Search This Blog

Wednesday 19 February 2014

காலங்கடந்து மகுடம் சூடிய உண்மை...!!!


கனவிலும் நனவிலும்
கழன்று விழாத தூக்குக்கயிறு
காலம் கடந்து
காணாமல் போனது....!!!

இழந்து போன காலம்
இனி வராது தான்...!
தொலைந்து போன தருணங்களும்
தொலைத்து விட்ட உயிர்களும்
திரும்பிட போவதில்லை தான்...!


கட்டியணைக்க காத்திருக்கும்
கருவில் சுமந்து கண்ணீரில்
கரைந்து நிற்கும் தெய்வங்களை
கலைந்து நிற்கும் உடன் பிறப்புக்களை
கண்ணுக்குள் விம்பமாய் விழுத்திட துடிக்கும்
அந்த அரிய பொன்னான தருணம்
அழித்து விட்ட கடந்த காலத்தினை
அள்ளிக்கொடுக்கும் கைகளில்....

அம்மாவின் மடி சாய்ந்து
அழுது புரண்டு அங்கிருக்கும் தாய்  மண்
அள்ளித்தின்று உருண்டாலே போதுமே...!


உடன் பிறவா சகோதரியின்
உயிர் கருக்கலில்
உயிர்த்து வந்த வாழ்வு...!

உண்மைக்கு ஆயுள் அதிகம்..!
உயிரை தொலைத்து பிணமானவர்கள்
உயிர்த்து மீண்டார்கள்...!

உயிரற்று மூர்ச்சை ஆகிக்கிடந்த
உடலமாய் துள்ளி எழுந்த உண்மை..!
காலங்கடந்து மகுடம் சூடிக்கொண்டது...!

அன்னைகளின் விழி நீரின் ஆழத்தில்
அமிழ்ந்து போன மரணம்....!
வற்றிப்போனாலும் கால்களை
சுற்றி வராத வரம் வேண்டும்...!









Monday 17 February 2014

கடற்சூரியன் (MV SUNSEA) தரையில் உருவாக்கிய கொந்தளிப்பு...!!! (பாகம் 8)


2011  இன் முற்பகுதியில் தாய்லாந்தின் குடிவரவு தடுப்பு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மதுரன், அங்கு தொடர்ந்தும் இருக்க முடியாத சூழ்நிலையில் நாடு திரும்புவதாக அங்கிருந்து வெளியேறி மலேசியா சென்று மீண்டும் தாய்லாந்தில் வெளியேறிய போது , ஏற்கனவே மூன்றாம் நாட்டுக்கான நேர்முகத்தேர்வினை பூர்த்தி செய்த நிலையில் நாட்டை விட்டு வெளியேறியதன் காரணமாக ஐ நா அகதிகள் உயர் ஸ்தானிகராலயம் மதுரனின் வழக்கினை நிலுவையில் வைத்திருந்தது. 

அந்தக்காலப்பகுதியில் மீண்டும் கனேடிய காவல் துறையினர் மோப்பம் பிடித்து மதுரனின் இருப்பிடம் அறிந்த, ஒரு எட்டப்பனுக்கு பணம் கொடுத்து நேரடியாகவே வந்து சந்தித்துக்கொண்டனர். அதாவது சிறையில் இட்டுக்கொள்ள முயற்சிக்காமல் வாரம் தோறும் பாங்கொக்கில் உள்ள ஒரு குறிப்பிட்ட நட்சத்திர விடுதியின் வரவேற்பு கூடத்தில் மதுரனையும் நிலாவினையும் சந்தித்து மூளைச்சலவை செய்தனர். 

அதாவது கனடாவில் குரியுரிமை மற்றும் வீடு வாகன வசதி பணம் போன்ற வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கின்றோம் தற்போது ஆட்கடத்தலில் ஈடுபட்டுள்ள கும்பலினை காட்டிக்கொடுக்குமாறும் அதற்கான வழிமுறையாக தாமே பணமும் நபர்களையும் ஒழுங்கமைத்து தருகின்றோம் என்றும் ஆட்கடத்தல் முகவர்களிடம் தொடர்பு கொண்டு வியாபாரம் பேசி நடித்து அவர்களைக்காட்டிக்  கொடுக்குமாறும்  கிட்டத்தட்ட இரு மணி நேரம் இடம்பெறும் அந்த சந்திப்பின் போது தம்மை கனேடிய தூதரக அதிகாரிகள் போன்று காட்டிக்கொண்ட அவர்கள் நாட்கள் செல்ல செல்ல தமது கடலை மதுரனிடத்திலும் நிலாவிடமும் வேகாது என்று அறிந்து மிரட்ட ஆரம்பித்தனர்.

அதாவது தமது அடையாள அட்டையினை காண்பித்து தம்மை சர்வதேச கனேடிய காவல் துறை அதிகாரிகள் என்று அடையாளப்படுத்திக்கொண்ட அவர்கள் "உங்கள் இருவரையும் கடற்சூரியன் வழக்கில் தொடர்பு படுத்தி சிறையில் தள்ளுவோம். அதன் பின் உங்கள் குழந்தை அனாதரவாகி விடும்.  எனவே எமக்கு ஒத்துழைப்பு கொடுத்தால் உங்கள் மகன் சர்வதேச பள்ளியில் கல்வி கற்கலாம். கனடாவில் ஆடம்பரமாக வாழலாம் "  என்று தமது தொலைபேசியினை வைத்து கனடாவில் உள்ள மேலிடத்திற்கு தொடர்பு எடுத்து மதுரன் நிலாவின் உரையாடலை பதிவு செய்தவாறு பேசிக்கொள்வார்கள். 

அன்றைய கால கட்டத்தில் தான் மதுரனும் நிலாவும் நன்கு புரிந்து கொண்டார்கள். இவ்வாறு தான் இங்குள்ள விலை போன தமிழர்கள் தம்மைக் காட்டிக்கொடுத்தார்கள் என்பதனை. அன்று மதுரனோ நிலாவோ  யாரையும் காட்டிக் கொடுத்திருந்தால் கனடாவில் அவர்களுக்கு  வசதியான வாழ்க்கை அமைந்திருக்குமோ  இல்லையோ நிச்சயம் இன்றைய மதுரனின் சிறை வாழ்வு தடுக்கப்பட்டிருக்கும். மதுரனைப்போல் அல்லாது நேரடியாக பணம் பெற்று ஆட்கடத்தல்  முகவர்களாக செயற்பட்ட எத்தனையோ தமிழர்கள் இன்று பாங்காக்கில் கடவுச்சீட்டு இல்லாமலே சுதந்திரமாக நடமாடித்திரியும் இரகசியம் என்னவென்பது இப்போது உணர்ந்து கொள்ள முடியும். 

2011 இன் ஐப்பசியில் இருந்து தை வரை , கிட்டத்தட்ட மூன்று மாத காலமாய் மதுரனுக்கும் நிலாவிற்கும் பின்னால் அலைந்து கொண்ட அந்த ஒரு பெண் மற்றும் ஆண் கனேடிய காவல் துறை அதிகாரிகள் 2012 தை மாதத்தின் பின் தொடர்பே இல்லாமல் போய்விட்டனர். 

மதுரன் நிலா இருவருக்கும் காட்டிக் கொடுப்பு என்பது தெரியாது என்பதனை விட யார் ஆட்கடத்தலில் ஈடுபடுகின்றார்கள் என்பதே அறியாத போது எவ்வாறு விபரம் கொடுக்க முடியும். அவர்கள் முக்கியமாக தேடுவது மிகப்பெரிய ஒரு நபர் ஒருவரையே. அவரின் பெயரைத் தவிர அவரின் விபரங்கள் அறியாத இவர்களால் தகவல் எவ்வாறு கொடுக்க முடியும். எந்தவிதமான தகவல்களும் மதுரனும் நிலாவும் வழங்காமையே மேலும் மேலும் கனேடிய அதிகாரிகளுக்கு அவர்கள் மேல் சந்தேகம் வலுக்க பிரதான காரணமாகியது. 

ஏற்கனவே கனேடிய காவல் துறையின் சந்தேக நபரான மதுரனை பணத்திற்காக மற்றவர்கள் காட்டி கொடுத்தது போன்று வேறு யாரையாவது கை நீட்டிக்காட்ட மதுரனுக்கோ நிலாவிற்கோ அதிக நேரம் எடுக்காது. எல்லோரும் நேர்மை பற்றி அளவளாவலாம். ஒரு சிலராலேயே அதன் வழியில் ஒழுகிட முடியும். 

உதாரணமாக இலங்கையின் கருணா என்பவர் புலிகள் அமைப்பில் பல காலம் ஒரு தளபதியாக இருந்தவர். அதே நேரம் இறுதி யுத்தத்தில் சரணடைந்த எத்தனையோ போராளிகளில் இன்னும் சிலர் இருக்கும் இடமே தெரியவில்லை உயிரோடு இருக்கின்றார்களோ என்று கூடத்  தெரியாது. 

அந்தப் போராளிகளை விட கருணா என்பவர் அதிக காலம் போராட்டத்தில் இருந்து பல குற்றச்சாட்டுகளோடு தொடர்பு பட்டும்  இலங்கை அரசிற்கு இன்று வரை உயர்ந்த விசுவாசியாக இருப்பதற்கும், சாதாரண போராளிகள் சிறையிலும் அல்லது இல்லாமலும் போனதற்கும்  என்ன காரணம். சுயநல நோக்கிற்கான காட்டிக்கொடுப்பு ஒன்றே. அந்த காட்டிக்கொடுப்பு ஒன்றினை நிகழ்த்தினால் நாட்டில் ஆட்சி  கிடைக்கும். இல்லாவிடில் இறந்து போனாலும் மனச்சாட்சி ஒன்றில் மட்டும்  நாம் ஆட்சி புரியும் பேறு கிடைக்கும். இங்கு இரண்டாவது ஆட்சி நடத்தும் மதுரனும் நிலாவும் எந்த ஆட்சி உலகில் மாறினாலும் அவர்களே அவர்களின் மனச்சாட்சிக்கு மகுடம் சூட்டிய ஆட்சியாளர்கள்.


அந்த கனேடிய அதிகாரிகள் தை மாதத்தின் பின் தாம் கனடாவுக்கு மாற்றல் ஆகி செல்வதாகவும் ஏதும் தகவல் தெரிந்தால் மின்னஞ்சலுக்கு தகவல் கொடுக்குமாறும் தெரிவித்து இறுதியாக விடைபெறும் போது வைத்தியசாலையில் வைத்து மதுரனிடம் கைப்பற்றிய மடிக்கணினி  மற்றும் தொலைபேசிகளை திருப்பி ஒப்படைத்து விட்டு சென்றார்கள். 

அதன் பின் பணியில் இணைந்த வேறு அதிகாரிகள் மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பித்தனர். அதாவது தாய்லாந்து வந்தடைந்து தமிழர்களை சந்தித்து மறுபடி விலை பேச இருக்கவே இருந்த மதுரனின் தலை உருள மதுரனின் வீட்டிற்கே சென்று தாய்லாந்து குடிவரவுத்துறை கைது செய்து சென்றது. எந்த வித பிரச்சினையும் இல்லை. தகவல் தெரிந்தால் கொடுக்கவும் என்று சென்ற பழைய கனேடிய அதிகாரிகளிடம் இருப்பிட முகவரியில் இருந்து தொலைபேசி வரை கொடுத்து வைத்த மதுரன் குற்றம் செய்பவனாக இருந்திருந்தால் அவர்கள் சென்றதும் நாட்டினை விட்டுத்  தப்பியல்லவா சென்றிருக்க வேண்டும்.

அதற்கிடையில் ஐ நா மதுரனுக்கான வழக்கினை மீண்டும் செயற்படுத்தி மூன்றாம் நாட்டிற்கு அவர்களது வழக்கினைக் கொடுக்கும் தறுவாயில் இருக்கும் போது கனேடியச்சதியால் அது இன்னும் கால தாமதமாக்கப்பட்டது. 

அதாவது இலங்கையில் பல போராளிகளை காட்டிக்கொடுத்து தடுப்பு முகாமில் இருந்து வெளியேறி பணத்திற்காக  மூன்று பெண்களின் வாழ்வினை சீரழித்து விட்டு தாய்லாந்திற்கு தப்பி ஓடி வந்த ஒரு துரோகி(ஏற்கனவே தமிழ் இணையத்தளங்களில் வெளிவந்த செய்தி) தாய்லாந்தில் அகதிக்கான கோரிக்கை விடுத்து ஐ நாவால் அகதியாக அங்கீகரிக்கப்படாமல் இருந்த சமயம், கனேடிய காவல் துறை அவனை கொள்வனவு செய்து மதுரனுக்கு எதிராக ஐ நாவில் முறைப்பாட்டினை பதிவு செய்ய வைத்தது.

அதாவது அவனிடம் இருந்து மதுரன் பணம் பெற்று ஏமாற்றிகொண்டதாக பதிவு செய்யப்பட்ட அந்த முறைப்பாடு மதுரனின் ஐ நா வழக்கினை மூடும் நிலைக்கு நெருங்கியது. காரணம் சாதாரண நபர்களின் முறைப்பாட்டினை ஏற்காத ஐ நா ஏற்கனவே அகதி கோரிக்கை விடுத்த ஐ நாவில்  பதிவு  செய்து கொண்ட ஒருவரால் முறைப்பாடு செய்யுமிடத்து அது உடனடியாக நடவடிக்கை எடுத்தே தீரும்.

நிலாவினையும் மதுரனையும் உடனடியாக அழைத்து ஒரு நாளிலேயே விசாரித்த ஐ நா அவர்களின் வழக்கினை தள்ளுபடி செய்யும் இறுதிக்கட்ட நேரத்தில் உண்மையினை உணர்ந்து கொண்டது.

பெண்களின் வாழ்வினை சீரழித்த காரணத்தால் அதனை ஊடகங்களுக்கு தெரியப்படுத்திய நிலா மீது முன் விரோதம் கொண்ட அந்த நபர் தனது ஐ நா வின் அகதி ஏற்பு வழக்கினையே அடகு வைத்து கனேடியர்களிடம் பணம் பெற்று இந்த முறைப்பாட்டை வழங்கியிருக்கின்றார். விளைவு ஐ நா அவரது வழக்கினை நிராகரித்து தள்ளுபடி செய்து கொண்டது.

இது அந்த நபருக்கான தோல்வி அல்ல. கனேடிய அதிகாரிகளுக்கு நிலா மற்றும் மதுரனால் அள்ளிப்பூசப்பட்ட கரியே. அந்தப்படுதொல்வியினை பொறுத்துக் கொள்ள முடியாத கனேடிய காவல் துறையினர் வேறு வழியின்றி தாய்லாந்து குடிவரவு துறையினருக்கு அழுத்தம் கொடுத்து குடிவரவு சட்டங்களை மீறினார் என்ற குற்றச்சாட்டில் மதுரனை மீண்டும் கைது செய்ய வைத்தது. 

2012 ஆனி 29  அன்று காலை மதுரனின் இருப்பிடம் புகுந்த குடிவரவுத்துரையினர் அங்கிருந்த கணினி தொலைபேசிகளை எடுத்துச்சென்றனர். கணினியில் தேசியத்தலைவரின் அரிய புகைப்படங்களை சேமித்து வந்திருந்த நிலாவிடம் கனேடிய அதிகாரிகள் " LTTE இற்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு ? உனது கணவர் அதன் உறுப்பினரா? ஏன் இந்த புகைப்படங்கள் வைத்திருக்கின்றீர்கள்? என்ற பல வினாக்களை தொடுத்தனர். காரணம் எந்தவிதமான ஆதாரங்களும் இல்லையே . எனவே புலி என்று குற்றச்சாட்டு கொடுத்து சிறையிடலாம் என்ற எண்ணமாக இருந்திருக்கலாம். 

இவர் எமது தேசியத்தலைவர். இவரை நாங்கள் நேசிக்கின்றோம். இவரது படங்கள் வைத்திருந்தால் புலி உறுப்பினர் என்று அர்த்தமல்ல. அப்படி இருந்தாலும் உங்களால் என்ன செய்ய முடியும்? தாய்லாந்து அதிகாரிகளே அதைப்பற்றி கேட்கவில்லையே நீங்கள் ஏன் கேட்கிறீர்கள்? என்று உரைத்த நிலாவிடம் ஏதும் பேசாத கனேடிய காவல் துறை அந்த கணினியினையும் தொலைபெசியினையும் திருப்பி ஒப்படைத்து சென்றது.


குடிவரவு தடுப்பு மையத்தின் சாதாரண இலங்கையர்கள் உள்ள அறை 3 இல் தடுத்து வைக்கப்பட்ட மதுரனின் உண்மை நிலை விளங்கிக்கொண்ட ஐ நா அகதிகள் உயர் ஸ்தானிகராலயம் துரித கதியில் மீண்டும் மூன்றாம் நாட்டிற்கான நேர்முகத்தேரிவினை நடாத்தி ஐக்கிய அமெரிக்காவிற்கு அவனது வழக்கு கொடுக்கப்பட்டது.

இதற்கிடையில் மதுரன் கைதாகும் போது கர்ப்பிணியாக இருந்த நிலா கையில் குழந்தையோடு தவிப்பதை கண்ணுற்ற ஐ நா வானது தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றின் ஊடாக வலிந்து சென்று மதுரனை பணப்பிணையில் விடுதலை செய்தது. முற்று முழுதாக மதுரன் மீது கொண்ட நன்னடத்தை காரணமாக அந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் தமது பணத்தினை செலுத்தியது. 

மூன்றாம் நாட்டிற்கு பரிந்துரைக்கப்படுபவர்களே பிணையில் வெளியேற முடியும். அத்துடன் ஒவ்வொரு பதினைந்து நாட்களுக்கும் கையெழுத்தும் இட்டு செல்ல தடுப்பு மையம் சென்று வர வேண்டும். இரண்டாவது தடவையாக கையெழுத்திட சென்ற மதுரன் வீடு திரும்பவில்லை. அங்கும் கனேடிய காவல் துறை தனது சதி வலையினை விரித்து அந்த பிணையினை இல்லாமல் ஆக்கியது.

மதுரனை வெளித்தொடர்புகள் இன்றி தனியாக அடைத்து வைத்ததோடு அவனை அவனது மனைவி பிள்ளை தன்னும் சென்று பார்க்க முடியாதவாறு அவனுக்கான பார்வையிடலும் தடுக்கப்பட்டு கிட்டத்தட்ட மூன்று மாத காலமாக தடுத்து வைத்திருந்தனர். தாய்லாந்து குடிவரவுத்துறையினரிடம் சென்று விசாரித்த நிலாவிடம் அவர்கள் " கனேடிய காவல் துறையின் விசாரணை இருப்பதால் யாரும் சந்திக்க முடியாது " என்று கூறினர். ஆனால் இன்று வரை அதாவது இரு ஒன்றரை வருடங்கள் நிறைவடைந்த நிலையில் இன்னும் விசாரணையே இடம்பெறவில்லை. விசாரணையா அல்லது பழிவாங்கலா?

ஆத்திரம் அடைந்த நிலா கனேடிய காவல்துறையினரின் தொலைபேசிக்கு அழைத்து அவர்களை சந்திக்க விரும்புவதாக தெரிவித்ததும் உடனேயே சம்மதித்து சந்தித்த அவர்களிடம் என்ன விசாரணை எதற்காக மதுரனை தடுத்து வைத்திருக்கின்றீர்கள் என வினவியதும் தமக்கு தெரியாது தாய்லாந்து குடிவரவுத்துறையினரிடம் விசாரியுங்கள் என்று குத்துக்கரணம் அடித்த அவர்களிடம் நிலா " எனது கணவரோடு தொடர்பு கொள்ள அனுமதிக்காவிடில் மனித உரிமைகள் அமைப்பிற்கு முறைப்பாடு செய்து விட்டு இலங்கை சென்று தற்கொலை செய்வோம். வயிற்றில் இருக்கும் குழந்தையின் சாவிற்கும் கனேடிய அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் " என்று உரைத்து விட்டு எழுந்ததும் , அவர்கள் " எமக்கு சில சந்தேகங்கள் உள்ளன அதை தீர்க்க வேண்டும் " என்று இன்னொரு நாள் அவளை வரவழைத்து வினவிய வினாக்கள்  நிலாவிற்கு சிரிப்போடு இந்த நிலையில் கனேடிய காவல் துறை உள்ளதா என்ற ஏளனமும் ஏற்பட்டு கொள்ள காரணமாய் அமைந்தன.

ஆம்...கணினியில் இருந்த சில நிலாவின் கவிதைகள் மற்றும் கட்டுரைகளைப்பற்றி ஆழமாக விசாரித்த அவர்கள் அவளின் முகப்புத்தக மற்றும் வலைப்பூ முகவரிகளைப்பெற்றுக்கொண்டு இன்று வரை அவற்றினை தொடர்கின்றனர்.

அத்துடன் பிறக்க இருக்கும் குழந்தைக்காக எண் சோதிடப்படி தமிழ்ப்பெயர்கள் எழுதி சேமித்து வைத்திருந்த ஆவணத்தினை பிரதி எடுத்து வைத்திருந்து அவை யாருடைய பெயர்கள் என்று பல வினாக்கள் தொடுத்த அவர்களுக்கு அதனை விளக்கி சொல்வதற்கிடையில் நிலாவிற்கு  போதும் போதும் என்றாகி விட்டது. ஆங்கில எழுத்தின் "L"  வரிசையில் ஒரு பத்து பெயர்கள் அருகில் அந்த எழுத்துக்களுக்கான எண்களின் கூட்டுத் தொகையோடு இருப்பதனை அவர்கள் அறிந்து கொள்ள முடியாதவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு தகவல் கொடுக்கும் தமிழர்களுக்கு தெரிந்திருக்கும் அன்றோ?

ஆக ஆதாரம் ஒன்றினை உருவாக்க பிரயத்தனப்பட்ட கனேடிய படை ஆபிரிக்காவில் மதுரனுக்கு சொந்தமாக நிலம் அதாவது நைஜீரியா நாட்டில் காணி கொள்வனவு செய்து இருக்கின்றீர்களா? என்று வினவியதும் நிலாவிற்கு சிரிப்பே அடக்க முடியவில்லை. அவள் சிரிப்பதனை பார்த்து இருக்கையில் இருந்து எழுந்து கொண்ட அந்த அதிகாரி மதுரன் அங்கு போயிருக்கின்றாரா? என்றும் வினவினார்.

சம்பந்தமே இல்லாத நாட்டிற்கும் மதுரனுக்கும் தொடர்பு படுத்திய அவர்களிடம் "ஒவ்வொரு மாதமும் எமது வாழக்கை சக்கரத்தினை நகர்த்துவதே ஒரு பெரிய திண்டாட்டம். தாய்லாந்தில் பணிபுரியவோ அன்றாட சீவனத்திற்கு உழைக்கவோ முடியாது. தெரிந்தவர்களின் உதவியில் வாழ்க்கை நகரும் போது நிலம் கொள்வனவு செய்யும் நிலை எமக்கில்லை. அவ்வாறு இருந்தாலும் நாம் இலங்கையில் தான் கொள்வனவு செய்வோம். இப்படி அந்நிய தேசத்தில் வாங்க வேண்டிய தேவைதான் என்ன? என்ன காரணமாய் இதைக்கேட்கின்றீர்கள் தெரிந்து கொள்ள முடியுமா என்ற நிலாவின் கேள்விக்கு அவர்கள் கணினிப்பிரதி ஒன்றினைக்கொடுத்தார்கள்.

அதாவது அந்த கணினியில் இருந்து நைஜீரியா நாட்டில் நிலம் வாங்க இணையத்தில் தேடல் செய்து கொண்டதற்கான ஆதாரமாய் ஒரு பிரதி. உடனே அவள் "மதுரன் கணினியில் முகப்புத்தகம் மற்றும் தமிழ் செய்திகளை பார்வையிடுவதைத் தவிர வேறெதுவும் செய்வதில்லை. இது எத்தனையாம் ஆண்டு தேடல் செய்யப்பட்டது என்று தெளிவாக கூற முடியுமா" என்றதும், அதன் பின் அந்த பிரதியை மேலும் கீழும் பார்த்து விட்டு 2009 என்றார்கள்.

அந்தக்காலப்பகுதியில் மதுரனின் கையில் அந்த கணினி இருந்திருக்கவில்லை. 2011 இல் அவன் முதற்தடவை வைத்தியசாலையில் கைதாகும் போது அவனிடம் இருந்த மடிக்கணினியினை ஏற்கனவே கனேடியப்படை எடுத்துச்சென்ற காரணத்தினால் அதன் பின் தாய்லாந்தில் அந்தக் கணினி அரைப்புதிதாக 2011 இன் பிற்பகுதியில் தான் மதுரனால் கொள்வனவு செய்யப்பட்டது.

அதற்கான பற்றுச்சீட்டு ஆதாரம் நிலாவினால் அடுத்த சந்திப்பில் கொடுக்கப்பட்டதும் எதுவும் பேசாத அந்த அதிகாரியிடம் "எனது கணவரினை நேரில் பார்த்தும் அவரின் குரல் கேட்டும் பல மாதங்கள் ஆகின்றது. அவரை தனிமைப்படுத்தி வைக்காமல் தயவு செய்து ஏனைய தமிழ் தடுப்பு அகதிகளோடு இணைத்து விடுங்கள் இல்லையெனில் என்னையும் உள்ளே அடைத்து விடுங்கள் அல்லது எல்லோரையும் கொன்று விடுங்கள்"  என்று அவள் கண்ணீரோடு கோபமாய் கேட்டாள். தாய்லாந்து அதிகாரிகளுடன் பேசி அதனைச்செய்து விடுவதாகவும் தமது சந்தேகங்களை தீர்த்து வைத்தமைக்கு நன்றியினையும்  கூறி விடைபெற்றனர்.

அதற்கு முதலே நிலா " நாங்கள் சட்ட ரீதியாக ஐ நா மூலமாக இன்னொரு நாட்டில் குடியேறுவதற்காக பல இன்னல்கள் மத்தியில் நான்கு ஆண்டுகளுக்கு மேலாக காத்திருக்கின்றோம். நீங்கள் இங்கு வந்து இவ்வாறு துன்பங்கள் கொடுத்தால் நாம் என்ன செய்வது ? அப்போ எம்மை சட்ட விரோதமாய் இன்னொரு நாட்டில் குடியேற நீங்கள் தூண்டுகின்றீர்களா? உங்களது நோக்கம் தான் என்ன? " என்றவளிடம்  அவர்கள் இல்லை என்ற ஒரு சொல்லோடு  மதுரனின் ஐ நா வழக்கு பற்றியும் மூன்றாம் நாடு எது என்றும் கேட்டு அறிந்து கொண்டனர். அதன் பிரதிபலிப்பு இன்றைய மதுரனின் நிலை என்பது தற்போதே நிலாவினால் உணர்ந்து கொள்ள முடிந்தது.

ஓரிரு நாளில் மதுரனின் தடைகள் நீங்கி அவன் தொலைபேசி மூலமாக நிலாவுடன் தொடர்பு கொண்டான். ஐக்கிய அமெரிக்காவின் நேர்காணல் முடிவு சாதகமாகி மருத்துவ பரிசோதனையும் முடிவுற்று விமானப் பயணச்சீட்டிற்காக காத்திருந்த மதுரன் நிலாவிற்கு ஐக்கிய அமெரிக்க மீள்குடியேற்ற சேவை நிறுவனம் அவர்களின் வழக்கு முடக்கப்பட்டதாக  இடி ஒன்றை கொடுத்தது.

அந்த நிலுவையில் இருக்கும் காலப்பகுதி இன்று ஒரு வருடம் கடந்த நிலையில் இன்னும் செயற்படுத்த முடியாத நிலையில் இருப்பதன் காரணம் இது வரை  தெரியாமல் ஐ நா இருந்தாலும் நிலாவிற்கும் மதுரனுக்கும் அதன் முக்கிய பின்னணி நிச்சயம் விளங்கும்....!

(தற்போது மிக மோசமான நிலையில் இருக்கும் மதுரனுக்கு  மருத்துவ சிகிச்சை வழங்கப்பட வேண்டும் என்பதற்காகவும் அவனின் நிலை வெளி உலகத்திற்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காகவும் எழுதஆரம்பித்த இந்த தொடர் இணயத்தளங்களில் வலம் வருகின்ற இந்த ஒரு மாத கால இடைவெளியில் மதுரனின் தொடர்பு துண்டிக்கப்படுள்ளது.இன்று வரை அவரிடமிருந்து எந்தவிதமான தகவலும் இல்லை. அத்துடன் அவரிற்கான பார்வையும் தடை செய்யப்பட்டுள்ளதோடு அவரை ஒரு நாற்சுவரிற்குள் அடைத்து வைத்திருக்கின்ற கொடுமையினை தட்டிக்கேட்க யாருமே இல்லை.  ஐ நாடுகள் அகதிகள் உயர் ஸ்தானிகராலயமும் சென்று பார்வையிடாமல் உயிரோடு கொல்கின்ற இந்த அவல நிலையினை யாரிடம் சென்று முறையிடுவது? )

தொடரும்........

அரசி நிலவன்
தாய்லாந்திலிருந்து 



அடுத்த பதிவிற்கு செல்ல 
http://arasikavithaikal.blogspot.com/2014/03/mv-sunsea-9.html

Wednesday 12 February 2014

கற்பனை...!!!


உருளைக்கிழங்கு கறி பிரட்டலும்
உனக்குப் பிடித்த பாகற்காய் பொரியலும்
உளுந்து வடை பாயசமுமாய்
உன்னை உட்கார வைத்து
உன் முகம் பார்த்து நான்
உவகையோடு பரிமாற - நீ பார்க்கும்
உந்தன் ஓரப்பார்வையின் நீளத்திற்காக
ஊர்ந்து ஊர்ந்து மெதுவாக அகப்பை துளாவும்
என்னை தட்டி நீ இல்லாத நிஜத்தினை உணர வைக்கும்
எம் செல்ல மகனின் நினைவே இன்றிய
கற்பனையில் கட்டுண்ட கொடுமை தொடர்கின்றது
கன காலமாக...

கற்பனையில் உன் முகம் பார்த்து
கடதாசியில் உன் உணர்வுகளை அறிந்து
கரைந்த காலங்கள் கடந்து இன்று
கணப்பொழுதுகள் தன்னும் கற்பனையில் தான்
கடந்து செல்கின்றன...!

கற்பனை என்பதனையே உணர முடியாத நிலையில்
கடந்த கால உன் நினைவுகள் நிகழ் காலத்தில்
நிகழுவதாய் நிதர்சனத்தினை தொலைத்து
நின்று நிலை தடுமாடுகின்றேன்....!

முற்றிய நோயின் அறிகுறியோ...!
முழுவதும் உன் நினைவுகள்
முக்காடிட்டு மூலைக்கொன்றாய்
முனகியபடி கிடக்க - நானும்
முன்னுக்கு பின்னாக அவற்றை உயிர்ப்பிக்கும்
முயற்சியில் மூழ்கி நிஜம் மறந்த பைத்தியமாக
முடிவில்லாத கற்பனையில்.....

முகம் பார்த்து முழுதாய் வருடம் ஒன்று
முழுங்கப்பட்டதன் எதிரொலியோ...?

முகவரி தொலைத்த தபால்களாக
முடங்கி கிடக்கும் நீயும் நானும்
முற்று முழுதாய் கற்பனையில்
முகம் பார்த்து தான் இறுதியில்
முடிவுரை பெற வேண்டுமோ??

கடந்து போன கண்ணீரின் அத்தியாயத்தின் பின்
கடக்கின்ற கற்பனை செயல்கள் ஒரு நிலையில்
கரை தாண்டும் போது கடைசி அந்த நிமிடமும்
கண்மணிகளுக்கான கற்பனை உலகை மீண்டும்
கரங்களில் கொடுத்து தொடரத்தான் போகின்றது...!!

அரசி நிலவன் 

Monday 10 February 2014

கடற்சூரியன் (MV SUNSEA) தரையில் உருவாக்கிய கொந்தளிப்பு...!!! (பாகம் 7)


2010 ஆவணி 13 இல் கனடாவினை அடைந்த "கடற்சூரியன்"(MV SUNSEA) என்ற கப்பலில் சென்ற 492 தமிழ் ஏதிலிகளில் 380 ஆண்களும்  62 பெண்களும்  49 குழந்தைகளும் அடங்குவர். இவர்களில் பலர் கனேடியக்காவல் துறையினரின் விசாரிப்புக்களின் பின்பு வெவ்வேறாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டனர்.

பின்னர் படிப்படியாக கிட்டத்தட்ட எல்லோரும் விடுவிக்கப்பட்டாலும் சிலர் இன்று வரை சிறையில் வாடுகின்றனர்.

ஆரம்பத்தில் கப்பலின் மாலுமியும்  மற்றும்  பைந்தமிழ் என்னும் எரிபொருள் பொறியியலாளரும் கனேடியப்படைகளால் வன்கூவர் பிரதான சிறையில் இடப்பட  அவரது மனைவி  கர்ப்பிணியான இனியா அகதிகள் சிறையில் உதவியின்றி தனியே தவித்தாள். கூடவே சென்றிருந்த தெரிந்தவர்கள் உறவினர்கள் யாவரும் கைவிட்டு அவள் தவிப்பதைக் கண்ணுற்றும் குருடர்களாயினர். நிறை மாதக்கர்ப்பிணி என்ற மனிதாபிமானமே அற்று மிக மோசமாக நடாத்தப்பட்ட இனியாவின் அந்த நிலைக்கு கப்பலில் அவளின் கூடவே பயணம் செய்த ஒருவர் அவளை ஒரு விடுதலைப்புலி உறுப்பினர் என வழங்கிய ஒரு  பொய்யான தகவலே காரணமாகும்.

"நாட்டிற்குள் அனுமதிக்க முடியாத  மற்றவர்களுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய ஒரு நபர் " என்ற வழக்கினை அந்த நிறைமாதக்கர்ப்பிணி மேல் பதிவு செய்த கனேடிய எல்லைப்பாதுகாப்பு பிரிவினர் (CBSA) , இக்குற்றச்சாட்டினை மறுத்த இனியாவினை  மீண்டும் மூன்று மாத காலம் தடுப்புக்காவலில் வைத்தனர்.அதாவது அந்த கால அவகாசத்திற்குள் தகுந்த ஆதாரத்துடன் இனியாவினை விடுதலைப்புலி உறுப்பினர் என நிருபிக்கின்றோம் எனக் கூறி விடுதலை செய்யப்பட்ட அவளினை மீண்டும் நீதிமன்ற ஆணை மூலம் தொடர்ந்தும் தடுப்புக்காவலில் வைத்திருந்தார்கள்.

சிறை வைக்கப்பட்டிருந்த அந்த நெருக்கடியான சூழலில் தாய்நாட்டில் உள்ள உறவுகளுடன் தொடர்பு கொள்ளத்தன்னும் பணமின்றித்தவித்த இனியாவினை ஏதோ தீவிரவாதியினை நோக்குவதைப்போன்று அங்கிருந்த ஏனைய தமிழ்ப்பெண்கள் நோக்கினர்.காவல்துறை அங்கு பார்வையிட வரும் தருணங்களில் அவளை விட்டு விலகி இருப்பதும் தம்மை தெரிந்ததாக காட்டிக்கொள்ள வேண்டாம் என்று எச்சரிப்பதுமாக அங்கிருந்த ஈன மனம் படைத்தவர்கள் நடந்து கொண்டார்கள். ஒரு சிறு உதவி கூட அவளுக்கு அவர்கள் செய்ய எத்தனிப்பதுமில்லை. கையில் பணமின்றி தவித்த இனியா. அந்தச்சிறையில் இருந்த அந்தப் பெண்களின் தலையில் பேன் பார்த்து அதன் மூலமாக கிடைக்கும் ஒன்று இரண்டு கனேடிய டொலர்களை வைத்து ஈழத்தில் உள்ள தனது உறவுகளுடன் தொடர்பு கொண்டு தனது வழக்கிற்கு தேவையான ஆவணங்களைப்பெற்றுக்கொள்ளவும் கனடாவில் வழக்கறிஞருக்கான பணத்தினை ஒழுங்கு செய்யவும் முயற்சி செய்தாள்.

அந்தக்கனேடியச்சிறையில் ஒரு தனி நபருக்கே போதுமான உணவே கிடைக்காத போது  ஒரு நிறைமாதக்கர்ப்பிணிக்கு போதுமானதாக இருக்க முடியுமா? கையில் பணம் இன்றி ஏனையோர் உண்ணும் உணவுகளைப் பார்த்து ஏங்கி , சிறிது நேரம் நிற்கவே  சக்தியற்று பல மணி நேரம் நின்று கொண்டு தமிழ் பெண்களுக்கு தலையில் பேன் பார்த்து பணம் பெற வேண்டிய கால கட்டம் அவளுக்கு ஏன் ஏற்பட்டது? ஒரு கர்ப்பிணியினை நிற்க வைத்து வேலை வாங்கி பணம் கொடுக்கும் அளவிற்கு தமிழினத்தின் மனிதாபிமானம் தேய்ந்து போனதை எண்ணி வெட்கி தலை குனியும் நிலை அதிகரித்து செல்கின்றதே அன்றி குறைந்து விடவில்லை.


தாய்லாந்தில் நிர்க்கதியாகிய பல உறவுகளையும் போரால் பாதிக்கப்பட்ட எத்தனையோ உறவுகளையும் தன்னிடத்தில் அடைக்கலம் கொடுத்து பசியாற்றிய இனியா தனது குழந்தை பிறக்கும் தருணத்தில் பசியோடு தவித்த கொடுமையினை தனக்குள்ளே புதைத்து வைத்தாலும் அது இன்று வேர் விட்டு கிளை பரப்பி நிற்கின்றது.

அன்றைய நாளில் அதாவது குழந்தை பிறக்கும் தருணத்தில் தன்னும்  அதனை அவளது கணவனுக்கு தெரியப்படுத்த அனுமதிக்க முடியாத இறுக்கமான நிலையில் அவள்  சிறை வைக்கப்பட்டு இருந்தாள். குழந்தை பிறந்தும் உளவியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட அவள் உண்ணவோ உறங்கவோ முடியாமல் அவதிப்பட்டாள். ஏதேச்சையாக தொலைபேசி அழைப்பினை மேற்கொண்ட அவளது கணவன் பைந்தமிழுக்கு குழந்தை பிறந்த செய்தி தெரிவிக்கும் நிலையில் கனேடிய சட்டம் இருக்கின்றது என்றால் நம்ப முடிகின்றதா? இலங்கை அரசு ஓரளவு மேல் என்றே எண்ணத்தோன்றுகின்றது.


வாய்மையே வெல்லும் என்பது இனியாவின் விடயத்தில் உறுதியானது. 
ஆம்...! கடும் பிரயத்தனங்கள் மேற்கொண்ட கனேடியப்படைகளால் குறிப்பிட்ட அந்தக்காலப்பகுதிக்குள் ஆதாரங்களை சமர்ப்பிக்க முடியவில்லை. எனவே இனியா மீதான அந்தப்பொய்யான வழக்கு நீதிமன்றத்தினால் தள்ளுபடி செய்யப்பட்டது.

இதற்கிடையில் சிறையில் இனியா இருந்த காலப்பகுதியில் கனடா ரோறன்ரோ(Toronto) நகரில் இருந்த தமிழ் வழக்கறிஞர் ஒருவர் இனியாவை விடுதலை செய்கின்றேன் என்று உறுதிமொழி வழங்கி ஈழத்தில் உள்ள அவளது குடும்பத்தவர்களிடம் தொடர்பு கொண்டு கிட்டத்தட்ட இரண்டாயிரம் கனேடிய டொலர்களை பெற்றுக்கொண்டு எந்தவிதமான வாதங்களையோ நியாயங்களையோ நீதிமன்றத்தில் முன்வைக்காது ஏமாற்றியும் இருக்கின்றார். விடுதலை பெற்றிடலாம் என்று தினம் நம்பி நம்பி அந்தச்சிறையின் ஓரத்தில் வடித்த இனியாவின் கண்ணீரின் அளவினை அந்தச்சிறைக்கம்பிகள் மட்டுமே அளந்து வைத்திருக்கும்.

கனவுகளோடு கனடா சென்ற அந்த இளம் தம்பதிகளின் முதற்குழந்தை பிறந்து மூன்றாண்டுகள் நிறைவு பெறுகின்ற இந்த வேளையில் , தந்தையின் தொடுகை என்னவென்றே உணராத அந்தப்பச்சிளம் பாலகி தான் காண்கின்ற ஆண்கள் எல்லோரையும் அப்பா அப்பா என்று அழைத்து ஏங்கும் கொடுமையினை  யார் அறிவார்கள்? வெறுமனே அவளின் குரலினை கேட்டு தினம் தனக்குள் விம்மி அழும் தந்தையும் சிறுமியின் பாசத்தின் ஏக்கத்தினைக்கண்ணுற்று கண்ணீர் வடிக்கும் அன்னையும் மூன்றாண்டுகளாக முகவரி தொலைத்த தபால்களாக எந்தவித நம்பிக்கையும் இன்றி பிரிந்து கிடக்கின்றார்கள். பரிகசிப்புக்களும் ஏளனங்களும் ஒதுக்கல்களும் நன்கே பழகி புண்பட்டுப் போன உள்ளங்களுக்கு உதவிட யாருளர்?  

அந்தச்சிறுமி கல்வி கற்கச்செல்லும் கனேடியப்பள்ளியில் உள்ள குழந்தைகள் தமது தந்தைகளுடன் விளையாடுவதையும் அன்பு பொழிவதையும் கண்ணுற்று அவர்களின் பின்னே அப்பா என்று அழைத்து ஓடிச்செல்லும் அச்சிறுமியின் உணர்வுகளைச்சாகடிக்கின்ற கனேடிய அரசு  சிறுவர் உரிமைகள் மனித உரிமைகள் பற்றி உலக அரங்கில் வெறும் வெளித்தோற்றத்திற்காகவா குரல் கொடுக்கின்றது?

கப்பலினை ஓட்டிச்சென்ற மாலுமியினை பிணையில் விடுவித்த கனேடிய அரசு, கனடா வருவதற்காக கப்பலில் எரிபொருள் பொறியியலாளராக பணியாற்றிய குற்றத்திற்காக இனியாவின் கணவர் பைந்தமிழினை சிறையில் அடைத்த காவல் துறையினர் ஒரு கையெழுத்திற்காக இன்னமும் அவரது வழக்கினை தொடராமல் அவருக்கு பிணை அனுமதியும் கொடுக்காமல் ஒவ்வொரு தவணைக்கும் மீண்டும் மீண்டும் தவணைகளை பிற்போட்டு காலத்தை இழுத்துக்கொண்டு செல்வது பைந்தமிழினை உளவியல் ரீதியாக தண்டிப்பதற்காகவே. இன்னும் சிறிது காலம் இந்த நிலை நீடிக்குமேயானால் அவர் மட்டுமன்றி இனியா மற்றும் அவர்களின் சிறுமியும் உளவியல் ரீதியில் மிகவும் மோசமான நிலையினை எதிர்நோக்குவார்கள்.

உடலியல் ரீதியான சித்திரவதைகளை தன்னும் தாங்கிக் கொண்டு இருந்திடலாம். ஆனால் திட்டமிட்டே இவ்வாறு தனிமைப்படுத்தி நீண்ட காலத்திற்கு தீர்வின்றி ஒரு குடும்பத்தினை சின்னாபின்னமாக்குவது என்பது எந்த வகையான சித்திரவதை என்பது அனுபவித்து உணர்ந்தால் மட்டுமே விளங்கிக்கொள்ள முடியும்.

ஈழத்தில் இருந்தால் பிரச்சினைகள் என்று தப்பி வந்தவர்கள் அதை விட மோசமான நிலையினை புகலிடம் புகுந்த நாடுகளில் அனுபவிப்பதும் ஈழத்தில் காணாமல் போன அல்லது போரில் இறந்த கணவன்களின் மனைவிகள் படுகின்ற துன்பத்தினை விட அதிகமாய் மொழி தெரியாத நாட்டில் சிக்கித்தவித்து குழந்தைகளுடன் வாழ்க்கையினை நகர்த்திச்செல்வதும்  எந்தளவிற்கு சவாலானது என்பது இனியா மற்றும் நிலாவைப்போன்ற ஒவ்வொரு ஈழ அகதிப்பெண்களினதும் அன்றாட வாழ்வு விளக்கிச்செல்லும்.

அத்துடன் பைந்தமிழிற்கு வழக்கறிஞர் என்று அமர்த்திக்கொள்ள பணவசதி இன்றி கனேடிய அரச வழக்கறிஞர் ஒருவரே இவ்வளவு காலமும் செயற்பட்டு வருகின்றார். அவர் இதுவரை வாதாடும் நிலை ஒருநாள் தன்னும் இடம்பெறவில்லை. காரணம் இன்னமும் வழக்கே இடம்பெறவில்லை. நான்காண்டுகள் எட்டப்படும் நிலை இருக்கின்ற இந்த வேளை எதற்காக வழக்கினை தள்ளி வைத்தே காலம் தள்ளுகின்றார்கள். தற்போது அந்த வழக்கறிஞர் தொலைபேசி அழைப்பிற்கு கூட பதில் அளிப்பதில்லை. இலங்கையில் வழக்குகளே இல்லாமல் இருக்கும் அரசியல் கைதிகளின் நிலையே இங்கும் காணப்படுகின்றது. இதை யார் தட்டிக்கேட்பது?

இலங்கையில்  தான் அந்த அரசிற்கு எதிராக குரல் கொடுக்க முடியாத உலக தமிழ் அமைப்புக்கள் கனடாவில் மற்றும் தாய்லாந்தில் அந்தந்த அரசுகளின் முரட்டுப்பிடிக்குள் சிக்கித்தவிக்கும் உறவுகளை மீட்க முயற்சி செய்ய முடியும்.

வெறுமனே பொழுது போக்கிற்காக எழுதி நாலு பேர் வாசித்து பெருமூச்செறிய இந்ததொடரினை எழுதவில்லை. சிக்கித்தவிக்கும் உறவுகளுக்காக குரல் கொடுக்க தமிழ் மற்றும் மனிதாபிமான அமைப்புக்கள் முன் வர வேண்டும் என்ற நோக்கில் இறுதிக்கட்ட முயற்சியாக எழுதப்படுகின்றது.

சென்ற தொடரில் குறிப்பிட்ட இலங்கைக்கு நாடு கடத்த இருக்கும் அருமைத்துரை தர்மரத்தினம் என்பவரும் பைந்தமிழுடன் சிறை வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழர் என்ற போர்வை போர்த்திக்கொண்டு கனடாவில் தேர்தலில் வென்ற ராதிகா அம்மணிக்கு எத்தனையோ கண்ணீர் மடல்கள் இனியாவினால் தனது கணவரின் நிலைக்கு உதவி புரியுமாறு வரையப்பட்டும் ஒரு பதில் தன்னும் அம்மணி இனியாவிற்கு உரைக்கவில்லை. கனேடிய அரசிடம் பரிந்துரை செய்ய துப்பில்லை என்றாலும் ஒரு பெண் என்று ஆறுதல் அளிக்கவும் உள்ளம் இல்லாதவர் வெறும் பெயருக்கும் புகழுக்கும் அரசியல் வாதியாக இருப்பதிலும் இல்லாமல் இருக்கலாம்.


ஒரே இனம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று கனடாவில் கால் பதித்த அத்தனை தமிழர்களும் ஒரே குரலில் அகதிகள் என்பதை உரத்துச்சொல்லி எவரையும் காட்டிக்கொடுக்காமல் இருந்திருந்தால் இன்று அத்தனை பேருமே அங்கு அகதி அந்தஸ்து பெற்று இருந்திருப்பர். கனேடிய காவல் துறையினரால் மறுத்து எதுவும் செய்து விட இயலாமல் இருந்திருக்கும். ஆனால் இன்று கிட்டத்தட்ட 100-120 வரையானோரை தவிர ஏனையோருக்கு அகதி அந்தஸ்தும் கொடுக்கப்படாமல் வழக்குகள் நிராகரிக்கப்பட்டும் வழக்குகள் ஏற்கப்படாமலும் இருக்கின்றது. கிட்டத்தட்ட 360 இற்கு மேற்பட்டோரின் நிலை நிலையில்லாத ஒரு தன்மையில் இருப்பதற்கு எமது இனத்தின் அடிப்படைக்குணமே காரணம்.

ஒட்டுமொத்த மக்களும் ஒன்றுபடாமல் ஒரு சிறிய அகதி ஏற்பினை கூட பெற்றுக்கொள்ள முடியாமல் திணறும் போது தனி நாடும் சுய உரிமையும் அவ்வளவு இலகுவில் கைகளில் சேர்ந்திடுமா? குறிப்பிட்ட ஒரு தொகையினர் அதுவும் ஒரு மாத காலமாய் ஒன்றாகப்பயணித்தவர்கள் தமது சுயநலன்களுக்காக அடுத்தவர்களை கை நீட்டியவர்கள் இருக்கின்ற எமது இனம் இருக்கும் வரை இப்படி நாடு விட்டு நாடு அலைந்து கொண்டே இருக்க வேண்டிய நிர்ப்பந்தம் வேற்று  இனத்தால் ஏற்படுவதற்கு முன் எம்மினத்தால் தான் நிச்சயம் ஏற்படும்.


தொடரும்......

அரசி நிலவன்
தாய்லாந்திலிருந்து 




அடுத்த பதிவிற்கு செல்ல
http://arasikavithaikal.blogspot.com/2014/02/mv-sunsea-8.html

Thursday 6 February 2014

கடற்சூரியன் (MV SUNSEA) தரையில் உருவாக்கிய கொந்தளிப்பு...!!! (பாகம் 6)


ஈழத்து உறவுகளை தன் வயிற்றில் அடைக்கலம் கொடுத்த தாய்லாந்தின் கடற்சூரியன் கனடாவின்  பிரிட்டிஷ் கொலம்பியாவில் கரை சேர்த்தது. பல இன்னல்களின் மத்தியில் பயணம் செய்து கரையிறங்கியவர்களை வினாக்கள் பல  தொடுத்து கனேடிய எல்லை பாதுகாப்பு துறையினர் (CBSL) துருவித்துருவி ஆராய்ந்தனர். 

உண்மை சொன்னால் தப்பி விடலாம் என்று சிலரும் , உண்மைகளை தமக்கு சாதகமான பொய்களாக்கிய பலருமாக பல்வேறுபட்ட வாக்கு மூலங்கள் பதிவளிக்கப்பட்டன. எத்தனையோ ஆட்கடத்தல் முகவர்களின் விபரங்கள்  எடுத்துரைக்கப்பட்டும் அவர்களை கைது செய்ய முடியாமல் இன்றும் கனேடிய காவல் துறையினர் அலசிக் கொண்டு அலைகின்றனர். காரணம் குற்றம் செய்தவன் தங்கி இருந்து வருகவே என்னை பிடித்துச்செல்கவே  என்று பிரச்சினைக்குரிய நாட்டில் குந்தி இருக்கவா போகின்றான் ? அப்படி குந்தி இருப்பவன் தான் குற்றவாளி என்று நான்கு வருடமாய் ஒருவனை பிடித்து தடுத்து வைத்து  பைத்தியமாக்கும் கனேடிய காவல் துறை என்ற குரங்கின் கையில் அகப்பட்ட மாலையா அகப்பட்டவன்? 

தப்பி ஓடிய பிரதான குற்றவாளிகள் மீண்டும் மீண்டும் மக்களை ஏமாற்றி பணம் பறித்து நிர்க்கதியாக்கி கொண்டே இருக்கின்றார்கள். ஏன் இன்னும் அவர்களை கைது செய்ய துப்பில்லாமல் மதுரனின் மேல் மப்பில் அலைகின்றார்கள்?

கடந்த வருடமும் தாய்லாந்தின் கரையோரப்பகுதியான பத்தையாவில்(Pattaya) கப்பலுக்கு என்று தங்கியிருந்த நாற்பதுக்கு மேற்பட்ட ஈழத்தவர்கள் கைது செய்யப்பட்டு தடுப்பு மையத்தில் அடைக்கப்பட்டார்கள்? அதன் சூத்திரதாரி யார்? ஏன் இன்னும் கைது செய்யவில்லை? இங்கு யார் காட்டிக்கொடுக்கின்றார்களோ அவர்களே இந்த ஏற்பாட்டினையும் நடாத்திக்கொண்டு இரு வேடமிடுகின்றார்கள். தமது தப்புக்களை மூடி மறைக்க ஒருவனின் மீது மீண்டும் மீண்டும் குற்றம் சுமத்தி அதில் குளிர் காயும் மனிதர்களையும் அவர்களின் வேடத்தினையும் கண்டு கொள்ள தெரியாத சிறுபிள்ளைத்தனமான அறிவு கொண்டவர்கள் தான் கனேடிய காவல் துறையினரா? 

தாய்லாந்தில் உள்ளவர்களை மட்டுமன்றி கடற்சூரியனில் சென்றவர்களும் காட்டிக்கொடுப்புக்களால் இன்னமும் பாதிக்கப்பட்டு  வாடி வதங்கிக்கொண்டு தான் இருக்கின்றனர். ஒருவரையொருவர் காட்டிக்கொடுத்து அகதி அந்தஸ்தும் இல்லாமல் வழக்கும் ஏற்கப்படாமல் இருப்பவர்கள் அநேகர். அதில் சென்ற பல போராளிகள் மற்றவர்களால் காட்டிக்கொடுக்கப்பட்டதால் இன்னமும் அவர்களின் வழக்கே ஏற்கப்படாமல் இருக்கும் நிலை காணப்படுகின்றது.

அத்துடன் போராளி என நிரூபிக்கப்பட்டு ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கப்பட்ட "அருமைத்துரை தர்மரத்தினம்" என்கின்ற வல்வெட்டித்துறையினை சேர்ந்தவர் வருகின்ற பெப்ரவரி பதினோராம் திகதி இலங்கைக்கு நாடு கடத்தப்பட இருக்கின்றார். இவரை  நீதிமன்றம் நாடுகடத்த உத்தரவிட்ட நிலையில் இலங்கையில் அவர் எதிர்நோக்க விருக்கும் அபாயத்தினை எண்ணி அச்சத்தில் கனேடியச் சிறையில் தவிக்கும் அவரது நாடு கடத்தலை தடுக்கப்  பல முயற்சிகள் எடுக்கப்பட்டும் எதுவும் பலன் அற்று இறுதிக்கட்ட நிலையில் தவிக்கும் அந்த போராளி செய்த குற்றம் என்ன? ஈழத்துக்காகப்போராடிய ஒரு உத்தம கடற்புலிப்போராளியின் இறுதிக்கட்ட வாழ்வின் போராட்டத்தில் உலகத்தில் இன்னும் தமிழ் அமைப்புக்கள் என்றும் நாடுகள் கடந்த அரசுகள் என்றும் வெறுமனே பெயருக்கு இயங்குகின்ற அமைப்புக்களின் பங்களிப்பு என்ன? கனடாவில் தமிழருக்கான பிரதிநிதியாக பாராளுமன்றம் சென்று வரும் ராதிகா சிற்சபை ஈசன் இந்த நாடு கடத்தலை தடுத்து நிறுத்த முயற்சி எடுத்துண்டா?

அர்ப்பணிப்பும் சுயநலம் இன்றிய ஒரு  தனிமனிதன் ஒருவன் தன் குடும்பத்தினையும் காவு கொடுத்து ஒரு இனத்துக்காகவே மடிகின்றான் என்றால் அவனே தலைவன். அவனின் காலத்தின் பின் தம்மை தலைவர் என்று தமக்கு தாமே முடி சூடுபவர்கள் எவரும் தலைவர்கள் ஆகிவிட முடியாது. ஒரு போராளியினை காப்பாற்ற முடியாதவர்களால் ஒரு இனத்தை காப்பாற்ற முடியுமா?

 மேற்படி அருமைத்துரை தர்மரத்தினம் என்ற போராளியின் நாடுகடத்தலை தவிர்ப்பதற்காக ஏற்கனவே கனடாவில் இருந்து நாடு கடத்தப்பட்டு இலங்கையில் படுகொலையான கப்பல் அமைப்பாளர் ஒருவரது மரண ஆதாரங்களை நீதிமன்றில் சமர்ப்பித்தும், அதனை நீதிபதியின் கண்களில் இருந்து மறைத்துக்கொண்ட கனடா எல்லைப்பாதுகாப்பு துறையினரின்(CBSL) நோக்கம் என்ன? நிச்சயம் அது கொலைக்கள நாட்டில் படுகொலை செய்யத்தீட்டுகின்ற சதித்திட்டமே.

தனிப்பட்ட ஒரு நபர் அதாவது முன்னொரு காலத்தில் ஆயுதம் ஏந்தி போராடி தற்போது அகதியாக புகலிடம் புகுந்த ஒரு உயிருக்கு அடைக்கலம் கொடுக்க முடியாத அளவுக்கு கனடாவின் சட்டம் உள்ளதா? அன்றி கனடாவின் மனித உரிமைகள் இதற்கு இடமளிக்காதா?

அவர் நாடு கடத்தப்பட்டு அவரின் உயிருக்கு அங்கு உத்தரவாதம் அற்றுப்போனால் கனடா அரசு அவரின்  உயிரை அவரது குடும்பத்தவர்களுக்கு திருப்பிக்கொடுக்க முடியுமா?

இவற்றுக்கு பின்னால் கனேடிய இலங்கை சதி இருப்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? கடற்சூரியனில் பயணம் செய்து இத்தொடரின் ஆரம்ப தொடரில் குறிப்பிட்ட பல  காட்டிக்கொடுப்புக்களை நிகழ்த்திய அந்த பிரதான கப்பல் ஏற்பாட்டாளர் கனடாவில் பலரை காட்டிக்கொடுத்து தான் தப்பிக்க முயன்றும் கனேடிய அரசு அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கியது. உண்மை நேர்மை என்று ஒழுகாத ஒரு மனிதர் தண்டனைக்கு அடங்க ஒத்துக்கொள்ள மாட்டார் . எனவே அவர் சுய விருப்பில் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார். 

அவர் ஒரு விடுதலைப்புலி உறுப்பினர் அல்ல. ஆனால் விடுதலைப்புலிகளுக்காக ஆயுதக்கடத்தலில் ஈடுபட்டு பண மோசடிகள் புரிந்தவர். இருந்தாலும் அவருக்கு எதிராக தாய்லாந்து மற்றும் கனடாவில்  ஆயுதக்கடத்தல் வழக்குகள்  நிலுவையில் இருக்கும் போது இலங்கை மட்டும் அவரை செங்கம்பளம் விரித்து வரவேற்குமா? இலங்கையில் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். வழமையான " சித்திரவதை வெகுமதிகள் "அங்கு அவருக்கு நிறையவே வழங்கப்பட்டன. இருந்தாலும் இலங்கையில் பணம் பாதாளம் மட்டுமல்ல அண்டம் வரை பாயும் என்பதால் அவர் சிறிது காலத்தில் விடுவிக்கப்பட்டார். 

ஆனால் கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து , கடந்த ஆண்டு அவர் ஒரு விபத்தில் பலியானதாக செய்தி பரப்பப்பட்டது. இந்த விபத்தின் பின்னணியில் நிச்சயமாக இராணுவம் இருப்பதாக அவரின் குடும்பத்தார் சந்தேகிக்கும் அதே வேளை அவரது தலையில் பலமான இரும்புக்கம்பி கொண்டு தாக்கப்பட்டதாலேயே அவருக்கு இறப்பு ஏற்பட்டதாகவும் இரு வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. எவ்வாறாயினும் இந்த விபத்தின் பின்னணியில்  இலங்கை இராணுவம் இருக்குமேயானால் அது நிச்சயம் கனேடிய எல்லை பாதுகாப்பு துறையின் கூட்டுச்சதி என்று உறுதியாக நம்ப முடியும். காரணம் இலங்கை இராணுவத்திற்கு அவரை தனிப்பட்ட ரீதியில் கொல்ல வேண்டிய தேவை இல்லை. அவரை விட அதிக கடத்தல்களில் ஈடுபட்டவர்களே அரசோடு சேர்ந்து இயங்கும் போது, அவரைக்கொல்ல வேண்டிய தேவை மிக மிக அரிது. பணத்தினைப் பெற்றுக்கொண்டு விடுதலை செய்தவர்களே அவரைத் தேடிப்பிடித்து கொலை செய்வதிலும் பார்க்க பணத்தினை இன்னும் கறக்கவே எண்ணுவார்கள். 

அத்துடன் கனேடிய அரசு சாதரணமான ஒரு வாக்கு மூல குற்றச்சாட்டுக்கே நான்கு வருடமாக மதுரனை இந்த நாட்டில் உலவ அனுமதிக்காமல் தடுத்து தமது கண்காணிப்பில் வைத்திருக்கும் போது கப்பலோடு நேரடியாக தொடர்பு பட்டு பிரதானமாக குற்றம் சாட்டப்பட்ட தற்போது அமரரான அந்த கப்பல் ஏற்பாட்டாளரை தமது கண்காணிப்பில் இருந்து எவ்வாறு நீக்கிக் கொள்ளும்? இலங்கை அனுப்பி அங்கு சாகடிக்கவே அது திட்டம் தீட்டி அங்கு அவரை அனுப்பி இருக்கின்றது. அவர் ஒரு காட்டிக்கொடுப்பாளர் பலருக்கு அநியாயம் செய்த ஒருவர் என்றாலும் கனேடிய சதியில் கொலையுண்டவர் என்னும் போது சற்று மனம் வேதனைப்படவே செய்கின்றது. அவருக்கு ஒரு பெண்குழந்தையும் மனைவியும் கனடாவில் இன்னும் அகதி அந்தஸ்து கோரலுக்கான வழக்கு ஏற்கப்படாமல் இருக்கின்றார்கள் . 

காட்டிக்கொடுப்புக்களும், பணத்தால் கொள்வனவு செய்யப்படும் வாழ்வும் நெடு நாட்கள் நீடிக்கப்போவதில்லை. கனேடிய அரசிடம் இருந்தும் இலங்கையிடமும் இருந்தும் தப்பி பணம் கொடுத்து சுதந்திரம் பெற்றுக்கொண்டவர் , காலத்திடம்  விலை பேச தன்னகத்தே நீதி நேர்மையினைக்கொண்டிருக்கவில்லை என்பது அவரது படுகொலையில் இருந்து நாம் அறிய வேண்டிய அப்பட்டமான உண்மையாகும்.

தற்போது சிறையில் வாடும் எல்லோருக்கும் காலம் பகைத்துக்கொள்ளலாம். பணம் தங்காமல் இருக்கலாம். ஆனால் அளவுக்கு அதிகமான நீதி நேர்மை உண்மைகளை தம் அகத்தே மலை போல் குவித்து வைத்திருக்கும் போது என்றோ ஒரு நாள் காலம் அவற்றை விலை பேசி அவர்களுக்கு சுதந்திரம்  என்னும் நிலையான அமிர்தம் என்னும் கனியினைக் கொடுக்கும். கனேடிய தாய்லாந்து ,இலங்கை அரசுகள் தீட்டும் சதிகள் காலத்தால் தோற்கடிக்கப்படும். அன்று காட்டிக்கொடுப்புக்கள் அர்த்தமற்றுப்  போகும் போது காட்டிக்கொடுத்தவர்கள் நிச்சயமாகக் காலத்தால் தண்டிக்கப்படுவார்கள். அதுவரை வளமாக , நலமாக வாழட்டும். 

அப்பேற்பட்ட தேசிய தலைவரையும், ஈழப் போராட்டத்தையுமே கொச்சைப்படுத்தவும் காட்டிக்கொடுக்கவும் பலர் துணிந்து அதில் வெற்றியும் கண்டார்கள். அந்த மாபெரும் இயக்கம் இவற்றுக்கு பலியாகி மெளனித்து உறங்கும் போது அவர்களின் கால் விரலுக்கு சமனான தனி நபர்கள் இவற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியுமா?   

தொடரும்...........

கடற்சூரியனில் பயணித்த ஒரு கர்ப்பிணியின் மகளான கனடாவில் பிறந்த ஒரு பச்சிளம் பாலகி இன்று மூன்று வருடங்கள் கழிந்த நிலையிலும் ஒரே மாகாணத்தில் சிறை வைக்கப்பட்டிருக்கும் இன்னும் விடுதலை செய்யப்படாத தனது தந்தையின் ஸ்பரிசம் இன்றி தினம் தந்தைக்காக ஏங்கித்தவிக்கின்றாள்..? அந்தப்பிஞ்சுக்குழந்தை செய்த தவறு என்ன? விரைவில் அடுத்த தொடரில்......

அரசி நிலவன்
தாய்லாந்திலிருந்து 



அடுத்த பதிவிற்கு செல்ல
http://arasikavithaikal.blogspot.com/2014/02/mv-sunsea-7.html

Friday 31 January 2014

கடற்சூரியன் (MV SUNSEA) தரையில் உருவாக்கிய கொந்தளிப்பு...!!! (பாகம் 5 )


நிசப்தமான அந்த இரவில் மின் விளக்குகள் பகலை போன்று ஒளி பாய்ச்சிக்கொண்டிருந்தன. மின் விசிறியில் இருந்து வரும் காற்று கூட ஒலி எழுப்பாது பரவிக்கொண்டிருந்தது. அந்த வைத்தியசாலை விடுதியின் மகப்பேற்று பிரிவில் ஒவ்வொரு ஆறு கட்டில்களினையும்  தனித்தனியாக அறையாக்கி கிட்டத்தட்ட பத்து பிரிவுகளில் சேய்களும் தாய் மாரும் உறக்கத்தில் இருந்தனர். முதலாவது அறையில் மூன்றாவது கட்டிலில் மட்டும் யாருமிருக்கவில்லை. அந்தக்கட்டில் தலையணை நீரில் ஊறி ஊதிப்போன பஞ்சாய் ஈரமாய் கிடந்தது.

உதிரப்போக்கினை விடவும்  கண்களில் இருந்து வழியும் கண்ணீரே அதிகமாகி சிந்த அன்றே பிரசவித்த குழந்தையினை கரங்களில் ஏந்தியவாறு மெல்ல மெல்ல நடந்து குழந்தை பராமரிப்பு அறையினை நோக்கி தள்ளாடிச் சென்று கொண்டிருந்தாள் நிலா. மனதெங்கும் மதுரனின் முகம் நிறைந்திருக்க குழந்தையினை பார்த்து பார்த்து இன்னும் வெடித்து விம்மி விம்மி அழுதாள்.

இன்று அதிகாலையில் பூவுலகில் பாதம் பதித்த அவர்களின் செல்ல மகனைக் காண வைத்தியசாலையின்  பார்வை நேரத்திற்கு முன்னரே வந்து தவம் இருந்து காத்திருந்து தன் முதற் குலக்கொழுந்தினை தொட்டுப்பார்த்து அள்ளி எடுத்து முத்தமிட்டு கொண்டிருந்த மதுரன் நாளை காலை பார்வை நேரத்திற்கு காத்திருந்து தேடி ஓடி வர மாட்டான். 

ஆம்..! இன்று மதிய உணவினையும் மறந்து வெளியேற  மனமின்றி குழந்தையும் தானுமாய் தன் நிலை மறந்திருந்த அவனை மதிய உணவினை முடித்து  விட்டு மீண்டும் வரும் படி வலுக்கட்டாயமாய் அனுப்பி வைத்தவள் விடுதியின் வாசலில் இவனுக்காய் காத்திருந்த குடிவரவு அதிகாரிகள் அவனை கைது செய்து சென்றது அறியாமல் தூங்கி விட்டிருந்தாள். . அரை மணி நேரத்தின் பின் கூடவே சென்றிருந்த அவளின் அன்னை பதட்டத்துடன் கண்ணீரோடு வந்து அவனைக் கைது  செய்த தகவலைத்  தெரிவித்ததில் இருந்து இன்னும் கண்ணீர் நிற்கவில்லை அவள் கண்களில் இருந்து.

குழந்தை குழந்தை என்று கருவுற்ற காலம் தொடங்கி எத்தனையோ எதிர்பார்ப்போடு காத்திருந்தவன், பிறந்து வந்த  இன்று ஒரு மணி நேரம் தன்னும் தொட்டு ஆசையாய் முத்தமிட்டு செல்வதற்கிடையில் பிரிந்து சென்று விட்டானே. அந்த பச்சிளம் பாலகனும் எதையோ தொலைத்து விட்டது போன்று முகம் இறுகிக்கதறிக்கொண்டு இருந்தான்.
ஐந்து  மணி நேரத்திற்கு முன் இனித்திருந்த இனிமையான தருணத்தினை வேப்பங்காயினை விடக் கசந்து நிற்கும் நிகழ்காலத் தருணம் சொற்ப நேர இடைவெளியில் தன்னை ஆட்கொண்டு விட்டதை எண்ணி நொந்து கொண்டே நடந்தாள். 25 மீற்றர் இடைவெளி இரண்டரை கிலோ மீற்றர் போன்று நீண்டு செல்கின்றது. குழந்தையின் கதறல் அந்த நிசப்தத்தினை கலைத்து ஆக்கிரமித்துக்கொண்டது.

தூக்கம் குழம்பி எழுந்து கொண்ட தாய்மார்கள் விசித்திரமாய் அவளின் அழுது பருத்து வீங்கிய முகத்தினையும் கண்களினையும் விநோதமாய் நோக்கினர். வலியானது  வெட்கம் பரிகாசத்திற்கு அப்பாற் பட்டது அல்லவா. கடந்து முன்னேறியவள் குழந்தை பராமரிப்பு அறையின் முன்னே நின்றிருந்தாள். அழைப்பு மணியினை அடித்து விட்டு காத்திருந்தாள். அவளால் ஒரு நொடி கூட நின்றிருக்க முடியவில்லை. உயிர் போகின்ற உடல் வலியோடு உருக்குலைக்கும் உள்ளத்து வலியும் சேர்ந்து கொண்டால் தாக்குப்பிடிக்க முடியுமா? நேரம் அதிகாலை இரண்டு மணி என்பதால் தாதிமார் தூங்கி இருப்பார்கள்.

----

வாசலில் நின்று கொண்டு மதுரனின் பெயர் கூறி அழைத்த அந்த தாய்லாந்து குடிவரவு அதிகாரி மதுரனை மேலும் கீழுமாய் பார்த்து விட்டு கடவுச்சீட்டினை காண்பிக்குமாறு கேட்டிருக்கின்றார். மதுரனிடம் கடவுச்சீட்டு இல்லை. ஐ.நா வின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயத்தால் வழங்கப்பட்ட அகதி ஆவணத்தினை மதுரன் அவ்வதிகாரியிடம் கொடுத்ததும், அதனை உற்று நோக்கிய பின்  தொலைபேசி எடுத்து அழைப்பொன்றை மேற்கொள்ள அது மதுரனின் தொலைபேசிக்குள் நுழைந்து கொண்டது. உறுதி செய்து கொண்ட அந்த அதிகாரி மதுரனை மிக்க மரியாதையாகத்தான் அழைத்துச்சென்றார். கூடவே சென்ற எதற்காக அவரை அழைத்து செல்கின்றீர்கள் என வினவிய நிலாவின் சகோதரனிடம் கடவுச்சீட்டு இல்லை இந்த நாட்டின் குடிவரவு சட்டத்தினை மீறி உள்ளார் அதனால் இலங்கைக்கு நாடு கடத்த வேண்டும் என்று கூறியவாறு வைத்தியசாலையின் வெளி வாசலுக்கு கொண்டு சென்றதும் அங்கு இரு வெள்ளை மற்றும் கறுப்பின காவல்துறையினர் இவர்களுக்கு நன்றி கூறிக்கொண்டு அந்த கட்டிடத்தின் முன்னே வைத்து எல்லோரையும் புகைப்படம் எடுத்துக்கொண்டதுடன் மதுரனின் கையில் இருந்த தொலைபேசி ஆவணங்கள் யாவற்றையும் பறிமுதல் செய்தனர். அந்த இடத்தில் வைத்து மதுரன் அழைத்துச்செல்லப்படும் போது அவனின் மைத்துனனும் கூடவே செல்ல அனுமதிக்கப்பட்டார். இந்த தகவல் யாவும் அன்னை கூறும் போது தலை வெடித்த போல கதறத்தொடங்கிய நிலாவினை கட்டுப்படுத்த முடியாமல் திணறினாள் அவளின் அன்னை.

இதயம் பாளம் பாளமாய் வெடித்து அதிலிருந்து வெளியேறும்  உதிரம் நிலாவின் கண்களில் இருந்து கண்ணீராய் கொட்டிக்கொண்டிருந்தது. 

----

அரைத்தூக்கத்தில் எழுந்து வந்த தாதி குழந்தையினை பெற்றுக்கொண்டாள். அழுகின்ற பாலகனை பிரிந்து செல்ல மனமில்லாது அங்கேயே நின்று கண்ணாடி வழியாக நோக்கிய நிலா, சிறிது நேரத்தின் பின் சூடான அந்த அறையின் கத கதப்பில் தன் குழந்தை அமைதியாக தூங்குவதைக்கண்ணுற்றதும் தன் இருப்பிடம் திரும்பி நடக்கலானாள்.  

உதவிகள் பெற்று உபத்திரவம் கொடுக்கும் மனிதர்களினை கேள்விப்பட்டதுண்டு. ஆனால் உதவிகள் அடைந்து சத்தமின்றி  உயிரினையே எடுத்து கொள்ளி போடும் மனிதர்களால் தான், பிறந்த பிஞ்சின் முகத்தினை  நின்று நிலைத்து காணாமல் பிரிந்து சென்ற கணவனும் அதனால் பரிதவித்து நிற்கும் தானும்  என்று அப்போது அவள் அறிந்திருக்க நியாயமில்லை.

ஆம்..!
கனடாவின் கரையினை முத்தமிட்ட கடற்சூரியனின் எதிரொலி வருகை இந்த கைது என்பதும் அதனை அரங்கேற்றி வைத்தது உற்ற நண்பன் ஒருவன் என்பதும் பின்னாட்களில் நிலாவிற்கும் மதுரனுக்கும் தெரிய வந்த போது நிலைகுலைந்தே போய் விட்டார்கள். 

அந்த நன்றி மறந்த துரோகிகளுக்கு அன்போடு அன்னமிட்டு அரவணைத்து உயிர் காத்தவன் மதுரன். தமிழன் என்று இரங்கி தன் சோற்றில் பாதி ஊட்டிப்பசியாற்றிய காரணத்தினால் தான் என்னவோ பாதி வழியில் பயணம் தொலைத்து நின்ற மதுரனின் ஆவி பிரித்து மேய்ந்து கொண்டனரோ?

தனக்கு மகன் பிறந்திருக்கின்றான் என்றும் புமிப்பொல் என்ற மருத்துவமனையில் தான் நிற்பதாகவும் தனது நண்பர்களுக்கு தொலைபேசியில் அழைத்து இன்பத்துடன் தன் களிப்பினைப்பகிர்ந்து கொண்ட மதுரனின் நண்பன் ஒருவன் அந்த தகவலை இன்னொருவனுக்கு தெரிவிக்க அவன் கனேடிய காவல் துறைக்கு குறுஞ்செய்தி மூலமாக அனுப்பி வைத்திருக்கின்றான். இதில் என்ன வேடிக்கை என்றால் ஏதோ பெரிய புள்ளியினை மடக்குவது போன்று இவ்வளவு ஏற்பாடுகள்  செய்து கைது செய்தமையே. சாதாரண ஒரு அகதியினை கைது செய்ய இந்தளவிற்கு எதற்கு கடினப்பட வேண்டும்? கனேடிய காவல் துறைக்கு இவ்வளவு குறுகிய தூரப்பார்வையா? தொலை நோக்கில் சிந்திக்க முடியாதா?

அவன் ஒரு குற்றவாளி என்றால், கனேடியப்படைகள் அவன் மீது வழக்கினை த்தொடுத்து தண்டனை கொடுத்திருக்க வேண்டும். அல்லது தாய்லாந்து காவல் துறை என்றாலும் இங்கு அவனுக்கு எதிராக குற்றம் சுமத்தி அவனை சிறையில் தள்ளி இருக்க வேண்டும் அல்லவா? இங்கு பல தமிழர்கள் கடன் அட்டை மோசடி மற்றும் திருட்டில் சிக்கி கடுங்காவல் சிறைகளில் தண்டனை அனுபவித்து இலங்கை சென்றதுண்டு. எனவே மதுரன் குற்றவாளி என்றால் அதற்கான தண்டனை வழங்காமல் எதற்காக குடிவரவு சட்டத்தை மீறியதாக குடியேற்ற தடுப்பு மையத்தில் தடுத்து வைக்க வேண்டும்? ஆட்கடத்தல் குற்றச்சாட்டு என்றால் ஐ நாவும் நிச்சயமாக அவனது  அகதிகள் அந்தஸ்தினை நிராகரித்து இருக்கும். இவற்றினை நிறைவேற்றாமல் யாருக்காக அவனைத் தடுப்பு மையத்தில் வைத்திருக்க வேண்டும்?  இதற்கான விடைகள் கனேடிய காவல் துறையினரிடமே இருக்க வேண்டும். அல்லது இல்லாமலும் இருக்கலாம். அடுத்து வரும் பாகங்களில் அதற்கான பதில் இடம்பெறும். 

மதுரனை கைது செய்ததும் அவனை நீதிமன்றில் ஒப்படைத்து குடிவரவு சட்டத்தை மீறியமைக்காக அவனை தடுப்பு மையத்தில் இடுவதாகவும் விரும்பினால் இலங்கை செல்லலாம் எனவும் நீதிமன்றம் கட்டளையிட்டது. இலங்கை செல்ல முடியாத காரணத்தினால் அவன் தடுப்பு மையம் சென்றான். தடுப்பு மையத்தில் இருநூறுக்கும் மேற்பட்ட ஈழத்தமிழ் அகதிகள் அடைக்கப்பட்டு இருந்தார்கள். மிகவும் கடினமான ஒரு நிலையில் சிலர் இலங்கைக்கு திரும்பிச்சென்று கொண்டும் இருந்தனர். 


அந்த தடுப்பு மையத்தில் மதியம் ஒரு கவளம் சோறும் முட்டையும் சூப்பும் கொடுக்கப்படும். மாலையும் அவ்வாறே. அந்த உணவினை உண்டு பசியாற முடியாது. தமிழர்களின் முயற்சியும் மூளையும் அவர்களை பசியாற வைத்தது. அவர்கள் அங்கு சமையல் செய்வதற்கு ஒரு வழி வகையினை கையாண்டனர். அதாவது அங்கு மின்சாரத்தினை இரு கரண்டிகள் மூலமாக கடத்தி அக்கரண்டிகளை ஒரு நீர் நிரப்பிய வாளி ஒன்றினுள் அமிழ்த்துவதன் மூலமாக அந்த நீர் சூடேற்றப்படும். ஒரு பொலித்தீன் பையினுள் தேங்காய்ப்பால் பொரித்த மீன் அல்லது கோழி இறைச்சி, தூள் , உப்பு (இவை யாவும் அங்குள்ள காவல் துறையின் கடையில் பலமடங்கு விலையில் விற்கப்படும்.) போன்றன இடப்பட்டு நன்கு மூடிக்கட்டிய பின் அந்த கொதிக்கும் நீரில் இடப்பட்டு அது அவிந்த பின் வெளியே எடுத்துக்கொள்ளுவார்கள். இது அதிகாலை மூன்று அல்லது இரண்டு மணிக்கு விழித்திருந்து செய்யப்படும். இவ்வாறு கறியினை சமைத்து மதியம் கொடுக்கப்படும் அந்த சோற்றோடு சேர்த்து உண்டு வந்தனர். இது ஆண்கள் உள்ள மூன்றாம் இலக்க அறையில் தான் சாத்தியமானது. பெண்களுக்கு அதே சூப்பும் சோறுமே. 

ஈழத்தமிழர்கள் மட்டுமன்றி அகதிகள் அல்லாத வியட்னாம், கொரியா ,ஆபிரிக்க நாட்டவர்கள்  மற்றும் ஐரோப்பிய நாட்டவர்களும் அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் யாவரும் நிரந்தரமாய் அங்கு இருப்பதில்லை. தம் நாடுகளுக்கு சென்று விடுவார்கள். 

மூன்று நாட்களுக்கு ஒரு முறை மைதானம் என்ற அடைபட்ட வெளிக்குள் எல்லோரும் கீழே இறக்கப்படுவார்கள். அங்கு தொலைபேசி அழைப்புக்கள் வெளியிடங்களுக்கு அழைக்க முடியும்.தொண்டை கிழிய வயிறு நோக கத்திக்கதைத்தாலும் மெதுவாக கேட்கின்ற அந்த தொலைபேசி இயந்திரங்கள் பல ஆண்டுகளாக அதே நிலையில் தான் இருக்கின்றன.  ஒரே ஒரு  நல்ல இயந்திரம் உண்டு. அதிலும் நூற்றுக்கணக்கானோர் அதில்  வரிசையில் நின்று அழைப்புக்கள் மேற்கொள்ள வேண்டும். ஒன்றரை மணித்தியால இடைவெளியில் வரிசையில் நின்றாலும் அழைப்பு எடுக்க முன்னரே நேரம் முடிந்து அறைக்கு திரும்பிச் செல்லும் அனுபவம் அங்குள்ள பலருக்கு உண்டு. 

ஈழத்தில் மட்டுமே தமிழர்களுக்கு துன்பம் என்று இல்லாமல் உலகமெங்கும் துன்பத்தினை பங்கு போட்டு எழுதி வைத்த இறைவனுக்கு என்ன வன்மம் தமிழர்கள் மீது?? 

நாட்டுப்பிரச்சினை , இனவாதம் என்பவற்றை  உணரத்தெரியாத அன்றி அறிந்து கொள்ளத்தெரியாத மக்கள் வாழும் தேசம் இது. தங்கள் நாட்டிற்கு பஞ்சம் பிழைக்க வந்தவர்கள் என்ற ஒரு மட்டமான எண்ணம் கொண்டு கேவலமாய் நோக்கும் தடுப்பு மைய காவல் துறையினருக்கு எம்மினத்தின் தொன்மையும் வரலாறும் தெரிந்திருக்க நியாயம் இல்லை தெரிந்து கொண்டாலும் விளங்கிக் கொள்ளப்போவதுமில்லை.

தொடரும்....


அரசி நிலவன்
தாய்லாந்திலிருந்து 



அடுத்த பதிவிற்கு செல்ல
http://arasikavithaikal.blogspot.com/2014/02/mv-sunsea-6.html

Monday 27 January 2014

முத்து...!!!


இந்து சமுத்திரத்தின் முத்து - என
அடைமொழி கொண்டு
பூரித்த இலங்காபுரியில்...
கொத்து கொத்தாய் மனித மண்டையோடுகள்..!
கொன்றொழித்து மறைத்த எச்சங்கள்
குட்டி போடுகின்றனவோ...?


அள்ள அள்ள குறையாத
அமுத சுரபி போன்று
தோண்ட தோண்ட விளையும் என்புகளின்
வற்றாத மனித புதைகுழிகள்
வகை வகையாய் மலிந்து கிடக்கின்ற
வளமான நாடு...!

இந்து சமுத்திரத்தின் முத்து
நன்றாகவே பொருந்துகின்றது...!
 
யார் யாரோ...?
யார் இவரோ..???

யார் அறிவார் இவர்களை - உயிர்
யாசகம் கேட்டு
தோற்றுப்போய் தாண்டவர்கள்
தோண்டப்படுகின்றார்கள் இதயம்
உக்கிய மண்ணை நீக்கி....

என்புகளின்  விளைச்சல்
எதிர்பார்க்காத அளவிற்கு
வரலாறு காணாதவாறு
வளமாய் விளைகின்றது...!

சர்வதேச சந்தையில் விற்று
சரிந்து நிற்கும் பொருளாதாரத்தினை
சற்று உயர்த்திடலாமோ..???

சமரச பேச்சுவார்த்தைநடக்கின்றது
சத்தமின்றி என்புகளை நாடு கடத்திட....

இறந்தவர்கள் வாழ்வதாய்
இருப்பவர்கள் தேடி அலையும் தேசத்தில்
தோண்டி எடுக்கப்படும் இவர்கள்
தொன்மையான தொல்பொருள் சான்றுகளா??


யார் யாரோ...?
யார் இவரோ...?
யார் அறிவார்கள்...?

கொத்து கொத்தாய் மனித என்புகளை
சொத்தாக கொண்ட இலங்காபுரிக்கு
"இந்து சமுத்திரத்தின் முத்து"
நன்றாகவே பொருந்துகின்றது...!




Sunday 26 January 2014

கடற்சூரியன் (MV SUNSEA) தரையில் உருவாக்கிய கொந்தளிப்பு...!!! (பாகம் 4 )

குறிப்பு : இந்த தொடரின் பாகம் நான்கும் வெளிவருகின்ற இந்த ஒரு வார கால இடைவெளியில் மதுரன் இதுவரை சிகிச்சைக்கு உட்படுத்தப்படவில்லை. கடும் பிரயத்தனத்தின் மத்தியில் இரு நாட்களுக்கு முன்னர் எடுத்துச்செல்லப்பட்ட மதுரனை வைத்தியர் பரிசோதனைக்கு உட்படுத்தாமல் அதாவது இரத்தத் அழுத்தம் ,இதயத்துடிப்பு போன்ற அடிப்படையான சோதனைகளை மேற்கொள்ளாமலேயே சில மாத்திரைகளை வழங்கியுள்ளார். ஒருவரின் உடல் பலவீனமாக இருக்கும் போது அவரின் நாடித்துடிப்பினை தன்னும் சோதிக்க முற்படாமல் மாத்திரை வழங்கும் அளவிற்கு காவல் துறையினர் வைத்தியருடன் பேசிக்கொண்டதாகவும் மருத்துவமனை செல்லும் வழியில் இணையத்தில் செய்தி இடப்பட்டது தொடர்பாக மிரட்டப்பட்டது எனவும் தெரிவித்த மதுரனால் இன்று தனது ஒரு கரம் செயல் இழந்திருப்பதாக தெளிவின்றிய குரலால் தெரிவிக்கப்பட்டது. 

அத்துடன் அவர் தெரிவித்த இங்கு எழுத முடியாத பல உடல் நிலை அறிகுறிகளை கொண்டு அவரது சிறுநீரகம் பாதிக்கப்பட்டு இருப்பதாக அறிய முடிகின்றது. தனக்கு அச்சுறுத்தல் என்று வெளியேறி தப்பித்து வந்த ஈழத்திற்கே சென்று இறக்க விரும்புவதாக மதுரன் கதறுவதிலிருந்து அவனது உடல்நிலை எவ்வாறான நிலையில் உள்ளது என்பதனை விளங்கிக்கொள்ள முடிகின்றது . 

அத்துடன் இந்த தொடர் எழுதும் வரை  இந்த தொடரில் சம்பந்தப்பட்டவர்களுக்கு பல மிரட்டல்கள் வந்துள்ளன. ஒரு வேளை இதனை தொடர்ந்து எழுத முடியாத சூழ்நிலைக்குள் சிக்குண்டால் அதாவது  இந்த தொடரின் அடுத்த பாகங்கள் தொடராமல் போனால் மன்னித்துக்கொள்ளவும். ஆனால் பாதுகாப்பினை உறுதி செய்தபின் மீண்டும் நிச்சயமாக தொடரப்படும். இந்த தொடர் இணையத்தில் பிரசுரிக்க முற்பட்ட நோக்கமே மதுரனின் நிலைக்கும் அங்குள்ள ஏனைய ஈழத்தமிழ் உறவுகளுக்கும் தமிழ் அமைப்புக்கள் குரல் கொடுத்து அவர்களின் வெளியேற்றத்தினை விரைவாக்கிட சம்பந்தப்பட்ட அமைப்புக்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதற்கேயாகும். 

ஆனால் ,இந்தக்கட்டுரையின் முதல் பாகத்தில் குறிப்பிட்ட காவல்துறை மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவன தாதியின்  குற்றச்சாட்டுக்களை அதாவது தமிழில் எழுதியதை மொழிபெயர்த்து தடுப்பு மையத்தில் உள்ள காவல்துறையினருக்கு காட்டிக்கொடுத்த தமிழர்கள் இருக்கும் பாங்காக் குடிவரவு தடுப்பு மையத்தில் இருந்து பல தமிழ் நெஞ்சங்கள் இந்த தொடருக்கு ஆதரவு தெரிவிப்பதுடன் அங்கு அநியாயம் புரியும் தன்னார்வ நபர்களின் பெயரினையும் வெளியிட்டு தம் அவல நிலையினையும் தொடர்ந்து எழுதுமாறும் கேட்டுக்கொண்டு வருகின்றார்கள். 

காட்டிக்கொடுத்த அந்த நல்ல உள்ளங்களுக்கு மதுரனின் மேல் முன் விரோதமோ பகையோ இல்லை. காவல்துறையினரை கைக்குள் போட்டுக்கொண்டால் தமக்கும் ஏதாவது சலுகை கிடைக்கும் என்ற அற்ப நோக்கமே. இவர்கள் யாவரும் இலங்கை தடுப்பு முகாமில் இருந்து வெளியேறுவதற்காக எத்தனை போராளிகளை காட்டிக்கொடுத்து இங்கு அடைக்கலம் புகுந்தார்களோ..?  அது அவர்களுக்கு மட்டுமே வெளிச்சம்.


பாகம் நான்கு தொடர்கின்றது..........


கடற்சூரியனால் நல் வாழ்வினைத்தொட்ட முன்னாள் தாய்லாந்து வாசிகள் இங்குள்ள தமிழர்களை மட்டுமல்ல தாய்லாந்தின் ஐக்கிய நாடுகளின் அகதிகள் உயர் ஸ்தானிகராலயத்தினையும்  விட்டு வைக்கவில்லை.

கனடாவிற்கு கப்பலில் சென்று இறங்கியவர்களில், ஏற்கனவே தாய்லாந்தில் ஐ நாவால் அகதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டவர்கள், மற்றும் மீள் குடியேற்றத்திற்காக மூன்றாம் நாடுகளின் நேர்முகத்தேர்வுகளை எதிர்நோக்கியவர்களும் அடங்கி இருந்தனர். கனடாவில் வழக்கு கொடுக்கும் போது  அவர்கள் அங்கு ஐ நாவினை குற்றம் சுமத்தி வாக்கு மூலம் கொடுத்திருக்கின்றார்கள். அதாவது ஐ நா தம்மை கவனிக்கவில்லை என்றும் அவர்கள் தம்மை  கைவிட்டதாலேயே  கப்பல் ஏறி வந்தோம் என்றும் திரிபு படுத்தி கூறியிருக்கின்றனர்.உண்மை அது அல்ல. அந்தக்காலப்பகுதியில் ஏனைய நாடுகளினை விட ஈழத்தமிழ் அகதிகளே இங்கு செறிந்து காணப்பட்டனர். இப்போது போல் அல்லாது அன்று உடனுக்குடன் அகதியாக அங்கீகரிக்கப்பட்ட நிலை காணப்பட்டது.காத்திருக்க முடியாமல் அவசரப்பட்டு சென்ற அவர்களின் பேராசையினை மறைத்து ஐ நாவில் குற்றம் சுமத்தி அதன் மேல் கறையினை பூசி தமிழர்களுக்கும் அவமதிப்பை ஏற்படுத்திக்கொடுத்தனர். அவர்கள்   வழங்கிய பொய்க் குற்றச்சாட்டுக்களினால் , தாய்லாந்தில் உள்ள ஐ நாவின் அகதிகள் உயர் ஸ்தானிகராலயம் நேரிடையாகவே இங்குள்ள  தமிழ் மக்களை நோக்கிக் கேள்வி எழுப்பியது...??? இன்று வரை ஒரு வித மனக்கசப்பில் ஐ நா உள்ளதற்கு காரணம் கப்பலில் சென்ற தாய்லாந்து அகதிகளின் பொய்யான வாக்கு மூலமே..!

கடற்சூரியனின் தொடுகையின் பின்னர் தாய்லாந்தில் தமிழர்களின் நிலை ஐ நாவில் ஒருவித மதிப்பற்ற தன்மையில் தொடர்ந்தது. தாய்லாந்து அரசிற்கு கனேடிய அரசு அழுத்தம் கொடுக்கும் போது , நிச்சயம் தாய்லாந்து அரசானது ஐ நாவினை நோக்கி வினா எழுப்பாமல் இருந்திருக்க முடியாது. ஏனென்றால் தாய்லாந்து நாடானது ஐக்கிய நாடுகளின் அகதிகள் சட்டத்திற்கு அமைவான நாடல்ல. அது அகதிகளை ஏற்றுக்கொள்ளாத ஒரு நாடு. தங்கியிருக்கின்ற அகதிகள் யாவரையும் சட்ட விரோத குடியேறிகளாகவே நோக்குகின்றது. எனவே அகதிகள் என்று வந்தவர்கள் கப்பல் ஏறிச்சென்றதால்  தாய்லாந்து அரசு ஐ நாவினை முறைத்துக்கொண்டதோடு, அகதிகளையும் அணைத்துத்தன் இறுக்கமான சட்டத்தில் கட்டி வைத்துக்கொண்டது.

பாகிஸ்தான், வியட்னாம் இந்தியா ,சோமாலியா, கம்போடியா என்று பல நாட்டு அகதிகள் தாய்லாந்தில் தஞ்சமடைந்திருக்கும் நிலையில் ஈழத்தமிழர்கள் சாட்டிய குற்றத்தால் தலை குனிந்து செல்லும் நிலை இங்கிருந்த மீதித் தமிழர்களுக்கு ஏற்பட்டது. அதை விட ஓரளவு நடமாடி திரியும் நிலையில் இருந்தவர்கள் வீதியில் இறங்கிசெல்லவே அச்சப்பட்டனர்.

ஆம்.! எந்நேரமும் கனேடியப்படைகள் மாறுவேடத்தில் அங்காடிகள் எங்கும் ரோந்தில் அலைந்தன. தமிழனின் முகம் தென்பட்டாலோ அன்றி தங்கி இருக்கும் விடுதிகளில் ஆண்கள் அணியும் "சாரம்" தொங்கினாலோ நிச்சயம் தடுப்பு மையம் அவர்களை வரவேற்கும் நிலை காணப்பட்டது. இது இலங்கையில் இந்திய இராணுவத்தின் அட்டுழியம் நடந்தேறிய போது இடம்பெற்ற சம்பவங்களை மீட்டிச்சென்றது. சாரம் துவைத்து காயப்போட்டால் அங்கு சன்னம் பதம் பார்ப்பது போன்று இங்கு சாரம் தென்பட்டால் காவல் துறை பாயும்.

அது மட்டுமன்றி , தகவல் கொடுத்து உதவிடச் சொல்லி தாய்லாந்து  வாழ் மக்களுக்கு துண்டுப்பிரசுரங்களும் வழங்கப்பட்டது. எவ்வாறு என்று தெரியுமா? வழமையாக ஒரு குற்றவாளியினைக்  கண்டு பிடிக்கவே துண்டுப்பிரசுரம் அச்சடித்து விநியோகிப்பார்கள். ஆனால் இங்கு "ஸ்ரீலங்கன் " என்று தாய் மொழியில்  அச்சடித்து கனேடியப்படைகள்  புறநகர்ப்பகுதிகளில் விநியோகித்து எச்சரிக்கை விடுத்து வைத்திருந்தனர். கனேடியப் பத்திரிகை காரர்களும் தமிழர்களை மோப்பம் பிடித்து அலைந்து திரிந்து நேர்காணல்களை நடாத்தினர்.

இவற்றினை விட பாங்காக் நகரில் உள்ள ஐ நா அகதிகள் மையத்தில் கனேடியப்படைகள் தமது முகவரி தொலைபேசி இலக்கங்களை கொண்ட அட்டைகளை வழங்கி தமக்கு தகவல் வழங்கும் படி விளம்பரப்படுத்தியதுடன், அவ்வாறு தகவல் கூறியவர்களுக்கு சன்மானமாக பணமும் கொடுக்கப்பட்டது தகவல் உண்மையா பொய்யா என்பதனை உறுதிப்படுத்தாமலேயே.


பணம் என்றால் பிணமே வாய் திறக்கும் போது உயிருள்ள நமது நல்ல மக்கள் என்ன செய்வார்கள்.? தமக்கு பிடிக்காதவன் , எதிரி என்று சிலரின் பெயர்களை கொடுத்து பணம் பெற்று விலை உயர்ந்த மடிக்கணினி , புகைப்படக்கருவி என்று தம்மை வளம்படுத்திக்கொண்டவர்களும் அதிகம். சாதாரண மக்களின் பொய்யான வாக்கு மூலமே உண்மையாகும் போது ஒரு தமிழ் ஆங்கில மொழி பெயர்ப்பாளரின் அதுவும் பாங்காக் அகதிகள் மையத்தில் கடமையாற்றும் ஒரு மொழி பெயர்ப்பாளரின் தகவல் எத்தகைய அலைகளை உருவாக்கும் என்பதனை மதுரனின் தற்போதைய நிலை விளக்கும்...!

மதுரனுக்கு மற்றவர்களுக்கு உதவி செய்வது எந்தளவு உயிரானதோ அந்தளவு தமிழ் கலாச்சாரம் , பண்பாடுகளைப் பேணுவதிலும் உயிரானவன்.  பதின் நான்கு வயதில் வீட்டுக்குள் அடங்காமல் அடங்காப்பற்று வன்னியில்   அடி பதித்து வந்தவனன்றோ..?

தாய்லாந்தில் போருக்குப்பின்னரான காலப்பகுதியில் அடக்கி வைக்க யாருமற்று தறி கெட்டுத்திரியும் சில கட்டாக்காலி மனிதர்களை எச்சரிப்பதும் எல்லோருக்கும் அதனை வெளிப்படுத்துவதுமாய் கலாச்சாரம் பேணி வந்த மதுரனின் செயற்பாடுகளால் மனதில் வக்கிரம் வளர்த்து வந்த சில  ஊர் மேயும் மனிதர்கள் சந்தர்ப்பத்தை சரியாகப்பயன் படுத்தி தொடர்புகள் கொடுத்துச்சென்ற கனேடியப்படைகளிடம் இல்லாத உண்மைகளையும் அள்ளி வழங்கி, இருக்கின்ற பொய்களை இனாமாகவும் போட்டுக்கொடுத்தனர்.

கப்பல் கரையினைத்தொட்ட அந்த 2010 காலப்பகுதியிலும் அதற்குப்பின்னும் பெருமளவிலானோர் வீதிக்கு வெளியே சென்று வர அச்சமடைந்து இருந்தபோது ஒரு சிலர் எவ்வித அச்சம் இன்றி தங்கு தடையின்றி வீதிகள் எங்கும் உலா வந்தனர். நன்றாக கனேடிய அரசிடம் கறந்து கடன்களை அடை த்துக்கொண்டனர். முதலில் இது பற்றி அவ்வளவாக நிலாவோ மதுரனோ நம்பிக்கொண்டதில்லை. பின்னாளில் அதாவது 2012 இற்கு பின் நேரடியாக கனேடிய காவல் துறையின் அள்ளிக்கொடுக்கும் மனப்பாங்கை கண்ணுற்று விக்கித்து நின்றனர் இருவரும். (இதன் விளக்கம் தொடரும் தொடர்களில்..)

ஒன்றாகவே வாழ்ந்து , நண்பர்களாய் கை கோர்த்து திரிந்தவர்கள் காட்டிக்கொடுப்பை நிகழ்த்தி தம்மை தாமே தாழ்த்திக்கொண்டனர். கனேடிய காவல் துறையின் சலவையில் நன்றாக துவைக்கப்பட்ட எம்மவர்களின் மூளைகள் கனேடியர்களைப்போன்று வெளிறி விட்டதால் நினைவுகளும் வெளிறி பழகிய நட்பு பாசம் யாவும் வண்ணத்தை இழந்து கொண்டன. இடுப்பில் சொருகிய பணத்தோடு  இளித்துக்கொண்டர்.

ஈழத்தில் இவ்வாறான செயற்பாடுகளும் மனிதர்களும் மதுரன் ஈழத்தில் வாழ்ந்த காலப்பகுதியில் இருந்திருக்கவில்லை. எனவே இங்கு இவ்வாறான மனிதர்களும் செயல்களும் அவனுக்கு புதியதே. அதனால் அவன் வெகு விரைவாக குழியில் தள்ளி விழுத்தப்பட்டான். சுதாரித்துக்கொண்டு எழுந்திருக்க முடியாமல் போனமைக்கு காரணம் தன்னை விட அதிகம் நம்பிய தோள் மேல் கை போட்டு நடந்து வந்த தோழனின் கைகளாக அவை இருந்து விட்டமையால்.  

ஆம்..!
கனடாவில் பெற்றுக்கொண்ட மதுரனின் தகவல்களைக்கொண்டு தாய்லாந்தில் மதுரனை வலை வீசித் தேடிக்களைத்துப் போன கனேடியப்படைகள் மதுரனின் நண்பர்களை விலை பேசிக்கொண்டது. மதுரன் எங்கும் தலை மறைவாகிடவில்லை. குற்றம் புரிந்தால் அன்றி எதற்கு அச்சப்பட வேண்டும். எல்லோரையும் போன்றே ஒரு சட்ட விரோத குடியேறி என்ற நிலை தாண்டி அவன் வேறு ஒரு குற்றமும் புரிந்திருக்கவில்லையே. தடுப்பு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டால் நிறை மாதக்கர்ப்பிணியான நிலா நிர்க்கதியாகி விடுவாள் என்று பாதுகாப்பாக இருந்தானே தவிர ஓடி ஒளிந்திருக்கவில்லை.

கனேடியப்டைகளுக்கு பணத்தை வீசி எறியாமல் துப்புத்துலக்க துப்பில்லை என்பது மதுரனின் விடயத்திலிருந்து அறியப்பட்ட அப்பட்டமான உண்மை. வல்லரசுகளும் மேலைத்தேய அரசுகளும் தீவிரவாதியை சுட்டுக்கொல்கின்றேன் என்னும் பேர்வழியில் எதனை அரங்கற்றினாலும் அங்கு பணம் கொடுத்த மனித விலைப்பொருட்கள் நிச்சயம் தம் பங்களிப்பினை ஆற்றி இருக்கும். வல்லரசு  மனித மூளை யாரை வாடகைக்கு அமர்த்தி காட்டிக்கொடுப்பை வேண்டிக்கொள்ளலாம் என்று தான் சிந்திக்கும். தமிழ் ஈழத்து மூளை போன்று பம்பரமாய் சுழன்றடித்து தனித்து இயங்குவதில்லை. தமிழ் ஈழத்து புலனாய்வாளர்களின் காலின் தூசிக்கு எவரும் சமனாக நிற்கப்போவதில்லை.  இந்த இடத்தில் அதற்காக நான் பெருமிதம் கொள்கின்றேன்.

கிட்டத்தட்ட மூன்று மாத காலத்திற்கு முன்னரே  கனேடிய விசுவாசி ஆன மதுரனின் நண்பனால் மதுரனோடு ஒட்டி உறவாடுவதைப்போன்று அந்த காலப்பகுதியில் எப்படி நடிக்க முடிந்தது? என்று எண்ணிப்பார்க்கவே முடியவில்லை.அன்னம் பரிமாறிய நிலாவின் கைகளை நினைத்துக்கொண்டானா அன்றி துக்கத்தில் ஓடி வந்து அணைத்துக்கொண்ட மதுரனின் கைகளை யாவது நினைத்தானா?  பணம் கொடுத்தால் தன்னையும் வெட்டிக்கொல்ல அனுமதிப்பான் போலும்? இப்படியும் மனிதர்களா? இருக்கத்தான் செய்கின்றார்கள். நிச்சயம் நம்பித்தான் ஆக வேண்டும். அந்த நண்பனின் இல்லை நண்பனைப்போன்று நடித்தவனின் முகத்திரை கிழிந்தும் இன்றுவரை அவனை நம்ப நினைக்கும் உள்ளம் கொண்டவனே மதுரன்.

வைத்தியசாலையில் மதுரனின்  முதல் குழந்தை பூமித்தாயவளை   முத்தமிட்டதை  நண்பர்களுக்கு ஆனந்தமாய் மதுரன் பகிர்ந்து கொண்ட அந்த முத்தான தகவலே  தன்னைக்கம்பிச்சிறைக்குள் தள்ளி விழுத்தும் என்பதனை அவன் அந்த இன்பப் பொழுதில் அறிந்திருக்க நிச்சயம் வாய்ப்பில்லை.



தொடரும்.............

ஒரு சிறிய குறுந்தகவல் வழங்கிய தமிழன் ஒருவனால் குழந்தை முகம் பார்த்த  சில மணிகளில் குழந்தையினருகே வைத்து கைது செய்யப்பட்ட மதுரனின் தடுப்புக்காவல் அத்தியாயம் அடுத்த பாகத்தில் தொடர்கின்றது..... 



அரசி நிலவன்
தாய்லாந்திலிருந்து 



அடுத்த பதிவிற்கு செல்ல 
http://arasikavithaikal.blogspot.com/2014/01/mv-sunsea-5_31.html

Friday 24 January 2014

தமிழ் போல் நிலைத்து நீ வாழ்க...!


இருள் நீக்கி இனிமை கொடுத்திட
அருள் பெற்று இதழ் விரித்து மலர்ந்தவனே..!
இன்பம் பொங்க வைத்த இசையரசனே....!!!

பரவசம் கொடுத்தாய் பண்பாக்கினாய்
பனி மலரே உந்தன் மலர்ச்சியில்
பறந்தோடும் துன்பங்கள் யாவும்...!

கண்ணீர் கொண்டால் கரையும் சின்னவனே...!
கண்டபடி திட்டும் குழப்படியானவனே...!
கன்னித்தாயவளின் குலக்கொழுந்தே...!

எனை அடக்கி ஆளும் மதுவனே...!
எங்கும் என்றும் எதிலும் என் விம்பமாய்
கனிவாய் சிரிப்பாய் துடிப்பாய் துள்ளுவாய்
எனதாய் உனதாய் உதிரமாய் போனவனே...!


மனதால் குறும்பால் தெய்வமாய் தெரிவாய்
கொஞ்சு தமிழும்  இனிமை பெருகின்றதடா
பிஞ்சு உந்தன் நாவில் புரள்வதால்...
மஞ்சுக்குட்டியே - உன்னை
வித்திட்டவனை மலர்ப்பாதம் தொட்டு - தள்ளி
விலக்கி வைத்தாய்
அகவை மூன்றிலும் - அருகின்றி
அணைத்து முத்தமிட்டு வாழ்த்திட வழியின்றி இதயம்
இணைத்து காற்றில் தூது விடும் எந்தையின் குரலும்
உனக்கென்றால் உயிர் பெறுமே....!

உன் அகவையில்
உள்ளங்கள் மலரட்டும்...!
உயிர் பெற்று ஊசல் ஆடட்டும்..!

உந்தன் சிரிப்பு நான்கு சுவர் தாண்டி
உலக வலம் வரட்டும்...!

எனக்குள் உயிரானவனே - இன்று
உயிர் கொடுக்கின்றாய் எனக்கு...
உன் அகவையால்...
உண்மைகள் துலங்கட்டும்
உறவுகள் கை சேரட்டும்...!

தமிழ் மேல் காதல் கொண்டு
தமிழ் வளர்த்து  தமிழுக்காய் நீ வாழ்க...!!!
தமிழ் போல் நிலைத்து நீ வாழ்க...!

பல்லாண்டு காலம் பண்பிலே சிறந்து
பல்கலையும் கற்று பணிவோடு வாழ்க
இதயம் கனிந்து உச்சி முகர்ந்து வாழ்த்துகின்றேன்..!
வாழ்க வாழ்க வாழ்க...!  

Thursday 23 January 2014

கொடை...!!!

உலகத்தில் உயிரைக்கொடுப்பதுதான்
உச்சமான கொடை என்று அறிந்ததுண்டு...!

வாழ்ந்து கொண்டே மரணிக்கின்றான்
வாழ்நாளை கொடுத்து விட்டான் பிறருக்காக...
வாழ்வின் அரிய தருணங்களை வாரி வழங்கி
வாடிக்கிடக்கும் இவனின் கொடை எங்கு சேரும்?

பணம் கிடைக்கும் என்றால் பிணம் பேசுகின்ற காலத்தில்
பிணமாய் கிடக்கின்றான் பணம் என்பதனை புறந்தள்ளி...!
உறவுகளின் நலன் விரும்பியதால் தன்
நாக்கிற்கு பூட்டு இட்டுக்கொண்டு சாவியினை
தெரிந்து கொண்டே தொலைத்துக்கொண்டவன்...!
கடக்கின்ற கொடுமை வாழ்விற்கும்
களங்கம் அள்ளிப்பூசி அர்த்தமற்றதாக்கி விடுமா...?

புரிந்துணர்வு அற்றோரின் புரிதல்கள்
வதந்திகளாய் அவனை மூச்சுத்திணற
வைக்கின்றன....!
முகவுரையும் முடிவுரையும் இன்றி
நடுவில் கொஞ்சம் மேய்ந்தவர்கள்
விமர்சனம் புரிந்திடத்தகுதியானவரோ?

அவனது கொடை
அவனை அறிந்தவர்கள்
அறிவார்கள்...!

உயிர்க்கவசத்தினை அறுத்து
உயிரினை கொடையாக்கியவன் கர்ணன்..!
உயிரைத்தினம் தினம் அறுத்துக்கொடுக்கின்றான் இவன்...!
உயிர் கொண்ட இவன் விசுவாசிக்காக...

உண்மையும் இவனோடு சேர்ந்து தடுப்புக்காவலில்
உறைந்து கிடக்கின்றது நெடுநாளாக....!

உயிரை இவன் துறந்திட்டாலும்
உண்மை தன் உயிரைக்கொடையாக்கி
உலகம் எங்கும் உரத்துச்சொல்லும் அவன்
உயிர்க்கொடையினை....!


அரசி நிலவன்
  

கடற்சூரியன் (MV SUNSEA) தரையில் உருவாக்கிய கொந்தளிப்பு...!!! (பாகம் 3 )

எதிர்பார்ப்புக்களுடன் விடிகின்ற பொழுதுகளாக தொடர்ந்து விடிகின்ற அந்த விடியல்கள் அன்றும் அப்படியே விடிந்தது. அவ்வாறு நிலாவும் மதுரனும் எண்ணி புலர்ந்த காலையின் புத்துணர்ச்சியினைப்போன்றே புதுப்பொலிவுடன் தம் அன்றாட வேலைகளில் மூழ்கிப்போயினர். அனால் உள்ளங்களோ  ஒரு தொலை பேசி அழைப்பிற்காக ஏங்கித்தவித்தது. அந்த நெடுநாள் எதிர்பார்ப்பு தொலைபேசி அழைப்பு அன்று வந்தது. ஆனால் அவர்கள் எதிர்பார்த்த செய்திக்கு எதிர்மாறான தகவலோடு அன்று மதியம் இடியென இறங்கிய ஒரு செய்தியால் இதயம் உடைந்து போயினர் நிலாவும் மதுரனும்.   ஆம் தொடர்புகள் அற்றுப்போன    அவர்களின் எதிர்கால கனவு , வாழ்க்கை யாவற்றையும் தாங்கிய கடற்சூரியன்(MV Sun sea) எல்லை தாண்டி இவர்களைத் தவிக்க விட்டுச் சென்று கொண்டிருப்பதாக வந்த அந்தச் செய்தி கேட்டு நிலைகுலைந்த உள்ளங்கள் கிட்டத்தட்ட மணிக்கணக்கில் அமைதியினை பேணிக்கொண்டு இருந்தன.

ஆனி மாதம் 2010 இற்குப்பின் எதுவும் அறியாமல் தொடர்புகள் அற்றுப்போன நிலையில் ஏறத்தாழ இருபது நாட்களாக  துடித்து பதைத்து ஒவ்வொரு விடியலையும் இன்று அழைப்பு வராதா ? வராதா? என்ற ஏக்கங்களுடன்  நம்பிக்கையில் ஊசலாடிக்கொண்டு இருந்தவர்களுக்கு கப்பல் புறப்பட்டுச் சென்று கொண்டிருக்கின்ற செய்தி எந்த வகையான தாக்கத்தினை உண்டு பண்ணியிருக்கும் என்பதனை அனுபவித்து பார்த்தால் அன்றி வெறும் எழுத்துக்களால் எழுதி விட முடியாது.

கப்பல் புறப்பட முன்னரே மூன்று மாதங்களுக்கு மேலாக பசுபிக் பிராந்திய கடற்பரப்பில் தரித்து நின்ற சமயங்களில், அது பல நாடுகளின் கண்ணில் பட்டு, ஒரு மாத காலமாய் செய்திகளாய் இணையத்தினையும் பத்திரிகைகளையும் ஆட்கொண்டு இருந்தது. ஆனால் அது ஆஸ்திரேலியா செல்லவிருப்பதாக எச்சரிக்கைச்செய்தி அடிக்கடி இணையத்தில் வெளியாகிய வண்ணம் இருந்தது. அந்தச் செய்திகளை கண்ணுறும் போதெல்லாம் நிலாவும் மதுரனும் நெஞ்சம் பதைத்துப்போவதுண்டு. எங்கே நாம் போக முடியாமல் போய் விடுமோ? என்ன செய்வது ? என்றெல்லாம் பல இரவுகள் புலம்பியதுண்டு. அவ்வாறு புலம்பியவர்கள் கப்பல் தம்மை விட்டுச் செல்வதை அறிந்ததும் எவ்வாறு இதயம் நொறுங்கிப் போயிருப்பார்கள் என்பது அவர்களுக்கே மட்டும் தெரிந்த வலியாகும்.  .

இன்றோ நாளையோ என்று அந்த விடுதியில் தங்கியிருந்த அவர்கள் ஒவ்வொரு நாளும் செலுத்த வேண்டிய வாடகையினையே பெரும் சிரமத்தில் கடினப்பட்டு  செலுத்தி நாட்களை நகர்த்திக்கொண்டிருந்தவர்களுக்கு அடுத்து என்ன செய்வது என்பது முற்றிலும் சூனியமாகவே தென்பட்டது.  கையில் பணம் இல்லை அடுத்த வேளை உணவிற்கு என்ன செய்வது என்று தெரியாமல் விக்கித்து நின்ற அவர்கள் தம்மை விட தம்மோடு அடைக்கலம் அடைந்திருந்த அந்த சிறுவர்களை நினைத்து கவலைப்பட்டுக்  கொண்டது மட்டுமன்றி கரையோரத்தில் தனித்து விடப்பட்ட நிலாவின் சகோதரனை நினைத்து தேம்பி தேம்பி அழுதனர்.

கனடாவில் திருமணம்  செய்து கொண்டு வாழும் கனவில் இருந்த மதுரனை நிலா ஆறுதல் படுத்த முடியாமல் திணறினாள். ஐ.நாவின் துணையினால் எங்காவது செல்வோம் என்று அன்றிலிருந்து நம்பி நம்பி அந்த நம்பிக்கைக்கு தீனி போட்டபடி இன்றும் ஐ நாவின் கால்களைப் பிடித்தபடியே தொங்கிக்கொண்டிருக்கின்றார்கள்.

ஆம், அந்த செய்தி கப்பல் தனது  பயணத்தை ஆரம்பித்த  2010 ஆடி 5 இலிருந்து பத்து நாட்கள் கழித்து, அதாவது 2010 ஆடி 15 அளவில் அறியப்பட்டது. கூடவே இருந்த இரு சிறுவர்களும் பெண்ணும் செய்தியினை கேட்டு அழுத வண்ணம் இருந்தனர். அந்தச் சிறுவன் ஒருவன் நிலாவினை பார்த்து,

"அன்ரி நாங்கள் ஒரு போட் எடுத்து கலைச்சிட்டு போய் கப்பலில் ஏற முடியாதா? மாமாவும் அத்தையும் என்னை விட்டிட்டு போயிட்டினமா??"


 கண்கள் கலங்க கேட்ட அந்த எட்டு வயதுச் சிறுவனை ஆறுதல் படுத்த முடியாமல் திகைத்து நின்ற நிலா,மதுரனின் நிலை எண்ணி மிக்கக் கவலையடைந்தாள். மதுரன் பல மணி நேரமாக அமைதியாக இருப்பதை கண்ணுற்றுக் கலக்கமடைந்தாள். அவனை உலுப்பி

"என்ன ஏதும் கதையுங்கோவன்.. ஏன் இப்பிடி இருக்கிறீங்கள்...? "

என்று கலங்கி அழுதவளை நிமிர்ந்து பார்த்த மதுரனின் கண்களில் குளமாய் கண்ணீர்...!

"அவசர அவசரமாய் உன்னை இங்கு வர வைச்சு உன் படிப்பைக்குழப்பி  உன் இலட்சியத்தினை குழப்பி கடைசியில் நடுத்தெருவில் விட்டு போட்டனே...நான் "

என்று சொல்லிச் சொல்லி குலுங்கி அழுதவனை நிலா ஆற்றுப்படுத்த பெரும் சிரமப்பட்டாள்.

"இது தான் ஒரு வழியா..? எத்தனையோ வழி இருக்கின்றது . நாங்கள் தான் UNHCR இல்  பதிந்து இருக்கின்றோம். எங்களை அவர்கள் ஏதும் நாட்டுக்கு அனுப்பி வைப்பார்கள் தானே..."

என்ற நிலாவினை நோக்கி நிமிர்ந்த மதுரன்

"என்ன நிலா இரண்டு வருசமா  நான் அதைத்தானே செய்து கொண்டு இருந்தன். இவ்வளவு நாளும் நடக்காததா இனி நடக்க போகின்றது..? "

என்றவன்  மீண்டும் கலங்கத் தொடங்கினான். ஒருவாறு பல நம்பிக்கைகளை வளர்த்து அவனை நிலா  தேற்றினாள். அடுத்த நாள் வரை எல்லோருமே குழம்பிப் புலம்பிக்கொண்டே   இருந்தனர்.

ஏற்கனவே முதல் தொடரில் கூறிய நிலாவின் சகோதரன் கரையோரத்தில் நின்றிருந்தான். அவனும் பணம் கொடுத்தபடி பயணிகளில் ஒருவனாக நின்று கொண்டு உடன் பிறப்பிற்காக காத்திருந்து கடைசியில் கப்பலினைக் கை விட்டவனாக அங்கிருந்து இருப்பிடம் திரும்பி இருந்தான். அவன் தனது உள்ளத்தில் கவலைகளையும் கண்களில் கண்ணீரினையும் அடக்கி வைத்திருந்தாலும் அவனது வேதனைகளை நன்கே அறிந்தாள் நிலா. தொலைத்தொடர்பு கற்கை நெறி கற்றுக்கொண்டிருந்தவனை இடை நடுவில் குழப்பி இங்கு கொண்டு வந்து விட்டோமே என்று உள்ளம் குறு குறுத்துக்கொண்டிருந்தது.

இவர்கள் மட்டுமன்றி பாங்காக்கில் கிட்டத்தட்ட நூறு பேர் வரை இவ்வாறு கப்பலினைத் தவற விட்டு கண்ணீரோடு செய்வதறியாது நின்று புலம்பினர். அதில் இறுதி யுத்த களத்தில் மண்ணுக்காய் வித்தான தளபதி ஒருவரின் மனைவியும் இரு பச்சிளம் பாலகர்களும் அடங்கினர். போராளிகளையும் மாவீரர் குடும்பங்களையும் இலவசமாக உள் வாங்கிய கப்பலுக்குச் செல்லுவதற்காக அழைப்புக்கள் வந்த போது  இறுதி யுத்த களத்தில் நேரடியாகப்பதிக்கப்பட்ட அந்த தளபதியின் மனைவி   நச்சு வாயுத்துகள்களின் சுற்றோட்டத்தால் மூச்சு விட சிரமப்பட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அந்த சகோதரி மீண்டு வந்த சமயம் கப்பல் தனது பயணத்தினை ஆரம்பித்து இருந்தது. அதன் பின்  உதவி புரிந்த மதுரனால் தொடர்ந்து உதவி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. அந்த உன்னதமான மாவீரனின் மனைவி தவற விடப்பட்ட அந்த சந்தர்ப்பத்தால் இன்று உடலில் இதயத்திற்கு அருகாமையில் அடிக்கடி வந்து முட்டிச்செல்லும் எறிகணைச்சிதறல் மற்றும் முகத்தில் நரம்புகளில் படிந்த நச்சு வாயு துகள்களினால் தினம் வலியோடு போராடுவது மட்டுமன்றி தன் குழந்தைகளுக்காக தையல் இயந்திரம் மிதித்து அன்றாட சீவனத்துக்கும் போராடுகின்றார். (தினம் தினம் மாவீரர்களின் புகைப்படங்களை முகப்புத்தகத்தில் பகிர்ந்து மெய் சிலிர்க்கும் புலத்து உறவுகள், ஈழத்திற்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்ட அந்த மாவீரர்களின் வேர்கள் கிளைகளான குடும்பத்தினரின் நிலையினை பகிர்ந்து கொண்டதுண்டா அன்றி நினைத்துப்பார்த்த்துண்டா..?)

இப்போதோ அப்போதோ என்று பயணம் இடம்பெறும் என்பதால் தங்கி இருக்க நிரந்தரமாய் அவர்கள் ஏற்பாடு செய்யாமல் தற்காலிக தங்குமிடத்தில் தங்கி இருந்ததால் இருந்த பணமெல்லாம் செலவாகி இருந்தது. ஒரு கட்டத்தில் தங்குமிடத்திற்கு பணம் செலுத்த முடியாமல் இரவிரவாய் வீதி எங்கும் அலைந்து திரிந்தார்கள். இரவிரவாக அங்காடிகளிலும் இணையக் கடைகளிலும் பொழுதைப்போக்கி கொண்டு இருந்தார்கள். அதை விட தாய்லாந்து காவல் துறையின் கண்களில் படாதவாறு ஓடி ஒளிந்து திரிவதே பெரிய சவாலாக இருந்தது. எந்த நேரமும் வீதிகளில் உலா வரும் காவல்துறை மற்றும் குடிவரவு துறையினரின் வாகனங்களை கண்ணுற்றால் எவ்வாறு மின்னல் வேகத்தில் மறைந்து கொள்கின்றார்கள் என்றே அறிய முடியாது. ஏதாவது பொருள் கொள்வனவு செய்யும் போது இது நேர்ந்தால் மீதிப்பணம் பெற்றுக்கொள்ளாமல் ஓடி ஒளிந்து கொள்ளும்  சூழ்நிலைகள் நிறைந்த கால கட்டம் ஆகும்.

சசி என்பவர் காணாமல் போய் இருந்தார். இது இலங்கை போல் அல்ல. சுயமாகவே காணாமல் போய் இருந்தார். அதாவது தாய்லாந்தினை விட்டு தப்பித்து சென்று விட்டார். ஏனென்றால் பணம் பெற்று கைவிடப்பட்ட பலர் அவரைத்தேடி அலைந்து கொண்டிருந்தனர்.  சசியினை கோபித்து என்ன செய்வது எமது தலை எழுத்து இப்படி என்று தம்மை தாமே சமாதானப்படுத்திக்கொண்ட மதுரன் நிலா இருவரும் அடுத்து நிலாவின் சகோதரன் மூலம் பணம் ஒழுங்கு படுத்தி இருப்பிட வசதி செய்து கொண்டார்கள்.

இதற்கிடையில் ஈழத்தில் உள்ள நிலாவின் உறவுகள் அறிந்து மிக்க கோபமும் கவலையும் அடைந்தனர். நிலாவும் மதுரனும் சந்தர்ப்ப சூழ்நிலைகளை ஓரளவு விளங்கி கொண்டதால் அதாவது என்ன காரணத்திற்காய் தாம் கப்பலினை தவற விட்டோம் என்பதனையும் எந்த சூழ்நிலையில் இங்குள்ளவர்களை தவிக்க விட்டு கப்பல் பயணத்தினை ஆரம்பித்திருக்கும் என்பதனை ஊகித்துக்கொண்டதால்  சராசரி மனிதர்களை போன்று கோபத்தில் சம்பந்தப்பட்டவர்களை திட்டியோ பேசியோ காலத்தினை வீண் அடிக்காது அடுத்த கட்டமாக தம் கூட உள்ளவர்களை எப்படியாவது அவர்களின் உறவுகளிடம் ஒப்படைக்க போராடினார்கள்.

அந்த நேரத்தில், கப்பல்  ஏற்பாட்டாளர்கள் சிலர் மீண்டும் பணம் சேகரித்து வேறு வழியில் கப்பலில் அனுப்பலாம் என்று சில நம்பிக்கை உறுதிகளை கொடுத்து மீண்டும் ஏற்பாட்டினை ஆரம்பித்தனர். அந்த வகையில் முதற்போன்றே பல பயணிகள் இலங்கையில் இருந்து உள்வாங்கப்பட்டனர். இருந்தாலும் நிலாவும் மதுரனும் இதில் முழு நம்பிக்கை கொள்ளவில்லை. அவர்கள் ஐ நாவினை முற்றிலுமாக  நம்பியிருந்தார்கள்.ஆனால் முதற்போன்று உதவிகள் செய்து நின்றிருந்த பயணிகளுக்கு இருப்பிட வசதிகள் உணவு வழங்கல்களை ஏற்பாட்டாளர் ஒருவரின் வேண்டுகோளுக்கு இணங்க செய்து கொடுத்தார்கள். காரணம்,  கூடவே  இருந்த அந்த இரு சிறுவர்களையும் பெண்ணினையும் அனுப்பி வைக்கலாம் என்பதாலாகும். இருந்தாலும் அவர்களையும்  ஐ.நாவின் அகதிகள் உயர் ஸ்தானிகராலயத்தில் தஞ்சம் கோரியவர்களாக விண்ணப்பித்தனர். இந்நிலையில் தவற விடப்பட்ட பல பயணிகள் மீண்டும் இலங்கைக்குத் திரும்பியும் இருந்தனர்.

ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர் ஸ்தானிகராலயம் நிலாவிற்கான நேர்முகத்தேர்வினை விரைவாக  நடாத்தி இருந்ததுடன் கர்ப்பமான அவளின் மருத்துவமனை செலவினையும் பொறுப்பேற்றுக்கொண்டது. மிகவும் மனிதாபிமான முறையில் கரிசனமாக அந்த காலப்பகுதியில் ஐ நா தமிழர்களுக்காக செயற்பட்டுக்கொண்டிருந்தது.  

இந்த வேளையில் ஆவணி 13 அன்று (13/08/2010) கடற்சூரியன் கனடாவின் கரையினைத்தட்டியது. இணையத்தில் இச்செய்தியினைக் கண்ணுற்றதும் கலங்கி நின்றன உள்ளங்கள். ஒவ்வொருவரும் மற்றவர்களுக்கு தெரியாமல் விம்மிய காட்சி இன்றும் நெஞ்சினைத்துளைத்து நெருஞ்சி முள்ளாய் குத்துகின்றது. அது வரை கப்பல் தம்மை கை விட்டுச் சென்றது தான் பெரிய துன்பம்  என்று நினைத்திருந்த அவர்களுக்கு அதற்குப்பின் அவர்கள் வாழ்வில் விழுந்த அடிகளும் பிரச்சினைகளும் கப்பலைக் கை நழுவ விட்ட கவலையினைக்  கடுகு போல் ஆக்கி மலையாய்  இன்றும் சூழ்ந்த வண்ணம் இருக்கும் என்று அவர்கள் அன்று நினைத்திருக்க வில்லை.



ஆம்...! கரையினைத்தொட்ட கப்பலில் இருந்தவர்கள்  கரையில் இறங்குவதற்குள் , கனேடியப்படைகள் தாய்லாந்தினை முற்றுகை இட்டுக்கொண்டன. தாய்லாந்தில் இருந்து கப்பல் வந்தது என்ற காரணம் மட்டுமல்ல. கப்பலில் பயணித்த, அதாவது தாய்லாந்தில் வாழ்ந்து , தாய்லாந்து வாழ்வினை நன்கு அறிந்து கொண்ட சில நல்ல உள்ளங்கள் வாரி வழங்கிய தகவல்களை நம்பி இங்கு இன்றும் அலைந்து திரியும் கனேடியப்படைகளால் வாழ்வினைத் தொலைத்துப்போனவர்கள் ஏராளம்.

தமிழர்களுக்கேயான ஒரு சாபக்கேடே " காட்டிக்கொடுப்பு " என்பதாகும். வரலாறுகளும் நடைமுறைகளும் இவற்றை நன்கு எமக்கு வெளிச்சம் போட்டுக்காட்டி வந்திருக்கின்றன. காட்டிக்கொடுப்பு என்ற ஒற்றை வார்த்தையில் கடற்சூரியன் காவிய காவிகள் (இந்த அடைபதம் தாய்லாந்தில் வீதி வீதியாக அலைந்து பட்டினி கிடந்து அதிஸ்டவசமாக  இலவசமாக கப்பலேறியவர்களுக்கு உரித்தானது)  செய்த அநியாயத்தினை அடக்கி விட முடியாது. காரணம் உண்மையினை காட்டிக்கொடுத்தால் தான் அது காட்டிக்கொடுப்பு. ஆகும்.ஆனால் இவர்கள் அரங்கேற்றிய "இதனை" எந்தப்பதத்தில் அடக்குவது என்று அகராதியிலும் தேடிக்களைத்து பொருள் அற்ற பதத்தில் இணைக்கின்றேன்.

கடற்சூரியன் கரையினை தொட்ட ஆவணி 2010 இற்கு பின்னர் சடுதியாக சுற்றி வளைக்கப்பட்ட அந்த தொடர்மாடிக்குடியிருப்பில் எஞ்சிய மனிதர்களாக ஒரு குடும்பம் மட்டும் இருந்தது. அவர்கள் எப்படித் தப்பித்துக்கொண்டார்கள் என்று எல்லோருக்கும் தெரிந்தாலும் அந்த குடும்பத்தினர் தாம் பணம் கொடுத்து தப்பியதாக எல்லோரையும் நம்ப வைத்து நாடகம் ஆடியது. தாய்லாந்து காவல் துறையினர் ஒன்றும் இலங்கைக்காவல் துறை அல்ல. பணத்திற்கு விலை போவதற்கு. பணம் கொடுக்க முற்பட்டால் அதற்கும் ஒரு தண்டனை காத்திருக்கும்.அத்துடன் அவர்கள் தனித்து இயங்கவில்லை. கனேடியப்படைகளின் கண்காணிப்பில் வந்திறங்கி  என்ன? ஏது? என்று விசாரிக்காமல் அங்கு தங்கியிருந்த இரு நூறுக்கு மேற்பட்ட அத்தனை தமிழர்களையும் அள்ளி அள்ளி குடிவரவு தடுப்பு மையங்களில் அடைத்துக்கொண்டது.


விசா இருந்தவர்களையும்  வாகனங்களில் நாய்களைப்  போன்று கொண்டு சென்றார்கள். பெண்களையும்  கர்ப்பிணிகளையும்  குழந்தைகளையும்  கதறக் கதற வான்களில் மனிதாபிமானமற்ற முறையில் அள்ளிச்சென்றார்கள். பனங்கிழங்கு போன்று அடுக்கப்பட்ட நிரை நிரையாய் ஒரு குறுகிய இடத்தினுள் நெரிசலில் நோய்வாய்ப்பட்டு சீரழிந்தவர்கள் பலர். யாரும் சென்று பார்க்கவும்  முடியாது. உதவிடவும் முடியாது. இலங்கை கடவுச்சீட்டிற்கு விசா இருந்தாலும் அங்கு சென்று அகதிகளைப்பார்வையிட  அனுமதியும் இல்லை. இலங்கை அகதிகளை வேறு யாரும் சென்று பார்வையிடவும் அந்த நேரத்தில் அனுமதி இல்லை. அந்தளவிற்கு சட்டத்தினை இறுக்கமாக இறுக்கி வைத்திருந்தார்கள்.


 இலங்கையில் தன்னும் பயங்கரவாதி என்று முத்திரை குத்தி நாலாம் மாடியில் அடைத்தாலும் உறவுகள் சென்று பார்வையிட முடியும். இங்கு என்ன குற்றம் செய்தார்கள் என்ற கேள்வியே கேட்க முடியாத நிலை. கேட்பதற்கும் நாதி இல்லை.

நிலா தாய்லாந்தினை அடைந்ததுமே மதுரன் அங்கிருந்து வேறு இடத்திற்கு மாற்றம் பெற்றுச்சென்றிருந்தமையால் மதுரன் அந்த சுற்றி வளைப்பில் கைதாகவில்லை. இருந்தாலும் அந்த ஒட்டு மொத்த உறவுகளுக்காக மனம் வெதும்பினான்.

கனேடிய அரசானது  ஒரு சலுகை கொடுத்தது. அதாவது முகவர்கள் பற்றிய தகவல் வழங்கினால் அகதி அந்தஸ்து கொடுக்கப்படும் என்றும் கொடுக்காதவர்களுக்கு அகதி அந்தஸ்து கொடுக்கப்பட மாட்டாது என்றும். தமக்கு அங்கு அகதி உரிமை கிடைக்கும் என்ற எலும்புத்துண்டிற்கு ஆசைப்பட்டு இல்லாத உண்மைகளை எடுத்துச் சொல்லி இருந்திருக்கின்றார்கள். அவர்களுக்கு அகதி அந்தஸ்தும் கொடுக்கப்பட்டு விட்டது. தாய்லாந்தில் இன்னும் ஒரு கப்பல் வர இருக்கின்றது. அதற்காகவே அங்கு தமிழர்கள் காத்திருக்கின்றார்கள் என்று ஐ நாவினை நம்பிக்  காத்திருந்த எத்தனையோ உறவுகளின் வயிற்றில் அடித்து அவர்களின் வாழ்வில் உதைத்துக் காட்டிக்கொடுத்த அவர்களால் வாழ்வினைத் தொலைத்து இன்றும் வருடக்கணக்காக குடியேற்றத் தடுப்பு மையத்தில் வாடும் உறவுகளின் நிலை இங்குள்ளவர்களைத் தவிர வேறு யாருக்கும் தெரிந்திடப் போவதில்லை.

அத்தோடு தாய்லாந்தில் இருந்த அவர்களுக்கு  தெரிந்தவர்களின் தொலை பேசி இலக்கங்களினைக்கொடுத்து  அவர்கள் யாவரும் முகவர்கள் என்றும் அந்த நல்ல மனிதர்கள் கொடுத்த பொய்யான தகவல்களை கொண்டு நிலாவினையும் மதுரனையும். இன்றும் துரத்திக்கொண்டு இருக்கின்றது கனடா அரசாங்கம். அது மட்டும் அன்றி இங்குள்ள சில தமிழர்களை பணத்தால் கொள்வனவு செய்து கொண்ட கனேடிய அரசு, தமக்கு சாதகமான பொய்களை நம்பிக்கொண்டிருக்கின்றதே அன்றி உண்மைகளை ஏற்றுக்கொள்ள அது தயாராக இல்லை.

மதுரனைப்போன்று அல்லாமல் பலர் நேரிடையாகவே பயணிகளிடம் பணம் பெற்று கப்பலுக்கு கொடுத்தவர்களும் பணம் பெற்றுக்கொண்டு கப்பலில் ஏற்றாமல் ஏமாற்றியவர்களும் என்று தாய்லாந்தில் இன்னும் நல்லவர்களாக உலவிக்கொண்டு இருக்கத்தான் செய்கின்றார்கள். அவர்களை யாரும் காட்டிக்கொடுக்கவும் இல்லை. அவர்களை எவரும் கைதும் செய்யவில்லை. ஏனென்றால் அவர்களே தாமாகவே வலிந்து சென்று தகவல் வழங்குகின்றோம் என்று கனேடிய அரசின் நன்மதிப்பை பெற்று போலியாக உலவிக்கொண்டு இருக்கின்றனர்.

கடலில் ஏற்பட்ட கொந்தளிப்புக்களை எதிர்கொண்டு கனடாவை முத்தமிட்ட கடற்சூரியனால் தரையில் ஏற்பட்ட கொந்தளிப்பு அலைகள் தாய்லாந்தில் இன்னும் அடங்காமல் ஆர்ப்பரித்துக்கொண்டு தான் இருக்கின்றன. அலையில் சிக்கிய துரும்பாக அலைக்கழிக்கப்படும் உறவுகள் மூச்சுத்திணறுவது அலைகளால் அடிக்கப்பட்டு மட்டுமல்ல, வசை மொழிகள் , வதந்திகள் போன்ற கழிவு நீர்த்தொட்டிக்குள் விழுந்து எழுவதாலுமே..!

முன்னர் பல வெளிநாட்டு ஆட்கடத்தல் முகவர்களால் பணம் பெறப்பட்டு ஏமாற்றப்பட்ட பல தமிழர்கள் நிர்க்கதியாகி நிற்பதைக்  கண்ணுற்று அவர்களை இங்கிருந்த கப்பல் ஏற்பாட்டளர்களிடம் பரிதாப்பட்டு பரிந்துரைத்து  இலவசமாய் சிலர்  ஏற்றி விட்டார்கள். அவர்கள் கனடா சென்று அங்கு அள்ளிக்கொட்டிய பல தகவல்கள் உண்மையற்றது என்பது அவரவர் மனச்சாட்சிகளுக்குத்தெரியும். ஆனால் மனம் என்ற ஒன்றே இல்லாத போது பிறகு எப்படி அதற்கு ஒரு சாட்சி இருக்க முடியும்.

மதுரன் அடைக்கலம் கொடுத்திருந்த அந்த இரு இளசுகளும் தம்மை ஏற்றி அனுப்பியது மதுரன் என்றும் அவனின் தொலை பேசி இலக்கங்களையும் கனேடிய படைகளுக்கு கொடுத்து அனுப்பியும் வைத்திருக்கின்றார்கள். அது மட்டுமா? நெஞ்சு வலியால்  அவஸ்தை பட்ட யுவதியினையும் அவளது குடும்பத்தினையும் இன்னோரன்ன போராளி மாவீரர் குடும்பங்களையும் பணச்செலவின்றி இலவசமாக அனுப்பி வைக்க  சசியிடம் பரிந்துரைத்து அனுப்பி உதவிய  மதுரனின் அங்க அடையாளங்கள் உட்பட புகைப்படங்களையும் வழங்கி , இன்று வளமாக வாழும் அந்த நல்ல உள்ளங்களுக்கு மதுரனின் இன்றைய நிலை நன்கு தெரியும். நல்ல மனம் படைத்த மதுரனுக்கு ஏன் இந்த நிலை என்று யாரும் எண்ணக்  கூடும். நிச்சயமாக அதற்கும் பதில் உண்டு. நன்றி மறந்த துரோகிகளுக்கு உதவியதாலேயே மதுரனுக்கு இந்த தண்டனை.

மாலை மாற்றிக்கொண்ட அந்த நாளில் கூட கோயிலில் இருந்து திரும்பிய தும் மதுரன் அந்த நன்றி கெட்ட மனிதர்களுக்காக ஓடி ஓடித் திரிந்து நிலாவின் உறவுகளிடம் நன்றாக வாங்கிக்கட்டிக் கொண்டவன். நிலாவின் உறவுகள் விமானமேறிய ஒரு நாள் மட்டுமே மதுரனும் நிலாவும் சந்தித்து கொண்ட இரவு. உணர்வுகளும் கலந்து  அன்றே பிரிந்தும் கொண்டன. மனித வாழ்வில் நிகழ்கின்ற முக்கிய தருணம் திருமணம். எத்தனையோ பெரிய மனிதர்களாக இருந்தாலும் திருமணத்திற்கு என ஒதுக்கி, ஒரு குறிப்பிட்ட ஓரிரு நாட்களையாவது தமக்காக வாழ்வார்கள். அது போராளியாக அல்லது ஒரு இராணுவ வீரனாகக்கூட இருந்தாலும் வாழ்வில் ஒரு முறை மலரும் அந்த பொன்னான தருணங்களை தவற விடமாட்டார்கள். ஆனால் மதுரனோ முகம் தெரியாத உறவுகளுக்காக தன் வாழ்வின் அத்தனை பொன்னான தருணங்களை இழந்து கொண்டதோடு, இன்னும் இழந்து கொண்டிருக்கின்றான்...!

வருடத்திற்கொரு முறை சேவையில் வந்து போகின்ற கனேடிய அதிகாரிகள் தமது திறமையினை  தமது மேல் அதிகாரிகளுக்கு வெளிப்படுத்துவதாக எண்ணி ஒவ்வொரு வருடமும் வந்து கைது செய்வதும், பின் புலனாய்வு செய்வதும் பின் விடுவிப்பதுமாக தமது சேவையினை நீடித்துக் கொள்ளும் அதே நேரம் மதுரனின் துன்பியல் வாழ்வினையும் நீடித்துச்செல்கின்றார்கள். சட்ட ரீதியாக கனேடிய அரசிடம் இருந்து ஊதியம் பெறும் தாய்லாந்து அதிகாரிகளும் தம் சேவையினை செவ்வனே செய்து வருகின்றார்கள்.

கடற்சூரியனின் உண்மையான சூத்திரதாரியான மிகப்பெரிய செல்வாக்கு மிகுந்த, பல கால அனுபவம் மிக்க  அந்த நபர்  நாட்டை விட்டு தப்பி ஓடி தலை மறைவாய் வாழுகின்றார். அவரை  வலை வீசிப்பிடித்து கைது செய்யத் துப்பில்லாத கனேடியப்படைகளுக்கு அப்பாவியான ஒரு குடும்பத்தை சிதைக்க மட்டுமே திறமையுள்ளது. அதுவும் இன்னொரு நாட்டில் வாழ வழியற்று தஞ்சமடைந்து இருக்கும் ஏதிலிகளை அந்த நாட்டின் கடுமையான சட்டத்தில் சிக்க வைத்து வதைத்து இன்பமடையும் கனேடியப்படைக்கு துணிச்சலும் இல்லை விவேகமும் இல்லை. விவேகம் இருந்திருந்தால் என்றோ முக்கிய சூத்திர தாரிகளை இனங்கண்டு தண்டனை கொடுத்திருக்க முடியும். ஒருவேளை பண பலம் கொண்ட அந்த மிகப்பெரிய மனிதனின் வலையில் இவர்கள் விலை பெற்று விட்டார்களா? அல்லது இருவருக்குமிடையில் ஏதும் ஒப்பந்தம் செய்யப்பட்டு கண் துடைப்பிற்காக யாரோ ஒருவனை இவர்கள் குற்றவாளியாக்க காட்ட வேண்டும் என்பதற்காக மதுரனை பயன்படுத்துகின்றார்களா?

அப்பாவியை சிறைக்குள் தள்ளியவர்கள் இதே  தாய்லாந்தில் கண்காணிப்பில் ஈடுபட்டு இருக்கின்றபோதே இன்னொரு கப்பல் செல்கின்றது என்று பல ஈழத்தமிழர்களிடம் பணத்தைச்சுருட்டிக்கொண்டு அவர்களை மலேசியாவில் நிர்க்கதியாக்கி விட்டு அந்தப்  பணத்தில் ஐரோப்பிய நாட்டுக்கு தப்பிச்சென்ற ஒரு கடத்தல்காரனை கோட்டை விட்டு வேடிக்கை பார்த்தது ஏன்..? பணத்தால் விலைக்கு கொள்வனவு செய்யப்பட்ட  தமிழ் இனத்துரோகிகள் அந்தத் தகவலையும் வழங்கி இருக்க வேண்டுமன்றோ? பணம் பொய்யினை உண்மையாக்க வல்லது மட்டுமன்றி உண்மையினையும் பொய்யாக்கிட வல்லது என்பது கனேடிய காவல் துறைக்கு எப்படி விளங்காமல் போனது??

கப்பலோடு நேரடியாக தொடர்பு பட்டது எனக் கைது செய்யப்பட்ட ஆறு குற்றவாளிகளில் ஒருவரைத் தவிர ஏனையோரை பணப்பிணையில் விடுதலை செய்து நடமாட விட்டு வைத்திருக்கும் கனேடிய அரசாங்கம் எதற்காக கப்பலினைத்தவற விட்டு நிர்க்கதியாகி நின்று ஐ நாவில் அகதியாக தஞ்சமடைந்த அப்பாவிகளை விரட்டி அடிக்கின்றது.கனேடியச்சிறையில் வாடும் அந்த ஒருவரும்  மதுரனைப்போன்று அவரும் அவரது  மனைவியுமாக கப்பலில் எறிச்செல்வதற்காக எரிபொருள் பொறியியலாளராக அந்தக்கப்பலில் பயணம் செய்த ஒரு நிரபராதியே. தனியார் சட்டவாளர் ஒருவரை நியமித்து வழக்காட அவரிடம் பணம் இல்லாத காரணத்தினால் கனேடிய அரச சட்டவாளர் ஒருவரை நம்பி வழக்கினை நகர்த்தி செல்வதால அவரது வழக்கு இன்னும் நீண்டு செல்கின்றதே அன்றி பிணையில் விடுவிக்க தன்னும் அனுமதி இல்லை. தாய்லாந்தில் மட்டுமன்றி கனடாவிலும் தொடரும் அலை உயிர் என்னும் கடல் வற்றினாலும் ஓயாது போலும்.

 கனடாவினைப்போன்று தாய்லாந்தில் அவ்வாறு ஒரு  வழக்கினை பதிவு செய்து கனேடிய அரசிற்கு எதிராக வழக்காட கூட முடியாது. வழக்குத் தொடுத்து நீதிமன்றம் செல்ல முடியாத நிலை ஒரு காரணம் என்பதோடு சந்தர்ப்ப சூழ்நிலைகள் இவர்களுக்கு சாதகமாக இல்லை. அதாவது என்ன தான் நீதி நியாயங்கள் மதுரன் பக்கம் இருந்தாலும் தாய்லாந்தினை பொறுத்தவரை அவன் ஒரு சட்டவிரோத குடியேற்ற வாசி. தாய்லாந்து நாட்டின் குடிவரவு சட்டத்தின் பிரகாரம் அவர்களின் அனுமதி இன்றி தங்கி இருக்கும் அனைத்து அகதிகளுமே குற்றவாளிகளே. முதலில் அவர்களை தாய்லாந்தில் நடமாடவே அனுமதிக்க மாட்டார்கள். அதற்காகவே அதிக செலவு செய்து குடிவரவு தடுப்பு மையம் இயக்குகின்றார்கள். கிட்டத்தட்ட ஆயிரக்கணக்கில் இங்கு பல நாட்டு குடியேற்ற வாசிகள் உள்ளனர். ஈழத்தமிழர்கள் வருடக்கணக்கில் வாசம் செய்கின்றார்கள்.

அது கர்ப்பிணியாக இருந்தாலும் சரி பச்சை பாலகனாக இருந்தாலும் சரி சட்டம் எல்லோருக்கும் ஒன்றே. ஆனாலும் பதினெட்டு வயதுக்கு குறைந்தவர்களுக்கு அந்த சட்டம் செல்லுபடியற்றது. தாயும் தந்தையும் தடுக்கப்பட்டு இருக்கும் போது குழந்தை அவர்களுடன் தான் இருக்க முடியும். குழந்தை இருக்கின்றது என்பதற்காக அன்னைக்கு சலுகை வழங்க மாட்டார்கள். எத்தனையோ நிறைமாத கர்ப்பிணித்தாய்மார்கள் குழந்தை பெற்று, அந்த கம்பிச்சிறைக்குள் விறகுகள் அடுக்கியது போன்று நெரிசலில் சிக்கித்தவித்து நொந்து நசிந்து போய் இலங்கைக்கு திரும்பி சென்று அங்கு பல பிரச்சினைகளை எதிர்நோக்கி இருந்தார்கள். இந்த கொடுமைகளுக்கு கடற்சூரியன் காவிச்சென்ற முன்னாள் தாய்லாந்து அகதிகள் தான் நிச்சயம் பொறுப்பேற்க வேண்டும்.



தொடரும்...........


அரசி நிலவன் 
தாய்லாந்திலிருந்து 

arasenilavan@gmail.com


அடுத்த பதிவிற்கு செல்ல 

http://arasikavithaikal.blogspot.com/2014/01/mv-sunsea-4.html
முந்தைய பதிவிற்கு செல்ல 
http://arasikavithaikal.blogspot.com/2014/01/2_21.html