..!
கருணை பார்வை வீசி கடவுளாயும் தோன்றிடுவான்...!

கல்லினையும் காதலிக்க வைக்கும் கருவிழியான்...!
கன்னி என்னை கட்டிப்போட்ட மெய்விழியான்..!


லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "கருவிழி" என்ற தலைப்பில் இன்று (31.03.2014 )வழங்கிய கவிதை இது.

கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 (இலங்கை இந்திய நேரம் பிற்பகல் 7.30 மணிக்கு )மணிக்கு... http://gtbc.fm/



Thursday 27 March 2014

காதோரம்...!


அன்றொரு நாள் ஊரின்
அரச மரத்தடியில்...
அழகழகான சிட்டுக்குருவிகள்
அங்கு மிங்கும் பறந்தபடி இருக்க...

உன் மார்பில் சாய்ந்து
உனக்குள் எனக்காய் துடிக்கும் - இதயத்
துடிப்பினை கேட்டுக்கொண்டே
துயில் கொண்டேன்....!

நாற்திசையும் ஒலிக்கும்
நாதமாய் உன் அன்பின்
இசையாய் என் உயிரின்
ஓசையாய் எங்கும் பரவ...
ஆசையாய் நான் உன் மார்பில்....

இன்றும் ஒலிக்கின்றது - உந்தன்
இதயத்து நாதம் காதோரமாய்....
இருளில் தனியாக நான் மட்டும்
இங்கே யாசிக்கின்றேன்...

காலம் கடந்தும் இன்னும் ஒலிக்கின்றது - என்
காதோரமாய் உந்தன் இதய நாதம்...!


அரச மரத்தடியும் இருக்கின்றது
அமர்ந்திருக்கின்றேன் நானும்....
நீயும் இல்லை உந்தன் ஓசையும் இல்லை...!
காதோரமாய் தென்றல் வந்து சில்மிஷம் புரிகின்றது - உனக்காய்
காத்திருக்கும் என்னோடு சேட்டை செய்கின்றது...

காற்றுக்கும் இளக்காரம் போலும்
தனித்திருக்கும் பெண்மை கண்டு...

தென்றலின் சேட்டைகளை தாண்டி
அன்றலர்ந்த செந்தாமரையாய்
உன் முகம் இதயம் எங்கும் நிறைந்திருக்க
உன்னைத் தேடுகின்றேன்
உயிரின் ஓசை கேட்பதற்காக

இதயமே உன்னை என் காதோரமாய்
இறுக அணைப்பது  எப்போது?

காதலனே என் காவலனே உனக்காக
காத்திருக்கின்றேன்..!

காலம் கடந்து போன என் துடிப்பினை உயிர்ப்பாக்கிட
காவியனே  நீ விரைந்து வருவாயா - என்
காதோரமாய் உந்தன் உயிரோசையினை கொடுப்பாயா?





லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "காதோரம்" என்ற தலைப்பில் இன்று (27.03.2014 )வழங்கிய கவிதை இது.

கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 (இலங்கை இந்திய நேரம் பிற்பகல் 7.30 மணிக்கு )மணிக்கு... http://gtbc.fm/


முப்பத்து மூன்று ஆண்டுகளின் மடியில் திருமண நாள் நல்வாழ்த்துக்கள்...!!! 27.03.1981 - 27.03.2014


இன்று விழித்தெழுந்து
வாழ்த்தினேன்...!
இதழோரப் புன்னகை புரிந்து
அப்பாவே இல்லை வாழ்த்து எதற்கு
சலித்தாலும் நீ - உலகில்
இல்லாத அவரை உன் இதயத்தில் வைத்து
இருக்கின்றாய் உயிரோடு...!

முப்பத்து மூன்று அகவைகள்
முடிகின்றன இன்றோடு
முழுமதியாய் குங்குமம் இட்டு
முகவரி கொடுத்த நாள் இன்று..!

பாதியிலே விட்டு பதியானவர் பிரிந்து
இருபது அகவைகள் ஓடினாலும்..
பங்குனி இருபத்தேழு பிரிந்து
பறந்து சென்றிடாதன்றோ..?

ஒவ்வொரு வருடமும் ஓடி வரும்
ஒளிந்து கொள்ளாமல் தேடி வரும்...
விழாக் கோலமும் மணக்கோலமும்
உலாக்காணும் உந்தன் மனதில்....!

காலை விடிந்ததில் இருந்து அரங்கேறிய
காட்சிகள் வரை ஆனந்தமாய் விபரிப்பாய்...!

இருபது வருடமாய் என் வாழ்த்தும் - உன் நினைவுகளும்
இடை விடாமல் தொடருகின்றன.

கல்யாணம் என்பது நீண்ட கால பயிர் தான் - ஆனால்
கரம் பிடித்து வாழ்ந்த உந்தன் காலம் குறுகியது
மனமொத்த தம்பதிகள், உதாரண தம்பதிகள்
மற்றவர் பொறாமைப்படும் தம்பதிகளாய்
மகிழ்வோடு வாழ்ந்த அந்த பதின் மூன்றாண்டுகள்
உங்களுக்கு பொக்கிசமே...!

குழந்தைகளாக நாம் உலவிய அந்நாட்களில்
குதூகலம் என்பதை உணர்த்திய பெற்றோர்கள்..!

வறுமையிலும் எம்மை வசதியாக்கிய பெற்றோர்கள்...!
வண்ண மயமான எதிர்கால கனவுகளை சுமந்த பெற்றோர்கள்..!

எங்கும் அறிந்ததில்லை கண்டதில்லை உங்களை போன்றோரை..
எமது துரதிஸ்டம் எந்தையவர் பிரிந்தது...!

இருந்தாலும் நீங்கள் ஒன்றிணைந்த நாள் இது...!
இன்று முப்பத்து மூன்று ஆண்டுகள் கடந்தும்
இருவரும் கண்ட கனவினை நனவாக்க முடியாத
இடத்தில் இதயம் கலங்கி நிற்கின்றேன்...!

எங்களுக்கான ஆலயம் அத்திவாரமிடப்பட்ட
எண்பத்து ஒன்றின் பங்குனி இருபத்தேழு
இன்றைய நாளில் உங்களை மனதார வாழ்த்தி
இதயத்தில் இருத்தி துதிக்கின்றேன் அன்பானவர்களே..!
உங்களின் ஆசீர்வாதம் அடுத்த ஆண்டில் உங்கள் கனவினை
உலகறிய செய்ய வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்...!

இனிய வாழ்த்துக்கள் அன்னையே...!

Monday 24 March 2014

ஆலோசனை...!!!


ஓடி வந்தேன் யுத்தம் ஆடிய கோரத் தாண்டவத்தினால்
வாடிச்சோர்ந்தேன் தந்தையினை தேடிக்களைத்ததினால்
நாடி வந்த நாடும் என்னை அணைக்க மறுத்தது...!

திரும்பி ஓடி விடலாமோ வந்த இடத்திற்கே...
விரும்பி நான் கேட்கவில்லை...!
ஒரு ஆலோசனை ஒற்றை வசனத்தில்
ஆண்டவனிடம் கேட்டேன்...!

குழம்பிய உள்ளம்
தளம்பிய வாழ்வு தற்காலிகமாய்
கொண்டவள் என்னிடம்..
கொட்டிக்கிடந்த நம்பிக்கையும்
கொஞ்ச அச்சமும் எங்கோ
தொலைந்து போன நிலையில்...

ஆண்டவனிடம் கேட்டேன்
ஆலோசனை...!


பதில் கொடுத்தான் அவனும்...!
பரிதவித்து நின்ற பாலகி விபூசிகாவும்
அவளை பெற்றவளும்
அடைந்த நிலையும்
அரங்கேறும் கடத்தல்களும்
எனக்கான ஆலோசனைகள்  போலும்..





லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "ஆலோசனை" என்ற தலைப்பில் இன்று (24.03.2014 )வழங்கிய கவிதை இது.

கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 (இலங்கை இந்திய நேரம் பிற்பகல் 7.30 மணிக்கு )மணிக்கு... http://gtbc.fm/





Friday 21 March 2014

கவிதைகள் எந்தன் கவலை நீக்கிகள்..!!


கனதியான இதயம்
கழற்றி வைக்கவோ
இடமில்லை..!

சனத்திரளில் தொலைந்து
மிதிபடும் பச்சைக்குழந்தை போல
வலிகளில் விழுந்து வதைபடும்
வஞ்சமில்லா இதயம்..!

மழைநீரில் நனைந்த புத்தகமாய்
மள மளவென்று ஊதிப்பருக்கின்றது
கண்ணீரின் ஆதிக்கத்தால்...!

உறவுகளும் நினைவில் கொள்ளாத
உயிரற்ற நிலையில் நான்...!

அஞ்ஞாத வாசம் செய்கின்றேன்
அந்தோ வருடக்கணக்காக...

வெளியேறத்துடித்து போராடி
விம்மி வெடிக்கின்றேன்...!

வெடித்துப் போனாலும்
துடித்துப்போக மாட்டேன்...
வடித்த கண்ணீரும்
நீடித்த துன்பமும்
முடித்து போன இறுதி வெடிப்பாகட்டுமே...!

பணம் இரந்திடுவேன் என்று
பக்கம் வர தயங்கும் உறவுகள்
பச்சோந்திகளை வென்று நிமிடத்திற்கு
பல நிறங்கள் கொள்கின்றன...!

வாயெல்லாம் பற்களாகி ஒருநாள் - என்
வாசல் தேடி வரும் அவர்களை
வதனம் எங்கும் புன்சிரிப்போடு
வரவேற்க காத்திருக்கின்றேன் - அந்த
காத்திருப்பிற்காகவே இன்றைய
காயங்களையும் அவமானங்களையும்
துச்சமாய் கடக்கின்றேன்..!

துணிவை அள்ளி கொடுக்கும் கவிதைகள்
துயரத்தை கிள்ளி போடும் கவலை நீக்கிகள்..!

கனதியான இதயத்தினை கொஞ்சம்
கவிதைகள் மீது இறக்கி வைக்கின்றேன் நான்...!
கனத்தால் தள்ளாடும் கவிதைகள் - என்
கண்ணீரை மொண்டு  சுறு சுறுப்பாகின்றன...!


இருக்காதா பின்னே...
இருக்கின்ற என் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சி
இறங்கிய கண்ணீர் அன்றோ..?

கவிதையே உனக்கு - நான்
கடமைப்பட்டுள்ளேன்..!
சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன்...!
சிறப்பாய் நீ பயணிக்க வேண்டுகின்றேன்..!




அரசி நிலவன்






Thursday 20 March 2014

வெட்ட வெளிச்சம்...!


அண்ணன்களை தேடியவள்
அண்ணம் நெரிக்கப்பட்டாள் -அங்கே
சிறுமியவள் சின்ன பயங்கரவாதி என
சித்தரிக்கப்பட்டாள்...!

நவி பிள்ளையின் வருகையிலும்
நல்லெண்ண தூதுக்குழுக்கள் வருகையிலும்
சிந்திய கண்ணீரும் சிதறிய அவளது
அவலக்குரலும் எடுபடவில்லை...!

அண்ணாக்களை திருப்பி தரத்தான்
அட உங்களுக்கு வக்கில்லை
அருமந்த குஞ்சு அவளை
அடை காத்திடத்தன்னும்
உங்களுக்கு துப்பில்லையா..?

இலங்கை இரும்பு கரம் கொண்டது
இறுகப்பற்றி கழுத்தை நெரிக்கும் என்பது
அறிந்த உண்மை...!

சிறுவர் துஷ்பிரயோகம்
சிறுவர் போராளி என்று
கூவுகின்ற ஐ நாவும்

காணாமல் போனவர்களை
காரணம் காட்டி தேர்தலில்
மாலை சூடிய பெருந்தகைகளும்

இன்னும் உலகெங்கும் - ஈழத்தை வைத்து
இ(ர)க்கும் யாவரும்


அவள் கண்ணீர் சிந்தி கதறிய கோலம் கண்டும்
நேரஞ்சல் பதிவஞ்சல் என்று ஒவ்வொரு
ஊடகத்திலும் விதம் விதமாய் கண்ணுற்றும்
ஊமையாய் இருந்தனர் அன்றோ??

இன்று அவள் எங்கோ ஓர் மூலையில்
இருளோடு கரம் பிடித்து கதறும் போது
இறங்கி வந்திடுவாரோ..?

எனக்காய் நானே போராட வேண்டும்..!
எனக்காய் நானே சிறைக்குள்ளும் சாக வேண்டும்...!

யாருக்காக இங்கே அமைப்புக்கள்..?
யாருக்காக அவை உலவுகின்றனவோ?

போனவள் வருவாளோ..?
ஏனவள் போனாளோ..?

கவிதையிலும் கட்டுரையிலும்
கனமாய் எழுகின்றன வினாக்கள்..!

நேரிடையில் வினா எழுப்ப யாருக்கு துணிச்சலோ?
நேர்மையும் கூர்மையும் செத்து நாளாயிற்று...!

வெட்டை வெளிச்சமாகின்றது
வெறுமையாகி போகின்ற எமது வாழ்வு...!

உலகம் எங்கும் சுற்றினாலும்
உண்மை விழிக்காது என்று
உலகமது உறுதிப்படுத்துகின்றது..!

இருளில் மூழ்கிய வாழ்வு நிரந்தரம் என்று
இவர்கள் அமர்வுகள் அமர்த்தி தீர்மானம் நிறைவேற்றி
வெட்டை வெளிச்சம் போட்டு விளக்குகின்றார்கள்..!

பச்சிளம் பாலகி , நிறைமாத கர்ப்பிணி
யாவருக்கும் பயங்கரவாத பட்டம் சூட்ட
சர்வதேசம் சாமரை வீசி ஆமோதிக்கும் கிறுக்குத்தனம்
நன்றே வெளிச்சம் போட்டு காட்டுகின்றது
எமக்கான நீதியினை...



லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "வெட்ட வெளிச்சம் " என்ற தலைப்பில் இன்று (20.03.2014 )வழங்கிய கவிதை இது.

கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 (இலங்கை இந்திய நேரம் பிற்பகல் 7.30 மணிக்கு )மணிக்கு... http://gtbc.fm/



Wednesday 19 March 2014

இன்சொல்...!!!

"இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ 
வன்சொல் வழங்குவது..."


உனக்கு வேண்டப்படுவது போன்றே
எனக்கும் வேண்டப்படும் என்பதை
அறியாமல் அடிக்கடி அள்ளி வீசுகின்றாய்
அனல் பறக்கும் சொற்களை என் மேலே...

அனல் பட்டு பொசுங்கி போன என் மென்னிதயம்
புனல் என்னும் விழிநீரில் நனைந்து
வெம்மை தணிக்கின்றது...!

கருகிப்போன உள்ளத்தில் இருந்து
கனிவாய் உனக்காக பிரசவிக்கும்
இன் சொற்கள் சுகப்பிரசவம் ஆகின்றன
உன் செவி வழியே உந்தன் உள்ளத்தில்...!

இனிமை என்றுமே
கனிவை இழந்ததில்லையே...!

இரும்பான உன் உள்ளத்தில்
இரசாயன மாற்றத்திற்கு உட்பட்டு
இழந்து விட்டதோ தன் தன்மையினை...!

தாக்கத்தின் விளைவாக
வடு சொல்லை வாரி இறைக்கும்
வன்மம் கொண்ட உள்ளம் கொண்டோனே..!
வலிகள் என்றால் என்னவென்று நீ அறியவேண்டும்
இன்றில் இருந்து நானும் இன்சொலுக்கு தடை விதிக்கின்றேன்...
இன்சொல் உண்டு வன்சொல்லை கக்கும் நீ திருந்துவதற்காக....






லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "இன்சொல் " என்ற தலைப்பில் இன்று (19.03.2014 )வழங்கிய கவிதை இது.

கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 (இலங்கை இந்திய நேரம் பிற்பகல் 7.30 மணிக்கு )மணிக்கு... http://gtbc.fm/




Tuesday 18 March 2014

மயக்கம்...!


விடிந்தும் விடியாத அந்த இருட்டுப்பொழுதில்
விந்தி விந்தி வந்தவள் சாலையோரமாய் 
ஒதுங்கி நின்றிருந்தாள்...!

ஒன்றிரண்டு வாகனங்கள் புகையினைக்காறி 
உமிழ்ந்து வேகமாய் மறைந்து கொண்டிருந்தன...!

இன்னும் வீதிச்சமிக்கை இடத்திற்கு செல்ல முடியாதவளாய் 
இழுத்து இழுத்து உடலை அசைத்துக்கொண்டிருந்தாள் அவள்..!

ஒருவாறு அங்கு செல்லவும் பொழுது நன்றாக புலர்ந்து விட்டிருந்தது....!
மெல்ல எழுந்து கைத்தடி பிடித்து நின்றிருந்த வாகனங்களை நோக்கி நடந்தாள்...!

வாகனங்களின் கண்ணாடியில் தெரிந்த தன் வதனம் கண்டு அவள் 
வாடிப்போய்விட்டாள்...!

அவளுக்கே அவளை அடையாளம் காண முடியவில்லை..!
"அம்மாளாச்சி தாயே இன்றைக்காவது ஒரு பிடி சோற்றுக்கு வழி கொடு" 
மனதிற்குள் வேண்டியபடி முன்னுக்கு நின்றிருந்த வாகனத்தின் 
கண்ணாடியினை தட்டினாள்...!


அசையவில்லை கண்ணாடி கதவுகள்...
அடுத்த வாகனத்திற்கு முன்னேறினாள்...! 

தட்டிய கைகள் தயங்க கண்கள் செருக 
தள்ளாடியபடியே மனம் தளராது மீண்டும் முயற்சியில் அவள்..!

ஏளனப்பார்வைகளும் ஏச்சுக்களும் 
ஏய் அங்காலே போ என்ற விரட்டல்களும்
தாண்டி மீண்டும் மீண்டும் சமிக்கைகள் விழுந்து எழும் அந்த
இரு நிமிட இடைவெளிக்குள் தன் அதிகமான முயற்சி கொண்டு 
இரண்டு புண்ணியவான்களின் பெருந்தன்மையால் இருபது ரூபாய் 
இரந்து பெற்றுக்கொண்டவள் வறண்ட தொண்டை நனைக்க விரைந்தாள்..!

இரண்டடி வைத்திருப்பாள் அந்தோ பாவம்..!
பொத்தென்று பிடரி அடிபட விழுந்து விட்டாள்..! 
நடைபாதை குந்தில் அடிபட்ட பிடரி பிளக்க.. 
பீறிட்ட இரத்தம் கொஞ்சம் வீதியினை நனைத்தது...!

தலை பிளந்து கிடப்பவளை வாய் பிளந்து சிலர் நோக்கினர்...!
தடக்கு பட்டு விழுந்து போச்சு பாவம் என்று சிலரும் 
வேகமாக வந்த வாகனம் இடிச்சு தூக்கி எறிஞ்சிட்டுது என்று சிலரும் 
அனுதாபங்களை கொட்டி பார்வையாளர்களாக தம்மை அலங்கரித்தனர்....!

பத்து நாளாய் இதே வீதியில் பசிக்குது என்று அலைந்தவள் அவள்..!
பரதேசிகள் இவர்களின் கண்ணுக்கு அது தெரியவில்லை...!
பசி "மயக்கம் " மேலிட்டு மயங்கி விழுந்து பிடரி அடிபட்டதும் 
பகல் குருடர்கள் இவர்களுக்கு புரியவில்லை...!

இல்லாத வதந்திகள்  பரப்பி கொள்ள நன்றே தெரிகின்றது...!
இருக்கின்ற இவர்களைப்  போன்ற சமூக வாதிகளால் 
இல்லாத பசியும் பட்டினியும் நன்றே இருக்க வைக்கப்படுகின்றது...!





லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "மயக்கம் " என்ற தலைப்பில் இன்று (18.03.2014 )வழங்கிய கவிதை இது.

கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 (இலங்கை இந்திய நேரம் பிற்பகல் 7.30 மணிக்கு )மணிக்கு... http://gtbc.fm/


Friday 14 March 2014

அற்புதம்..!


எனக்கென்ன உனக்கென்ன
என்ற உலகமதில் எனக்காக
என்னோடு பயணிக்கும் உன்னதம்..!

கருவறையில் தொடங்கி உன் நிழலில்
பயணித்தேன் இன்னும் பயணிக்கின்றேன்...!
இறுதி வரை இவ்வாறே பயணிக்க வேண்டும்...!

நலம் நாடுபவள் அன்னை என்றால் கணமும் - என்னை
வலம் வரும் உன்னை என்னவென்பேன்..?
குலம் காக்கும் தெய்வமானவளோ - என்
பலம் கொண்ட நம்பிக்கையானவளோ...?

வியந்து நோக்கும் அற்புதம் அம்மா நீ...!
பயந்து நீ ஒதுங்கிய உறவுகள் முன்னால்
உயர்ந்து நிற்க வைக்கவேன்றே சத்தியம் பூண்டேன்
அயர்ந்து போகாமல் சத்தியம் காக்க துணை நிற்பவளே...!

உலகில் உன்னைப்போன்று அன்னையில்லை...
உருவம் கொண்ட இறைவனாய் காண்கின்றேன்...!

சித்தம் குழம்பி தன்னிலை மறந்து
நித்தம் சத்தம் இட்டு சச்சரவிடும் என்னை
உத்தம மாய் மன்னித்து கொள்ளும் மேன்மையானவள்...!

அன்னை என்றால் அகிலமும் போற்றும்
உன்னை அன்னைக்கு மேலாய் தேவதையாய்
விண்ணைத் தாண்டி நேசிக்கின்றேன்...!

கோபமும் தாபமுமாய் பாசமும் நேசமுமாய்
அகன்று நீளமாய்  நீடித்து போகின்ற பந்தமன்றோ..?

என் வாழ்வின் வழியோரம் எங்கும் பாசத்தின் தூறல்களை
அள்ளித்தெளித்து என் விழியோர கண்ணீர் துடைப்பவளே...!

நீயில்லாத தருணங்களில் உன் நினைவோரம் சாய்ந்தால்
தாலாட்டி என்னை மெல்ல தூங்க வைக்கும் மென்மையானவளே...!

உன் அன்பின் சாரல் மழையில் நனைந்து புதுப்பொலிவு பெறுகின்றேன்..!
மரணித்துப்போனாலும் மீண்டும் உயிர் பெற வைக்கும் - உந்தன் அன்பும்
நீயும்
என்னோடு பயணிக்கும் வரை எந்தன் மரணமும் சற்றுத்  தள்ளியே பயணிக்கும்...!




யாருக்காக இந்த போராட்டம்..??


(இன்று நான் கண்ணுற்ற ஒரு காணொளி ஒன்று என்னை வற்புறுத்தி இதனை எழுத வைத்து விட்டது. இருந்தாலும் இதில் உள்ளவை யாவும் பல காலமாக என் மனதில் கிடந்தது உழன்று தொண்டைக்குள் சிக்கித்தவித்த வேதனை மிக்க விடயங்களே.)

ஈழப் போராட்டம் என்ற ஒரு சொற் பதத்தினை வைத்து இன்று உலகெங்கும் எத்தனையோ வியாபாரங்கள் நடைபெறுகின்றன. அது தமிழ்நாடாக இருந்தாலும் சரி புலம்பெயர் தேசமாக இருந்தாலும் சரி இன்று அந்த பதம் ஒரு வியாபாரப்பதமாக மாற்றம் பெற்றிருப்பது யாவரும் அறிந்த உண்மை. 

அரசியலுக்கு அது இன்று நன்றாகவே நல்ல ஒரு தரமான உரமாக பயன்படுத்தப்படுகின்றது. விளைகின்ற விளைச்சலை அறுவடை செய்கின்றவர்கள் வளமாக வாழும்போது அந்த ஈழப்போராட்டத்தோடு நேரடியாக சம்பந்தப்பட்ட உறவுகள் இன்று என்ன நிலையில் தவித்துக்கொண்டிருக்கின்றார்கள் என்பது எத்தனை பேருக்கு தெரிந்த உண்மை?

ஆம்..!
ஈழத்தில் 2009 இன் போரிற்கு பின்னான காலப்பகுதியில் நிர்க்கதியாக்கப்பட்ட எத்தனையோ போராளிப்பெருமக்கள், எங்கே என்று அறியாத போராளிகளின் உறவுகள் தற்போது விடுதலையாகி செய்வதறியாது தவிக்கும் பெண் போராளிகள்  மற்றும் ஆண் போராளிகள் என தமது வாழ்வாதாரங்களையும் பாதுகாப்பினையும் தொலைத்து ஒரு வித மன உளைச்சலில் தம்மை நகர்த்திச்செல்லும் இவர்களுக்கு ஏன் யாரால் இந்த அவல நிலை?

தலைவர் இருக்கின்றார் என்றும் போராட்டம் முன்னெடுக்கப்படும், தமிழீழம் மலரும் என்றும் கோசமிடும் அமைப்புக்களே..! முதலில் தமிழினத்திற்காக போராடி நடுத்தெருவில் நிற்கும் இந்த உறவுகளுக்கு வாழ்வதற்கு ஒரு வழிவகை செய்யுங்கள். புலம்பெயர் தேசத்தில் உள்ள பலர் அவர்களில் சிலருக்கு உதவுகின்றனர் தான் மறுப்பதற்கில்லை. ஆனால் தவிக்கின்ற யாவருக்கும் உதவி கிடைக்கவில்லையே. தெரிந்தவர்கள் மற்றும் உறவினர்கள் மூலமாக சிலருக்கு உதவிகள் கிடைத்தாலும் அவை நிரந்தரமானவை என்று கூறிவிட இயலாது.

தமிழீழ நாடு கடந்த அரசு என்கின்ற ஒரு அரசு புலம்பெயர் தேசத்தில் இருக்கின்றது என்பது ஈழத்தில் உள்ள எத்தனை உறவுகள் அறிவர்? அறிக்கைகள் விட்டு தமக்கு தாமே ஒன்று கூடல் நிகழ்த்தி விருந்துண்டால் அங்கிருக்கும் உறவுகளுக்கு தெரியுமா? உண்மையில் இந்த அரசு பொறுப்பேற்றவுடன் என்ன செய்திருக்க வேண்டும்?  ஈழத்தில் உள்ள அத்தனை போராளிகளையும் திரட்டி அவர்களுக்கு உரிய எதிர்கால நலத்திட்டத்தினை உருவாக்கியிருக்க வேண்டுமல்லவா? சும்மா உதவி என்று மாதம் பத்தாயிரம் இருபதாயிரம் என்று பிச்சை போடாமல் அவர்களுக்கு என்று ஒரு தொழிலினை அல்லது ஒரு நிரந்தர வேலையினை ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வழங்கியிருக்க வேண்டும். 

தேசியத்தலைவர் இருந்தால் அந்த உன்னதமான போராளிகளை இவ்வாறு நடு வழியில் தவிக்க விடுவாரா? அன்றி மற்றவர்களிடம் கையேந்தி நிற்க தன்னும் விடுவாரா? அன்றைய கடும் போர்ச்சூழலில் கூட வலுவிழந்தோருக்காக தேசியத்தலைவர் நிதியினை  ஒதுக்கி அவர்களை வாழ வைத்துக்கொண்டு இருந்தார் என்பது ஏன் உங்கள் அறிவிற்கு எட்டவில்லை? தலைவர் வருவார் , தமிழீழம் மலரும் என்று எதிர்பார்க்கின்ற உறவுகளே. உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும் நாளில் இந்தப் போராளிகளைப்பற்றி அவருக்கு என்ன பதில் சொல்வீர்கள்? அவர்களுக்காக என்ன செய்தீர்கள் ? 

உண்மையிலேயே நீங்கள் அவரின் வரவை எதிர்பார்த்திருந்தால் அல்லது அவர் இருப்பதை நம்புவதாக இருந்தால் முதலில் எங்கள் இனத்துக்காக போராடி, எச்சங்களாகி நிற்கும் உன்னதமான போராளிகளை வளப்படுத்தியிருப்பீர்கள். அவர்களை மதித்து அவர்களின் நலன் காத்திருப்பீர்கள். இவ்வாறு அவர்களைப்  புறந்தள்ளி ஏளனமாய் நோக்கி நீங்கள் உதாசீனப்படுத்துவதில்  இருந்து நன்கு  விளங்குகின்றது. அரசியலுக்காகவும்  சுய இலாபத்திற்காகவும்  தலைவர் இருக்கின்றார் என்றும் வருவார் என்றும் காலங்கடத்துகின்றீர்கள் என்பது.

நிகழ்காலத்தில் செய்ய முடிந்த செயல்களாக எவ்வளவோ இருக்கும் போது எதிர்கால நம்பிக்கை ஒன்றினை சொல்லிக்கொண்டே எதற்காக காலம் கடத்திக்கொண்டிருக்க வேண்டும். உண்மையில் ஈழ உணர்வு , இன உணர்வு இருந்தால் ஈழத்தில் அல்லலுறும் உறவுகளுக்கு வாழ வழி வகை செய்யுங்கள். 


இந்த காணொளியில் மூன்று உறவுகள் கண் கலங்கி அழுது கையேந்தும் காட்சியினை கண்ணுறும் போது இதயம் கனக்கின்றது. எதற்காக இவர்கள் இவ்வாறு கையேந்த வேண்டும். இருக்க வேண்டியவர் இருந்தால் இவ்வாறு இடம்பெற அனுமதிப்பாரா? இவர்கள் அநாதரவற்று போயிருப்பார்களா? கண்களில் இருந்து சிந்தும் கண்ணீரினை துடைத்து விட கரமின்றி தவிக்கும் இவர்கள் யாருக்காக அவற்றினை இழந்தார்கள்? பொழுது போக்கிற்காக வேலை வெட்டி இல்லாமல் போய் கரங்களை துண்டித்துக்  கொண்டார்களா? காட்டிக்கொடுப்புக்களில் வாழ்ந்து கொண்டிருக்கும், துரோகங்களில் ஒன்றிப்போன ,நன்றி கெட்ட இனமான தமிழினத்திற்காக தமது வாழ்வினை தொலைத்துப் போராடியது தான் அவர்கள் புரிந்த ஒரேயொரு குற்றம். 

ஒருவர் இருவர் என்றில்லாமல் அங்கிருக்கும் அத்தனை உறவுகளுக்கும் புனர்வாழ்வு அளிக்க புலம்பெயர் சமூகத்தால் முடியாதா என்ன? பாதுகாப்பு பிரச்சினை என்ற சாக்குப் போக்கு தேவையற்றது. இலங்கை அரசின் கையில் யார் யார் போராளிகள் என்ற முழுக் கணக்கெடுப்பே இருக்கும் போது உதவி செய்ய ஆரம்பித்து அவர்களை காட்டிக்கொடுப்பதாக ஆகி விடுமோ என்று நினைத்து வாளாவிருப்பதே உண்மையான துரோகத்தனம் ஆகும். 

யாருக்காக நடைப்பயணம் செய்கின்றீர்கள்? எதற்காக தமிழீழம் கேட்கின்றீர்கள்? இந்த உன்னத உறவுகள் பசியோடு வலுவிழந்து கிடந்து கண்ணீர் விடும் போது புலம்பெயர் போராட்டங்கள் வலுப்பெறுமா ? குரல் கொடுத்து கேட்கின்ற தமிழீழத்தில் வாழப்போவது யார் ? உயிர் கொடுத்துப் போராடி எம்மினத்தினை உலகிற்கு வெளிக்காட்டியவர்களை புறந்தள்ளி எம்மால் வாழ்ந்திட முடியுமா? ஒட்டுமொத்த தமிழினத்திற்கே அது சாபக்கேடாகும். 

எமது தற்கால போராட்டங்களை குறை குறைவில்லை. ஆனால் அதற்கு முன் ஆற்ற வேண்டிய பல செயல்களை நிறைவேற்றிக்கொண்டு  போராடுவோம். ஐந்தாண்டு காலமாக ஜெனிவாவிற்கு செல்லாத கால்கள் இல்லை உயர்த்தாத கைகள் இல்லை. என்ன பயன்? இருக்கின்ற எமது போராளிப்  பெரும்மக்கள் உயிரை இழப்பதும் வாழ்வை இழப்பதும் அதிகமாகி செல்கின்றது அன்றோ? 


வாழ வழியற்று மன விரக்தியில் தற்கொலை செய்யும் நிலைக்கு ஒரு போராளி செல்கின்றார் என்றால் இத்தனை லட்சம் புலம்பெயர் உறவுகள் இருந்து என்ன பயன்? கேட்கவே வெட்கமாக இல்லையா? ஒரு போராளியினை வாழ வைக்க முடியாதவர்கள் ஒரு அரசிடம் நியாயம் எதிர்பார்க்க முடியுமா? போர்க்குற்ற விசாரணை வேண்டும் தான். அதில் மாற்றுக்கருத்தே இல்லை. ஆனால் அதற்காக அலைந்து இன்னும் உயிரோடு இருக்கின்றவர்களையும் இழக்க முடியுமா? 


சரணடைந்த போராளிகள் சுடப்பட்டார்கள், வன்முறைக்கு உட்படுத்தப்பட்டார்கள் ,உயிரோடு சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டார்கள் என்றெல்லாம் ஆதாரங்கள் வெளியாகி அதை வைத்து போராடுகின்ற நீங்கள் அதே போன்ற போராளிகள் இன்னும் ஈழத்தில் இருப்பதை மறந்து விட்டீர்களா? அல்லது அவர்கள் போராளிகள் இல்லையா ? யாருக்காக நீங்கள் நியாயம் தேடுகின்றீர்கள்? உயிர் துறந்த போராளிகள் விசாரணைகளால் எழுந்து வரப்போவதில்லை. அவர்களைப்போன்றவர்கள் இன்னும் உயிரோடு இருக்கின்றவர்களை காப்பாற்ற என்ன போராட்டம் செய்கின்றீர்கள்.? உண்மையில் போராளிகள் மேல் கொண்ட அக்கறையால் நீங்கள் போராடுகின்றீர்களா? அல்லது வெறுமனே இலங்கை அரசினை எதிர்க்க கிடைத்த ஆயுதமா இந்த போர்க்குற்ற விசாரணை? ஏனெனில் உயிருடன் இருக்கின்றவர்கள் கவனிப்பாரற்று அல்லவா இருக்கின்றார்கள். அவர்களின் உயிருக்கு உத்தரவாதம் இருக்கின்றதோ  இல்லையோ முதலில் அவர்களின் உணவுக்கு உத்தரவாதம் இல்லையே. 

புலம்பெயர் தேசத்தில் இருந்து  ஈழத்துக்குச்செல்லும் தமிழ்  உணர்வாளர்கள் எனத்தம்மை காட்டிக்கொள்ளும்  சிலர்  அங்குள்ள பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வெளிநாட்டு ஆசை காட்டி தமது தேவைகளை நிறைவேற்றியபின் ஏமாற்றி விட்டு  புலத்திற்கு திரும்பி விடுகின்றார்கள்  என்று கடந்த வாரம் ஒரு செய்தி வானொலி ஒன்றில் கேட்க நேர்ந்தது. ஆக சிங்களவர்கள் தேவையில்லை எமது இனத்தை கருவறுக்க என்பது நன்றாகவே விளங்குகின்றது. ஈழப்போராட்டம் , பாதிக்கப்பட்ட மக்கள் என்பன தற்போது  அரசியல் பேசுவதற்கும் ஏமாற்றுவதற்கும் நல்ல கருவிகள் ஆகிவிட்டன. 

தட்டிக்கேட்க எவருமில்லை. இருந்தால் இந்த அநியாயங்கள் , அசிங்கங்கள் அரங்கேறுமா? தமிழ்நாட்டில் பலர் தேசியத் தலைவரின் புகைப்படத்தை வைத்து அரசியல் செய்வதும், ஈழத்தை வைத்து தேர்தலில் வெற்றி பெறுவதும் என்று நன்றாகவே பிழைப்பு நடத்துகின்றார்கள். எங்கே அவர்கள் எமது போராளிகளுக்கு உதவட்டும் பார்ப்போம். நிச்சயமாக அதெல்லாம் பேச்சோடு சரி. யாருமே முன்வரப்போவதில்லை. 


எங்கேயோ இருக்கும் அவர்களுக்கு உதவி செய்வதால் இவர்களுக்கு அவர்களின் வாக்கு விழப்போவதில்லையே. அவர்கள் எக்கேடு கெட்டால் என்ன? ஆக போராளிகளுக்கு இலங்கை அரசினை தவிர வேறு எவராலும் உதவிட முடியாது போலும். தேர்தலுக்காக இலங்கை அரசு அவர்களுக்கு உதவி புரிந்து வாக்கினைப் பெற்றுக்கொள்ளவோ அல்லது தமிழர்களின் வாக்கினைப் பெற்றுக்கொள்ளவோ  போராளிகளுக்கு புனர்வாழ்வு அளிக்க முன்வரும். இலங்கை அரசின் புனர்வாழ்வு நடவடிக்கைகளை பார்த்து புலம்பெயர் தேசத்தில் இருந்து நக்கல் நையாண்டி பண்ண மட்டும் அங்குள்ள ஊடகங்கள் முண்டியடிக்கும். "முன்னாள்" போராளிகள் என்று ஒரு அடைமொழியுடன் அவர்களின் மனதினை நார் நாராக கிழிக்கத்தெரிந்த அந்த ஊடக மக்கள் தாம் ஏதாவது செய்ய வேண்டும் உதவ வேண்டும் என்ற எண்ணம் அறவே இல்லாமல் இவ்வாறு எதற்கு அவர்களை கொச்சைப்படுத்த வேண்டும்.

அவர்கள் மட்டுமா? ஈழத்தில் அரசின் புனர்வாழ்வு பெற்று இல்லம் திரும்புகின்ற  போராளிகளில் எத்தனையோ  பேர் மன உளைச்சலில் இருந்து இன்னும் திரும்பாமல் இருக்கின்றனர்? இராணுவ சித்திரவதைகள் மிரட்டல்கள் என்பன ஒரு புறமிருக்க சமூகத்தில் அவர்களை நோக்குகின்ற பார்வைகள் காரணமாக இன்னும் இன்னும் விரக்தி நிலைக்கு தள்ளப்படும் அவர்கள் என்ன குற்றம் இழைத்தார்கள்? கேடு கெட்ட எமது தமிழினம் பச்சோந்திகள் போன்று காலத்திற்கு காலம் குணம் மாறும் இயல்பு கொண்டவர்கள் என்பது தெரிந்தாலும் இவ்வாறு எமக்காக தம் வாழ்வை தொலைத்துத் தனித்து வந்தவர்களை கரம் நீட்டி அணைக்கத் தெரியாத கல் நெஞ்சம் கொண்டவர்கள் என்பது போரிற்கு பின்னான காலம் நன்கே  உணர்த்தி நிற்கின்றது.

வசைப்பேச்சுக்களும் , கதை கட்டும் வதந்திகளும் , முகத்திற்கு நேராகவே காறி உமிழ்ந்து வதைக்கின்ற சொந்த இனத்து மக்கள் , அண்டை அயலார் என்று அவர்களை வெந்தணலில் இட்டுச்சுட்டுக்கொல்லும் கொடுமை இன்னமும் அரங்கேறிக்கொண்டிருக்க யாருக்காக நாம் போர்க்குற்ற விசாரணை நாடாத்தப்  போராட்டம் நடாத்துகின்றோம்?


போரில் காணாமல் போனவர்களை தேடியலையும் நாம் அவர்களை கண்டு பிடித்துக் கொள்ள முடியாமல் போனாலும், இருக்கின்ற இவர்களை காணாமல் போகாமலிருக்கவாவது ஆவன செய்வோம். இலங்கை அரசின் புனர்வாழ்வில் இருந்து மீண்டு வருபவர்களை மீண்டும் இலங்கை அரசு கைது செய்யாமல் இருக்க வேண்டும் எனில் புலம்பெயர் தேசத்தில் இருந்து கொண்டு அவர்களை வைத்து எழுச்சிகரமான பதிவுகளும், அவர்களின் பழைய தோற்றத்து புகைப்படங்களையும் தற்போதைய படங்களையும் இணைத்து ஒப்பிட்டு க்கட்டுரைகளும் எழுதி கடினப்பட்டு வெளியேறிய அவர்களை மீண்டும் சிறைக்குள் தள்ள முயற்சிக்காதீர்கள் அல்லது காணாமல் போக வைக்காதீர்கள் இல்லை தற்கொலைக்கு தூண்டாதீர்கள். புலத்தில் பாதுகாப்புடன் இருந்து கொண்டு எதுவும் பேச முடியும். முள்ளுக்கம்பிக்குள் முதுகை வளைத்துக்கொண்டு இருப்பவர்கள் வளைந்து நெளிந்து தான் இருக்க வேண்டும் அதுதான் காலத்தின் கட்டாயமும் ஆகும். 

இறுதிப்போர் என்பதே உலக நாடுகளின் இணைப்பில் அரங்கேறியது என்பதை அறிந்தும் இன்னும் ஏன் அவற்றினை நம்பிக்கொண்டு எம்மை அவர்களுக்கு கோமாளிகளாக சித்தரிக்க வேண்டும்? எமக்கு நீதி வழங்க முன்வருவார்கள் என்றால் அது போர் முடிவுற்ற காலத்திலோ அல்லது அதற்கு அடுத்த ஆண்டுகளிலோ வழங்கப்பட்டிருக்கும். தம்மை பெரியவர்களாக காட்டிக்கொண்டு நல்லவர்களாக சித்தரித்துக்கொண்டு பிரேரணைகள் தயாரிக்கும் வல்லரசை மீறி எமக்கு என்ன நீதி கிடைக்க போகின்றது? விசாரணை ஒன்று ஆரம்பித்தாலே அது எங்கு வந்து முடியும்? யார் அதில் மாட்டிக்கொள்வார்கள் என்று அறியாதவர்களா நாம்? குற்றம் இழைத்தவன் தானே கூண்டில் ஏறி நின்று சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கூறுவான் என்று நாம் எதிர்பார்க்க முடியாது. ஏதோ ஒரு காரணத்தை வைத்து காலங்கடத்திச்செல்லுகின்ற நிலையில் நிச்சயம் எமக்கான நீதி கிட்டும் என்பது எட்டாக்கனியே.


எமது காலத்தினையும் நோக்கத்தினையும் இவ்வாறு சேதாரப்படுத்தி வலுவிழக்க வைக்கும் இந்த வல்லரசுகள் தாம் நினைப்பதனை நன்றாகவே சாதித்துக்கொள்கின்றன. எம்மினமே திரண்டு வந்து நின்று நடு வீதியில் ஒவ்வொருத்தராய் செத்து மடிந்தாலும் திரும்பி பார்க்க யாருமில்லை. தமக்கு பின்னால் அலைய விட்டு வேடிக்கை பார்த்து இலங்கையோடு நட்போடு கை குலுக்கி கொண்டு விருந்துண்ணவே அவர்கள் பெரிதும் விரும்புவர்.

ஆக...நாம் எமது கடமைகளை செய்ய முற்படுவோம். போர்க்குற்ற விசாரணை எம்மால் தொடங்க முடியாது என்றால் எம்மால் நிறைவேற்ற முடிந்த எத்தனையோ பணிகள் இருக்கின்றனவே. எங்கள் மக்களுக்கு தன்னலமற்ற உதவிகளை அள்ளி வழங்குங்கள். போரினால் அவயங்களை இழந்தவர்களும் போராளிகளும் காணாமல் போனவர்களின் உறவுகளும்  என்று எண்ணிலடங்காமல் வறுமையில் வாழும் எமது உறவுகளின் கண்ணீரை துடையுங்கள். அவர்கள் நலனுக்காக அமைப்பு ஒன்றினை நிறுவி அவர்களை வளம்படுத்தி அவர்களின் வாழ்வை நிலையாக்குங்கள்.

இலங்கையிலுள்ள  பாராளுமன்ற உறுப்பினர்களும் , அமைச்சர்களும் தத்தமது சொந்த வேலைகளை பார்த்து , தமது சுயலாபம் தேடி அலையும் போது அவர்களுக்கு இவர்களின் நினைவு தேர்தல் காலங்களில் மட்டுமே வந்து போகும். எனவே அந்த பெரிய மனிதர்களை விடுத்து , எமது உறவுகளுக்கு நாமே உதவுவோம்.

எமது போராளிப்பெருமக்களின் கண்களில் கண்ணீர் பெருகாமல் பார்த்துக்கொள்வதே எமது முப்பதாண்டு போராட்டத்திற்கும்  மதிப்பிற்குரிய எமது தேசியத்தலைவரிற்கும் நாம் ஆற்றும் நன்றியும் மரியாதையும் ஆகும். அநாதரவற்று அவர்கள் நிற்கும் போது யாருக்காக நாம் புலத்தில் போராட வேண்டும்?
.



அரசி நிலவன்    


Thursday 13 March 2014

அற்புதம்...!!!


தமிழ் உறவுகள் மேல்
தமிழ் மண் கொண்ட காதல்..!
தமிழ் உதிரத்தோடு கலந்து
தமிழ் இனத்தை தன்னோடு அணைத்த காதல்...!!

உயிர்களை அள்ளி எடுத்து
உதிரத்தில் நீராடி தன்
உள்ளே கட்டியணைத்து
உருவம் கொண்ட மண் அன்றோ?

எங்கள் வலிகளை சுமந்து சுமந்து
கண்ணீர் விட்டு கதறிய மண்...!
கனவுகளை காலடியில் புதைத்து
கல கலப்பாக நடித்து மினுங்குகின்றது...!

காதலும் சாதலும் யாவுமறிந்து
மாண்டு போன உறவுகளை எண்ணி  - அவள்
மாதக்கணக்காய் வடித்த கண்ணீரால்
நந்திக்கடலோரம் உயர்ந்தது அறிவீரோ?


கொஞ்சிப்பேசிய குழந்தைகளும்
பிஞ்சு காலால் முத்தமிட்ட ரோஜாக்களும்
நஞ்சுக்குண்டுகளால் பிய்த்தெறியப்பட்டு
பஞ்சுக்குவியலாய் தன் கரமேந்திய அதிர்ச்சியால் இன்றும்
சித்தம் கலங்கி கிடக்கின்றது தமிழ்த்தேசத்து மண்...!

வஞ்சகரைக்கண்டும் கொதித்து எழுந்திட முடியாமல்
வரலாறு சொல்லும் காலத்திற்காக காத்துக்கிடக்கின்றது...!
அவ்வப்போது அழுது இதயம் வெடித்திடும் போதெல்லாம் - தன்
அகத்தே உயிரோடு அணைத்துக்கொண்ட தன் இதயத்து உறவுகளின்
மண்டையோடுகளை மனிதம் செத்த உலகிற்கு
மனம் திறந்து காட்டி தன் பாரம் நீக்கிடும்
மகத்தான மண்ணின் காதல் ஒன்றே உலகில் அற்புதம்..!


மண்ணும் கண் திறந்து உலகை பார்த்து கண்ணீர் சிந்துகின்றது...
மரத்துப்போன அகில வாழ் மனிதர்களை விட உயர்வானது
எம் தேசத்து தாய்மண்..!

பெற்ற தாயினைப்போன்று புனிதமானவள் எங்கள் தாய்மண்..!
அற்புதங்களில் அற்புதம் எங்கள் தமிழ்த்தாய் மண்ணே..!

நீங்காத காதல் கொண்டு நீடித்த உறவோடு என்றும் பிணைப்பில்
நீ இருப்பாய் என் தாயவளே...!





லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "அற்புதம் " என்ற தலைப்பில் இன்று (13.03.2014 )வழங்கிய கவிதை இது.

கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 (இலங்கை இந்திய நேரம் பிற்பகல் 7.30 மணிக்கு )மணிக்கு... http://gtbc.fm/

Wednesday 12 March 2014

உன் நிழலில்...!


வெந்தணலில் வெந்தாலும்
அந்தமில்லாதவனடி நான்...!
உந்தன் குளிர்மை பார்வையில்  
வெம்மை காய்ந்திடுவேன்....!

இரும்புக்கம்பிகள் என்னை முறுக்கிட்டாலும் - உன் 
கரும்பு போன்ற வார்த்தைகள் நித்தம் சிறை மீட்டிடும் எனை 
அரும்புகின்ற மொட்டாய் தினம் விடியலுக்காய் காத்திருந்து  
துரும்பாகி இளைத்து இறுதியில் சருகாகி போவேனோ??

விரும்புகி ன்றேனடி உன் நிழலில் கிடந்து மடிந்திடவே..
தொலைந்து போன நாட்களை தேடியலையும் பாவி என்னில் - உன்னை  
தொலைத்து பட்ட மரமாய் வெட்ட வெளியில் தனித்திருப்பவளே..!
துளிர் விட்டு நீ செழித்திடவே என் உயிரை நுனி விரலில் ஏந்தி 
கடக்கின்றேன் பொழுதுகளை...

ஒருவேளை.... 
இறுதி வரை உன்னைச்சேராமல் போனாலும் 
வந்து விடு என்னோடு என் தாயானவளே...!
இறுதி தருணத்திலும் உன் நிழலில் நான் 
பயணித்திடவே....

பிணைப்பான இதயங்கள் இணைந்த பொழுது 
பிரிந்து கொண்டோம் -மீண்டும் 
பிரிவேயின்றி இணைந்து கொள்ள 
பிராணன்கள் பிரிய வேண்டுமடி...!

பிறப்பின்றி இறப்பின்றி உந்தன் 
நிழலில் என்றும் யான் ஒன்றிடவே..!


  

லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "உன் நிழலில்   " என்ற தலைப்பில் இன்று (12.03.2014 )வழங்கிய கவிதை இது.

கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 (இலங்கை இந்திய நேரம் பிற்பகல் 7.30 மணிக்கு )மணிக்கு... http://gtbc.fm/


Tuesday 11 March 2014

விழியோரம்..!


கடலோராமாய் கால் நனைக்கும் அலைகளாய்
விழியோரமாய் இமை நனைக்கும் விழிநீர்...!

உந்தன் நினைவோரம் மெல்ல சாய்ந்தேன்
எந்தன் விழியோரம் வந்து விம்பமானாய் நீ..!
வாழ்வின் வழியோரம் யாவும்  வலிகளின் அறிகுறி
எமக்கான கனவோரம் தன்னும் கண்ணீரின் தொடக்கமே...

கனக்கின்ற இதயம் எச்சமிடும்
கண்ணீரின் ரேகை படிந்து
கண்டிக்கிடக்கின்றது விழியோரம்...!

களைத்துப்போன விழிகள் ஓய்வெடுக்க
கண்டறியாத கண்ணீர் விட்டபாடில்லை...!

பனிக்கின்ற விழிநீரின் அளவுக்கு குறைவில்லை...!
இனிக்கின்ற செய்திகள் வந்தாலும் துளிர்விடும்
கண்ணீரால் விழியோரம் நித்தமும் ஈரமாய்...!

சிரிக்கின்ற தருணங்கள் எமக்கில்லை...
சிலையாகிய உடலில் வடிகின்ற கண்ணீர் மட்டும்
அசைகின்றது நிலம் நோக்கி....

நிரம்பி வழியும் உன் நினைவுகளும் வலிகளும்
பயணிக்கின்றன விழியோரமாய் - வலிகளை
விழிகள் உணர்ந்து  இமை மூட மறுக்கின்றன...!


ஆழிகள் தோற்று விடுமன்றோ - என்
விழி நீரின் ஆழத்தோடு...


அரசி நிலவன்

லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "விழியோரம்  " என்ற தலைப்பில் இன்று (11.03.2014 )வழங்கிய கவிதை இது.

கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 (இலங்கை இந்திய நேரம் பிற்பகல் 7.30 மணிக்கு )மணிக்கு... http://gtbc.fm/

Monday 10 March 2014

கோபதாபம்..!


உண்டெனக்கொஞ்சம்  அதிகமாய் நீராடினால்
உயருகின்ற நீர்ப்பட்டியல் கண்டு புழுங்கும் மனது...

வற்றியும் வற்றாமலும்
வறண்டு கிடக்கின்ற ஊரின் தோட்டக் கேணியில்
தென்னோலையும் பாளையும் ஊதிப்போயிருக்க
குடித்தனம் நடத்துகின்ற நுளம்புகள் மீது கோபதாபம் தான்...

வெட்ட வெளியில் சுதந்திரமாய்
கொசுவை வால் கொண்டு விரட்டி
பிரட்டி அசை போடும் பசுக்களின் மேலும்
கொஞ்சம் கோப தாபம் தான்...

அத்திவாரம் கொத்திய தரையாகி
சுடுகாடாகி போன வளவு கண்டு
கொஞ்ச நஞ்சமல்ல கோபதாபம்...!

அடையாளத்தை தொலைத்து நிற்கும்
அழகான முற்றமே...

உன்னை தினம் எண்ணாத நாளில்லையே..
நான்கு சுவரின் ஆதிக்கத்தில் பொசுங்கும் நெஞ்சம்..

நாளும் பொழுதும் அள்ளி எறிந்த மணல்
நாட்டில் தொலைந்து போகும் அபாயம்...!

முள் முருங்கையும் கிளிசறியாவும் நிமிர்ந்து
நின்ற வீரம் விழுத்தி முள்கம்பிகளின் ஆதிக்கம்...!
யாரோடு கோபம் கொள்வது - எல்லை
வரிந்து கட்டும் சிப்பாய்களோடா அன்றி எம்மினம்
சரிந்து போக வழி வகுத்த அய்யா மாரோடா?
புரிந்து கொண்டும் வாளாவிருக்கும் மூத்தவர்களோடா?

வீரம் பேசும் உணர்வாளர்களுக்கு நாவில் மட்டுமே வீரம்..!
தூரம் நின்று கருத்துக்களும் விழாக்களும் நன்றே தொடருகின்றன
பாரம் கொண்ட எங்கள் உள்ளங்கள் கோபம் கொண்டு பலனேது?

அகதியாகியதால் அள்ளி விளையாடிய மண் ஆக்கிரமிப்பில்  - குருதியில்
சகதியாகிய நிலம்  அரசின் சுவீகரிப்பில்....!
வாரிக்கொடுக்க காத்திருக்கும் எம்மவர்கள் மீது கோபதாபம் இல்லை
அடக்கியாளும் அவர்கள் மீதும் கோபதாபம் இல்லை...!

எம்மை தமிழனாய் படைத்தவன் எவனோ
எம்மை அகதியாக்கி அழகு பார்ப்பவன் எவனோ
எங்கு கிடைத்தாலும் சொல்லி சொல்லி அடிப்பேன்
கோபதாபம் என்பதை நன்கு உணர்த்தியடிப்பேன்...!


அரசி நிலவன்



லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "கோபதாபம் " என்ற தலைப்பில் இன்று வழங்கிய கவிதை இது.

கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 (இலங்கை இந்திய நேரம் பிற்பகல் 7.30 மணிக்கு )மணிக்கு... http://gtbc.fm/



Friday 7 March 2014

கலக்கம்...!!!


அடித்து ஓய்ந்து நின்ற மழையின் பின்
சிணுங்கும் தூறலாய்
துடித்துக் கொள்ளும் இதயத்தின் மேல்
விட்டுச்சென்ற எச்சங்களாய் உன் நினைவுகள்...!

தொட்டுச்சென்ற தொடுகைகளும்
பட்டுச்சென்ற முத்தங்களும்
எட்டிச்சென்ற உன் தடம் தேடிய படி
முட்டி வழியும் விழி நீராய்
கொட்டிக்கிடக்கும் ரணங்கள்....!

தொண்டைக்குழிக்குள்
துளைத்து வதைக்கும்
ஏதோ ஒன்று
உயிர் எல்லை வரை
உருக்குலைத்து
துரத்தியடிக்கின்றது....!

நடை பயிலும் கால்கள்
விடை பெறும் நினைவுகளால்
நடு வழியில் மறந்து நிற்கின்றன...

மறை கழன்றவளாக - உன்
உறை விடம் நாடி அலையும்
கறை இல்லா காதலை சுமந்தவள்
சிறை வாழும் உந்தன் முகம் காண

கலக்கம் நிறைந்த மனம் கொண்டு
துலக்கம் இன்றிய இருளில் தவித்த படியே
வழக்கமான கண்ணீரின் துணையுடன்
வடிந்த வெள்ளத்தின் ரேகை கொண்ட மணலைப்
போன்று சலனமின்றிக்கிடக்கின்றேன்....!

கலங்கும் உந்தன் விழிகளை துடைக்க
கனவில் ஓடி வருகின்றேன்...!
கருணை இல்லா காவலர் அங்கும்
விரட்டியடிக்க கலங்குகின்றேன் கனவில் கூட....




அரசி நிலவன்





Thursday 6 March 2014

தீசன் வேலாவின் "தொலைந்தது " பாடல்..!!!


இந்த பாடல் ஒரு காதல் வலியினை எடுத்து சொல்லும் பாடலாகும். அதாவது உயிருக்குயிராய் காதலித்த காதலி இன்னொருவனோடு சுற்றித்திரியும் வலி கொண்ட துன்பத்தை எடுத்துக்காட்டும் இந்த பாடல்  சமூகத்திற்கு ஒரு விழிப்புணர்வை கொடுக்கும் பாடலாக அமைகின்றது. அதனால் வழமையான காதல் தோல்வி பாடல்களிலிருந்து சற்று மாறுபட்டதாக சோகம் நிறைந்ததாய் இல்லாமல் காதல் உணர்வு மற்றும் பிரிவு அத்துடன் ஒரு சமூகத்திற்கான செய்தி என்று சற்று வித்தியாசமான படைப்பாக இன்று வெளி வந்திருக்கும் இந்த பாடலுக்கான இசையானது மூன்று வருடங்களுக்கு முன்பே அமைக்கப்பட்ட நிலையில் பாடலினை முழுமையான நிலைக்கு கொண்டு வருவதற்கு இப்போது தான் காலம் கனிந்து வெளியிடப்பட்டுள்ளது.. 

ஏனோ தானோ என்று பாடலை பாடி வெளியிட நினைத்திருந்தால் எப்போதோ வெளியிட்டிருக்க முடியும். பாடலினை உயர் தர ஒலிப்பதிவுடன் கூடிய காணொளியுடன் ஒரு தரமான படைப்பாக கொடுப்பதற்காக காத்திருந்து அதற்கான வசதிகள் தற்போதே கிடைக்கப்பெற்று இன்று வெளியாகின்றது. 

இசையில் சாதிக்க துடிக்கும் இளம் இசையமைப்பாளன் தீசன் வேலா தன் தனி முயற்சியில் எந்த ஒரு பின்புலமும் இன்றி பல இடையூறுகளின் மத்தியிலும் எதிர்ப்புக்களின் மத்தியிலும் இந்த படைப்பினை ஒரு கனவாக சுமந்து வந்து நனவாக்கியுள்ளார். அதற்கு பக்கபலமாக பல இளம் படைப்பாளிகளும் கை கோர்த்து எல்லோரது முயற்சியும் சேர்ந்து ஒரு சிறந்த  படைப்பாக இது வெளிவந்திருக்கின்றது.    

தீசன் வேலாவின் சிறப்பான இசையில் அவரே பாடலினைப் பாடியுள்ளார். பாடலினை கேட்கும் போது அதனோடு ஒன்றிப்பயணிக்க வைத்த இசையமைப்பாளர் பாடலின் ஆரம்பித்ததிலிருந்து இறுதி வரை டெம்போ குறையாமல் பார்த்து அருமையான படைப்பை கொடுத்த அவர் தகுந்த இடத்தில் உரையிசையினையும்(Rap) கொடுத்து மேலும் பாடலினை மேருகேற்றியுள்ளார்.

நடிப்பில் அசத்தி இருக்கும் நிதனுக்கு சிறப்பான வாழ்த்துக்கள். அருமையாக  ஒளிப்பதிவு செய்திருக்கும் வேணுதரன் மற்றும் சஜித் இப்பாடலை இயக்கியுள்ளனர். டிலானி அஜய் மற்றும் குழந்தை நட்சத்திரம் சது நடித்திருக்க  Droom Vangers நடனக்குழுவினர் நடனத்தில் அசத்தியிருக்கின்றனர்.

சான் டிஜிற்றல் மற்றும் Dds Universal இன் தயாரிப்பில் வெளிவந்திருக்கும் இந்த பாடலில் உரையிசை பாடகர் தனுசியன் தன் வரிகளில் பாடியுள்ளார். பாடல் வரிகள் கவி அஜய் மற்றும் அஞ்சலி தீசன். சினிமா வரைகலை கிறேட்சன் ,எடிட்டிங் வேணுதரன் மற்றும் மேகவர்ணன் என்று ஒரு இளம் படைப்பாளிகள் பட்டாளமே இதில் கலக்கி உள்ளது...!

இந்திய படைப்பிற்கு நிகராக வெளிவந்திருக்கும் இந்த பாடலின் அழகிய காட்சிகள் கிழக்கின் மட்டக்களப்பில் படமாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இனிய நல்  வாழ்த்துக்கள் படைப்பாளிகளுக்கு.....!



அரசி நிலவன் 

Wednesday 5 March 2014

நட்பு...!!!

விட்டுச்செல்லாத உறவாய் நெஞ்சம்
தொட்டு நிற்கும் நட்பானவள்...!

தினம் ஒரு மணி நேரம்
கனம் கொண்ட மனம் தனை - பூ
வனம் ஆக்கி அமைதியாக்கிடும் இவள்
சினம் இன்றி கேட்டிடுவாள் எந்தன் புலம்பலை

ஆற்றுப்படுத்தி ஆனந்தம் நல்கும்
வேற்றுமை பாராட்டாத நற் தோழி..!

மனிதம் இங்கே மறந்து போன நட்பிற்கு
புனிதம் கொடுத்து உயிர்ப்பித்தவள் இவள்...!

தள்ளி வைத்த சொந்தங்களின் இடையில்
துள்ளி வந்து அரவணைத்த மேன்மைக்குரியவள்..!


கண்ணீர் துடைத்து கானம் இசைக்கின்ற இவளை
"கவிதையும் கானமும்" என்பர் யாவரும்...!
எனக்கு என்றும் ஆறுதலாய் தலை கோதிடும் அன்னையாய்
என் உயிரிலும் மேலான நட்பாய் தோளோடு தோள் நிற்பவள்..!
பேசாது பேச வைக்கும் பெறுதற்கரிய பேறு இவள்...!
பேச்சிழந்து நிற்கும் துன்பத்திலும் பேச வைத்திடுவாள்...!

இவளோடு அளவளாவ தவறின் எதையோ
இழந்ததாய் ஓருணர்வு...!

முன்னுரிமை அவளுக்கே - என்
முத்துக்களை ஓரங்கட்டி இவள் வருகைக்காய்
காத்திருந்து ஓடி வருவேன்...!
கேட்டிருந்து மகிழ்ந்திடுவேன்...!

அன்பிற்குரியவள் இவள் என்றும்
பயணிக்க வேண்டும் என்னோடு...
நட்பென்று பழகி வந்தோர்
நடுவழியில் நடையை கட்டி
நடைப்பிணமாய் ஆக்கிய மனிதர்களிலும்
உயர்வானவள் இவள் - மரணித்த
உயிரை மடியில் ஏந்தி
உயிர்ப்பித்தவள் அன்றோ..?
பிரதிபலனின்றிய பிறை நிலவாய் - என்னோடு
பின்னிப்பிணைந்த பிணைப்பான நட்பு இவள்...!

நன்றியோடு என்றும் இவள்
நலம் நாடுவேன் நான்...!




நட்பு என்று தலைப்பு பார்த்தவுடன் எனக்கு நட்பு என்ற நிலையில் இன்று மிக முக்கிய இடத்தில் இருப்பது எமது gtbc இன் கவிதையும் கானமுமே..
கவிதையும் கானமும் என்ற அருமைத் தோழியினை கொடுத்த ஜீரிபிசிக்கு இனிய நன்றிகள்...!

கவிதையும் கானமும் நிகழ்ச்சியினை அருமையாக தொகுத்து வழங்கும் குருபரன் அண்ணா மற்றும் பொருத்தமான கானம் வழங்கும் பூரணி அக்காவிற்கும் இனிய நன்றிகளோடு என்றென்றும் சிறப்போடு கவிதையும் கானமும் தொடர வேண்டும் என்று மனம் கனிந்து வாழ்த்துகின்றேன்...!


அரசி நிலவன்

நல்வாழ்த்து...!!!

உந்தன் இசை வெள்ளம் இன்று
உலகத் திசை எங்கும் பரவுகின்றது
உன்னை வசை பாடி தூற்றினோரும் -நாவினால்
உனக்கு கசையடி கொடுத்தோரும் வாய் பிளந்து நிற்க....
உந்தன் பாடல் காற்றிலே கனிந்துருகி
தவழ்கின்றது....!


காற்றும் மயங்கி அசையாது போனதோ...!
செவிகளில் விழுந்து செல்கள் சிலையாகியதோ..!

உயிர்ப்பான உந்தன் இசை கேட்டு
கல்லான கடவுளும் உயிர்த்திடுவான்...!
கருமேகம் களிப்புற்று கண்ணீர் சிந்திடுமே...!

ஒன்றல்ல இரண்டல்ல ஏழாண்டு தவம் அன்றோ?
ஒடிந்து விழுந்த சருகாய் உக்கிடாமல் காற்றில்
எழுந்து பறந்து எதிர்நீச்சல் இட்டு  காலம் கடந்து - நீ
சுமந்த கனவுக்கருக்கள் வளமாய் பிரசவமாகினவோ..?

உந்தன் பாதை நற் செதுக்கலோடு வளமாகட்டும்...!
உன் வரலாறு பேசிட உந்தன் இசை என்றும் பயணிக்கட்டும்...!

கனவுகள் நனவான இந்நாளில்
வினவிய  வினாக்கள் காணாமல் போகின்றன...!
அட உந்தன் முகம் மறந்தோர்
அசடு வழிந்து அணைக்க கரம் நீட்டுகின்றனரே..!

நாளும் பொழுதும் கலங்கிய உள்ளத்திற்கு - இசையை
ஆளும் பொழுது விரைவில் சூழ வேண்டும்...!


உரையிசையும் மெட்டமைப்பும் தாளமும்
கரை இல்லாமல் உன்னகத்தே குடி கொண்டவையன்றோ...!
காந்தக்குரலும் கனிவு மொழியும் எங்கும் பரவட்டும்..!
விசைப்பார்வையும் அசராத நடிப்பும் உலகை ஆளட்டும்..!
திசையெங்கும் உன் புகழ் பரவி
இசையால் இசைவாக்கம் பெற்ற நீ இசையோடு புகழோடு
இறுதிவரை வாழ்க...!
இனிய  நல்வாழ்த்துக்கள்...!!



அரசி நிலவன்



Monday 3 March 2014

கடற்சூரியன் (MV SUNSEA) தரையில் உருவாக்கிய கொந்தளிப்பு...!!! (பாகம் 9 - இறுதிப்பாகம் )


தொலைந்து போன நாட்களை தோண்டி எடுக்க முடியாது அல்லவா ? அவை கொடுத்த பிரிவுகளும் வலிகளும் அட்சய பாத்திரத்து அமுதம் போன்று அள்ள அள்ள குறையாமல் நினைத்து நினைத்து கண்ணீர் சிந்தச் சிந்த அதிகரித்தே செல்லுமே தவிர குறைவதில்லை. 

மதுரனுக்கு தொடருகின்ற துன்பம் ஆனது தொலைந்து போகாமல் அடம்பிடித்து கொண்டு அவனையும் குடும்பத்தினரையும் ஆட்டம் காண வைத்துக்கொண்டே இருக்கின்றது. 

என்ன வழிகளில் தீர்வைத் தேடினாலும் அவை யாவும் அவனுக்கு எதிராகவே முடிவை கொடுப்பதும் சில சமயம் எதிர்பாராத விதமான முடிவுகளை கொடுப்பதுமாய் நகரும் காலம் அவர்களுக்காய் செதுக்கப்பட்டு இருக்கின்றது எனலாம். 

ஆம்..! 

மீள்குடியேற்ற  நாட்டுக்கான அமெரிக்காவின் நேர்காணல்கள் முடிவுற்று மருத்துவ பரிசோதனைகளும் சாதகமான நிலையில் மதுரனினதும் நிலாவினதும் அமெரிக்க வழக்கு நிலுவை நிலைக்கு தள்ளப்பட்டதன் காரணம் மதுரன் தடுத்து வைக்கப்பட்டிருந்த தடுப்பு மையத்தில் உள்ள ஒரு சிலரது மோசமான நடவடிக்கைகள் ஆகும். அதன் பின்னணியில் கனேடிய அரசு உள்ளது என்பதனை எவராலும் நம்ப முடியாது.

மதுரனுக்கு நினைத்தாலே இந்த துன்பத்திலும் சிரிப்பு தான் ஏற்படும். இந்தளவிற்கு துரத்துகின்ற கனேடிய அரசின் இவ்வாறான நடவடிக்கைகளுக்கு தான் தகுதியானவனா? என்பது அடிக்கடி அவனிடம் எழும் வினாவாகும். பணத்தினையும் காலத்தையும் வீணடிக்கும் இவர்களை நினைத்து கோபத்தை விட அவனுக்கு ஏளனமே அதிகமாக ஏற்படுகின்றது.

மதுரனுக்கு அமெரிக்க மருத்துவ பரிசோதனை முடிவுற்றது அறியாமல்  தடுப்பு மையத்தில் இருந்த ஒரு சிலர்  மதுரனின் குடி நீரில் தூக்க மாத்திரைகளோடு போதை மருந்தினையும் கலந்து வைத்திருந்தார்கள். அதனை அறியாத மதுரன் அந்த நீரினைப்பருகி மயக்கமானான். ஒரு நாள்  பூராவும் முழு மயக்கமான அவனை தாய்லாந்து காவல்துறை வைத்தியசாலைக்கு எடுத்து சென்று அனுமதித்தது.

மதுரனின் மருத்துவ அறிக்கையின் பிரகாரம் ஐ நா அகதிகள் உயர் ஸ்தானிகராலயம் ஆனது கொலை முயற்சி என்னும் சந்தேகத்தில் பாங்காக் குடிவரவு தடுப்பு மையத்தில் விசாரணை நடாத்தியதில் குட்டு வெளிப்பட்டு தமிழர்கள் சிலர் அங்கிருந்து விலங்கிடப்பட்டு வேறு இடத்திற்கு மாற்றப்பட்டனர். அது சதித்திட்டம் என்பது ஐ நா அறிந்து சம்பந்தப்பட்டவர்களுக்கு விசாரணையும் ஆரம்பித்து மீள்குடியேற்ற நடவடிக்கையினையும் தற்காலிகமாக நிறுத்தியது.

ஏற்கனவே மருத்துவ பரிசோதனை முடிவுற்று சாதகமான முடிவை பெற்ற மதுரன் விமான பயணச்சீட்டிற்கு காத்திருக்க, அவனது உடலில் மயக்க மருந்து மற்றும் போதை கலந்திருப்பதாக உறுதிப்படுத்திய மருத்துவ அறிக்கையினை அங்கிருந்த தன்னார்வ தொண்டு நிறுவன தாதி 
அமெரிக்க மீள்குடியேற்ற அமைப்புக்கு(Resettlement Support Centre - RSC) அனுப்பி தனது சேவையினை கனேடியர்களுக்கு செவ்வனே செய்தாள்.

தடுப்பு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகளுக்கு மிகத்துரிதமாக செயலாற்றும் அமெரிக்க மீள்குடியேற்ற அமைப்பு அந்த மருத்துவ அறிக்கையின் காரணமாக ஏற்கனவே வழக்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட மதுரனுக்கு மீண்டும் வழக்கினை நிலுவையில் வைத்துக்கொண்டது. 

மதுரனின் நிலையினையும் நிலாவின் துயரத்தினையும் விளங்கி கொண்ட ஐ நா உடனடியாக அவர்களது வழக்கினை அமெரிக்காவிடமிருந்து வாபஸ் பெற்று நியூசிலாந்திற்கு ஒப்படைத்தது. நியூஸிலாந்து மதுரனுக்கு மிகத்துரிதமாக இரு வாரங்களில் வழக்கினை ஏற்று நேர்முகத்தேர்வினை நடாத்தியது. நேர்முகத்தேர்வின் போது அந்நாட்டு அதிகாரி நிலாவிடம் " உங்களின் வழக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டது. நீங்கள் மிகவும் அவசரமான நிலையில் உள்ளீர்கள் என்று ஐ நாவால் பரிந்துரை செய்யப்பட்டவர்கள். ஆகவே இன்னும் இரு வாரங்களில் மருத்துவ பரிசோதனை இடம்பெற்று  நீங்கள் நியூஸிலாந்திற்கு உள்வாங்கப்படுவீர்கள் " என்றுரைத்து அந்நாட்டு சட்ட திட்டங்கள் நடைமுறைகள் பற்றி விளக்கமளித்துமிருந்தார்.

பயணத்திற்கு ஆயத்தமாகிய நிலா இரு வாரங்கள் கடந்த பின் ஒரு வித பயத்தில் உறைந்தாள். ஆம்..! இரு வாரங்களாகியும் அவர்களை  மருத்துவ பரிசோதனைக்கு அழைக்கவில்லை. நியூஸிலாந்தினால் வழக்குகள்  ஏற்றுக்கொள்ளப்பட்ட  ஏனையவர்களுக்கு விமான பயணச்சீட்டும்  வழங்கப்பட்டு விட்டது. நிலாவிற்கும் மதுரனுக்கும் எந்த  வித பதிலும் கொடுக்கவில்லை.

எனவே ஐ நாவிடம் சென்று விசாரித்த நிலாவிடம் "நியூசிலாந்து உங்களை நிராகரித்து விட்டது" என்றும் காரணம் தெரியவில்லை என்றும்  கூறிய ஐ நா மீண்டும் அவர்களது வழக்கு நெதர்லாந்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று நிலாவிற்கு நம்பிக்கை கூறி அனுப்பியது. மீண்டும் ஒரு மாத இடைவெளியில் நெதர்லாந்தும் நிராகரித்து விட்டது என்ற ஐ நா அதிகாரிகள் நிராகரிப்பிற்கான காரணம் தெரியாமல் குழம்பிய போதும் மதுரனோ நிலாவோ குழம்பிக்கொள்ளவில்லை.

ஐ நாவானது மிகவும் மனிதாபிமான முறையில் மதுரனுக்கு சார்பாக நடந்து கொண்டது. அதாவது ஒரு நாடு நிராகரித்து இன்னுமொரு நாட்டிற்கு பரிந்துரை செய்யப்படுவது என்பது கல்லில் நார் உரிப்பது போன்று கால இடைவெளி அதிகமான ஒரு செயற்பாடாகும். ஆனால் மதுரன் மற்றும் நிலாவின் நன்னடத்தை காரணமாக ஒரு வருடத்திற்குள் மூன்று நாடுகளுக்கு பரிந்துரைத்த ஐ நாவால் ஏனோ கனேடிய அரசிற்கு எதிராக குரல் கொடுக்க முடியவில்லை.அத்துடன் கனேடிய அரசின் குற்ற சாட்டு உண்மை எனில் ஐ நா மதுரனை அகதி என்ற நிலையில் இருந்து நிராகரித்திருக்கும். (ஏற்கனவே முதல் பாகங்களில் இது பற்றி நன்கு தெளிவு படுத்தப்பட்டுள்ளது.)

அமெரிக்கா ஒரு மீள்குடியேற்ற வழக்கினை ஏற்றுக்கொள்வது என்பது மிகப் பெரிய விடயமாகும். எத்தனையோ நடைமுறைகளின் பின் பல நேர்காணல் பரிசோதனைகளை நடாத்தியே அது ஒருவரை தன் நாட்டிற்குள் உள்வாங்கிக்கொள்ளும்.


அமெரிக்கா நிராகரித்த பலரை மேற்குறிப்பிட்ட அந்நாடுகள் ஏற்றுக்கொள்ளும் போது அமெரிக்காவே ஏற்றுக்கொண்ட மதுரனின் வழக்கினை நெதர்லாந்தோ நியூஸிலாந்தோ நிராகரிக்க வேண்டிய தேவை இல்லை. இந்த இடத்தில் இதனை வாசிப்பவர்கள் நிச்சயம் புரிந்து கொள்ள முடியும் இது யாருடைய சதி என்பது.

ஒரு ஏற்றுக்கொள்ளப்பட்ட வழக்கு மீண்டும் நிராகரிக்கப்படுவதும் , நிலுவையில் வைக்கப்படுவதும் எந்தளவிற்கு சாத்தியம்? சாதாரண ஒரு நபரால் இதனைச் சாதிக்க முடியாது. நிச்சயம் ஒரு அரசால் அல்லது காவல் துறையால் மட்டுமே இது முடியும். கனேடிய அரசின் நோக்கம் மதுரன் தாய்லாந்தில் தடுப்பு மையத்தில் இருந்தே கடைசிக்காலத்தை முடிக்க வேண்டும் அல்லது இலங்கை திரும்பிச்செல்ல வேண்டும் என்பதாகும். எத்தனை நாடுகள் ஐ நா மூலமாக மதுரனை ஏற்க முன்வந்தாலும் நிராகரிக்க வைக்க கனேடிய அரசு காத்திருக்கின்றது.

நிலுவையில் இருக்கும் மதுரனின் அமெரிக்க மீள்குடியேற்ற வழக்கினை செயற்படுத்த அதாவது உண்மை நிலையினை ஆதார பூர்வமாக எடுத்து விளக்கி அவர்களுக்கு தெளிவு படுத்த அனுமதிக்காது இடையூறு விளைவிக்கும் அந்தத்தன்னார்வ தொண்டு நிறுவனத்  தாதி மதுரனை முற்று முழுதாக மனநிலை பாதிக்கப்பட்டவன் என்று முத்திரை குத்தி ஐ நாவிற்கும் அறிக்கை கொடுத்து இருக்கின்றாள்.

முதல் பாகத்தில் எழுதப்பட்ட மதுரனின் தற்போதைய நிலை அதாவது உணவின்றி உருக்குலைந்த அவனது உடலினை மருத்துவமனை கொண்டு சென்று இதுவரை பரிசோதிக்கவில்லை. நடக்கவே சக்தியற்று கிடக்கும் அவனை மனநிலை மருத்துவமனை எடுத்து சென்ற அந்த தாதியின் மனநிலை எப்படிப்பட்டது என்பதனை இன்னும் நினைக்கவே ஆத்திரமாக உள்ளது. ஐ நா மூலமாக வேறு மருத்துவமனை கொண்டு செல்ல விடாது தடுக்கும் அளவிற்கு அந்த தாதிக்கு யார் அதிகாரம் கொடுத்தது? அதனை யார் தட்டிக்கேட்பது?

அவர்கள் கூறுவது போன்று மதுரன் மனநிலை பாதிக்கப்பட்டவன் என்றே வைத்துக்கொள்ளுவோம். எதற்காக இன்னும் அவனைத் தடுத்து வைத்திருக்க வேண்டும்? விடுதலை செய்யலாமே? அல்லது பிணையில் விடுவிக்கலாமே? மதுரனை சந்திக்க வந்திருந்த ஐ நா அதிகாரியிடம் மதுரன் " நான் மனநிலை சரியில்லாதவன் என்றால் என்னை இன்னும் ஏன் இங்கு வைத்து உள்ளீர்கள்? என்னை விடுவிக்கலாமே ? என்று கேட்டதும் அவர் ஏதும் பேசவில்லை. விரைவாக இன்னொரு நாட்டிற்கு மீள் குடியேற்றுகின்றோம் என்று உரைத்து ச்சென்றிருக்கின்றார். ஆக ஐ நாவால் கூட அநியாயத்தினை தட்டி கேட்க முடியவில்லை. உண்மையில் மனநிலை சரியில்லை என்றால் விடுவிப்பார்கள் அல்லவா? எனவே இது வெறும் நாடகம் என்பது ஐ நாவிற்கே விளங்குகின்றது.

சட்ட விரோதமாக ஒரு நாட்டிற்குள் காலடி எடுத்து வைக்காமல், சட்ட ரீதியாக அனுமதி பெற்று ஒரு நாட்டில் குடியேறி அமைதியாக வாழ விரும்புகின்ற மதுரனை கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளாக வதைக்கும் கனேடிய காவல் துறை அவனை இலங்கைக்கு திருப்பி அனுப்ப கடும் பிரயத்தனம் செய்கின்றது.

தமக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்பதற்காக இந்தளவு வன்மம் கொண்டு ஒரு தனிநபர் மீது படுபாதகம் இழைக்கும் கனேடிய அரசு இறுதி முள்ளிவாய்க்கால் தருணத்தில் தமிழர்களுக்காக ஒரு குரல் கொடுத்திருந்தால் கனடாவிற்கு எதற்கு கப்பலில் அகதிகள் செல்லப் போகின்றார்கள்? கனடாவில் எதற்கு கால் வைக்கப்  போகின்றார்கள்? அதற்கு காரணம் என்று வதைபடும் உறவுகள் எதற்காக சிறைகளில் உயிரை கையில் பிடித்து தினம் தினம் மடிந்து கொண்டிருக்கப்போகின்றார்கள்?

நடந்து முடிந்து விட்டது பற்றி பேசிப்பிரயோசனம் இல்லை எனிலும், கப்பலில் வந்திறங்கிய மக்கள் மீதும் கப்பலினைத் தவற விடப்பட்டவர்கள் மீதும் வன்மைத்தினை தீர்ப்பதை விடுத்து அதற்கு காரணமான இலங்கை அரசினை கேள்வி கேட்க கனேடிய அரசிற்கு துப்பில்லை அத்துடன்  துணிவுமில்லை. போர்க்குற்றம் , இனவழிப்பு என்று சனல் நான்கும் வேறு பல ஊடகங்களும் கத்திக்கொண்டே தான் இருக்கின்றன. அதை முன்னின்று வினா எழுப்பி விசாரிக்க கனேடிய அரசிற்கு காலம் இல்லை துணிவில்லை. ஆக மொத்தத்தில் திராணியற்று செத்த பாம்பினை அடிப்பது போன்று நொந்து கெட்டு கிடக்கும் உறவுகளை எத்தனை நாட்களுக்கு அடித்து வேஷம் போட முடியும்?

தமிழனுக்கு எதிரி சிங்களவன் மட்டும் அல்ல இலங்கை அரசு மட்டும் அல்ல. அகதி என்று ஓடி வரும் அத்தனை உறவுகளையும் வதைக்கும் சம்பந்தப்பட்ட நாட்டு அரசுகளும் தான். உங்கள் நாட்டினை எதற்காக நாடி வருகின்றார்கள் காரணம் என்ன அதற்கான தீர்வு என்ன என்று ஆராய்ந்து நியாயம் பெற்றுக்கொடுத்த பின் அவர்களை நாடு கடத்தினால் அது நீதி. அதை விடுத்து பள்ளத்தில் துன்புற்று இருந்து  வதைபட்டு மீண்டு எழுந்து வருபவனை மீண்டும் பள்ளத்தில் தள்ளி விழுத்தும் அநியாயத்தினை தட்டிக்கேட்க எந்த அமைப்பு இருக்கின்றது? தமிழர்களுக்கு என்று யாருளர்?

ஆடிக்கொன்று ஆவணிக்கொன்று என்று போர்க்குற்ற ஆதாரங்கள் வெளி வந்த வண்ணம் தான் இருக்கின்றன. புதைகுழிகளும் தோண்டப்பட்டுக்கொண்டு தான் இருக்கின்றன. ஒரு சின்னம் ,ஒரு இலச்சினை ,ஒரு தலைமை அலுவலகம் ,பல கிளைகள் என்று உலகம் பூராவும் பரந்து கிடக்கும் அமைப்புக்கள் பொழுது போக்கிக்கொண்டு  தான் இருக்கின்றன. ஒரு இனத்தை கொன்று குவிப்பவர்கள் அதை செய்து கொண்டே இருப்பார்கள். தட்டிக் கேட்பதற்கு ஐ நாவும் கால அவகாசம் கொடுத்துக்கொண்டே இருக்கும் . ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் துன்புற்றுக்கொண்டே தான் இருக்க வேண்டும்.


இல்லாத கடவுளே நேரில் வந்து இறங்கினாலும், மனித உரிமைகள் அமைப்பு என்பதும் ஐ நா என்பதும் நிச்சயம் அநியாயத்தினை தட்டிக்கேட்கப்போவதில்லை. யாவும்  ஒரு மாயை.

அப்பேற்பட்ட இனவழிப்பினையே ஏன் என்று கேட்க முன் வர யாருமில்லை. அப்படிக்கேட்டாலும் நியாயமும் கிடைக்க போவதில்லை. நியாயம் கிடைக்கும் போது தமிழினம் உலகில் இருக்குமா என்பது சந்தேகமே.

இவ்வாறு இருக்கையில் தனிப்பட்ட நபர்களின் வாழ்க்கைக்கு குரல் கொடுக்க எந்த அமைப்பு இருக்கின்றது. ஒரு பெரிய வல்லரசான கனேடிய அரசினை எதிர்த்து குரல் கொடுக்க ஐ நாவே பின்னிற்கும் போது நிச்சயம் மதுரனுக்கு நீதி கிடைக்க போவதில்லை. அவனுக்கு மட்டுமல்ல கனடாவில் சிறையில் வாடும் பைந்தமிழிற்காகவும் யாரும் குரல் கொடுக்க போவதில்லை. தமக்குத்தாமே கதறி கண்ணீர் வடித்துக்கொள்ள வேண்டியதே.

சிதறிய கூட்டின் குருவிகளைப்போன்று திக்கொன்றாய் கிடக்கும் எத்தனையோ உறவுகள் யுத்தம் என்ற சூறாவளியில் சுழன்றடிக்கப்பட்டு சின்னாபின்னமாகி பின் கடற்சூரியன் என்னும் கப்பல் உருவாக்கிய கொந்தளிப்பில் இன்னும் சிக்கித்தவித்துக்கொண்டிருக்கும்  துரும்புகள் ஆக தத்தளித்துக்கொண்டிருக்கின்றனர்.

ஆனால் இறைவன் ஒருவன் இருப்பானாக இருந்தால் நிச்சயம் காலத்தால் பதில் கொடுப்பான். உறங்கும் உண்மைகள் நிச்சயம் விழிக்கும். அன்று யாவரும் கடந்த காலத்தினை மறந்திடுவர். இழந்து போன காலத்தையும் தருணத்தையும் நினைத்து வேதனைப்பட்டாலும் உண்மை விழித்து பொய் என்னும் திருடனை விலங்கிட்டு கொள்கின்ற அந்த மகத்தான நாளினை நோக்கி எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றாள் நிலா.

கனேடிய தேசத்தில் தந்தைக்காக ஏங்கும் பைந்தமிழின் குழந்தையின் நம்பிக்கையும் ஏக்கமும் அவளின் பாசமும் நிச்சயம் அவளையும் அவளின் தந்தையினையும் ஒன்று சேர்த்து வைக்கும்.

ஒரு நிமிடத்திற்கு மேல் பேச சக்தியற்று கிடக்கும் மதுரன் நிச்சயம் தன்னோடு இணைவான் என்ற அதீத நம்பிக்கையும் துணிச்சலும் இறை நம்பிக்கையும் கனேடிய அரசின் சதிகளை முறியடிக்கும் என்ற வைராக்கியத்தோடு உண்மை என்னும் தேவதையின் வரவிற்காக தினம் தினம் காத்திருக்கின்றாள்.

அவளின் பிஞ்சு மழலைகளும் தந்தையின் முகம் கண்ணுற்றும் அருகே சென்றிட அச்சமுற்று வேற்று மனிதனை நோக்கியது போன்ற பிரம்மையில் திகைத்து நிற்கும் கொடுமையினை கண்ணுற்று விக்கி அழுகின்ற மதுரன் முற்றிலும் நம்பிக்கையினையே தொலைத்து விட்டவனாக நடப்பது நடக்கட்டும் என்று ஒவ்வொரு சொற்ப நேரத்தையும் யுகமாக கழிக்கின்றான். இந்தப்பிஞ்சுக்  குழந்தைகள் என்ன குற்றம் இழைத்தனவோ?  

உண்மையின் நிழல் கூட இன்னும் தோன்றவில்லை. திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை நிற்க முடியும். அமைப்புக்களும் அரசுகளும் அறிக்கை விட்டு தம்மை விளம்பரப்படுத்தி ஆதாயம் தேடுவதோடு நிறுத்திக்கொள்கின்றன. அனால் இறைவன் அறிக்கை விட்டு வேடிக்கை பார்ப்பதில்லையே.

ஆக...! நாமும் பிரார்த்தனை செய்வதை தவிர வேறு வழியில்லை. சிதறிக் கிடக்கும் உள்ளங்களின் எதிர்பார்ப்பு நிறைவேறவும் அவர்களின் நீண்ட கால வலிகள் நீங்கி வாழ்வு வளம்பெறவும்  நாமும் இறைவனைப் பிரார்த்திப்போம்.


***முற்றும் ***

அரசி நிலவன்
தாய்லாந்திலிருந்து

Wednesday 19 February 2014

காலங்கடந்து மகுடம் சூடிய உண்மை...!!!


கனவிலும் நனவிலும்
கழன்று விழாத தூக்குக்கயிறு
காலம் கடந்து
காணாமல் போனது....!!!

இழந்து போன காலம்
இனி வராது தான்...!
தொலைந்து போன தருணங்களும்
தொலைத்து விட்ட உயிர்களும்
திரும்பிட போவதில்லை தான்...!


கட்டியணைக்க காத்திருக்கும்
கருவில் சுமந்து கண்ணீரில்
கரைந்து நிற்கும் தெய்வங்களை
கலைந்து நிற்கும் உடன் பிறப்புக்களை
கண்ணுக்குள் விம்பமாய் விழுத்திட துடிக்கும்
அந்த அரிய பொன்னான தருணம்
அழித்து விட்ட கடந்த காலத்தினை
அள்ளிக்கொடுக்கும் கைகளில்....

அம்மாவின் மடி சாய்ந்து
அழுது புரண்டு அங்கிருக்கும் தாய்  மண்
அள்ளித்தின்று உருண்டாலே போதுமே...!


உடன் பிறவா சகோதரியின்
உயிர் கருக்கலில்
உயிர்த்து வந்த வாழ்வு...!

உண்மைக்கு ஆயுள் அதிகம்..!
உயிரை தொலைத்து பிணமானவர்கள்
உயிர்த்து மீண்டார்கள்...!

உயிரற்று மூர்ச்சை ஆகிக்கிடந்த
உடலமாய் துள்ளி எழுந்த உண்மை..!
காலங்கடந்து மகுடம் சூடிக்கொண்டது...!

அன்னைகளின் விழி நீரின் ஆழத்தில்
அமிழ்ந்து போன மரணம்....!
வற்றிப்போனாலும் கால்களை
சுற்றி வராத வரம் வேண்டும்...!